காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை – அருந்ததி ராய் – பகுதி 2

Share this:

இந்தப் பேரணிக்கு முந்தைய நாள் இந்திய அரசு வேறொரு கடுமையான வேலையில் ஆழ்ந்திருந்தது. புதுதில்லியில் உள்துறைச் செயலாளர் அன்று நடத்திய உயர்நிலை கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர், உளவுத்துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கலகம் ஏற்படுவதற்கு ஐ.எஸ்.ஐ.யின் சிறு குழுதான் காரணம் என்று அரசு நம்புவதாகவும், இந்த அதிரகசிய உளவுத்துறை தகவலை தங்கள் செய்தி அலைவரிசைகளில் ஒளிபரப்புமாறு ஊடகங்களிடம் அரசு கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் மிகவும் அபத்தமாக இருந்தாலும்கூட, தொலைக்காட்சி அலைவரிசைகள் அரசு வழிகாட்டுதலைக் கேட்டாக வேண்டிய நிலையில் இருந்தன. அப்படி அபத்தங்களை ஒளிபரப்புவதற்கு மத்தியில் குறைந்தபட்சம், இந்த மக்கள் புரட்சி தொலைக்காட்சியில் காட்டப்படுகிறதே, அதற்காகவாவது மகிழ்ச்சியடையலாம்.


 

ஆகஸ்ட் 17ம் தேதி இரவு, ஸ்ரீநகரில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. சாலைகளில் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்த தடைகளில் ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். ஸ்ரீநகருக்குச் செல்லும் சாலைகள் தடை செய்யப்பட்டன. குப்கர் சாலையில் உள்ள ஐ.நா.ராணுவக் கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்குப் பேரணியாகச் செல்லாமல் டி.ஆர்.சி.மைதானத்தில் உரையாற்றுமாறு 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஹர்ரியத் தலைவர்களிடம் காவல்துறை கோரிக்கை விடுத்தது. ஏனென்றால், ஸ்ரீநகரின் குப்கர் சாலையில்தான் தடைகளை ஏற்படுத்தி இந்திய நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு சௌகரியமாகவும், பகட்டாகவும் வாழ்ந்து கொண்டிருந்தது.

 

பள்ளத்தாக்கின் கிராமங்கள், நகரங்களில் இருந்து வந்த மக்கள் 18ம் தேதி காலை ஸ்ரீநகரில் குவியத் தொடங்கினர். டிரக், டெம்போ வேன், ஜீப், பஸ், கால்நடையாக என கிடைத்த வழிகளில் எல்லாம் வந்திருந்தனர். மீண்டும் தடைகள் உடைக்கப்பட்டன. மக்கள் தங்கள் நகரத்தை மீட்டெடுத்துக் கொண்டனர். இதை எதிர்கொள்ளக் காவல்துறைக்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று விலகியிருப்பது; அல்லது மக்களைப் படுகொலை செய்வது. காவல்துறை விலகி நின்றது. ஒரு தோட்டாகூட சுடப்படவில்லை.

 

நகரமெங்கும் அலைகடலென புன்னகை வீசியது. எங்கும் மகிழ்ச்சிப் பரவசம் பரவியிருந்தது. படகு இல்ல உரிமையாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொருவர் கையிலும் பதாகைகள் வீற்றிருந்தன. நாங்கள் அனைவரும் கைதிகள், எங்களை விடுதலை செய்யுங்கள்என்றது ஒன்று. மற்றொன்றோ, ‘சுதந்திரம் இல்லாத ஜனநாயகம் வெறும் பேய் பிடித்த ஒன்றுஎன்றது. இந்திய அரசு தனது மதச்சார்பின்மை கூறுகளை வலுப்படுத்திக் கொள்ள, மதரீதியிலான படுகொலையை கையிலெடுத்துக் கொண்ட அவலத்தை மேற்கண்ட வாசகம் உணர்த்துகிறது. அத்துடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. உலகின் மிகப்பெரிய ராணுவ ஆக்கிரமிப்பைக் காஷ்மீரில் நிகழ்த்திக் கொண்டு, தன்னைத் தானே ஜனநாயக நாடு என்று அழைத்துக் கொள்ளும் பைத்தியக்காரத்தனத்தையும் குறிப்பிடுகிறது.

 

ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், ஒவ்வொரு சினார் மரத்தின் உச்சியிலும் பச்சைக் கொடி பறந்தது. அதில் இந்திய வானொலி நிலைய கட்டடத்தில் ஒரு கொடி பட்டொளி வீசிப் பறந்தது. ஹஸ்ரத்பால், பத்மாலூ, சோபூர் ஆகிய வழிகாட்டிப் பலகைகள் அழிக்கப்பட்டன. ராவல்பிண்டி அல்லது பாகிஸ்தான் பாகிஸ்தான் வழிகாட்டிப் பலகைகளே அழிக்கப்படாமல் இருந்தன. பாகிஸ்தான் மீது காஷ்மீர் மக்கள் கொண்டுள்ள பாசம் என்ற பொது உணர்வு வெளிப்பாடு, பாகிஸ்தான் மீதான விருப்பத்துக்கு இணங்கிச் செல்லும் தன்மை கொண்டது என்று தவறான தோற்றத்தை உருவாக்கக் கூடும். இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் செயல்பாட்டை விடுதலைப் போராட்டம் என்று கருதுகின்றனர். இந்திய அரசோ தீவிரவாதப் பிரசாரமாகக் கருதுகிறது.

 

பாகிஸ்தானைப் பெரும்பாலான காலம் சர்வாதிகாரிகள்தான் ஆண்டு வந்துள்ளனர்.தற்போது வங்கதேசமாக உள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது. இனக்குழுக்கள் இடையிலான போரால் தற்போது பிளவுண்டு கிடக்கும் பாகிஸ்தானிடம் இருந்து, காஷ்மீர் விடுதலைப் போராட்டம்விலகியிருப்பதுதானே சரியாக இருக்கும் என்று கேள்வி எலாம். நேரெதிராக ஆச்சரியமளிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றழைக்கப்படும் இந்தியாவைக் காஷ்மீர் மக்கள் கடுமையாக வெறுக்கின்றனர்.

 

எங்குப் பார்த்தாலும் பாகிஸ்தான் கொடிகள். எங்கு பார்த்தாலும்பாகிஸ்தானுடன் எங்கள் பந்தம் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’, ‘சுதந்திரம் என்றால் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லைஎன்ற கோஷங்கள் ஒலித்தன.

 

என்னைப் போன்ற முஸ்லிமல்லாதவர்களுக்கு சுதந்திரம் தொடர்பாக அவர்கள் தரும் விளக்கம் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தது. காஷ்மீருக்குச் சுதந்திரம் கிடைத்தாலும், ஒரு பெண்ணான உங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்து விடப் போகிறது?” என்று ஓர் இளம்பெண்ணிடம் கேட்டேன். அவர் தோள்களை குலுக்கி விட்டு, “இப்போது எங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்திருக்கிறது? இந்திய ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்படுவதற்கான சுதந்திரத்தைத்தான் நாங்கள் பெற்றிருக்கிறோம், இல்லையா?” என்று பதிலிறுத்தாள். அவரது பதில் என்னை மௌனமாக்கியது.

 

டி.ஆர்.சி.மைதானத்தில் பச்சைக் கொடிகளின் அணிவகுப்புக்கு மத்தியில் நான் நின்றபோது, என்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய இயல்பு கொண்ட எழுச்சியைப் பற்றி சந்தேகம் கொள்ளாமல் இருக்கவோ அதைப் புறந்தள்ளாமல் இருக்கவோ முடியவில்லை. அதேநேரம் ஒரு கொடிய தீவிரவாதிகளின் ஜிகாத் என்றும் இதை முத்திரை குத்த முடியாது. காஷ்மீரிகளைப் பொருத்தவரை இது ஒரு தூய்மைப்படுத்துதல் நிகழ்வு. நீண்ட, சிக்கல்கள் நிறைந்த சுதந்திரத்துக்கான போராட்டத்தில், அதற்கே உரிய அனைத்து நேர்த்தியின்மைகள், கொடுமைகள், குழப்பங்களுக்கு மத்தியில் இந்தக் கூடுகை ஒரு வரலாற்று திருப்புமுனை வாய்ந்த தருணம்.

 

இந்தப் போராட்டம் மாசுபடாத ஒன்று எனக் கூறமுடியாது. இந்த மக்கள் எழுச்சியின் ஆரம்பக் கட்டத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் கொடூரமாக கொல்லப்பட்டது மற்றும் பள்ளத்தாக்கில் இருந்த ஒட்டுமொத்த பண்டிட் சமூகமும் வெளியேற்றப்பட்டதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

 

கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. கோஷங்களை நான் கவனமாகக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தேன். ஏனென்றால் பேச்சு அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தி, புரிதலுக்கான அனைத்து அம்சங்களையும் தருகிறது. காஷ்மீர் சாலை தடை செய்யப்பட்ட பிறகு காஷ்மீரின் சந்தை ராவல்பிண்டிதான்’, ‘ரத்தம் தோய்ந்த எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை உடைப்போம், காஷ்மீரை ஒன்றிணைப்போம்என்றும், (இவை தவிர, இந்தியாவை அவமானப்படுத்தும்அவமதிக்கும் கோஷங்களும் இருந்தன).ஒடுக்குபவர்களே, கொடியவர்களே, எங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’, ‘காஷ்மீர் எங்கள் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது, காஷ்மீர் எங்களுடையதுஎன்று அந்த கோஷங்கள் ஒலித்தன.

 

ஒரு கோஷம் என்னைக் கத்தி போல் வெட்டி, எனது இதயத்தை உடைத்தது, ‘பிச்சையெடுக்கிறது நிர்வாண இந்தியா, பாகிஸ்தானிலோ வாழ்க்கை சௌகரியமான ஒன்றுதான்என்றது அந்த கோஷம்.

 

இந்த கோஷம் சப்பதானதாகவும்கேட்க வலி மிகுந்ததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன? இதைப் புரிந்து கொள்ள நான் முயன்றேன். மூன்று காரணங்கள் தென்பட்டன. முதலாவது, இந்த கோஷத்தின் முதல் பகுதி மிகவும் கவலையளிக்கக் கூடியது, ‘வல்லரசாக உயர்ந்து வரும்இந்தியாவின் உண்மையான முகத்தைச் சுட்டுகிறது.

 

இரண்டாவது, இந்தியர்கள் அனைவரும் நிர்வாணமாக, பிச்சையெடுத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும்கூட, பல்வேறு சிக்கலான, வரலாற்று ரீதியில் கொடூரமான பண்பாட்டு, பொருளாதார அமைப்புகள் இந்திய சமூகத்தைக் கொடூரமானதாகவும், இழிவான ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாகவும் உருவாக்கியுள்ளன.

 

மூன்றாவதாக, மிகவும் அவதிப்பட்ட காஷ்மீர் மக்கள், அதற்குச் சற்றும் குறையாத வகையில் அதே ஒடுக்குபவரால் (இந்தியாவால்) பல்வேறு வகைகளில் அவதிப்படுபவர்களைப் பார்த்துக் கிண்டல் செய்வதைக் கேட்பது வலி மிகுந்த ஒன்றுதான். இந்த கோஷத்தில் இருந்து பாதிக்கப்படுவர்களே எப்படி குற்றம்புரிபவர்களாக மாறுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

 

மரிவாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா ஜீலானி ஆகியோர் பேரணிக்கு வந்தபோது அவர்களுக்குக் கூறப்பட்ட வாழ்த்தொலிகள் காதுகளை நிறைத்தன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படவும், சிறையில் அடைக்கப்படவும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவும் காரணமாக இருந்த ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், தொந்தரவுக்கு உள்ளான பகுதிகள் சட்டம், மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். மக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவத்தை அகற்ற வேண்டும்என்று மிர்வாய்ஸ் உமர் பாரூக் பேசினார். சையது அலி ஷா ஜீலானி, ‘குரான்தான் நமக்கு வழிகாட்டும். பாகிஸ்தான் காஷ்மீருடையது; அதைப் போலவே காஷ்மீர் பாகிஸ்தானுடையது.என்ற வகையில் பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வாக்கியத்தையும் கூட்டம் ஆமோதித்தது.

 

இந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு அமைப்புகள் தங்களது மாறுபட்ட பார்வைகளுக்கு எப்படி தீர்வு காணப் போகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் கருத்து, காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்பது ஜீலானியின் விருப்பம், மிர்வாய்ஸ் உமர் பாரூக்கோ இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுத்துள்ளார்.

 

சிவப்புக் கண்கள் மினுமினுக்க என் அருகில் நின்றிருந்த ஒரு முதியவர் கூறினார், காஷ்மீர் எங்கள் நாடு. பாதியை இந்தியாவும், பாதியை பாகிஸ்தானும் பிடுங்கிக் கொண்டன. எங்களுக்குச் சுதந்திரம்தான் தேவை என்றார். புதிய பங்கீட்டு விதியின்படி, இவர் கூறுவதை யாராவது கேட்பார்களா? இந்தியச் சமவெளிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் கர்ஜித்துக் கொண்டு ஓடிய லாரிகளின் உரிமையாளர்களும்அதை ஓட்டிய மனிதர்களுக்கும் வரலாறு பற்றியோ அல்லது காஷ்மீரைப் பற்றியோ தெரியுமா என்று கூறமுடியவில்லை. இருந்தபோதும் லாரிகளின் பின்புறத்தில் அவர்கள் பதித்திருந்த தகடுகளில் பாலைக் கேட்டால், வெண்ணெய் தருவோம்; காஷ்மீரைக் கேட்டால், உன்னை இரண்டாகப் பிளந்துவிடுவோம்என்று எழுதியிருப்பது குறித்து அந்த முதியவருக்குத் தெரியுமா?

 

இந்த இஸ்லாமிய சக்தியின் இடத்தில் இந்துத்துவ சக்திகளைப் பொருந்திப் பார்த்தேன். அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் பயங்கரக்கனவாகத் திகழும், ‘கனவு இந்தியாவின் தோற்றம் என் முன்னால் வந்தது.

 

இதுதான் நமது எதிர்காலம்என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ‘முழுமையான வாழ்க்கையின் வழிஎன்ற பெயரில் ஒற்றை மதத்தைப் பின்பற்றும் அரசுகளின் கையில் சமூக, ஒழுக்க விதிமுறைகளை ஒப்படைக்க வேண்டுமா? இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் இந்துத்துவத் திட்டத்தை நிராகரிக்கிறோம். நாம் வாழும் சமூகத்தில் நிலவும் அன்பு, ஆர்வம், குறைகாணாத போக்கு, பெருமளவு உணர்ச்சிவசப்படும் குணங்களில் இருந்து இந்த நிராகரிப்பு உருவாகிறது. நமது அண்டை அயலார் என்ன செய்கிறார்கள்?பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறார்கள்? என்ற அம்சங்கள் நமது வாதத்தை மாற்றுவதில்லை. மாறாக அது நமது வாதத்தை பலப்படுத்தவே செய்கிறது. அதேநேரம் இப்படி அன்பால் உருவாகும் வாதங்கள், ஆபத்தையும் விளைவிக்கக்கூடும். இஸ்லாமிய அமைப்பை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். (ஏனென்றால் குழப்பளிக்கும் வகையில் இந்துத்துவக் கொள்கைக்கு எப்படி இந்துகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களோ, அதேபோல் உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைக்கு முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்). வன்முறை ஆபத்துகள் அடங்கிய நிலையில், பல்வேறு பார்வைகளை முன்வைக்கவும், தங்கள் கருத்தைக் கூறி விவாதிக்கவும் தற்போது வாய்ப்புக் கிடைத்துள்ளது. எந்த வகையான சமூகத்தை உருவாக்குவதற்காக போராடி வருகிறோம் என்பது பற்றிய சித்திரத்தை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் இப்போது தெளிவாக்க வேண்டும்.

 

தியாகிகள், கோஷங்கள், மேம்போக்கான பொதுமைப்படுத்துதல்களைத் தாண்டி இவர்கள் மக்களுக்கு எதையாவது கொடுத்தாக வேண்டும். குரானை வழிகாட்டியாகக் கொள்ளும் விருப்பமுடையவர்களுக்கு அங்கு வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அப்படிச் செய்யக்கூடாது என்று விரும்புபவர்கள் அல்லது குரானை வழிகாட்டியாக கொள்ளாதவர்கள் என்ன செய்வது? ஜம்முவில் உள்ள இந்துகள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்குமா? தற்போது வெளியேறி மோசமான வறுமையில் வாடும் லட்சக்கணக்கான பண்டிட்டுகள், தங்கள் பகுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி கிடைக்குமா? அவர்கள் சந்தித்த மோசமான இழப்புகளுக்கு நஷ்டஈடு அளிக்கப்படுமா? அல்லது கடந்த 61 ஆண்டுகளாக காஷ்மீரிகளுக்கு இந்தியா செய்து வந்ததையேதான், சுதந்திர காஷ்மீரும் சிறுபான்மையினருக்குச் செய்யுமா? அப்படியானால் ஓரினச்சேர்க்கையாளர்கள், கலப்படம் செய்பவர்கள், கடவுளைப் பழிப்பவர்களின் கதி என்னாகும்? இந்த ஒட்டுமொத்த சமூக மற்றும் ஒழுக்க விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் திருடர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்கள் என்ன ஆவார்கள்? சௌதி அரேபியாவைப் போல கொல்லப்படுவார்களா? மரணம், ஒடுக்குதல், அடக்குமுறை, படுகொலை என்ற துர்சுழற்சி இதற்குப் பிறகும் தொடருமா? காஷ்மீரின் சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆராய்ந்து அறிய வரலாறு பல்வேறு மாதிரிகளை முன்வைத்திருக்கிறது. அவர்களது கனவு காஷ்மீர் எப்படியிருக்கும்? அல்ஜீரியா, இரான், தென்னாப்பிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, பாகிஸ்தான்… இவற்றில் எதைப் போன்றிருக்கும்?

 

இந்த நெருக்கடியான தருணத்தில், கனவுகளைவிட வேறு சில விஷயங்களும் மிக முக்கியமானவை. சூழ்நிலையைத் தெளிவாகவும்நேர்மையாகவும் கணிப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் அறிவுச் சோம்பலையோ, தயக்கத்தையோ இந்தத் தருணத்தில் வெளிப்படுத்தக் கூடாது. 1947ம் ஆண்டு மகாராஜா ஹரி சிங் செய்த பித்தலாட்டம் காஷ்மீரின் நவீனகால சோகம் என்றும், அதன் காரணமாகத்தான் இப்படி நினைத்துப் பார்க்க இயலாத படுகொலைகள் நிகழ்ந்தன; கிட்டத்தட்ட சுதந்திரமாக இருந்த மக்கள் நீண்டகால அடிமையாக இருக்க நேரிட்டது என்றும் யாராவது வாதிடலாம்.

 

இதற்கிடையில் பிரிவினைவாத பிசாசு ஏற்கெனவே தலைதூக்கிவிட்டது. பள்ளத்தாக்கில் வாழும் இந்துக்கள் தாக்கப்படுவார்கள். வெளியேற்றத் தூண்டப்படுவார்கள் என்று இந்துத்துவ அலைவரிசைகளில் புரளி பரவி வருகிறது. அதற்குப் பதிலடியாக, ஜம்முவில் ஆயுதமேந்திய இந்துத் தீவிரவாதிகள் படுகொலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்துக்கள் அதிகமாக வாழும் இரண்டு மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட கொடூர நினைவுகள் மீண்டும் நினைவில் ஆடுகின்றன. அந்தக் கொடும் கனவு எப்பொழுதும் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுதான்.

 

மீண்டும் அதே வரலாறு இங்கும் நிகழும் என்று எதிர்பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படி நிகழாதவரை, அதை நம்பத் தேவையில்லை. மேலும் அப்படிப்பட்ட கொந்தளிப்பை உருவாக்க மக்கள் வேறு வகையில் தீவிரமாகச் செயலாற்றிருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், இந்த பயங்களை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு அந்த மக்களையும், காஷ்மீரையும் தொடர் ராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது. சுதந்திரத்தை அனுபவிக்க இந்தியர்கள் தயாராக இல்லை, அதனால்தான் சுதந்திரம் வழங்கவில்லைஎன்று காலனி ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திய பழைய வாதத்தையே இது நினைவுபடுத்துகிறது.

 

இந்திய அரசு காஷ்மீரின் மீது வைத்துள்ள பிடியை தக்கவைத்துக் கொள்வதற்குப் பல்வேறு வழிமுறைகளைக் கையாளலாம். தன்னால் என்ன முடியுமோ அதையெல்லாம் இந்தியா செய்து பார்க்கும். உறுதியான திட்டம் வகுக்கப்படாத நிலையில் தற்போது எழுந்துள்ள மக்கள் எழுச்சி மங்கிவிட வாய்ப்புள்ளது. தற்போது உருப்பெற்று வரும் எளிதில் உடைந்துவிடக்கூடிய கூட்டணியை உடைப்பதற்கு அது வழிகோலும். தற்போது எழுந்துள்ள சாத்வீக எழுச்சி மறைந்து, ஆயுதமேந்திய தீவிரவாதிகள் மீண்டும் போராடுவதற்கு அழைக்கப்படலாம். தற்போது 5 லட்சமாக உள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அது 10 லட்சமாக மாற்றக்கூடும். சில தந்திரமான படுகொலைகள், இரண்டொரு திட்டமிட்டப் படுகொலைகள், சில காணாமல் போகச்செய்தல்கள், ஒட்டுமொத்தக் கைது போன்றவை மேலும் சில ஆண்டுகளுக்கு இந்த மந்திர ஜாலத்தை நீட்டிக்கக்கூடும்.

 

காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்படும் அளவிடமுடியாத மக்கள் வரிப்பணம், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுடன் வறுமையில் உழலும் மக்களுக்குப் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டவும்உணவுக்காகவும் செலவிட வேண்டியவை. அதிக ஆயுதங்கள், அதிக தடையேற்படுத்தும் வேலிக் கம்பிகள். காஷ்மீரில் சிறைகளுக்குச் செலவிடுவது சரியான ஒரு நடவடிக்கை என்று இந்திய அரசு எப்படி நம்புகிறது என்று புரியவில்லை.

 

காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு நாம் அனைவரையும் அரக்கர்கள் ஆக்கிவிடுகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இந்து ஆதிக்கவாதிகள் தாக்குவதற்கு உள்ள ஆபத்தான வாய்ப்பு, காஷ்மீர் முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்துக்குத் தடை ஏற்படுத்துகிறது. இந்த விஷம் மிகுந்த சதித்திட்டம் நேரடியாக நமது ரத்தநாளங்களில் செலுத்தப்பட்டு அவ்வப்போது இடையீடுகளுடன் நிர்வகிக்கப்படுகிறது.

 

இத்தனைக்குப் பிறகும் நம் அனைவரது மனசிலும் ஒரு நியாயமான கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மக்களின் விடுதலையைப் பறிக்க எந்த அரசுக்காவது ராணுவப் படையைப் பயன்படுத்த உரிமை உண்டா?

 

காஷ்மீரை இந்தியா விட்டொழிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் விடுதலை பெறுவதும் மிகமிக முக்கியம்.

 

காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை – அருந்ததி ராய் >முந்திய பகுதி.

 

தமிழில் : ஆதி வள்ளியப்பன் (நன்றி அவுட்லுக்இதழ்)

நன்றி : சமூக விழிப்புணர்வு இதழ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.