பர்மிய முஸ்லிம்கள் : சர்வதேச சமூகத்தின் வெட்கக்கேடான மௌனம்

Share this:

டந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள், முஸ்லிம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அதுபோல் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதலை மூடி மறைக்கும் ஊடகத் துறையின் நயவஞ்சகத்தனமும் புரிந்து கொள்ள முடியாத ஒன்றல்ல. எனினும் தற்போது முஸ்லிம் ஊடகங்கள் உள்ளிட்ட மெயின் ஸ்டீரிம் மீடியா என்றழைக்கப்படும் பொது மீடியாவின் பலத்த மெளனம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மறுக்க முடியாத ஒன்று.


மியான்மரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் முஸ்லிம்களின் மீதான வன்முறைகள் குறித்துப் பொது ஊடகங்களில் தேடினாலும் இணையவெளியில் தேடினாலும் ஒருசில ஈரானிய ஊடகங்கள், தனி நபர்களின் ப்ளாக்குகள், ப்ரஸ் டிவி போன்ற மிகச் சிலவற்றைத் தவிர மற்றவற்றில் முழுமையாய் இருட்டடிப்பு செய்துள்ளனர். “ஒபாமாவின் நாய்குட்டிக்கு உடம்பு சரியில்லை” போன்ற அரிய சமூக பயனுள்ள (!) செய்திகளை வெளியிடும் ராய்ட்டர்ஸ், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் உலகெங்கும் உள்ள சர்வதேச ஊடகங்களும் பர்மிய முஸ்லிம்களின் அவலம் குறித்துக் கிஞ்சிற்றும் வாய் திறக்கவில்லை. எங்கு குண்டு வெடித்தாலும் உடனே முஸ்லிம்களை சம்பந்தப்படுத்தி செய்தி போடும் தினமலம் உள்ளிட்ட இந்திய வகையறா பத்திரிகைகளும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதோடு ஒன்றிரண்டைத் தவிர முஸ்லிம் ஊடகங்களும் மெளனமே காத்தன என்பது வேதனைக்குரியது!

மியான்மர் (பர்மா) ராணுவத்தாலும் புத்த மதத் தீவிரவாதிகளாலும் வேட்டையாடப்படும் ரோஹிங்க்யாஸ் என்று சொல்லப்படும் பர்மிய முஸ்லிம்களின் துயரம் இரண்டாம் உலகப் போரிலிருந்தே தொடங்குகிறது. பெரும்பாலும் புத்தர்களும் அதற்கடுத்து இந்துக்களும் வாழும் பர்மாவில் ரோஹிங்க்யாஸ் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 8 இலட்சமே. உலகின் மிக மோசமாக நடத்தப்படும் சிறுபான்மையினராக ஐக்கிய நாடுகள் சபையாலே கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்களில் சுமார் 3 இலட்சம் பேர் பல்வேறு ஆண்டுகளாய் நடக்கும் வன்முறையால் ஏற்கனவே பங்களாதேஷுக்கு அகதிகளாய் குடியேறி உள்ளனர். சுமார் 30,000 மக்கள் மலேஷியாவிலும் குடியேறி உள்ளனர்.

இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷாரின் காலனியாக இருந்த பர்மா ஜப்பானிய படைகளால் வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்தே முஸ்லிம்களின் மீதான வன்முறைத் தாக்குதலின் வரலாறு ஆரம்பித்தது எனலாம். 1942 மார்ச் 28 அன்று 5,000 முஸ்லிம்கள் ராகினே தேசியவாதிகளால் மின்ம்யா மற்றும் ம்ரோஹாங்க் நகரில் கொலை செய்யப்பட்டனர். இன்றளவும் முஸ்லிம்களுக்கு அந்நாட்டின் குடிமக்கள் அந்தஸ்தை வழங்க பர்மிய அரசு மறுத்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வேட்டையாடப்படும் விலங்குகள்போல் பர்மிய முஸ்லிம்கள் வாழ்ந்துவருகின்றனர். தாய்லாந்து – மியான்மர் எல்லைப் பகுதியில் மட்டும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

குடிமகன் அந்தஸ்து இல்லாத காரணத்தால் பர்மிய முஸ்லிம்கள் திருமணம் செய்வதற்குக்கூட அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளதோடு இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. நவீன கால அடிமை முறையின் நீட்சியாகக் குறைவான சம்பளத்திற்கு வலுக்கட்டாயப்படுத்தப்பட்டு பர்மிய முஸ்லிம்கள் கசக்கி பிழியப்படுகிறார்கள். குடிமகன்களாய் இல்லாத காரணத்தால் முஸ்லிம்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு வீடற்ற அகதி்களாய்த் திரிவதோடு ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அனுமதியின்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது நவீன அடிமைத்துவமே என உறுதிபடச் சொல்லலாம்.

பர்மிய முஸ்லிம்களுக்குக் கல்வி பயில்வது என்பதெல்லாம் இத்தகைய சூழலில் சாத்தியமே இல்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏழு வயதான பச்சிளம் பாலகர்கள்கூட பலவந்தமாகப் பணி புரிய நிர்ப்பந்திக்கப்படுவது, அடிமைத் தொழிலாளச் சிறுவர்கள் குறித்துக் கூக்குரலிடும் மேற்குலகின் காதுகளில் இதுவரை விழாத மர்மம் புலப்படவில்லை. பணி செய்ய மறுக்கும் சிறுவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவதோடு கொலை மிரட்டலும் அதிகார வர்க்கத்தால் விடுக்கப்படுவது உண்டு.

அங்குப் பெரும்பான்மையாக வாழும் ராகினே பவுத்தப் பெண் ஒருத்தியை ரோஹிங்யா முஸ்லிம் வாலிபன் ஒருவன் வன்புணர்வு செய்யப்பட்டதாக வெளியான உறுதி செய்யப்படாத செய்தியைத் தொடர்ந்து, அவ்வாலிபனுக்கு அரசு தூக்குத் தண்டனை விதித்தது. அப்படியிருந்தும் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்த பவுத்தத் தீவிரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்று குவித்துள்ளதாகத் தெரிகிறது. முஸ்லிம் யுவதிகள் வன்புணர்வு செய்யப்பட்டதாலும், அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுக் கலவரம் ஊதி பெருக்கப்பட்டதால் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் பர்மாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸுல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.

முஸ்லிம்களுக்கு எதிரா கொடூரங்களைக் குறித்து ஆயிஷா ஸுல்ஹி, அல்வதனுல் மிஸ்ரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியது:

பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம் – இவற்றுள் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள்?’ என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

மியான்மரில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலை செய்யப்படும்பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?

மியான்மர் முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளைக் கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் அபிமானத்திற்குரிய செய்தியாகும்.

பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ள முயல்கிறேன். ஆனால், பெளத்தர்களின் தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்

இவ்வாறு ஆயிஷா ஸுல்ஹி கூறியுள்ளார்.

*இச்சம்பவம் பற்றி எந்த வந்தேறி ஊடங்கங்களும் எழுதவில்லை.

நன்றி : புதியதூது

முஸ்லிம்கள் ஆளும் நாடுகளில் ஒரு சில வன்முறைகள் நடந்தாலே ஊதிப் பெரிதாக்கும் யூத, பார்ப்பனிய ஊடகங்கள் மிகச் சிறிய இயல்பு நிகழ்வுகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளத் தவறுவதில்லை. அண்மையில் பாகிஸ்தானில் ஒரு ஹிந்துச் சிறுவன் இஸ்லாத்தைத் தழுவியதை அங்குள்ள ஹிந்துக்களுக்கு மிகப் பெரும் ஆபத்தாக சித்தரித்தன. அதுபோல் உலகச் சந்தையின் சிறு ஏற்ற, இறக்கங்களை ஐரோப்பாவின் பொருளாதாரக் குழப்படியையும் பிரத்யேகமாக ஒளிபரப்பும் மேற்குலக ஊடகங்களுக்கு முஸ்லிம்களின் அவலங்களை ஒளிபரப்ப மனமில்லை. அரபு ஊடகங்களுக்கோ தங்கள் பகுதியில் நடக்கும் சிரியா கலவரம் குறித்து கவலைப்படவே நேரமில்லை எனும்போது பர்மிய முஸ்லிம்களாவது, உலகளாவிய சகோதரத்துவமாவது.

ஆசியாவின் தாதாவாகத் தன்னைக் காட்டி கொள்ளும் சீனாவும் உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாகப் பறைசாற்றிக் கொள்ளும் என்னருமை தேசமும் இதுவரை ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடாமல் மெளனமாக இருக்கின்றன.

ஆங் சூ கியின் விடுதலைக்குப் பிறகு சர்வதேச அரசியலில் பர்மா நெருக்கமாகியுள்ள நிலையில், அந்நாட்டில் இன்னும் வெளியே கொண்டு வரப்படாத இயற்கை வளங்களையும் மலிவான மனித வளத்தையும் கருத்தில் கொண்டே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகு வழக்கம்போல் எழுப்பும் ஜனநாயகக் கோஷங்களை எழுப்பாமல் அமைதி காக்கிறது. ஒருசில அமைப்புகளைத் தவிர நமதூர் முஸ்லிம் அமைப்புகளும் இங்குள்ள அஸ்ஸாமுக்கும் தூரத்திலுள்ள பலஸ்தீனத்திற்கும் கொடுத்த குரலைக்கூட பர்மிய முஸ்லிம்களுக்கு கொடுக்காதது வேதனையே. காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளைக் குறித்து சொல்லவே வேண்டியதில்லை.

பர்மாவில் சர்வதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடியதற்காக நோபல் பரிசு பெற்று, தற்போது உலகைச் சுற்றிவரும் ‘புரட்சிப் பெண்’ ஆங் சான் சூ கீயும் தம் நாட்டில் முஸ்லிகள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது குறித்தும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது குறித்தும் மெளமாக இருப்பது, முஸ்லிம்கள் விஷயத்தில் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையோ என்று எண்ண தோன்றுகிறது.  திபெத்திய மக்களின்மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்காகக் குரல் கொடுப்பவரும் நோபல் பரிசு பெற்றவருமான தலாய் லாமாவும் மியான்மர் முஸ்லிம்கள் விஷயத்தில் மெளனமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், ஆதாயம் இல்லையென்றால் முஸ்லிம்கள்மீது நடக்கும் தாக்குதலை வெளிப்படுத்தக்கூட மனம் இல்லா அளவுக்கே இஸ்லாத்தின் எதிரிகள் நடந்துகொள்வர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலகும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பொதுவுடமை நாடுகளானாலும் முஸ்லிம்கள் விஷயத்தில் இறைவன் தன் அருள்மறையில் சொல்வதுபோல் “அவர்களின் கொள்கையை ஏற்கும்வரை உங்களைப் பற்றித் திருப்தியடையமாட்டார்கள்” என்று சொல்வதை உண்மைப் படுத்துவதுபோலவே அவர்களின் நடத்தை உள்ளது. அல்லாஹ்வையும் அஞ்சி, கூடவே அதிகாரத்தில் அமெரிக்காவையும் அஞ்சி வாழும் முஸ்லிம் பெயர் தாங்கி அரசுகளும் இவ்விஷயத்தில் மெளனமாகவே உள்ளன.

துஆக்கள் உடனே ஏற்று கொள்ளப்படும் ரமலானில் நம் பர்மிய சகோதரர்களுக்காகக் கையேந்துவோம். துஆ எனும் வலிமையான ஆயுதத்தை கொண்டு நம் சகோதரர்கள் துயர் நீங்க கண்ணீர் மல்கக் கையேந்துவோம்.


நன்றி : இஸ்லாமியக் கொள்கை

oOo

“… மிகைத்தவனும் புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டார்கள் என்பதையே அவர்கள் செய்த குற்றமாகக் கருதி (எதிரிகள் அவர்களைப் பழிவாங்கி)னர் (அல்குர் ஆன் 85:8).


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.