பஞ்சபாண்டவர்கள் போல் இந்துக்கள் 5 குழந்தைகளைப் பெற வேண்டும் – தினமலர்

தினமலர் சேர்மன் ஆர்.ஆர். கோபால் ஜி (தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)

ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள்போல் 5 குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்; இந்து பெண்களை நூதன முறையில் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் – தினமலர் குழுமத்தின் சேர்மன் மற்றும் MD யான ஆர்.ஆர். கோபால்ஜி. (VHP மாநாட்டில்)

ஓசூர், ஜன. 26– கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கினார். விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் ஸ்தாபகர் வேதாந்தம்ஜி முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி வரவேற்றார்.

மாநாட்டில் காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:–

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கேற்ப கோவில்கள் உள்ள ஊரில் மட்டுமே குடியிருக்க வேண்டும். இந்துக்கள் அனைவரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் குறித்து அறிந்து மதத்தை வளர்க்க வேண்டும். தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை படித்து திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல வேறு மதத்திற்கு மாறியவர்கள் தாய் மதத்திற்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.ஆர். கோபால்ஜி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

பூரண மதுவிலக்கு வேண்டும், காவிரியின் புனிதத்தை காக்க வேண்டும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தடுக்க வேண்டும். இந்து பெண்களை நூதன முறையில் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும், பசுவதை தடை சட்டம், மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும், இந்து கோவில்களுக்கு சுய அதிகாரம் கொண்ட ஆட்சி மன்றம் தேவை, ஜாதி கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்,ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருப்பதால் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்து மக்கள் சிறுபான்மையின மக்களாக மாறும் அவல நிலை ஏற்படும். எனவே ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள்போல் 5 குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் முதியோர் இல்லங்கள் குறையும்.

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நன்றி: மாலைமலர் (26 ஜனவரி, 2015)


இந்து பெண்கள் 4 குழந்தைகளை பெற வேண்டும் சாக்ஷி மகராஜ் எம்.பி.யின் அடுத்த சர்ச்சை

மீரட்:  உத்தரபிரதேசத்தின் உன்னாவோ தொகுதி பா.ஜனதா எம்.பி.யான சாக்ஷி மகராஜ், ‘காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார்.

இதை வாசித்தீர்களா? :   போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்!

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ஒரு மனிதனுக்கு 4 மனைவிகளும், 40 குழந்தைகளும் என்ற கொள்கை இந்தியாவுக்கு ஒத்து வராது. எனவே இந்து மதத்தை காப்பாற்ற இந்து பெண்கள் அனைவரும் குறைந்தபட்சம் 4 குழந்தைகளாவது கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

இதில் ஒரு குழந்தையை துறவியாக அனுப்ப வேண்டும் என்று கூறிய அவர், மற்றொன்றை தேசத்தை காப்பாற்ற எல்லைக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

சாக்ஷி மகராஜ் எம்.பி.யின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘இந்தியாவின் மக்கள் தொகை கொள்கை மாற்றப்பட்டு விட்டதா? இதுதான் புதிய மக்கள் தொகை கொள்கையா? இதற்கான பதிலை நாடே எதிர்பார்க்கிறது’ என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் பிரதமர், உள்துறை மந்திரி, பா.ஜனதா தலைவர் மற்றும் நிதிமந்திரி ஆகியோர் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர், இதற்கான விடை கண்டிப்பாக கிடைக்காது என்றும் கூறினார்.

நன்றி: தினத்தந்தி (ஜனவரி 8, 2015)