வரவேற்பு

Share this:

இஸ்லாம் என்பது மார்க்கம் – இதில்
இணைபவர் எங்கள் வர்க்கம்
இனிய வாழ்வியல் கற்கும் – இங்கு
இல்லை நமக்குள் தர்க்கம்

வணக்கத்துக்குரியன ஏதுமில்லை – அந்த
வல்லோனைத் தவிர யாருமில்லை
வழிகாட்டித் தந்திட நபியவர்கள் – வந்து
வழங்கிய நெறிகளெம் வழியென்போம்

உள்ளத்துத் தூய்மைக்கு இறையச்சம் – உடலில்
உள்ளவைத் தூய்மைக்கு ஒளூச்செய்தும்
உடலோடு உயிரும் ஒன்றித்தொழ – நாளில்
உனக்கான கடமைகள் ஐவேளை

அருந்தாமல் பருகாமல் பொறுத்திருந்து – உணவு
அண்மையில் தொடும்தூரம் அடுத்திருந்தும்
அருமையான நோன்பை அகம்கொண்டு – மனத்தை
அடக்குவர் அல்லாஹ்வின் அடியாரே

 

எத்தனை வளங்களைப் படைத்துவைத்தான் – இறை
அத்தனை செல்வமும் நமக்களித்தான்
இத்தனைக் கித்தனை என்றெடுத்து
இல்லார்க்கு தானமாய் ஈந்துவப்போம்

மனிதருள் மாணிக்கம் மீட்டெடுத்த – அந்த
புனிதமிகு கஃபாவை நேசிக்கனும்
கனிவான அல்லாஹ்வின் அருள்வேண்டி- நாம்
புனிதப் பயணமொன்று மேற்கொள்ளனும்

வான்மறையை வானோரை நம்பனும் – புவியில்
வாழ்ந்தபின் வருமறுமை அஞ்சனும்
வழியை முடிவென்று மயங்காது – தீர்ப்பு
வரும்நாளே இறுதியென்று நம்பனும்

சகோதரத்துவம் என்பதெங்கள் பண்பு – என்றும்
சாகாவரம் பெற்றதெங்கள் அன்பு
சச்சரவை ஒதுக்கும் எங்கள் பண்பு – இதுவே
சன்மார்க்க சனங்களின் மாண்பு

மன்னருக்கும் மக்களுக்கும் ஓரிறை – பசும்
மரங்களுக்கும் வனங்களுக்கும் ஓரிறை
பறப்பவைக்கும் பிறப்பவைக்கும் ஓரிறை – பாரில்
படைக்கப்பட்ட மொத்ததிற்கும் ஓரிறை

எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஒரு குலம் – இந்த
எளியநல் சித்தாந்தம் எமதே
எல்லாமும் எல்லார்க்கும் நெறிமுறை – இதில்
எந்நாளும் தவறாது தலைமுறை

அடிப்படை அன்பு அதன்மேல் மனிதம் – என
அடுக்கடுக்காய் நற் பண்புகளால்
அமையப்பெற்ற தெம் மார்க்கம் – இதில்
அனைவரும் இணைய வரவேற்போம்!

– சபீர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.