காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அதைச் செய்தது ஒரு இஸ்லாமியர் என்று வதந்தி பரவிக் கொண்டிருந்த நேரம். அங்கே பிர்லா இல்லத்திற்கு வந்த மவுண்ட்பேட்டன் துரை கூடியிருந்த கூட்டத்திடம், “நீங்கள் நினைப்பதுபோல, காந்தியை கொன்றது இஸ்லாமியரில்லை. கொன்றவர் ஒரு ஹிந்து” என்று அறிவித்து, பெரும் கலவரம் உருவாவதை தடுத்தார்.
நீங்கள் இப்பொழுது தானே இங்கு வந்தீர்கள், என்ன நடந்தது யார் சுட்டது என்று தெரிந்துக் கொள்வதற்கு முன்னரே இப்படி ஹிந்து என்று சொன்னீர்களே என்று நேருவும் படேலும் மவுண்ட்பேட்டனிடம் கேட்க, அதற்கு மவுண்ட் பேட்டன் சொன்னது, “நான் அவ்வாறு சொல்லாதிருந்தால் இங்கு பெரும் கலவரம் உண்டாகியிருக்கும், கொன்றது யார் என்று எனக்குத் தெரியாது!”
இது தான் ஒரு தலைமைக்கு உண்டான பண்பு. சரி அப்படியே காலச் சக்கரத்தை சுழற்றுவோம்.
13 டிசம்பர் 2001. பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. தாக்குதல் சம்பவம் முடிந்த உடனே, அந்த இடத்தை பார்வையிட வந்தார் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எல் கே அத்வானி.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி:
“இந்தத் தாக்குதலை செய்தது யார்””
அத்வானி பதில்: “செய்தது பாகிஸ்தானியர்கள் தான்”
“எப்படிச் சொல்கிறீர்கள்?“
அத்வானி பதில்: “அவர்கள் பார்ப்பதற்கு பாகிஸ்தானியர்கள் போல இருந்தனர், அதனால் அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான்”
அது என்னங்க அடையாளம்? பாகிஸ்தானியர்கள் போல இருப்பதற்கு? குல்லாவும் தாடியுமா?
இதுதான் நாட்டின் உள்துறை அமைச்சர் அளவிலிருந்து கடைக் கோடி பாமரன் வரை இவர்கள் பரப்பி வரும் வன்மம்!
வெள்ளைக்காரன் பொய் சொல்வானா சொல்ல மாட்டானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நம்ம நாட்டுகாரனைப் போல அரசியல் செய்ய மாட்டான் என்பதை என்னால் அடித்துச் சொல்ல முடியும்!
நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்!
பயங்கரவாதச் செயல்கள் செய்பவர்கள், அவர்களுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்த நாட்டிற்கும், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதமானவர்களே!
பொதுமக்களின் உயிர்களைப் பறிக்கவோ, ஊனப்படுத்தவோ எந்தக் கொம்பனுக்கும் உரிமையில்லை. சென்னை ரயில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எத்தனை முனையிலிருந்து வேண்டுமானாலும் துப்பு துலக்குங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள்.
ஆனால் அதற்குமுன், குண்டு வைப்பவன் மட்டும்தான் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதி என்றாலே ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள்தான் என்றும் திணிக்கப்பட்டுள்ள பொதுப் புத்தியை முதலில் கழற்றி எறியவேண்டும். மனிதத் தன்மையற்ற மிருகங்களால் அப்பாவிகள் கொல்லப்படுவது போலவே, தேடுதல் வேட்டை என்ற பெயரிலோ, ஃபைலை மூடவேண்டும் என்ற அவசரத்திலோ எந்தவொரு அப்பாவியும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது, உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது!