காந்தி 147: காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக!

Share this:

காந்தியின் பாரம்பரியத்தை அல்ல, கோட்ஸேயின் பாரம்பரியத்தைத்தான் பாஜக வரித்துக்கொண்டுள்ளது.

பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்கப் பரிவாரம். மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும் கோபமும் சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தனக்கும் இருந்த தொடர்பைக் கோட்ஸே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பாஜக தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்கத் தலைவர்களும் கூறிவந்தனர், கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார். அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துக் கண்டித்தவர் நாதுராம் கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். தான் எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993 அன்று பேசிய கோபால் கோட்ஸே தானும் சகோதரன் நாதுராமும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்ற பலருக்கும் தெரிந்த உண்மையை வெளியிட்டார்.

நாதுராம் விலகவில்லை

அதற்குப் பின் ஜனவரி 1994-ல் ‘ஃப்ரண்ட்லைன்’ இதழுக்குப் பேட்டியளித்த கோபால் கோட்ஸே, “சகோதரர்களாகிய நாதுராம், தத்தாத்ரேயா, கோவிந்த், நாங்கள் எல்லோருமே ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர்களாயிருந்தோம். நாங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்எஸ்எஸ்ஸில் வளர்ந்தோம் என்பதே சரியாக இருக்கும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போன்றது. நாதுராம் ஆர்எஸ்எஸ்ஸின் ‘பவுதிக் கார்யவாஹ்’ (அறிவுஜீவி ஊழியர்) ஆக இருந்தார். தான் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிவிட்டதாக கோட்ஸே அறிக்கை விட்டார். ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு கோல்வால்கரும் ஆர்எஸ்எஸ்ஸும் பெரும் பிரச்சினையிலிருந்தனர். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை விட்டு விலகவில்லை” என்றார்.

https://images-na.ssl-images-amazon.com/images/I/31GdoPrIBpL.jpgஆர்எஸ்எஸ் அமைப்புடன் கோட்ஸேவுக்குத் தொடர்பு ஒன்றுமில்லை என்ற அத்வானியின் கூற்றைக் கடுமையாக மறுத்தார் கோபால் கோட்ஸே. “அப்படிச் சொல்வது கோழைத்தனம் என்று நான் அவரை மறுதலித்துவிட்டேன். ‘காந்தியைக் கொல்லுங்கள்’ என்று ஆர்எஸ்எஸ் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால் கோட்ஸேயை நீங்கள் கழற்றி விடமுடியாது. இந்து மகாசபை அவரைக் கழற்றிவிடவில்லை. 1944-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘பவுதிக் கார்யாவாஹ்’ ஆக இருந்த அவர் இந்து மகாசபையின் வேலைகளையும் செய்யத் தொடங்கினார்.”

பிரபல அமெரிக்க வார இதழான ‘டைம்’ இதழுக்கு 2000-ல் ஆண்டில் கோபால் கோட்ஸே அளித்த பேட்டி வெளியானது. ஏன் காந்தியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. “காந்தி ஒரு கபடதாரி. முஸ்லிம்கள் இந்துக்களைப் படுகொலை செய்த பின்னரும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு அதிகமாக இந்துக்கள் கொல்லப்பட்டனரோ அந்த அளவுக்கு உயரப் பறந்தது அவரது மதச்சார்பின்மைக் கொடி” என்றார்.

சமீபத்தில் இதே கருத்தை மீண்டும் வெளியிட் டிருப்பவர் சாத்யகி சாவர்க்கர். இவர் கோபால் கோட்ஸேயின் மகள்வழிப் பேரன். அவரது தாயார் ஹிமானி சாவர்க்கர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அபினவ் பாரத் அமைப்பை நடத்திவந்தார். அந்த வழக்கு விசாரணை வளையத்திலும் இருந்த அவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.

நாதுராமும் கோபாலும் எழுதியவற்றைத் தங்கள் குடும்பம் பராமரித்துவருவதாகவும், நாதுராம் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததையும், அதன் தீவிரத்தன்மை போதவில்லையென்று உணர்ந்தமையால் ஏமாற்றமடைந்ததையும் அவ்வெழுத்துக்கள் தெளிவாக்குகின்றன என்கிறார் சாத்யகி. மென்பொருள் துறையில் பணிபுரியும் அவர் சாவர்க்கர் தொடங்கிய இந்து மகாசபையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்துவருகிறார்.

படேலின் கடிதம்

“நாதுராம் 1932-ல் சாங்லியில் இருக்கும்போது ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தார். இறக்கும் வரை அதன் அறிவுஜீவி ஊழியராக இருந்தார். அவர் வெளியேற்றப்படவும் இல்லை. வெளியேறவும் இல்லை…. அவர் ஒரு ஸ்வயம்சேவக் என்கிற உண்மையை மறுப்பதால் ஆர்எஸ்எஸ் மீது எனக்கு நிச்சயமாக வருத்தம் இருக்கிறது. காந்திஜி கொலையை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டாலும் அவர்கள் உண்மையைக் கண்டு ஓடி ஒளியக் கூடாது” என்கிறார் சத்யகி.

இன்று மோடி மாபெரும் சிலை வைத்துக் கொண்டாடப்போகும் சர்தார் வல்லபபாய் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) நேருவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு (இவர்தான் பாஜகவின் முன்னோடியான ஜனசங்கத்தை 1951-ல் தோற்றுவித்தவர்) எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “காந்தி கொலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபைக்கு அதில் இருக்கும் தொடர்பைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த இரு அமைப்புகளின் செயல்பாடுகள் காரணமாக, குறிப்பாக ஆர்எஸ்எஸ் செயல்பாடு காரணமாக, எழுந்த சூழலில்தான் இத்தகைய கொடூரச் சோகம் நிகழ்ந்திருக்கிறது என எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.”

வெறுக்கப்பட்ட அமைப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் குரு கோல்வால்கருக்கு படேல் செப். 11, 1948-ல் எழுதிய கடிதம் இப்படிச் செல்கிறது. “இந்து சமுதாயத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்திருக்கும் சேவையைப் பற்றி எவ்விதச் சந்தேகமும் இல்லை. … ஆனால் ஆட்சேபத்திற்குரிய கட்டம் எங்கு எழுகிறதென்றால், அவர் கள் பழிவாங்கும் உணர்ச்சி கொழுந்து விட்டெரிய முஸல்மான்களைத் தாக்கத் தொடங் கியபோதுதான். இந்துக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு விஷயம். ஆனால் அவர்களின் துன்பங் களுக்குப் பழிவாங்குவது என்ற பெயரில் அப் பாவியான ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவது வேறு…. அவர் களின் பேச்சுக்கள் முழுவதிலும் வகுப்புவாத விஷம் நிறைந்திருக்கிறது. இந்துக்களை உற் சாகப்படுத்தி ஒன்று திரட்டுவதற்கும் பாதுகாப் பதற்கும் விஷத்தைப் பரப்ப வேண்டிய அவசிய மில்லை. இந்த விஷத்தின் இறுதி விளைவாகக் காந்திஜியின் உயிர்த் தியாகத்தை நாடு தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்எஸ்எஸ் மீது இந்திய அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ துளி கூடப் பரிவு இல்லை. உண்மையில், காந்திஜியின் மரணத்திற்குப் பின் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வினியோகித்தபோது மக்களின் கோபம் அதிகரித்து மேலும் தீவிரமானது.”

அன்று மக்களிடமிருந்து தனிமைப்பட்ட சங்கப் பரிவாரம் அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் வனவாசமிருக்க நேரிட்டது. காந்தியின் பாரம்பரியத்தைத் தனதாக்கிக்கொள்ள என்னதான் முயன்றாலும், கொள்கைரீதியாகக் கோட்ஸேயின் பாரம்பரியத்தைத்தான் பாஜக வரித்துக்கொண்டுள்ளது. அது கொள்கையையும் துறக்க முடியாது.. வரலாற்றையும் மறைக்க முடியாது.

– ஆர். விஜயசங்கர், ‘ஃப்ரண்ட்லைன்’ இதழின் ஆசிரியர். தொடர்புக்கு:  

(நன்றி: தி ஹிண்டு தமிழ், அக்டோபர் 2, 2016)  


 

நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்!

காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்று உறுதி செய்து, காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சே அளித்த பேட்டி இது. 1994இல் ‘பிரன்ட் லைன்’ பத்திரிகையில் வெளி வந்தது இந்த பேட்டி.

நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவரா?

நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். சில் இருந்தவர்கள்தாம். நாதுராம் (கோட்சே) சத்பத்ரேயா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த வர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.சில்தான் அதிகமாக வளர்ந்தோம்.

நாதுராம் (கோட்சே) ஆர்.எஸ்.எஸ்.சில் இருந் தாரா? அவர் ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு விலகிட வில்லையா?

நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.இல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.சின் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.சும், காந்திஜியின் கொலைக்குப் பின் பயங்கர கெடுபிடிகளுக்கு உள்ளானதுதான். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறவில்லை.

அண்மையில் அத்வானி, கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.விற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கின்றாரே?

நான் அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறேன், மறுத்திருக்கிறேன். அத்வானி சொல்வது கோழைத் தனம் எனக் கூறி இருக்கிறேன். நீங்கள் ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். “நீ போய் காந்திஜியை கொலை செய்” என்று ஆர்.எஸ்.எஸ். கூறிடவில்லை. ஆனால், அவரை (கோட்சேயை) கைவிடுவது சரியல்ல. இந்து மகாசபை அவரைக் கைவிடவில்லை. 1944ஆம் ஆண்டு முதல் இந்து மகா சபைக்காகப் பணி செய்யத் தொடங்கினான். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணி செய்யத் தொடங்கினான். ஆர்.எஸ்.எஸ்.இல் காரியவாஹ் என்ற அறிவுத்துறை செயலாளராகவும் இருந்தான்.

காந்திஜியைக் கொலை செய்யும் திட்டம் எப்போது தீட்டப்பட்டது?

நாதுராம் ‘இந்துராஷ்டிரா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர். பத்திரிகையின் ஆசிரியர் என்பதால் அவனுக்கோர் டெலிபிரிண்டர் இருந்தது. அதில் அவனுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி காந்திஜி அடுத்த நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறியது.

(காந்தி பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை இந்திய அரசு தந்திட வேண்டும் என்பதற்காகவே அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். இந்தப் பணம் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தருவதாக உறுதியளித்தப் பணம். ஆனால், காஷ்மீர் பிரச்சினை தீரும் வரை அந்தப் பணத்தை பாகிஸ்தானுக்கு தருவதில்லை என இந்திய அரசு முடிவு செய்திருந்தது)

காந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதுதான் என்ற எண்ணம் நாதுராமுக்கு தோன்றியது. அதுதான் திருப்புமுனை.

ஆனால், அதற்கு முன்னால் பல சூழ்நிலைகளில் காந்திஜியைக் கொலை செய்ய வேண்டும் என நாதுராம் எண்ணி இருக்கலாம். அகதிகள் முகாமில் அப்படியொரு எண்ணம் தோன்றியிருக்கலாம். காந்தி தான் நமக்கு இந்த அவலங்களைக் கொண்டு வந்தவர். அதனால், அவரை ஏன் கொலை செய்யக் கூடாது? என்ற சிந்தனைகள் பலமுறை தோன்றி இருந்தது.

மேகங்கள் சூல் கொண்டு ஒரு திசையில் ஒதுங்குகின்றன. இதனால், அடுத்த 15 நிமிடத்துக்குள் மழை பொழியும் என நாம் நினைக்கிறோம். அந்த மழையும் பெருமழையாய் அமையும் எனக் கருதுகிறோம். ஆனால், நடப்பவை வேறாக இருக்கின்றன. பெருங்காற்று வீசுகின்றது. எந்தத் திசையிலிருந்து என்பது நமக்குத் தெரியவில்லை. அத்தனை மேகத்தையும் அழைத்துச் சென்று விடுகின்றது.

அந்த மழைக்கு என்ன தேவைப்பட்டது? ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலை. ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம். இவை அந்த மேகங்களோடு இருந்திட வேண்டும். அப்போதுதான் அந்த மேகக் கூட்டம் மழையைப் பொழியும்.

ஆகவே சதிக்கு மேல் சதிகள் என சதிகள் நடத்திருக்கலாம். கலைந்து சென்றிருக்கலாம். ஆனால், எல்லா சூழ்நிலைகளும் சரியாக இருந்தால் அந்தச் சதிகள் பலனளிக்கலாம். சதிகாரர்களைப் பொறுத்தவரை சதியை நிறைவேற்றிட முடிந்தது. இலக்கை அடைய முடிந்தது.

சாவர்க்கருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

இப்படியொரு கேள்விக்கே இடமில்லை. நாங்கள் அனைவரும் அவரது சீடர்கள் அவரை எங்களுடைய ‘குரு’வாக மதித்து நடந்தோம். நாங்கள் அவருடைய எழுத்துக்களை படிப்போம். சாவர்க்கரை முழுமையாகப் புரிந்து கொண்டோம், எனவே இதனை செய்ய வேண்டும் என்று அவரிடம் அனுமதி கேட்பது மடத்தனமாகும்.

ஆதாரம்: ‘ஃப்ரண்ட்லைன்’, ஜனவரி 28, 1994

Also read: The BJP and Nathuram Godse

http://www.frontline.in/books/the-bjp-and-nathuram-godse/article4328688.ece  

 போனஸாக, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட பிரதமர் நரேந்திரமோடியின் ஃபேஸ்புக் பக்கத்தில் காணப்பட்ட பின்னணி புகைப்படம் (இப்படத்திற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை)

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.