இரத்ததான தளம் (பாரத் மேட்ரிமோனி)

நம் நாட்டில் ஒவ்வொரு இரண்டு விநாடி காலத்திலும் யாராவது ஒருவருக்கு அவரின் உயிர் காத்திட இரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவில் 4 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 5 லட்சம் யூனிட்கள் தான். இரத்த தானம் வழங்கிட யாரும் முன்வருவதில்லை என்று இதற்குப் பொருள் அல்ல. பலர் தாங்கள் தானம் வழங்க தயாராய் இருக்கிறோம் என்பதனை மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

தகவல் தொழில் நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த கால கட்டத்தில் இந்த நிலை மாற வேண்டாமா? என்ற சமுதாய நோக்குடன் திருமண வரன் தேடித் தருவதில் முன்னணியில் இயங்கும் பாரத் மேட்ரிமோனி டாட் காம் தன்னுடைய சமுதாய சேவையின் ஒரு பிரிவாக இரத்த தான தளம் ஒன்றை இலவசமாக இயக்கி வருகிறது. இந்த தளம் www.bharatbloodbank.com என்ற முகவரியில் இயங்குகிறது.

இந்த தளம் மூலம் நாம் இரத்தம் தர விருப்பம் இருந்தால் இதில் பதிந்து கொள்ளலாம். இரத்தம் யாரேனும் நோயாளிக்கு வேண்டுமென்றாலும் குறிப்பிட்ட குரூப் இருக்கிறதா எனத் தேடலாம். அந்த குறிப்பிட்ட இரத்தம் தர எத்தனை பேர் தயாராய் இருக்கின்றனர் என்ற விபரமும் அவர்களின் தொடர்பு முகவரிகளும் கிடைக்கின்றன. அதன் பின்னர் அவர்களை நாம் தொடர்பு கொள்ளலாம்.

இது சென்னைக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமாக அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்திலேயே எந்த நகரத்தில் இரத்தம் தேவைப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டு அந்த நகரத்தில் உள்ளவர்களின் முகவரி தரப் படுகிறது. தளம் பல பிரிவுகளாக இயங்குகிறது. இதன் ஹோம் பேஜில் இரத்த தானம் குறித்த செய்தியும் அருகே அது குறித்த பல பிரிவுகளும் உள்ளன.

இலவசமாக இத்தளத்தில் பதிவு செய்திடல், ஏன் இரத்த தானம் வழங்க வேண்டும்? இரத்தம் யாருக்கெல்லாம் தேவைப்படும்? இரத்த தானம் அளிப்பவர் உடல்நிலை எப்படி இருக்க வேண்டும், இரத்தப் பிரிவுகள் என்னென்ன? இரத்தம் தானம் அளித்த உங்களின் அனுபவங் களைப் பகிர்ந்து கொள்ள இடம் இரத்த தானம் வழங்கிட டிப்ஸ் எனப் பல பிரிவுகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய, பயன்படுத்தக் கூடிய தளமாகும் இது. இதனைத் தொடர்ந்து கண் வங்கிக்கென ஒரு தளம் தொடங்க இருப்பதாகவும் பாரத் மேட்ரி மோனி டாட் காம் நிறுவனத் தலைவர் முருகவேல் தெரிவித்தார்.

இதை வாசித்தீர்களா? :   தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை!