மிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து இயக்கங்களின் தலைவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள், படுகொலைகளைக் கண்டித்து பாஜக திங்கள் கிழமை பந்த் நடத்தியது. கோவை, குமரி மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் பந்த் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தமிழகத்தில் ஆங்காங்கே கடை அடைப்பு நடந்திருக்கிறது.

திண்டுக்கல், நாகப்பட்டினம், ராமநாதபுரம், பூந்தமல்லி, சென்னை, நாகர்கோவில், கோவை போன்ற இடங்களில் மறியல் செய்ய முயன்ற அக்கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பந்த்தை ஆதரிப்பதாக பாமக நிறுவனத் தலைவர் ராமதாசு கூறியிருந்தார். வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சிபிஎம்மின் ஜி. ராமகிருஷ்ணன் என அனைவரும் இப்படுகொலைகளை கண்டித்துள்ளனர். இக்கொலையை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுப் படையை நியமித்திருக்கிறது.

ஆடிட்டர் ரமேஷ்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாஜகவின் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். ஜூலை 1-ம் தேதி வேலூரில் இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் டாடா சுமோவில் வந்த 6 பேரால் பகல் நேரத்தில் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் 21-ல் நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி மீது நடைப்பயிற்சி மேற்கொள்கையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இப்படி கடந்த ஓராண்டு காலத்தில் இந்துமதவெறி இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி இந்துத்துவ அமைப்புகள் ‘இந்துக்களிடம்’ இந்துமதவெறி அரசியலைத் தூண்டி வருகின்றன. தேர்தல் அரசியலில் தமிழக கூட்டணிகளில் இடம்பெற வழியில்லாமல் இருக்கும் பாஜகவிற்கு இத்தகைய தாக்குதல்கள் மூலம் மக்களிடையே மதவெறியை தூண்டிவிட்டு செல்வாக்கு அடையலாம் என்ற சதிக்கனவை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த நேரத்தில், அத்வானி தமிழ்நாடு வந்த போது அவரை கொல்லத் திட்டமிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிலரது படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இவர்களுக்கும் பங்கிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இத்தகைய கொலைகளில் விசாரணை துவங்குவதற்கு முன்னரே இசுலாமிய தீவிரவாதம் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது ஊடகங்களுக்கும் காவல் துறைக்கும் வாடிக்கையாக ஆகியிருக்கிறது.

கடையடைப்பு நடத்துமாறு மிரட்ட மாட்டோம் என்றெல்லாம் சில பாஜக தலைவர்கள் சடங்கு அறிக்கை வெளியிட்டாலும் பல இடங்களில் கடையடைப்பு நடத்தும்படி கட்டாயப்படுத்தி வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க சுமார் 6,000 பேர் கைதாகியிருக்கின்றனர். ராமதாஸ் கைதைத் தொடர்ந்து பாமக குண்டர்கள் நடத்திய அழிவு செயல்களுக்கு போட்டியாக 100 பேருந்துகள் உடைப்பு, கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு என பாஜக தங்களது ‘ஜனநாயக’ கடமையை செய்து முடித்திருந்தது. இதன் மூலம் தங்களுக்கு நேசக் கரம் நீட்டியிருக்கும் ராமதாசுக்கு இணையாக பேரம் பேச தகுதி பெற்று விட்டார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இல.கணேசன், கோபமடைந்துள்ள இந்து இளைஞர்களை கட்டுப்பாடாக வைத்திருப்பதால்தான் இப்படி பந்த் போன்ற அகிம்சை போராட்டங்களை நடத்துகிறோம் எனக் கூறி அரசை மறைமுகமாக மிரட்டுகிறார். இத்தகைய கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதற்காகத்தான் மாமல்லபுரத்தில் வீராவேசம் பேசிய மருத்துவர் ஐயா திருச்சி சிறைக்கு சென்றார். ஆனால், இல.கணேசனின் இந்த அறிக்கைக்கு ஜெயா பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்க கூடாது. பார்ப்பனியத்தின் பங்காளிகள் கூட்டணியில் இல்லை என்றாலும் கொள்கையில் ஒன்றுபடுபவர்கள். எனினும் தாங்கள் எதிர்பார்த்த மாதிரி ஜெயலலிதா செயல்படவில்லை என்று தீவிர இந்துமதவெறி தொண்டர்கள் கருதினாலும், தலைவர்கள் புரட்சித் தலைவிக்கு நன்றி மேல் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேசத்துக்காக உழைத்தவர்கள் என்றும், தேச விரோத சக்திகள் இவர்களை கொன்று விட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கின்றன இந்துமத வெறி அமைப்புகள். இது பாகிஸ்தான் சதி, ஜிகாதி பயங்கரவாதம் என்று இசுலாமியர்களை குறிவைத்து பாஜக தலைவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மூலமாக சுதேசி பொருட்களை பயன்படுத்தக் கோரி பிரச்சாரம் செய்வாராம். ஆர்.எஸ்.எஸ் பேசும் சுதேசி ஒரு ஏமாற்று என்பதை உலகறிந்த விசயம். மேலும் ஆடிட்டர் ரமேஷ் தணிக்கையாளர் வேலை பார்த்தவர் என்பதால் அதில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கணக்குக் காட்டுவதில், வரி கட்டுவதில் திருட்டுத்தனம் பண்ண உதவினாரா என்றெல்லாம் கேட்க கூடாது. ஏனெனில் கோகோ கோலாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் அருண் ஜேட்லி என்பதை நினைவில் கொள்க.

ஆடிட்டர் இறந்தவுடன் சேலம் பாஜகவைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்றும் சேர்த்து பிரச்சாரம் செய்கிறது பாஜக. இன்னும் அத்வானி வரப்போகிறார், மோடி அறிக்கை விட்டு அப்டேட்டுகிறார் என்றெல்லாம் உணர்ச்சியை சூடாக வைத்திருக்க பாஜக முயல்கிறது.

வேலூர் இந்து முன்னணியின் முழுநேர ஊழியர் வெள்ளையப்பன் தென் மாவட்டத்தை சேர்ந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வேலூர் மண்டலத்துக்கான பொறுப்பாளராக இருந்திருக்கிறார். வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலையத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தியதை எதிர்த்து இயக்கம் நடத்திக் கொண்டிருந்தாராம். மக்களோடு எளிதில் பழகும் தன்மை உடையவர் என்றும் அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இசுலாமிய தீவிரவாதிகள் கொலை செய்வதன் மூலம் மற்ற இந்துத் தலைவர்கள் முடக்கிப் போடலாம் என்று நினைக்கிறார்கள் என்றும் இந்துமத அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. அவரது கனவை நனவாக்குவோம் என்கிறார் ராம.கோபாலன். அதாவது ஜலகண்டேசுவரரது உண்டியலை அரசிடமிருந்து பார்ப்பனர்கள் கைகளுக்கு மாற்றிட போராடுவோம் என்கிறார். வெள்ளையப்பனின் அந்த முயற்சியில் கோபமடைந்த யாரோ இந்த கொலையை செய்து விட்டார்கள் என்பதால் முசுலீம்கள் மீது பழியைப் போடுவதில் என்ன முகாந்திரம் இருக்கிறது? இதற்கிடையில் இந்தக் கொலையை செய்தது தென்மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினராக இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். கூலிப்படை என்றாலே அது சாட்சாத் ‘இந்து’ தளபதிகளின் தலைமையில்தான் நடக்கும் என்பது தினசரிகளின் குற்றச் செய்திகளை படிப்போருக்கு புரியும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூரில் பாஜகவின் மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி கொலைசெய்யப்பட்ட போது இதே போன்று ஆரவாரம் செய்து கடையடைப்பு நடத்தியது வேலூர் பாஜக. ஆனால் அந்தக் கொலை தொடர்பாக திட்டம் தீட்டியது வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா என்பதோடு கைது செய்யப்பட்ட அனைவருமே இந்துக்கள்தான். கொலைக்கான காரணம் பெண் விவகாரம் எனவும் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. இப்போது அந்தக் கொலையையும் சேர்த்து பந்த் நடத்தி பஸ் உடைக்கும் இந்து மத வெறியர்கள் மக்களை அவ்வளவு தூரம் முட்டாள்களாக நினைத்திருக்கிறார்கள். வேலூர் ரெட்டி கொலை விசாரணையை காவல்துறை திசைமாறி விசாரிக்கிறது என்றும் அபாண்டம் பேசுகிறார்கள் இந்துமதவெறியர்கள். எனில் உண்மையான குற்றாவாளிகள் யார் என்று இவர்கள் அடையாளம் காட்டலாமே?

நாகப்பட்டினத்தை சேர்ந்த புகழேந்தி, பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர். கடந்த ஆண்டு ஜூலை 5 அன்று காலை நடைப்பயிற்சியின் போது ஆட்டோவில் வந்த 4 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போது இதைக் கண்டித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் இவர் அங்குள்ள பிரபல தேவாலயமொன்று அரசு புறம்போக்கை ஆக்கிரமிக்க முயன்ற போது எதிர்த்துப் போராடியதால் தான் இக்கொலை நடந்ததாக கூறினார். ஆனால் அதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் ஆசிரியர் ஒருவரது வீட்டை அபகரித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்தார் புகழேந்தி. கட்டப்பஞ்சாயத்து மற்று அடாவடி வேலைகளில் ஈடுபட்டு வந்த அவரை கொன்றதாக கைதானவர் முனீசுவரன் என்பவர், ஒரு இந்து.

அடுத்து கடந்த மார்ச் மாதம் பரமக்குடியில் கொல்லப்பட்ட முன்னாள் பாஜக கவுன்சிலர் முருகன் என்பவரை கொன்ற ராஜபாண்டி மற்றும் முருகன் ஆகியோர் காரணமாக சொன்னது 6 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறுதான்.

கணக்கு எழுதுவது, ரியல் எஸ்டேட் என்று மட்டுமின்றி கந்து வட்டி தொழிலிலும் இந்துத்துவ அரசியல் தலைவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரலில் சென்னை கோயம்பேட்டில் கொலை செய்யப்பட்ட விட்டல் என்ற பாஜகவின் 127-வது வட்டச் செயலாளர் கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர். சுந்தரபாண்டியன் என்பவரிடம் கொடுத்த ரூ 2 லட்சம் கடன் திரும்பி வராத காரணத்தால் அவரது வீட்டுக்கு போய் அந்த வீட்டுப் பெண்களை ஆபாசமாக பேசியுள்ளார். அதனால் கோபமடைந்த சுந்தரபாண்டியன், அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டி கொலை செய்திருக்கின்றனர். பெண்களை தாயாகவும், நதியாகவும், பாரதமே தாயாகவும் பேசும் பாஜக ஆதரவாளர்கள் விட்டல் திட்டியது இந்து குடும்ப பெண்களை என்பதை கவனிக்க தவறக் கூடாது.

ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து என்று உருமாறியிருக்கும் ஓட்டுக் கட்சி பிரமுகர்களுக்கிடையேயான தொழில் போட்டியில் எந்த ஒரு கட்சியிலும் ஒரு ஆண்டில் ஒரு சில நபர்கள் கொல்லப்படுவது சாதாரணமாகிப் போயிருக்கிறது. திமுகவில் தா.கிருஷ்ணன் நடைப்பயிற்சியின் போது மதுரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார், பொட்டு சுரேஷை கொன்றார்கள். திருச்சி ராமஜெயத்தை கொன்றவர்களை ஓராண்டு முடிந்த பின்னும் இன்னும் பிடிக்க முடியவில்லை. இதற்காக திமுக திராவிட இனத்தை தட்டி எழுப்பி பந்த் நடத்தியதாக தெரியவில்லை.

இது போன்று தங்களது கட்சியில் சிலர் கொல்லப்பட்டதை ஏதோ தேசத்திற்காக தியாகம் செய்தது போல பிரச்சாரம் செய்து மதவெறியை தூண்டுகின்றனர் இந்துமத வெறியர்கள். இறந்தவர்கள் சொந்தப் பகை காரணமாக கொல்லப்பட்டனரா அல்லது தொழில் காரணமாக கொலை நடந்ததா, உண்மையிலேயே கட்சி வேலை காரணமாக கொல்லப்பட்டனரா அல்லது ஏதாவது பாலியல் விவகாரமா என்ற விசாரணைகளை துவங்குவதற்கு முன்னர் இசுலாமியர்களை நோக்கி அவர்களது கைகள் திட்டமிட்டு நீளுகின்றன.

1998-ல் அவர்கள் திட்டமிட்டு நடத்திய கோவை கலவரம்தான் அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் சில நாடாளுமன்ற சீட்டுகளை வாங்கித் தந்தது. கோவை, நாகர்கோவில் , நீலகிரி பகுதிகளைத் தொடர்ந்து இப்போது வட மாவட்டங்களில் குறிப்பாக தோல் தொழிலில் பணக்கார முசுலீம்கள் கொடிகட்டிப் பறக்கும் வேலூர் பகுதியில் மதவெறிப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் ஓராண்டாக நடந்த தாக்குதல்கள், படுகொலைகள் என அனைத்துமே வேலூர், குன்னூர், திருப்பூர், ராமநாதபுரம், நாகர்கோவில், நாகப்பட்டினம் என குறிப்பிட்ட இடங்களாகவே இருப்பதால் இந்துமத வெறியர்கள் இங்கெல்லாம் அனல் பறக்கும் மதவெறியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இசுலாமியர்களோடு சகோதரத்துவ உணர்வில் பழகும் ‘இந்துக்கள்’ எல்லாம் பாஜகவின் வருகைக்குப்பின்னர் மதவெறி பிரச்சாரத்திற்கு எளிதில் இரையாகின்றனர்.

சென்னையில் கல்வீச்சில் சேதமடைந்த மாநகரப் பேருந்து (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

சிபிஎம், கருணாநிதி உள்ளிட்ட யாருமே இந்தக் கொலையில் ஒட்டுமொத்த முசுலீம்களை நோக்கி வைக்கப்படும் இந்துமதவெறியர்களின் சதியை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இசுலாமிய தீவிரவாதிகளை மட்டுமல்ல மனிதநேய மக்கள் கட்சி போன்ற தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்டவர்களையே தீவிரவாதிகளாக சித்தரித்துதான் அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளன. இசுலாமியர்களுக்கெதிரான பொதுப்புத்தியை கிளறிவிட்டு அதில் குளிர்காய இந்த அமைப்புகள் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் மத அடிப்படைவாத சக்திகளுக்கோ, இடதுசாரி தீவிரவாதத்திற்கோ இடமில்லை எனக் கூறியுள்ள ஜெயலலிதா ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும் என அறிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே இந்தப் படுகொலைகள் நடப்பதாக கூறியுள்ளார். இப்படித்தான் கோத்ரா விபத்தை காரணமாக்கி குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது. தமிழகத்திலும் அத்தகைய முயற்சிக்கு இவர்கள் தயாராகிவருகிறார்கள்.

வேலூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ‘’துலுக்க நாய்களே! நீங்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 2002 குஜராத் மறந்து விட்டதா’ என்றெல்லாம் இந்து முன்னணி போஸ்டர் ஒட்டியுள்ளது. இளவரசனது இறுதி ஊர்வலத்துக்கு தடை, போஸ்டர் ஒட்டினால் போலீசே வந்து கிழிப்பது எல்லாம் நடக்கும். ஆனால் மேற்படி ஜனநாயகபூர்வமான போஸ்டர்களுக்கு போலீசு மரியாதை. பாசிச இந்துமத வெறியர்கள் ஜெயாவின் உதவியுடன் அடுத்த கலவரத்திற்கு தயாராகி வருகின்றனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் பேரங்களுக்காகவும் அரங்கேற்றப்படும் இந்துமதவெறியர்களின் சதித் திட்டங்களில் பாதிக்கப்படுவது அனைத்து மதங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்கள்தான். இசுலாமிய மக்களை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு தோதாக விசுவரூபம் பிரச்சினை, ரிசானா நபீக் விவகாரம், அமெரிக்க துணைத் தூதரக முற்றுகை போன்றவற்றில் அடிப்படைவாத இசுலாமிய அமைப்புகளை ஆட விட்டு, மக்கள் மனநிலையில் முசுலீம்கள் மீதான வெறுப்பை தோற்றுவிக்க முயற்சித்தவரும் இதே ஜெயலலிதாதான். இப்போது அவர் முசுலீம்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் நடத்தவிருக்கும் கலவரங்களை எதிர்பார்த்து இருக்கிறார்.

அனைத்து மதங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் இத்தகைய மதவெறி பிரச்சாரங்களை அடையாளம் கண்டு நிராகரித்து ஒருங்கிணைய வேண்டும். தமிழகத்தில் இந்துமதவெறியருக்கு இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.

நன்றி – வசந்தன் (வினவு.காம்)