
இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை பாஸ்போர்ட் கட்டாயம் என்ற நிலை இல்லாமல் இருந்தது. பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, அதன் மூலம் இதுவரை அவர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வந்தனர். ஆனால், இனிமேல் அவ்வாறான சிறப்பு அனுமதி மட்டும் உடையோருக்கு ஹஜ் விசா அனுமதிப்பதில்லை என சவூதி அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் செல்ல திட்டமிட்டிருப்போரில் இதுவரை பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு ஹஜ் விசா பெறுவதில் சிக்கல் எழும். இப்பிரச்சனையைப் போக்க, இவ்வாண்டு ஹஜ் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோரில் இதுவரை பாஸ்போர்ட் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாதோரை அனுமதிக்க இயலாது என புதிய உத்தரவு பிறப்பித்துள்ள சவுதி அரசு, தற்போது பாஸ்போர்ட் உடன், வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த சான்றிதழும் அவசியம் என்று கூறியுள்ளது.
இவ்வாண்டு பல்வேறு மாநில ஹஜ் கமிட்டிகளால் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட் பெறுவதற்கான தேதி ஜூலை 31 ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இருப்பினும் இதுவரை பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்காதவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.அவர்களுக்கு உடனே பாஸ்போர்ட் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தகவல் : அபு நிஹான்