தோழர்கள் – 8 – அபூதர்தா – أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

 

கடுமையான குளிரில் மக்கள் வெடவெடத்துக் கொண்டிருந்த ஓர் இரவு. பாலைவனப் பிரதேசமான அரேபியாவில் வெயிலும் கோடையும் எவ்வளவு பிரசித்தமோ அந்தளவு குளிர்கால இரவுகளில் நடுநடுங்க வைக்கும் குளிரும் பிரசித்தம். அபூதர்தாவின் வீட்டிற்குச் சில விருந்தினர் வந்திருந்தனர். வெகு தொலைவிலிருந்து வந்திருக்க வேண்டும். அன்றிரவு அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டனர். அவர்களுக்குச் சூடான உணவு வகைகள் தந்து உபசரித்தார் அபூதர்தா. இரவு வந்து உறங்கும் நேரமும் வந்தது, ஆனால் விருந்தினர்களுக்குப் போர்வை ஏதும் அளிக்கக்படவில்லை. தூங்கும் நேரம் ஆகிவிட்டது. அப்பொழுதும் போர்வை வந்து சேரவில்லை. கடுமையான குளிரில் போர்த்திக் கொள்ளாமல் எப்படி உறங்குவது? காத்திருந்து பார்த்த அவர்களில் ஒருவர், “நான் அவரிடம் சென்று கேட்டு வருகிறேன்” என்று ஆயத்தமாக, மற்றவர்களோ, “வேண்டாம், அபூதர்தா ஏதாவது நினைத்துக் கொள்ளப்போகிறார்” என்று தடுத்தார்கள். இவர் கேட்கவில்லை. அபூதர்தாவின் படுக்கையறையை அடைந்தவர் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார். அங்கே அபூதர்தா படுத்திருக்க, அருகே அவரின் மனைவி அமர்ந்திருந்தார். இருவருக்கும் சேர்த்து போர்த்திக் கொள்ள ஒரே ஒரு துண்டு. அது அந்தக் குளிருக்கு எத்தகைய கதகதப்பும் கொடுக்க இயலாத ஓர் எளிய துணி, அவ்வளவே!

போர்த்திக் கொள்ள கம்பளியோ, போர்வையோ இல்லை என்பது மட்டுமல்ல, வேறு பொருட்கள் என்பதே அங்கே இல்லை. அபூதர்தாவும் அவரின் மனைவியுமே விருந்தினர்போல்தான் அந்த அறையில் அமர்ந்திருந்தனர்.

விருந்தினருக்கு ஆச்சரியம் தாளவில்லை. “என்ன இது அபூதர்தா? எங்களை விட அதிகமாய் உங்களிடம் ஒன்றுமில்லையே? உங்களுடைய மற்றப் பொருட்களெல்லாம் எங்கே?” என்றார்.

“ஓ! அதுவா? எங்கள் வீடு வேறிடத்தில் உள்ளது. ஏதாவது கிடைத்தால் அதை நாங்கள் அந்த வீட்டிற்கு அனுப்பி விடுவது வழக்கம். வேறு ஏதும் இங்கு இருந்திருந்தால் உங்களுக்குக் கொடுத்து உபசரித்திருப்போம், மன்னிக்கவும்”

“எங்களது அந்த வீட்டை சொன்னேனில்லையா, அதன் பாதை சிரமமானது. அதற்கு அதிகமான பொருட்சுமை இருந்தால் பயணம் சரிப்பட்டு வராது. சுமை குறைவாக வைத்திருப்பவனால்தான் அந்தப் பாதையை எளிதாகக் கடக்க முடியும். அதனால் எங்களது சுமையை மிகவும் குறைத்து விட்டோம், பயணம் எளிதாகும் என்ற நம்பிக்கையில். என்ன ஏதும் புரிகிறதா?” என்றார் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு.

வாயடைத்துப் போனார் விருந்தினர். முற்றிலும் புரிந்தது. அபூதர்தாவின் பாதையும் பயணமும் புரிந்தது. ஒரு வழிப்பயணி, பயணத்தின்போது இடையில் தென்பட்ட ஒரு சிறிய ஓய்விடத்தில் அமர்ந்திருப்பதுபோல் கண்ணெதிரே அவர் அமர்ந்திருப்பது புரிந்தது. “புரிகிறது அபூதர்தா. உங்களது வெகுமதி உங்களுக்கு அருளப்படட்டுமாக!” என்ற பிரார்த்தனையை பதிலாக்கிவிட்டு திரும்பிவிட்டார் அவர்.

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

இதை வாசித்தீர்களா? :   தோழர்கள் - 55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (பகுதி-1)