கள்ளக்குறிச்சி அருகே கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி, நவ.29–

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பலர் அனுமதியின்றி கள்ள துப்பாக்கியை வைத்துக் கொண்டு பறவைகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு கள்ளத்துப்பாக்கிகள் யார் தயாரித்து கொடுக்கிறார்கள்? என்பது மர்மமாக இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கிகள் தயாரித்து விற்பவர்களை கண்டுபிடித்து கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படையில் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கண்ணன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேல், கீழ்குப்பம் சப்–இன்ஸ் பெக்டர் ஆனந்தராஜ், கச்சிராயப்பாளையம் சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமி, தியாகதுருகம் சப்–இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் இடம் பெற்றனர்.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கள்ளத் துப்பாக்கி தயாரிக்கும் கும்பல் குறித்து துப்பு துலங்கியது. சங்கராபுரம் அருகே புத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளிகளான சுப்பிரமணி (37), மணிகண்டன் (34) ஆகியோர் லேத் பட்டறை வைத்துக்கொண்டு கள்ளத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று இரவு புத்தரம்பட்டில் அதிரடி சோதனை நடத்தி சுப்பிரமணி, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கள்ளத்துப்பாக்கிதயாரிக்க பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள், இரும்பு குழாய்கள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கள்ளத்துப்பாக்கிகளை கடந்த 5 ஆண்டுகளாக தயாரித்து விற்பனை செய்து வந்ததாகவும் அதுபோல் கல்வராயன்மலை அருகே பாப்பாத்திமலை பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (25), சிவக்குமார் (30), அண்ணாமலை (55), மாணிக்கம் (41) உள்ளிட்ட 10 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பெற்றுக்கொண்டு துப்பாக்கிளை விற்றதாக கூறினர். இந்த தகவலையடுத்து அவர்கள் 10 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களிடம் இருந்து 10 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

 நன்றி: மாலைமலர் (நவம்பர் 29, 2014)

இதை வாசித்தீர்களா? :   ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் கைது: விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!