காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

Share this:

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”

சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”

பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்

யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.

அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.

மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.

கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”

அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!

என் உயிர் போகட்டும்!

காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.

மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.

“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.

“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.

காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”

தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.

தனியாள் திட்டமா கொலை?

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.

இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!

ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: grcpim@gmail.com

நன்றி: த ஹிந்து (தமிழ்)


Facebook பக்கங்களில் இருந்து…

இன்று ஜனவரி 30!

சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினம் 1948, ஜனவரி 30!

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி வீரர் காந்தி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தால் படுகொலை செய்யப்பட்டநாள்!

ஜனவரி 26 – குடியரசு தினம், ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் என படுவிமர்சையாக நாம் நினைவுகூர்தலுக்குக் காரணமானவர் படுகொலை செய்யப்பட்ட தினமான இன்றைய நாளை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்?

மறக்கடிக்கப்படும் வரலாற்றில், மக்கள் மனதிலிருந்து காந்தியின் படுகொலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்படுவதன் பின்னணியில் அவர் எதற்காக படுகொலை செய்யப்பட்டார் என்ற மிகப்பெரியதொரு உண்மையும் சேர்த்தே மறக்கடிக்கப்படுகிறது!

இந்நாட்டின்மீது பற்றுகொண்ட ஒவ்வொருவரும் நாடும் நாட்டு மக்களும் அமைதியுடன் சுபிட்சமாக வாழ வேண்டும் என மனதார விரும்பும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் “காந்தி ஏன் கொல்லப்பட்டார்?” என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலை மனதில் பசுமையுடன் கொண்டு நடக்க வேண்டும்!

ஆம்! காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

ஒற்றை வரியில் கூறினால் இப்படி பதில் கூறலாம்:

“இந்தியாவை இந்துத்துவ நாடாக அறிவிப்பதற்கு எதிராக இருந்ததால் காந்தி கொல்லப்பட்டார்!”

எல்லா மத மக்களும் வாழ்வதற்கான களமாக, இந்தியா ஒரு மதச்சார்பற்ற மக்கள் குடியரசாக ஆக வேண்டுமென பாடுபட்டதற்காக அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்!

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவை இந்துத்துவ நாடாக ஆக்கும் நோக்கில் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக காந்தி தம் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லா வகையிலும் முயற்சி செய்தார். ஆனால் அதன் பலன் பெரிய அளவில் விளையவில்லை. எனவே, இந்து-முஸ்லிம் கலவரங்கள் முடியும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

அவரின் இந்த அறிவிப்பே கோட்சேயின் குண்டுக்கு அவரை இரையாக்கியது!

அவரின் உண்ணாவிரத அறிவிப்பைத் தொடர்ந்து அரசு இயந்திரங்களிலிருந்து மக்கள் வரை அனைவரும் விழித்துக் கொண்டனர். கலவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வர ஆரம்பித்தன.

முஸ்லிம்களைக் கருவறுத்து இந்தியாவிலிருந்து அவர்களை முழுவதுமாக விரட்டியடிக்கும் தம் திட்டம் படுதோல்வியடைவதைக் கண்முன் கண்டு பொறுக்கமுடியாத காவி பயங்கரவாதக்கூட்டம், சுதந்திரத்திற்கு முன்னரிலிருந்தே இந்தியாவை இந்துத்துவநாடாக்குவதற்கு எதிராகவே செயல்பட்டு வரும் காந்தி இனிமேலும் உயிருடன் இருந்தால் தம் திட்டம் ஒருபோதும் நடக்காது என்பதை உணர்ந்தே அவரைப் படுகொலை செய்தது!

அவரைக் கொலை செய்த அடுத்த நொடியிலேயே அவரின் படுகொலையைக் கூட தம் திட்டத்துக்குச் சாதகமாக முஸ்லிம்களைக் கருவறுக்கும் நோக்கில், “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்” என்ற புரளியைக் கிளப்பிவிட்டுத் தொடர முயற்சித்தது!

நாட்டின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசிய வானொலியில், “காந்தியைக் கொன்றது ஒரு இந்து” என்று அறிவித்ததைத் தொடர்ந்தே அவர்களின் அத்திட்டமும் முறியடிக்கப்பட்டது!

ஆக, நாட்டில் நடக்கும் இந்து-முஸ்லிம் கலவரங்களின் பின்னணி என்ன என்பதற்கான விளக்கத்தை “காந்தி படுகொலை” செய்யப்பட்டதற்கான காரணத்தின் பதிலிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்!

ஆகவே, “காந்தி ஏன் கொல்லப்பட்டார்?” என்ற கேள்வி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக நிலைகொள்ள வேண்டியது இந்திய திருநாட்டின் நிலைநிற்பிற்கான அவசியமாகவும் ஆகிறது!

அப்துல் ரஹ்மான்.ஜ


 
முஸ்லிம்கள் தமக்கென்று தனியே அமைப்பு உருவாக்குவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவராக இருந்த ஜின்னா, இறுதியில் அந்தத் தனி அமைப்புக்கே (முஸ்லிம் லீக்) தலைமை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது போல், தனி நாட்டுக்கும் தலைமை ஏற்கத் தள்ளப்பட்டார். பிரிவினைக் கோரிக்கை அவர் விரும்பிக் கேட்டது என்பதைவிட, அவர் மீது திணிக்கப்பட்டது என்பதுவே வரலாற்று உண்மை.

பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்து விட்டால், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களும் தமக்கென உருவாக்கப்பட்ட தனி நாட்டுக்குச் சென்று விடுவார்கள் என்று கணக்குப் போட்டே பிரிவினைக் காய் நகர்த்தப்பட்டது. ஆனால், வகுப்புவாதிகளின் அந்தத் திட்டத்திலும் மண் விழுந்தது. பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள் போக, பெரும்பகுதி முஸ்லிம்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர்.

பிரிவினைக்கும், இங்கே எஞ்சிய முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற போதும், நாட்டைப் பிளவு படுத்திய சக்திகளாக இங்குள்ள முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப் பட்டனர். அரசியல் நிர்ணய சபையில், அவர்களின் தனித்த உரிமைகளுக்கு வேட்டு வைக்கப்பட்டது. இடஒதுக்கீடு பறிக்கப்பட்டது. முஸ்லிம் லீக் என்ற பெயரைக்கூட உச்சரிக்க இயலாத நிலை உருவாக்கப்பட்டது. அத்தகைய நெருக்கடிகளையும் அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டு மீண்டுவந்தனர் முஸ்லிம்கள். பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ‘முஸ்லிம் லீக்’ எனும் அதே பெயருடன் இயக்கத்தைத் தொடர்ந்தார் காயிதே மில்லத். முஸ்லிம்கள் மீதான அவப்பெயரைத் துடைத்து, மைய நீரோட்டத்தில் மீண்டும் அவர்கள் நிமிர்ந்து நடைபோட வழிவகுத்தார்.

காங்கிரசில் இருந்து வெளியேற்றியும், நாட்டை விட்டே விரட்டியும், பிரிவினைப் பழி சுமத்தியும் கூட முஸ்லிம்களை அசைக்க முடியவில்லை. அனைத்திலும் தோல்விகண்ட வகுப்பு வெறியர்கள் இறுதியாகக் கையிலெடுத்த கருவிதான் காந்தியார் படுகொலை. இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டும், சுன்னத் செய்து கொண்டும் முஸ்லிம் வேடத்தில் சென்று காந்தியைக் கொன்றான் கோட்சே. ஏற்கெனவே நாட்டைப் பிளந்த பழியோடு, நாட்டின் தந்தையையும் கொன்ற பழியும் இணையும் போது நாட்டு மக்கள் தன்னியல்பாக வீதிக்குவந்து கண்ணில் படும் முஸ்லிமையெல்லாம் கொன்று விடுவார்கள் என்ற கணக்குடனேயே அப்படுகொலை அரங்கேற்றப் பட்டது. கடைசியில் அந்தத் திட்டமும் பொய்த்தது. காந்தியைக் கொன்றது முஸ்லிம் அல்ல என்ற உண்மை அம்பலமானது. முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டனர்.

ஆக, மைய நீரோட்டத்தில் இணைந்து பயணிக்க முஸ்லிம்கள் விரும்புவதையும், அவர்களைப் பழி சுமத்தி வெளியேற்றி தனிமைப்படுத்த வகுப்புவாதிகள் முயல்வதையும் வரலாறு முழுக்கப் பார்க்க முடிகிறது. அதன் நீட்சி இன்றும் தொடர்கிறது.

காலமெல்லாம் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய ஜின்னா, தனிநாடு கேட்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டார். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த காந்தியடிகள், படுகொலை செய்யப்பட்டார். ஜின்னா சென்றதும், காந்தி செத்ததும் பழைய வரலாறென்றால், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பும், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பும் புதிய வரலாறாக அமைந்துள்ளன. அஜ்மீர் தர்கா முஸ்லிம்களின் தலம் என்றாலும், அங்கே இந்துக்களும் பெருமளவில் வந்து குவிகின்றனர். சம்ஜவ்தா ரயில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிலும், சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பிலும் ஈடுபட்டு கைதாகி இருப்பவர்கள் இந்துத்துவ சக்திகளே.

இந்துக்களும் முஸ்லிம்களும் இயல்பாகக் கலக்கும் இடங்கள் அனைத்தையும் இந்துத்துவம் தனக்கான சவக்குழியாகக் கருதுகிறது. அதனாலேயே இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான களங்கள் இங்கே தொடர்ந்து குறிவைக்கப் படுகின்றன. இந்துக்களின் எதிரியாக முஸ்லிம்களைக் காட்டுவதும், முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி இந்துக்களைத் திரட்டுவதும் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன.

(ஆளூர் ஷாநவாஸ் எழுதிய ‘நீதியின்றி அமையாது உலகு’ நூலிலிருந்து..)

 
ஆளூர் ஷா நவாஸ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.