தஜ்ஜாலைப் பார்த்தவர்கள் உண்டா?

Share this:

ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும்…
எனது கேள்வி: தஜ்ஜாலைப் பார்த்தவர்கள் உண்டா?
தஜ்ஜால் வந்துவிட்டானா?, அல்லது இனிமேல்தான்  வருவானா?

– சகோதரர் நாஸர், (மின்னஞ்சல் வழியாக)

தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் மஸீஹுத் தஜ்ஜால் எனும் மாபெரும் பொய்யன் வெளிப்படுவான். அவன், தன்னை இறைவன் என்று வாதிடுவான். அவனைப் பற்றிய ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளிலிருந்து, நீரை நெருப்பாகவும், நெருப்பை நீராகவும் மாற்றிக் காண்பிக்கும் ஒரு மாயாஜால வித்தைக்காரன் என்று விளங்கமுடிகிறது.

நபி ஈஸா (அலை) அவர்களின் வருகையும், தாஜ்ஜாலின் புறப்பாடும் ஒரே காலகட்டத்தில் நிகழும். கியாமத் நாள் நெருக்கத்தின் அடையாளங்களில் இவ்விருவரின் வருகையும் அடங்கும் என்கிற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்!

தஜ்ஜாலைப் பார்த்தவர்கள் உண்டா?

“நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி நான் (தவாஃப்) வந்து கொண்டிருப்பதாகக் கண்டேன். அங்கு இருவருக்கிடையில் மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட ஒருவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து நீர் சொட்டி/கொட்டிக் கொண்டிருந்தது. இவர் யார்? என்று கேட்டேன். இவர்தாம் மர்யமின் மைந்தர் என்று பதிலளித்தார்கள்.

(அவரைக் கடந்து) நான் சென்றபோது சிவப்பான, உடல்பருத்த, பரட்டைமுடி கொண்ட, (ஒரு) கண் குருடான ஒருவன் அங்கிருந்தான். அவனது கண், (குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருந்தது. இவன் யார்? என்று கேட்டேன். தஜ்ஜால் என்று பதிலளித்தார்கள். மனிதர்களுள் அவனுக்கு மிக நெருக்கமான சாயலுடையவர் இப்னு கத்தன் என்பவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) – புகாரீ 3440; 5902; முஸ்லிம் 250.

இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்: “இப்னு கத்தன் ‘குஸாஆ’ குலத்தைச் சேர்ந்தவன். அவன் அறியாமைக் காலத்திலேயே அழிந்து விட்டிருந்தான்”.

{youtube}TuboNVFZQS8{/youtube}

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனவில் தஜ்ஜாலைப் பார்த்திருக்கிறார்கள். தஜ்ஜால் எப்படி இருப்பான் என  நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அல்லாஹ் காண்பித்திருக்கிறான். அறியாமைக் காலத்தில் வாழ்ந்த, மக்காவாசிகளுக்கு நன்கு அறிமுகமானவரான அப்துல் உஸ்ஸா இப்னு கத்தன் என்ற மனிதரின் உருவ அமைப்பிற்கு ஒப்பாக தஜ்ஜால் இருப்பான் என அடையாளப்படுத்தியுள்ளார்கள். 

இனிமேல்தான் தஜ்ஜால் வருவானா?

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைக் கனவில் கண்டார்கள் என்பது தவிர, “நான் தஜ்ஜாலை நேரில் கண்டேன்” என்று கூறும் நபித்தோழர் தமீமுத்தாரீ (ரலி) அவர்களுடைய குறிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிறிஸ்த்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத்தாரீ எனும் ஒருவர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபோது அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது, (பெருங்குழப்பவாதியான)மஸீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்தியை ஒத்திருந்தது. அவர் கூறியதாவது:

நான் ‘லக்ம்’, ‘ஜுதாம்’ ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டபோது, கடல் (அலை) ஒரு மாதகாலம் எங்களை அலைக்கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையிலுள்ள ஒரு தீவின் கடல் பகுதியில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குச் சென்றோம்.

அங்கு (உடல் முழுவதும் அடர்ந்த) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது. அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை. (உடல் முழுவதும்) முடிகள் நிறைந்திருந்தே அதற்குக் காரணம்.

அப்போது நாங்கள், “உனக்குக் கேடுதான். நீ யார்?” என்று கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி “நான்தான் ஜஸ்ஸாஸா” என்று சொன்னது. “ஜஸ்ஸாஸா என்றால்…?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி, “கூட்டத்தாரே! இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரிடம் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார்” என்று சொன்னது.

அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அம்மனிதன் ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட்டோம். உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்து, அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம். அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக் கட்டப்பட்டிருந்தன. அவனுடைய முழங்கால்கள், கணுக்கால்கேளாடு சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. அவனிடம் நாங்கள், “உனக்குக் கேடுதான். நீ யார்?” என்று கேட்டோம்.

“என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்துகொள்வீகள். (முதலில்) நீங்கள் யார் என்று கூறுங்கள்” என்று கேட்டான். “நாங்கள் அரபு மக்கள். நாங்கள் கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டோம். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாதகாலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்துவிட்டது. பிறகு நீ இருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம்.
அப்போது உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது. உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை. நாங்கள், “உனக்குக் கேடுதான். நீ யார்?” என்று கேட்டோம். அது, “நான்தான் ஜஸ்ஸாஸா” என்று சொன்னது. “ஜஸ்ஸாஸா என்றால் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அது, “இந்த மண்டபத்திலுள்ள மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார்” என்று கூறியது. ஆகவதோன், நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம். நீ ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை” என்று சொன்னோம்.

அப்போது அவன், “பைசான் பேரீச்சந்தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றான். “அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்?” என்று கேட்டோம்.

அதற்கு அவன், “அந்தப் பேரீச்சந்தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன்” என்றான். நாங்கள் “ஆம்” என்று பதிலளித்தோம். அவன், “அறிந்துகொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறினான்.

பிறகு, “தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான். “அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், “அதில் நீர் இருக்கிறதா?” என்று கேட்டான். நாங்கள், “அதில் அதிகமாக நீர் இருக்கிறது” என்று பதிலளித்தோம். அவன், “அறிந்துகொள்ளுங்கள்: அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது” என்று சொன்னான். பிறகு, “(ஷாம் நாட்டிலுள்ள) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான். நாங்கள், “அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?” என்றோம். அதற்கு அவன், “அந்த ஊற்றில் நீர் ஊறுகிறதா? அந்த ஊற்று நீரைக் கொண்டு மக்கள் விவசாயம் செய்கிறார்களா?” என்று கேட்டான். நாங்கள் “ஆம், அதில் நீர் அதிகமாக ஊறுகிறது. அங்குள்ளவர்கள் அந்த ஊற்று நீரைக் கொண்டு விவசாயம் செய்கிறார்கள்” என்று சொன்னோம்.

பிறகு அவன், “எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்?” என்று கேட்டான். நாங்கள், “அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறார்” என்று பதிலளித்தோம்.

அவன், “அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா?” என்று கேட்டான். நாங்கள், “ஆம்” என்றோம். அவன், “அவர்களை அவர் என்ன செய்தார்?” என்று கேட்டான். நாங்கள், “அவர், தம்மைச் சுற்றியுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார். அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர்” என்று சொன்னோம். அதற்கு அவன், “அப்படித்தான் நடந்ததா?” என்று கேட்டான். நாங்கள் “ஆம்” என்றோம்.

அவன், “அறிந்துகொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்: நான் மஸீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் புறப்பட்டு வந்து, நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டுவைக்காமல் பூமியெங்கும் பயணம் செய்வேன் – மக்காவையும் தைபாவையும் தவிர! அவ்விரண்டிற்குள்ளேயும் நுழைவதற்கு எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும்போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார். அவரது கையில் உருவியவாள் இருக்கும். (அதை வைத்து) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார். அதன் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து, அதைக் காவல் காத்துக்கொண்டிருப்பார்” என்று கூறினான்.

இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடமிருந்த கைத்தடியால் சொற்பொழிவு மேடைமீது குத்தியவாறு இதுதான் – அதாவது மதீனா நகரம் தான் – தைபா; இதுதான் தைபா; இதுதான் தைபா” என்று மும்முறை கூறிவிட்டு, “இதைப்பற்றி நான் உங்களுக்கு (முன்பே) அறிவித்துள்ளேன் அல்லவா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிவித்தீர்கள்)” என்று பதிலளித்தனர். “தமீமுத் தாரீ சொன்ன இந்தச் செய்தி, தஜ்ஜாலைப் பற்றியும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கெனவே உங்களிடம் நான் கூறியிருந்ததற்கு ஒப்பவே அமைந்திருக்கிறது” என்று கூறினார்கள்.

பிறகு, அறிந்துகொள்ளுங்கள்: அ(ந்தத் தீவான)து, ஷாம் நாட்டு அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது … இல்லையில்லை; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது” என்று (அறுதியிட்டுச்) சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறும்போது (மதீனாவின்) கிழக்குத் திசையை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) (நூல்கள் – முஸ்லிம் 5638, அபூதாவூத், அஹ்மத்).

யுக முடிவு நாளின் நெருக்கத்தின் அடையாளமாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்று முன்னறிவிப்புகள் இருப்பதால் அவன் வெளிப்படாமல் யுக முடிவு நாள் ஏற்படாது என்று விளங்குவதுடன், அல்லாஹ், தான் நாடிய இடத்தில் தஜ்ஜால் என்பவனைக் கட்டிவத்துள்ளான்; அவனுக்கு அனுமதி வழங்கப்படும் நேரத்தில் அவன் வெளிப்பட்டு வந்து, (மக்கா, மதீனா தவிர) பூமியில் சுற்றித் திரிந்து மக்களை வழிகெடுப்பான். மக்காவில், கஅபாவின் அருகில் தஜ்ஜாலை நபி (ஸல்) கண்டது, கனவில் என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.

“மனிதர்களின் தீயவர்கள் மீதே யுக முடிவு நாள் ஏற்படும்” (அதற்கு முன்னர் நல்லவர்கள் அனைவரும் மறைந்துவிடுவர்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல்கள் – முஸ்லிம் 5650, அஹ்மத்).

அல்லாஹ்வே! குழப்பங்கள் நிறைந்த யுகமுடிவு நாளுக்கு முன்னர் எங்களை ஈமானோடு கைப்பற்றி விடு!

(இறைவன் மிக்க அறிந்தவன்).


குறிப்பு : கூடுதல் விபரங்கள் தேவையெனில், இமாம் இபுனு கதீர் எழுதிய “பொய்யன் தஜ்ஜால்” எனும் நூலைப் படித்து அறிந்து கொள்ளலாம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.