சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35

Share this:

35. ராஜா பால்ட்வினின் முடிவு

சென்னாப்ரா யுத்ததில் மவ்தூத் அத்-தூந்தகீனிடம் தோல்வியைத் தழுவிய பரங்கியர்கள், அந்த அனுபவம் தங்களுக்குக் கற்றுத்தந்த பாடத்தை அலசினார்கள். முஸ்லிம்களின் படையெடுப்பையும் அவர்களது தாக்குதலையும் சமாளிக்க வேண்டுமெனில் தங்களுக்குள் மோதிக்கொள்வதை தற்காலிகமாகவாவது தள்ளி வைத்துவிட்டு ஒன்றிணைந்து எதிர்த்து நிற்பது அவசியம் என்பது அவர்களுக்குப் புரிந்தது. அக்கருத்தில் யாருக்கும் துளியும் ஆட்சேபனை ஏற்படவில்லை.

அதையடுத்து அந்நூற்றாண்டு முழுவதும் பெரும்பாலும் அந்த அடிப்படையிலேயே அவர்கள் தங்களது இராணுவ நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள். பெரும் திரளாக முஸ்லிம் படை வருகிறது என்றதும் உடனே பரங்கியர்கள் ஒன்றிணைவார்கள்; தற்காப்புக்கு உகந்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்; அங்கு அவர்களது ஒருங்கிணைந்த படை திரண்டு நிற்கும். அடுத்து, முஸ்லிம் படை எந்த இலக்கைக் குறிவைத்து வருகிறதோ அங்கு பரங்கியர்களின் காவல் படையின் கண்காணிப்பு அதிகரிக்கும். அதனால் அந்தப் பகுதிகளில் முஸ்லிம் உளவாளிகள் ஊடுருவுவதிலும் முஸ்லிம் படைக்குழு சிறுசிறு தாக்குதல் தொடுப்பதிலும் தடை ஏற்பட்டுவிடும். அதே நேரத்தில் களத்தில் குதித்து முஸ்லிம் படையினருடன் நேரடியாகப் போரிடுவதையும் சிலுவைப் படை தவிர்த்து விடும். அது என்னவாகும்? நிலைமை இழுத்துக்கொண்டே போய், இருதரப்புக்கும் வெற்றி-தோல்வி இன்றி அந்நிகழ்வு முடிவுறும். இவ்வாறு சிலுவைப் படை தனது தோல்வியைத் தவிர்த்துக்கொண்டு அதை வெற்றியாக்கும் வேலையைச் செய்தது.

இத்தகு ஒற்றுமையும் ஒருங்கிணைந்த செயல்பாடும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் இடையே ஏற்பட முஸ்லிம்கள் ஸலாஹுத்தீன் அய்யூபிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. சற்று நீண்ட காத்திருப்புதான். பார்ப்போம்.

அலெப்போவில் ரித்வான் இறந்த பிறகு அவருடைய மகன் ஆட்சிக்கு வந்தார்; அஸாஸியர்களை விரட்டியடித்தார் என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால் அவரது ஆட்சி அப்படியொன்றும் நிலையான ஆட்சியாக அமையவில்லை. இதை பக்தாதிலிருந்த ஸெல்ஜுக் சுல்தான் முஹம்மது இப்னு மாலிக்‌ஷா கவனித்தார். அலெப்போவைக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, சிரியாவில் தமது அதிகாரத்தை நிறுவ இதுவே சரியான தருணம் என்று அவருக்குத் தோன்றியது. ‘யாரங்கே?’ என்று அழைத்தார்.

அந்த யார், பாரசீக ஹமதானைச் சேர்ந்த புர்ஸுக். அவரொரு பாரசீகத் தளபதி. அவரது தலைமையில் ஸெல்ஜுக் சுல்தானின் படை அலெப்போவுக்குப் புறப்பட்டதுமே டமாஸ்கஸிலிருந்த துக்தெஜினுக்கு இச்செய்தி தெரிய வந்தது. சுல்தான் அலெப்போவைக் கைப்பற்றினால் அடுத்து அவருடைய இலக்கு டமாஸ்கஸ் என்பதை துக்தெஜினின் உள்ளுணர்வு எச்சரிக்க, தாம் முந்திக்கொண்டு சுல்தானின் முயற்சியைத் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். தம் ஊரில் தாம் கோலோச்ச வேண்டும் என்று அவர் திட்டமிட்டார் – சரி; ஆனால் அதற்கு அவர் முன்னெடுத்த தற்காப்புக் கூட்டணிதான் விசித்திரம்.

எப்பாடுபட்டாவது சிரியாவை ஸெல்ஜுக் சுல்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவுகட்டிய துக்தெஜின் முதலில் இல்காஸியைத் தம் கட்சிக்கு அழைத்தார். மோஸுலின் ஜெகர்மிஷ் உருவாக்கிய கூட்டணிப் படையில் மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி என்பவர் இணைந்தார்; கூட்டணியில் உள்குத்து சமாச்சாரங்கள் ஏற்பட்டு அலெப்போவின் ரித்வான் இல்காஸியைக் கடத்தி, சங்கிலியால் கட்டிப்போட்டார்; இல்காஸியின் படை எதிர்தாக்குதல் தொடுத்து இல்காஸியை விடுவித்தது என்றெல்லாம் நான்கு அத்தியாயங்களுக்கு முன் வாசித்தோமில்லையா? அந்த இல்காஸி துக்தெஜினின் மருமகனும்கூட.

இவர்கள் இருவரும் உடனே நடவடிக்கையில் இறங்கி அலெப்போவைத் தற்காலிகமாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டு, அந்தாக்கியாவில் இருந்த ரோஜரிடம் சமாதானம் ஏற்படுத்திக்கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பினார்கள். சுல்தானை எதிர்க்க வேண்டும் என்றால் முஸ்லிம்களின் எதிரியான சிலுவைப் படையின் காலையும் பிடிப்பதில் தவறில்லை என்ற தர்க்கம் போலும். ரோஜரோ இதில் ஏதும் விஷமம் இருக்குமோ என்ற எச்சரிக்கை உணர்வுடன்தான் அத்தூதுக் குழுவைப் பெரும் சந்தேகத்துடன் வரவேற்றார். ஆனால் அதை வெகு விரைவில் களைந்து அத்தூதுக் குழுவின்மீது நம்பிக்கை ஏற்படுத்தினார் ஒருவர். அவர் பெயர் ராபர்ட் ஃபிட்ஸ்-ஃபுல்க்.

அந்தாக்கியாவின் கிழக்கு எல்லையில் பெருநிலக்கிழாராகத் திகழ்ந்து வந்தார் ராபர்ட். இவர் ஒரு தொழு நோயாளி. இவருக்கு துக்தெஜினிடம் நட்பு துளிர்விட்டு வலுவடைந்திருந்தது. அதனால் ராபர்ட் நாலு வார்த்தை நல்லவிதமாகப் பேசிப் பரிந்துரைக்க, துக்தெஜினுடன் இணக்கமானார் ரோஜர். அதையடுத்து, சிலுவைப் படையின் ரோஜருக்கும் டமாஸ்கஸின் முஸ்லிம் ஆட்சியாளர் துக்தெஜினுக்கும் இடையே இராணுவக் கூட்டணி உடன்படிக்கை அந்தாக்கியாவில் கையெழுத்தானது.

oOo

புர்ஸுக் தலைமையிலான படை அலெப்போவை வந்தடைந்தது. அலெப்போவோ அடைபட்டிருந்தது. அதைப் பார்த்தார் புர்ஸுக். முன்னர் இதைப்போன்ற நகரடைப்பில் மவ்தூத் என்ன செய்தாரோ அதையே தாமும் இப்பொழுது செய்தார். ஷைஸாருக்கு நகர்ந்து சென்று, அந்தாக்கியாவின் தெற்கு எல்லையைத் தாக்க அவர்களிடம் ஆதரவு கோரினார். இணங்கி இணைந்தது ஷைஸார். அலெப்போவை மையம் கொண்ட புயல் இப்பொழுது மேலும் வலுவடைந்து அந்தாக்கியாவை நோக்கி நகர்ந்து வருகிறது என்றதும் ரோஜர் அவசர அவசரமாக எடிஸ்ஸாவின் பால்ட்வினைத் துணைக்கு அழைத்து, அபாமியா (Apamea) என்ற பகுதியைத் தற்காப்பு கேந்திரமாகத் தேர்ந்தெடுத்து 2000 துருப்புக்களுடன் அங்குச் சென்று பாடி அமைத்தார்.

சில நாட்களில் ஜெருஸல ராஜா பால்ட்வினும் திரிப்போலியிலிருந்து போன்ஸும் தங்களது துருப்புக்களுடன் வந்து இணைந்தனர். ரோஜருடன் கூட்டணி சேர்ந்திருந்த துக்தெஜின் தம் பங்கிற்கு 10,000 முஸ்லிம் படை வீரர்களுடன் வந்து இணைந்தார். அதுநாள்வரை ஒருவருக்கொருவர் எதிரணியில் இருந்த பரங்கியர்களின் சிலுவைப் படையும் டமாஸ்கஸின் முஸ்லிம் படையும் இப்பொழுது எவ்வித சங்கோஜமும் இன்றி ஒன்றிணைந்து பழகிப்பேசி நின்றன.

பெரும் எண்ணிக்கையில் தற்காப்பைப் பலப்படுத்திக்கொண்டு நின்ற சிலுவைப் படையின் கூட்டணியை நேரடிப் போருக்குக் களமிறக்க புர்ஸுக் தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டார். சிறு குழுக்களாக எதிரிகளைத் தாக்கிவிட்டு மறைவது, சம்மாக் பீடபூமி வரை சென்று திடீர் தாக்குதல் நடத்துவது என்று தொடர் குடைச்சல் கொடுத்துச் சீண்டிக்கொண்டே இருந்தார். அவை சிலுவைப் படையில் இருந்தவர்களை ரோஷமூட்டின. அவர்களுக்குக் கோபமும் ஆவேசமும் ஏற்பட்டன. ஆனாலும், ‘மூச்! யாரும் களமிறங்கக் கூடாது’ என்று அடக்கியொடுக்கி வைத்திருந்தார் ரோஜர். களமிறங்கி பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதைவிடத் தோல்வியைத் தவிர்ப்பதே அவருக்கு முக்கியமானதாக இருந்தது.

படையணியினரைக் கட்டுப்படுத்தி, நிலை நிறுத்தி வைக்க, ‘ஒழுங்கு மீறுபவர்களின் கண்கள் பிடுங்கி எறியப்படும்’ என்று எச்சரித்து வைத்தார் ரோஜர். அது வெற்றுப் பேச்சன்று என்பதை நன்றாக உணர்ந்ததால் பரங்கியர்-டமாஸ்கஸ் கூட்டணிப் படை, இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. தமது குத்தலும் குடைச்சலும் எதிர் தரப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாததைப் பார்த்து ஏமாற்றமடைந்த புர்ஸுக் தம் படையுடன் ஷைஸாருக்குத் திரும்பினார். மையமிட்ட புயல் திசை மாறியது, இனி ஸெல்ஜுக் சுல்தானின் படையினரால் ஆபத்தில்லை என்றதும் பரங்கியர்-டமாஸ்கஸ் கூட்டணி கலைந்து பிரிந்தது. ரோஜர் அந்தாக்கியா திரும்பினார்.

ஆனால் புர்ஸுக் பின்வாங்கியது தந்திரம். கூட்டணியைக் கலைத்து ரோஜரின் பலத்தைக் குறைப்பதே அவரது திட்டம். ஹமா என்ற பகுதி வரை பின்நகர்ந்த அவர் அங்குப் பொறுமையுடன் காத்திருக்க, அவர் நினைத்தபடியே நடந்தது. கூட்டணிப் படை கலைந்து, ரோஜர் ஊர் திரும்பியதும் சுற்றி வளைத்து வந்து அந்தாக்கியாவை நெருக்கினார் புர்ஸுக். அச்சமயம் ரோஜருக்குத் துணையாய் எடிஸ்ஸா பால்ட்வினும் அவரது துருப்புக்களும் மட்டுமே அங்கிருந்தன.

உதவிக்குக் கூட்டணிப் படை வந்து சேரும் வரை, புர்ஸுக் படையினர் வரும் வழிப்பாதைப் பகுதிகளைக் கபளீகரம் செய்ய அனுமதிப்பதா அல்லது தம்வசம் இருக்கும் படையினருடன் களத்தில் இறங்கி அவர்களைத் தடுப்பதா என்ற குழப்பம் ரோஜருக்கு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குமுன், ஜெருஸல ராஜா பால்ட்வினுக்கு ஏற்பட்ட அதே இக்கட்டு. சென்னாப்ரா யுத்தத்திற்கு வழிவகுத்த அதே குழப்பம். ஆனால், துணிந்து ஒரு முடிவெடுத்தார் ரோஜர்.

கி.பி. 1115, செப்டெம்பர் 12ஆம் நாள். கிறிஸ்துவப் பாதிரி ஒருவர் மெய்ச் சிலுவையை ஏந்திக்கொண்டார். சிலுவைப்படையினர் பாவப் பரிகாரமாகச் சில புனிதச் சடங்குகளை நிறைவேற்றினர். அது தங்களைத் தூய்மையாக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அதன்பின் புர்ஸுக்கின் படையினரை எதிர்கொள்ளப் புறப்பட்டனர். 500இலிருந்து 700 வரை சேனாதிபதிகள், 2,000 முதல் 3,000 வரையிலான காலாட்படை. இதுதான் ரோஜரின் படை பலம். புர்ஸுக்கின் படை பலமோ அதைவிட இருமடங்கு. ஆனால், சென்னாப்ரா பாலத்தில் மவ்தூதின் படையினருக்கு அமைந்த அனுகூலம் மட்டும் புர்ஸுக் படையினருக்கு ஏற்படாமல் போய்விட்டது. அவர்களுக்கு முன்னதாக ரோஜரின் உளவுப்படை புர்ஸுக் படை முகாமிட்டிருந்த பகுதியைக் கண்டுபிடித்து வந்து தெரிவித்துவிட்டது. தாமதிக்காமல் தம் படையினருடன் உடனே கிளம்பிய ரோஜர் முஸ்லிம் படையினர் மீது திடீர்த் தாக்குதல் தொடுத்தார். புர்ஸுக்கின் படையினர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புர்ஸுக்கின் படை சிதறிப் பிரிந்தது. புர்ஸுக் தப்பிப் பிழைத்ததே பெரும்பாடாகி விட்டது. வெற்றி பெற்றார் ரோஜர்.

ஸெல்ஜுக் சுல்தானின் திட்டப்படி அலெப்போவும் வசமாகாமல், மாற்றுத் திட்டமான அந்தக்கியா படையெடுப்பும் வெற்றி பெறாமல் அத்துடன் புர்ஸுக்கின் படையெடுப்பு நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன.

oOo

அடுத்து நாம் ஃபலஸ்தீன் பகுதிக்குச் சென்று ஜெருஸல ராஜா பால்ட்வினின் இதர முக்கியச் செயல்பாடுகளைப் பார்த்துவிடுவோம். பக்தாதிலுள்ள ஸெல்ஜுக் சுல்தானுக்கும் சிரியாவிலுள்ள முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் இடையே தொடரும் ஒற்றுமையின்மை, பூசல்கள் அளித்த தைரியத்தில் ஜெருஸல ராஜா பால்ட்வின் சில காரியங்களில் இறங்கினார்.

ஜோர்டான் ஆற்றங்கரையைத் தாண்டி கிழக்கே, சாக்கடல்-செங்கடலுக்கு இடையே வறண்ட, தரிசான நிலப்பரப்புக் கிடந்தது. இன்றைய புவியியல் அமைப்பில் அது ஜோர்டான் நாட்டின் எல்லைப் பகுதி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அது டிரான்ஸ்ஜோர்டன் என்று அழைக்கப்பட்டது. மனித வாடையற்ற பாலைவனம் போன்ற பகுதிதான் அது. ஆனால், சிரியாவுக்கும், எகிப்து, அரேபிய நகரங்களுக்கும் இடையே வர்த்தகத்திற்கும், தகவல் தொடர்புக்கும் டிரான்ஸ்ஜோர்டன் இன்றியமையாத பாதை. அதன்மீது முன்னமேயே இருமுறை ராஜா பால்ட்வினின் கண் பதிந்து, கைப்பற்ற முனைந்து ஏதும் ஈடேறவில்லை. இப்பொழுது கி.பி. 1115ஆம் ஆண்டு அதைப் பரங்கியர்களின் அதிகாரத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார் ராஜா பால்ட்வின். லெவண்டின் நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தைப் பரங்கியர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவர் எடுத்து வைத்த முதல் அடி அது.

200 சேனாதிபதிகளையும் 400 காலாட்படையினரையும் திரட்டி, ஷோபக் எனப்படும் பாறை அடுக்குகள் நிறைந்த இடத்திற்குச் சென்ற பால்ட்வின், அங்குத் தற்காலிகக் கோட்டை ஒன்றைக் கட்டி அதற்கு மான்ட்ரியல் அல்லது அரசர் மலை என்று பெயரிட்டார். அடுத்த ஆண்டு மீண்டும் அப்பகுதிக்குத் திரும்பி வந்து, செங்கடல் கரையில் உள்ள அகபா நகரில் புறக்காவல் அரண் ஒன்றையும் ஏற்படுத்தினார். அத்துறைமுகத்தில் தம் அரண், அதற்கும் சிரியாவுக்கும் இடையிலான பாதையில் தம் கோட்டை என்று அவரது ராஜாங்கத்திற்குப் பயனளிக்கும் வகையிலான பிராந்திய விரிவாக்கம் மெதுமெதுவே வடிவம் பெறத் தொடங்கியது.

இந்த ஷோபக் கோட்டையினுள் கிணற்று வாயிற்குழி ஒன்று இருந்தது. அலுப்புப் பார்க்காமல் அதிலுள்ள 375 படிகளில் இறங்கிச் சென்றால் நீர்ச்சுனை. அதன் பிரமாத பலன் என்னவெனில் முற்றுகை என்று ஒன்று ஏற்பட்டுவிட்டால் இதர கோட்டைகளைவிட வலுவாய்த் தாக்குப்பிடித்து நீடிக்க அந்த நீர் ஆதாரம் அதில் உள்ளவர்களுக்கு உதவியது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி பலமுறை முயன்று கி.பி. 1189இல்தான் இதைக் கைப்பற்றினார். அப்பொழுதும்கூடச் சிலுவைப் படையினரின் முக்கிய கோட்டையான கெராக் வீழ்ந்துவிட்டபோதும் இது மட்டும் சற்று அதிகமாகத் தாக்குப்பிடித்து பிறகுதான் வீழ்ந்தது. அவற்றை விரிவாகப் பிற்பாடு பார்ப்போம். இப்பொழுது ராஜா பால்ட்வினுக்கு அவகாசம் குறைந்து வருவதால் அவரைத் தொடர்வோம்.

கி.பி. 1116ஆம் ஆண்டின் இறுதியில், ராஜா பால்ட்வினுக்குக் கடுமையான நோய் ஒன்று ஏற்பட்டு அவரைப் படுக்கையில் தள்ளியது. அதிலிருந்து தேறி எழ அவருக்குச் சில மாதங்கள் ஆயின. அப்படி எழுந்ததும் அடுத்த நடவடிக்கைகளில் இறங்க அவர் ஆயத்தமானார். இம்முறை அவரது பார்வை எகிப்தின் பக்கம் திரும்பி , ஃபாத்திமீக்களுடன் மோதல் நிகழ்ந்தது. அதில் அவர் வெற்றியடைந்து, நைல் நதியின் கிழக்குப்புற பகுதிகள் அவர் வசமாகின. அச்சமயத்தில்தான் பழைய காயம் ஒன்று தீரா நோயாக பால்ட்வினிடம் மீண்டது. பதினைந்து ஆண்டுகளுக்குமுன் போரில் அவர் அடைந்திருந்த ஆழமான காயம் ஒன்று முழுவதும் ஆறாமலேயே இருந்து வந்தது. அது இப்பொழுது திடீரெனப் பிளந்து திறந்து கொள்ள, பால்ட்வின் தீவிரமாக நோயுற்றார்.

அவர் இருந்ததோ ஃபாத்திமீக்களின் உள் பகுதிக்குள். அச்சமயம் வாய் பிளந்த இந்தக் காயம் உண்டாக்கிய நோவோ சகிக்க முடியாத துன்பம் தந்தது. குதிரையில்கூட அவரால் ஏறி அமர முடியவில்லை. தீரா அவ்வலியால் துடித்தாலும் ஒன்றில் மட்டும் அவர் உறுதியாக இருந்தார். அது, எக்காரணம் கொண்டும் இங்கு ஃபாத்திமீக்கள் மத்தியில் தாமோ, தம் சடலமோ சிக்கக் கூடாது என்ற வைராக்கியம். அதனால், குப்பைகளைக் குவித்து, அதனுள் புகுந்து ஒளிந்துகொண்டு, முடைநாற்றம் நிறைந்த காற்றை சுவாசித்தபடியே ஃபலஸ்தீனுக்குத் திரும்பினார் ஜெருஸல ராஜா பால்ட்வின். ஆனால், வழியிலேயே அவரது நிலை மேலும் மோசமடைந்தது. அவரது ஆவி பிரிந்தது. பயணம் நிரந்தரமாக முடிவுற்றது. புனித நகரமான ஜெருஸத்தைக் கைப்பற்றி ராஜாவாக முடிசூட்டப்பட்ட பால்ட்வின் குப்பைக் கூளங்களுக்குள் சிக்கி மரணமடைந்தார்.

தாம் மரணமடைந்துவிட்டால் தமது சடலம் அங்கு வெயிலில் கிடந்து அழுகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் தம் சமையல்காரனிடம் சில கட்டளைகளையும் அவர் பிறப்பித்திருந்தார். அதை அந்தச் சமையல்காரரும் நேர்த்தியுடன் நிறைவேற்றினார். ராஜா பால்ட்வினின் வயிறு கிழிக்கப்பட்டது. உள்ளுறுப்புகளை எல்லாம் வெட்டி எடுத்துப் புதைத்தார். அதன்பின் உடல் கூட்டின் உள்ளே முழுவதும் உப்பு தூவப்பட்டது. கண்கள், வாய், நாசி, காதுகள் ஆகியனவற்றில், சமைக்கப் பயன்படுத்தும் மசாலாப் பொருள்கள், பிணத்தைப் பதப்படுத்தும் மெழுகு ஆகியன திணிக்கப்பட்டன. அதன்பின் அச்சடலத்தை விலங்கின் தோலால் சுற்றித் தைத்தனர். பிறகு அதைச் சமுக்காளங்களால் சுற்றி, குதிரையின் மீது தூக்கி வைத்துக் கட்டி ஜெருஸலம் கொண்டுவந்து சேர்த்தனர்.

இவ்விதம் ஜெருஸலம் வந்தடைந்த அவரது சடலம், அவரது கடைசி ஆசைக்கு ஏற்ப, இயேசுநாதரின் புனிதக் கல்லறை வாயில் வளாகத்தில் காட்ஃப்ரேவின் சமாதிக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.