அப்போது அந்த மாணவச் சிறுவனுக்கு வயது 15. இண்ட்டர்மீடியட் தேறியிருந்தார். 14 நாட்கள் பள்ளி விடுப்பில் டெல்லிக்குச் சென்று தம் உறவினர்களைக் கண்டு வரப் பயணித்தவர் 14 ஆண்டுகள் கழித்துத்தான் வீட்டுக்குத் திரும்பி வருவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
திருடப்பட்ட ஒரு மாருதி கார் மூலமாகக் கடந்த 21.05.1996 அன்று தெற்கு டெல்லியிலுள்ள லஜ்பதி நகர் மார்கெட்டில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 13 அப்பாவிகள் கொல்லப் பட்டனர்; 38 பேர் காயமடைந்தனர். “அந்தக் கார்குண்டு வெடிப்பில் தொடர்புடையவன்” எனக் குற்றம் சாட்டி, டெல்லிக்கு அப்போதுதான் காலடி எடுத்து வைத்திருந்த ஸய்யித் முஹம்மது மக்பூல் ஷா எனும் பெயருடைய அந்த மாணவச் சிறுவனையும் டெல்லிக் காவல்துறை கைது செய்தது.
உண்மையான காரணம் அவர் ஸ்ரீநகரின் லால் பஜாரைச் சேர்ந்த ஒரு கஷ்மீரி என்பது மட்டுமே. அது, யாராவது சப்தமிட்டுத் தும்மினாலும் “ஐ எஸ் எஸ்ஸின் சதி” என்றும் “எல்லை தாண்டிய பயங்கரவாதம்” என்றும் அத்வானி கூறத் தொடங்கிய காலகட்டம்.
டெல்லிக் காவல்துறை மக்பூல் ஷாவைக் கைது செய்ததாகச் சொன்ன தேதி 17.6.1996. “நீதிமன்றத்துக் கொண்டு போவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னரே என்னைக் கைது செய்த டெல்லிக் காவல்துறை கொடுமையாகத் துன்புறுத்தியது” என்று இப்போது 29 வயதாகும் மக்பூல் ஷா நினைவு கூர்கிறார்.
மக்பூல் கைது செய்யப் பட்டதை அறிந்த அதிர்ச்சியில் முதலில் இறந்தவர் மக்பூலின் தந்தை ஸய்யித் முஹம்மது ஷா. அவருக்குப் பின்னர், “என் தம்பியை ஒருமுறையாவது எனக்குப் பார்க்கணும்” என்று பிடிவாதம் பிடித்துச் சிறைச்சாலைக்குப் போய் ‘ஒருமுறை’ பார்த்துவிட்டு வந்தார் மக்பூலின் மீது பாசமழை பொழிந்தவரான அக்காள் ஹதீஸா பானு. அடுத்த சில நாட்களில் தம்பியின் நினைவுடனே இளமை மாறாத தம் 24ஆவது வயதிலேயே இறந்து போனார்.
“15 ஆண்டுக்குமுன் நான் பள்ளிக்குப் புறப்படும்போது வழியனுப்பும் என் தந்தையும் அக்காளும் இன்னும் என் கண்முன்னே நிற்கிறார்கள். பள்ளி விடுமுறையில் டெல்லிக்குப் பயணமான அந்த நாளுக்குப் பின்னர் என் தந்தையை நான் பார்க்கவே இல்லை. இப்போது, அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைதான் அடையாளம் காட்டச் சொல்லிப் பார்க்க முடிந்தது” மக்பூலின் சொற்களில் இழையோடும் ஆழ்துயரம் நெகிழ வைக்கிறது!.
பிறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முதலாக அறிமுகப் படுத்தப்படும் தம் குடும்பத்தின் புதிய உறவுகளை, தம் அக்காள் ஹதீஸாவின் மகனான மருமகனைத் தம் மடியில் அமர வைத்துக் கொண்டு அணைத்துக் கொள்கிறார் மக்பூல்.
டெல்லிக் காவல்துறையினரால் ‘வெடிகுண்டு வழக்கில்’ மக்பூல் ஷா கைது செய்யப் பட்டபோது சிறுவர் என்பதால் முதலில் திஹார் சிறை வளாகத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஏறத்தாழ மூன்றாண்டு காலம் அடைக்கப் பட்டிருந்தார். அவருக்குப் 18ஆவது நிரம்பும்வரை காத்திருந்த சிறைத் துறையினரால் பயங்கரக் குற்றவாளிகள் அடைக்கப் பட்டிருக்கும் திஹார் மத்தியச் சிறைக்கு மாற்றல் கிடைத்தது.
விசாரணை … விசாரணை … விசாரணை!
பலகட்ட விசாரணைகளில், லஜ்பதி நகர் குண்டு வெடிப்பு வழக்கில் 203 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். காவல்துறையினரால் ‘அள்ளப்பட்ட’ 150 பேர்களுள் 140 பேர் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே “அப்பாவிகள்” என விடுவிக்கப் பட்டனர்.
மீந்த 10 பேரில் நால்வரைக் கடந்த 8.4.2010 அன்று கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.ப்பீ. கர்க் “குற்றமற்ற அப்பாவிகள்” எனத் தீர்ப்பளித்து 14 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்திருக்கிறார். அந்த நால்வருள் மக்பூல் ஷாவும் ஒருவர். மிர்ஸா இஃப்திகார் ஹுஸைன், லத்தீஃப் வஸா, அப்துல் கனி ஆகிய 14 ஆண்டுகால அப்பாவிக் கஷ்மீரிக் கைதிகளும் மக்பூல் ஷாவுடன் விடுதலை செய்யப் பட்டவர்களாவர். “கஷ்மீரியாக இருப்பதே நாங்கள் செய்த பாவம் போலும்” எனக் கூறும் மக்பூல் தொடர்ந்து கூறுகிறார்:
தீர்ப்பின் சில பகுதிகள்: |
என்றெல்லாம் காவல்துறையின் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி கர்க் சுமத்தியுள்ளார். |
“14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் இப்போது நிரபராதி என்று என்னை விடுதலை செய்துள்ளார்கள். சரியான நேரத்தில் நீதி கிடைத்திருந்தால், நான் நன்றாகப் படித்து இன்றைக்குப் பெரிய நிலைக்கு வந்திருப்பேன். என் குடும்பம் சீரழிந்திருக்காது. இப்போது, எனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை” எனக் கூறுகிறார் அநீதி இழைக்கப்பட்டு, சட்டவிரோதமாக தண்டனை அனுபவித்த மக்பூல் ஷா.
எதிர்வரும் 22.04.2010 அன்று வெளியாகவிருக்கும் இறுதித் தீர்ப்பில் மீந்த அறுவருள் “நிரபராதிகள்” என விடுதலை ஆகக்கூடியவர் எத்தனைபேர் எனத் தெரியவில்லை. உண்மைக் குற்றவாளிகளை நீதி தண்டிக்கட்டும்; விரைந்து விசாரித்துத் தண்டிக்கட்டும். ஆனால், அப்பாவிகளை, சிறுவர்களைக் குற்றவாளிகளாகப் புனைந்து வழக்கு ஜோடிக்கும் காவல்துறையையும் புனைவு வழக்குகளுக்கே மாமாங்கங்களைக் கடத்தும் நீதிமன்றங்களையும் யார் தண்டிப்பது?
அப்பாவிகள் இழந்த ஆண்டுகளை, இளமையை, வாழ்க்கையை யார் திருப்பித் தருவது?
வெறுமனே, “தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதி” என்று சொல்லிச் சொல்லியே காலத்தை ஓட்டாமல் தாமதப் படுத்தப் படும் நீதிக்குத் தண்டனை வழங்குவது நடைமுறையில் வந்தால்தான் நீதித்துறை சீராகும்; பல நூற்றுக் கணக்கான அப்பாவிகள் வாழ்வு மலரும்.
-o-