
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா என்று தலைப்பிட்டு வந்த நேற்றைய (25-01-2019) தமிழ் இந்து நாளிதழின் வரலாற்றுத் திரிபைக் கண்டு தூக்கி வாரிப் போட்டது.
கடந்த 1921 ஆம் ஆண்டு, பிங்கலி வெங்கையா என்பவர் வடிவமைத்த தேசியக் கொடி பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டதும், முஸ்லிம் பெண் சுரைய்யா தயாப்ஜி வடிமைத்த, இன்று நாம் பயன்படுத்தி வரும், அசோகச் சக்கரம் கொண்ட மூவர்ணக் கொடியே 1947 ஜுலை 17 அன்று இறுதிப்படுத்தப்பட்டு, இந்திய தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டதும் வரலாறு. வெங்கையா தயாரித்து நிராகரிக்கப்பட்ட கொடியையும் சுரைய்யா தயாப்ஜியால் தயாரிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட கொடியையும் இங்குக் காணலாம்.
சரி. யார் இந்த சுரைய்யா?
இந்திய பிரதமர் அலுவலகத்தில் 1947இல் இந்திய சிவில் சர்வீஸ் அலுவலராகவும், பின்பு அலிகர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் பொறுப்பு வகித்த பதுருத்தீன் தயாப்ஜி அவர்களின் மனைவியும், அப்போதைய ஹைதராபாத்தின் பிரதமரான சர். முஹம்மது அக்பர் ஹைதரி அவர்களின் மருமகளும் ஆவார் சுரைய்யா.
இந்திய தேசியக் கொடியில், இந்து-முஸ்லிம்-கிறித்துவ ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் வகையில், காவி நிறத்தையும் முதல்முறையாக முன்மொழிந்து இணைத்தவர்.
நாடாளுமன்றக் கோப்புகளில், கொடி தயாரிப்புக் குழுவில் சுரைய்யா பதுருத்தீன் இடம் பெற்றிருப்பதையும், பிங்கலி வெங்கையா பெயர் இல்லாமல் இருப்பதையும் அரசுப் பட்டியலில் காண்க. (காண்க: http://164.100.47.194/Loksabha/Debates/cadebatefiles/C14081947.html). அத்துடன், இந்திய தேசியக் கொடி பற்றிய நீதி மன்றத் தீர்ப்புடன் Flag Foundation of India வெளியிட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள், தேசியக் கொடியின் வடிவமைப்பாளர் என்று சுரைய்யாவின் பெயரைத் தெளிவாக முன் மொழிகின்றன. (காண்க: http://www.flagfoundationofindia.in/know-your-national-flag.html)

பழம் பெரும் சிறப்புகள் நிறைந்த அலகாபாத் (Allahabad) நகரத்தை, இன்று ஆளும் யோகி, “பிரயாக்ராஜ்” எனப் பெயர் மாற்றம் செய்திருக்கலாம். இந்தியாவின் ஒவ்வொரு தெருவாக அலசி ஆராய்ந்து முஸ்லிம் பெயர்களை மாற்றம் செய்து கொண்டிருக்கலாம். ஆனால், கடந்து போன வரலாற்றை குழி தோண்டிப் புதைத்துவிட முடியாது. நிகழ்ந்த வரலாற்றை இன்று அழித்துக் கொண்டிருப்பவர், மக்களால் தூக்கி வீசி எறியப்படுவர் என்பதில் ஐயமில்லை.
ஆங்கில வரலாற்று ஆய்வாளர் ட்ரெவர் ராய்லெ (Trevor Royle) தனது நூலான, “The last days of the Raj” இல் தேசியக்கொடி வடிவம் பெற்ற வரலாற்றை தெளிவாகக் குறிப்பிடுகிறார். அதில், இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பெருமை, முஸ்லிம் பெண்மணி சுரைய்யாவுக்கே சாரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கேப்டன் எல். பாண்டுரங்க ரெட்டி, சுரைய்யா மூலம் தேசியக் கொடி தைத்து, தயார் ஆனபின் ஜவஹர்லால் நேரு கையில் கொடுக்கப்பட்டு, 1947ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 17 – 22 ஆகிய தேதிகளில் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிடுகிறார்.
காண்க: இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா… மறைக்கப்பட்ட உண்மைகள்!
இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா… மறைக்கப்பட்ட உண்மைகள்!
“How the Tricolour and Lion Emblem Really Came to Be” என்ற தலைப்பில், சுரைய்யா பதுருத்தீனின் மகள் லைலா தயாப்ஜி, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான திரு.ராஜேந்திர பிரசாத் தலைமையில் ஜவஹர்லால் நேரு மேற்பார்வையில் தன் தாய் தயாரித்தளித்த இந்திய தேசியக் கொடி பற்றி முழுமையான ஆவணங்களுடன் ‘தி வயர்’ இதழுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.
“British Author Trevor Royle’s book ‘The last days of the Raj’ which claimed that “By one of those contradictions which run through India’s history, the national flag was designed by a Muslim, Badr-ud-Din Tyabji The flag which flew on Nehru’s car that night had been specially made by Tyabji’s wife, Suraiya Badruddin Tayyabji. .”
இந்திய தேசத்திற்காக விடுதலைப்போரில் மாண்ட, ஆங்கில அரசை எதிர்க்க ஆங்கிலம் கற்பதை ஹராம் என்று ஃபத்வா கொடுத்து ஒதுக்கிய முஸ்லிம் சமூகத்தினரின் தேசப்பற்று, இந்துத்துவ சங் பரிவாரத் தொடர் சதித் திட்டங்களால், கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
அரசியல், சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்தவர் சுரைய்யா. இந்துத்துவ சூழ்ச்சிகளால் சமகாலத்தில் கண்முன்னேயே நம் தேசத்தின் வரலாறு, விலை போய்விட்ட ஊடகங்களால் மறைத்துத் திரிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, வீட்டுக்குள் கட்டுண்டு, ஹிஜாப் அணிந்து வலம் வரும் முஸ்லிம் பெண்ணாக இல்லை என்ற காரணத்தால் அன்றைய முஸ்லிம் குழுக்களால் புறக்கணிக்கப்பட்டவர் சுரைய்யா.
இந்திய குடியரசு தினமான இன்று (26-01-2019) இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த சுரைய்யா பதுருத்தீனின் பங்களிப்பை நினைவு கூர்வோம்; அழுத்தமாகப் பதிவு செய்வோம்.
— அபூ ஸாலிஹா