தமிழகத் தேர்தலில் முஸ்லிம்கள்!

Share this:

ன்றைய சூழலில் நாடாளுமன்றத்துக்கு ஒரு முஸ்லிம் கூட தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்றே கள நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மட்டும் ஹாரூன் தேனியில் நிற்கிறார். சென்ற முறை இது பெரிய குளம் தொகுதியாக இருந்தபோது, உடன் பிறவாச்சகோதரி சசிகலாவின் உறவினர், ஆனானப் பட்ட தினகரனையே எதிர்த்து வென்றவர். இம்முறை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக தன் பதவியை ராஜினாமாச் செய்தத் தங்கத் தமிழ்ச் செல்வனை எதிர்த்துப் போட்டியிடுகிறார். ஹாரூன் கோடிகளை கொண்டு வந்து கொட்டும் வல்லமை படைத்தவர். சாதிகளைக் கடந்து வெற்றி பெற அது போதுமா? நடப்பு என்பது வேறு; நம்பிக்கை என்பது வேறு.

“வேலூரில் பேரா. காதர் மொஹிதீனே மீண்டும் நிற்பார்; இல்லை டாக்டர் செய்யது சத்தார் நிற்பார். அதுவும் இல்லை; இம்முறை அந்தச் சந்தர்ப்பம் ஒரு பெண்ணுக்குப் போகும்; அது ஃபாத்திமா முஸஃபராக இருப்பார்” என்றெல்லாம் ஊகங்கள் ரெக்கை கட்டிப் பறந்தன. கடைசியில் அதிர்ஷ்டத்தின் கடாட்சப் பார்வை நண்பர் துபை – முத்துப்பேட்டை அப்துல் ரகுமான் மீது விழுந்திருக்கிறது.

சென்ற முறை பா.ம.க., தி.மு.க கூட்டணியில் இருந்தது. என்றாலும் அதற்கு முன்பு அந்தத் தொகுதியில் நின்று வென்று, மத்திய அமைச்சராகவும் இருந்த சண்முகம், பேராசிரியருக்கு எதிராக சில “உள்-குத்து” வேலைகளெல்லாம் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையெல்லாம் மீறிப் பேராசிரியர் வென்றார் என்றால், ஒட்டு மொத்தச் சமுதாயமும் கட்சி, அமைப்பு, இயக்க பேதமின்றி அவருக்காக உழைத்தனர் – வாக்களித்தனர். அப்துல் ரகுமான் வேட்பாளராவதற்குத் துணை செய்த அதிர்ஷ்டம் உறுப்பினராவதற்கும் துணை செய்யுமா? இப்போதைக்கு விடை தெரியாத கேள்விதான். ஏனெனில் இம்முறை பா.ம.க. பகிரங்கமாகவே எதிர்த்து நிற்கிறது.

மேலும், வேலூர் முஸ்லிம்களின் கோட்டையல்ல என்கிற ஓர் உணர்வு உள்ளூர ஜெயலலிதாவுக்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

மனித நேய மக்கள் கட்சி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் கிடந்து ஊசலாடிவிட்டு, கடைசியில், வேறு வழியில்லாமல் துணிந்து தனித்தே நிற்க முடிவு செய்து விட்டது.

பேரா. ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, சலீமுல்லா கான் ஆகியோர் முறையே மயிலாடுதுறை, மத்திய சென்னை, மற்றும் ராமநாதபுரத்தில் களம் காண்பார்கள் என்று தகவல். ஒட்டு மொத்தச் சமுதாயமும் ஒற்றைக்கட்டாய், ஒன்று பட்டு ஆதரித்தால் முதல் இரண்டு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு சாத்தியமே.

ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத் பகிரங்கமாகவே ம.ம.க.மீது யுத்தப் பிரகடனம் செய்துள்ளது. “தீபம்” தொலைக்காட்சியில் எனக்களித்த பேட்டியில் பி.ஜே. அதிமுகவை ஆதரிப்பதற்கும் திமுகவை எதிற்பதற்கும் சொன்ன வலுவான காரணங்கள் இன்னும் என் நினைவில் நிழலாடுகின்றன.

குவைத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பி.ஜே.யைச் சமாதானப் படுத்தி ம.ம.க.வை ஆதரிக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒரு தகவல். அதற்காக ஒரு சிறப்புப் பிரதிநிதியே இங்கு வருவதாகவும் ஒரு பேச்சு. ஆனால் காலம் வெகுவாகக் கடந்து விட்டது என்று நினைக்கிறேன் த.த.ஜ. திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு வெகு தூரம் போய் விட்டதாகவும் தோன்றுகிறது. அத்துடன் வக்ஃப் வாரியத்தின் தலைமைப் பதவி வேறு கண் முன் காட்சியளிப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள்.

அதுவும் போக, மயிலாடுதுறையில் எதிர்த்து நிற்பவர்கள் காங்கிரஸின் அமைச்சர் மணி சங்கர ஐயர், அதிமுக உள்-வட்டத் தலைவர்களில் ஒருவரான ஓ.எஸ்.மணியன். இந்த இரண்டு மணியான மனிதர்களும் ‘மணி’ விஷயத்தில் ரொம்பத் தாராளம். மணி ஷங்கர ஐயர் மீது நிரம்ப அதிருப்தி இருக்கிறது. அதுவும், இலங்கைப் பிரச்னையும் காலை வாராமல் இருந்தால் அவர்தான் வெல்வார் என்கிறாகள். காங்க்-அதிமுக அதிருப்தி வாக்குகளும் முஸ்லிம்கள் வாக்குகளும் த.த.ஜ.வின் பிரச்சாரத்தையும் மீறி பேராசிரியருக்குக் கிடைக்கலாம். ஆனால் பிராமணர்கள் வாக்கு நிச்சயம் கிடைக்காது என்கிறார்கள்.

சென்னையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரும் பெருமளவில் ஊடக பலத்தை கொண்டிருப்பவர் என்று சொல்லப்படுபருமான தயாநிதி மாறனை எதிர்த்து வெல்வது என்பதே கடினம்.

அதிலும் அ.தி.மு.க. சார்பில் ஒரு முஸ்லிம் – முஹம்மது அலி ஜின்னா – நிற்கும்போது நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்திய தவ்ஹீத் ஜமா’அத் காரியாலயத்துக்கு ஹைதர் நேரடியாகவே சென்றிருக்கிறார். என்றாலும் அவர்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை.

ராமநாதபுரத்தில், திமுக சார்பாக, தமிழ் நாட்டின் “ராஜ நாராயணன்” சினிமா நடிகர் ரித்தீஷ், அதிமுக சார்பில் எதற்கும் துணிந்த சத்திய மூர்த்தி, போதாக்குறைக்கு இன்னொரு முஸ்லிம் வேட்பாளர் சிங்கை ஜின்னா…! ரித்தீசுக்கு அமைச்சர் சுப.தங்க வேலனின் எதிர்ப்பு உண்டென்றாலும் அழகிரியின் ஆசீவாதமும் உண்டு. ஐயாயிரம் கோடி “வெள்ளைப்பணமே” தன்னிடம் உண்டு என்று ரித்தீஷ் சொல்வது ‘உதாரா’ உண்மையா? என்று தெரியவில்லை. திமுக – அதிமுக அதிருப்தி வாக்குகளும் முஸ்லிம்களின் வாக்குகளும் மமகவுக்குக் கிடைக்கும் என்று நம்பினாலும் இடையில் திருநாவுக்கரசரும் தேமுதிக வேட்பாளர்களும் அதிருப்தி வாக்குகளை அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள். என்றாலும் அத்தனையும் இருந்தாலும் போதாது.

“தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வார்” என்கிற ஒரு பழமொழியும் “கெட்டுப் போகிறேன், பந்தயம் என்ன?” என்று பந்தயம் கட்டியவனின் கதையும்தான் தேர்தலையும் முஸ்லிம்களின் நிலையையும் எண்ணும்போது நெஞ்சினில் நிழற்படமாக விரிகிறது. அனுபவம் ஆசான். காலம் கற்றுத் தரும். மனிதர்கள் பாடம் படித்துக் கொள்வார்கள்..

நன்றி : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.