உயிர் காக்க உதவுவோம்!

Share this:

ருப்பதற்குச் சொந்தமாக ஓர் இருப்பிடமோ உணவுக்கான வருமானத்துக்காகக்கூட சரியானதொரு தொழிலோ இல்லாமல் தவிக்கும் நிலையிலுள்ள ஒரு குடும்பத்தில் யாருக்காவது, எதிர்பாராத விதமாக சக்திக்கு மீறிய மிகப்பெரும் தொகை செலவு செய்யவேண்டிய அளவுக்குக் கடுமையான நோய் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அதுவும் மூன்று பேருக்கு ஏற்பட்டால்? அந்நோய், சிறுநீரக பாதிப்பாக இருந்தால்..? நினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சம் நடுங்கிறதல்லவா? அத்தகையதொரு நிலைமை நம் குடும்பத்துக்கோ அல்லது நம் நெருங்கிய உறவினர்களில் யாருடைய குடும்பத்துக்கோ ஏற்பட்டால் நாம் என்ன பாடுபடுவோம்?

அத்தகையதொரு கடுமையான சோதனையில் வேலூர் மாவட்டம், அகரஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் – ரெஜினா பேகம் தம்பதியினர் உள்ளனர். இவர்களைக் குறித்த விரிவான விவரங்களை ஆகஸ்ட் 21, 2013 தேதியிட்ட விகடன் இதழ் வெளியிட்டிருந்தது.

அப்துல் மஜீதுக்கு அஸ்லம் பாஷா, அன்வர், யாசீன் என்று மூன்று மகன்கள். மூவருள் மூத்த மகன் அஸ்லம் பாஷா பி.ஏ எகனாமிக்ஸ் படித்துள்ளர். மூன்று பேருமே ‘அல்போர்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலை. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு சிரமங்களுக்கிடையே மூத்த மகன் அஸ்லம் பாஷாவுக்கும் இரண்டாவது மகன் அன்வருக்கும் அறுவை சிகிச்சையைப் பெரும்பாடுபட்டு முடித்துவிட்டார் அப்துல் மஜீத். மூளைச் சாவு அடைந்த குருசாமி என்பவரின் கிட்னி, மூத்த மகன் அஸ்லாம் பாஷாவுக்குப் பொருத்தப் பட்டுள்ளது. இரண்டாவது மகன் அன்வருக்கு, அப்துல் மஜீத் தம் கிட்னிகளுள் ஒன்றை வழங்கி உயிர் பிழைக்க வைத்துள்ளார்.

தற்போது மூன்றாவது மகன் மகன் யாசீனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். (விரிவான தகவலைப் பெட்டி செய்தியில் காண்க)

கிட்னி தானம் கேட்டுப் பதிவுசெய்தவர்களுள் சீனியாரிட்டி அடிப்படையில் யாசின்தான் முதலிடத்தில் உள்ளார். ஆனால் இன்றைய தேதியில் தானமாகக் கிட்னி கிடைத்தாலும் உடனடியாக மாற்று அறுவை செய்துகொள்ள முடியாத சோதனை அவருக்கு.

காரணம், இதுவரை 400 தடவை டயாலிசிஸ் செய்யப்பட்ட யாசீனுக்கு ஒருமுறை டயாலிசிஸ் பண்ணும்போது சரியாக சுத்தம் செய்யப்படாத கருவிகளைப் பயன்படுத்தியதால் வைரஸ் தாக்கி, தற்போது அந்த வைரஸை முழுவதும் அழித்தால் மட்டுமே கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை.

டயாலிசிஸ் செய்யும் போதெல்லாம் அந்தக் கிருமியை அழிக்க யாசினுக்கு ஒரு ஊசி போட வேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ 15,000. சொந்தக் கிராமத்தைவிட்டு 1,000 ரூபாய் வாடகைக்கு சுனாமி குடியிருப்பில் வாழும் இக்குடும்பம், கடந்த இரு ஆண்டுகளாக வசிப்பதோ மருத்துவமனையில்தான்! இரு வருட காலமாக ரமலானை மருத்துவமனையில் கழிக்கும் அப்துல் மஜீத்தின் குடும்பம், யாசீனுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முடித்து விரைவில் வீடு திரும்ப படைத்தவனிடம் பிரார்த்திப்போம்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் கடினமான வேலைகள் ஏதும் உடனடியாக செய்யமுடியாத நிலையிலிருக்கும் இரு மகன்களின் தொடர் மருத்துவப் பரிசோதனைகள், இரண்டாவது மகனுக்குத் தம் சிறுநீரகத்தில் ஒன்றைக் கொடுத்திருப்பதால் பலவீனமாக இருக்கும் தம் உடலுக்கான மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து மூன்றாவது மகன் யாசினுக்கான வாராந்திர டயாலிசிஸ் மற்றும் வைரஸுக்கான ஊசி என மிகப் பெரிய பொருளாதார தேவையில் சிக்கி உழல்கிறார் சகோதரர் அப்துல் மஜீத்.

எம்பெருமானார்(ஸல்) அவர்கள் உருவாக்கிக் காண்பித்த பைத்துல்மால் (பொது நிதிக்கூடம்) முறையை ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு ஜமாத்திலும் உருவாக்க வேண்டிய கடமையும் அத்துடன், இது போன்ற மிக வறுமையில் நிற்கும் ஏழைகளின் தேவைகளுக்கான உதவிகளை அரசிடமிருந்து பெறுவதற்கான முறையான வழிகாட்டல்கள் வழங்கும் சமூக விழிப்புணர்வு மையங்கள் ஊர்தோறும் ஏற்படுத்த வேண்டியதன் கட்டாயமும் நமக்கு உள்ளது என்பதை, சமூகத்தின் உடனடி ஆதரவிலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் அப்துல் மஜீத் போன்ற சகோதரர்களின் நிலைமை முகத்திலறைந்தாற் போன்று நமக்கு தெரிவிக்கிறது.

நம்மிடம் இதற்கான சரியான திட்டமிடலோ பைத்துல்மால்களோ இல்லாததால் அவை உருவாக்கப்படும் வரை, அன்ஸார்-முஹாஜிர்களாக ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கவேண்டிய கட்டாயக் கடமை நமக்குள்ளது. சோதனைகளைப் பொறுமையுடன் எதிர்கொண்டு நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் உதவி எதிர்பார்த்திருப்போருக்கு அல்லாஹ் நேரடியாக இறங்கிவந்து உதவி செய்வதில்லை.

பசியுடன் வருபவருக்கு உணவளிப்பது அல்லாஹ்வுக்கு உணவளிப்பதற்குச் சமமானது. அவ்வாறு உதவி எதிர்பார்த்து வருவோரைக் கண்டு முகம் திரும்பி கொண்டால், மறுமையில் இறைவன் “உன்னிடம் உதவி கேட்டு வந்த எனக்கு முகம் திருப்பிக்கொண்டாயே?” என்று நம்மிடம் கேள்வி கேட்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

இதோ நம் முன்னர் நம் சகோதரர் அப்துல் மஜீத்! அவருக்குத் தோள் கொடுக்க முன்வாருங்கள். ஏழைக் குடும்பத்தின் பிரார்த்தனைக்கு உரியவராகுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அல்லாஹ்வின் நல்லருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

எத்தனை பேர் அன்ஸார்களாக முன்வருகிறீர்கள்?

சகோதரர் அப்துல் மஜீதை நேரடியாகத் தொடர்புகொள்ள:
Mr.Abdul Majeeth,
No.1293, Tsunami Kudiiruppu,
Semmanjeri, Cholinganallur, Chennai
Mobile : 80983 74060

அவருடைய வங்கிக் கணக்கு விபரம்:
K.N. Abdul Majeeth,
AC No : 800210110004315
Bank of India,
Mylapore Branch,
Chennai.

சத்தியமார்க்கம்.காம் மூலமாக உதவி செய்ய விரும்புவோர், பொறுப்பாளர் சகோதரர் முஹம்மத் ரஃபீக் அவர்களை +91 – 8012170903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நேரடியாக வங்கிக்கு அனுப்ப இயலாதோர் admin@satyamargam.com முகவரியினைத் தொடர்பு கொண்டாலோ அல்லது இப்பதிவின் பின்னூட்டம் பகுதியில் தொடர்பு எண்களுடன் கருத்தாக பதிவு செய்தாலோ, உரிய வழியில் உதவி பெற்று சகோதரருக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாருங்கள் சகோதர – சகோதரிகளே அன்ஸார்களாக!

– சத்தியமார்க்கம்.காம் குழுமம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.