மாறாத, நிரந்தரத் தக்வா! (பிறை-8)

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 8

நோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

தக்வா இல்லாத வாழ்க்கை அல்லது நோன்பு மாதத்தில் மட்டும் ஏற்பட்டு, நோன்பு முடிந்ததும் தீர்ந்து போகும் தக்வாதான் சமுதாயத்தில் உருவாகும் எல்லா/பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்றால் மிகையாகாது. உலகில் மனிதன் சந்திக்கும் சூழ்நிலைகளும் அதன் மூலம் அவன் எடுக்கும் முடிவுகளும் தக்வாவின் அடைப்படையில் எடுக்கப்படும்போது அவனுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை பயப்பதாகவும் தக்வா அற்ற அடிப்படையில் எடுக்கப்படும்போது தீமையாகவும் அமைந்து விடுகின்றது.

தக்வா என்ற இறையச்சம் இல்லாமல்/குறைந்து போவதே இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதன் முதல், பெரிய நாடுகள் வரை எடுக்கும் நடவடிக்கைகளும் மனித சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடுவதைக் காண்கிறோம். தனிமனிதக் கொலை, தற்கொலை முடிவுகள் முதல் ‘பிரச்சினைக்குத் தீர்வு’ என்ற பெயரில் மனிதர்களைக் கொன்று குவிப்பது வரை இறையச்சம் என்ற தக்வா இல்லாததால், தட்டிக் கேட்கப் படமாட்டோம் என்ற அதீதத் துணிச்சலால் பெறப்படும் முடிவுகள்தாம் எனத் துணிந்து கூறலாம்.

இறையச்சம் நிரந்தரமாக உள்ள ஒருவர், எப்படிப்பட்ட இக்கட்டான, சோதனையான நிலையிலும் தற்கொலைக்கு முயல மாட்டார். ஏனெனில் தற்கொலை என்பது இறைவனால் மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அவர் உணர்ந்திருப்பார். தற்கொலை என்பது இவ்வுலகில் மனிதர்கள் சந்திக்கும் வறுமை, கடன், விரக்தி, ஏமாற்றம், தேர்விலோ வாழ்க்கையிலோ ஏற்படும் தோல்விகள், தாங்க முடியாத நோய்கள், இன்ன பிறவுக்கும் ஒரு தீர்க்கமான முடிவு என்று கருத மாட்டார்.

மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணித்ததன் பின்னர் இறுதித் தீர்ப்புக் கொடுக்கப்பட்டு மறுமை எனும் நிரந்தர வாழ்க்கை துவங்குகின்றது. இம்மை எனும் இவ்வுலகில் எடுக்கப்படும் அவசர முடிவுகளால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு மாபெரும் இழப்பு ஏற்படும் என்றும் உணர்வார்.

சுருக்கமாக, இன்று மனித சமுதாயம் சந்தித்துவரும் வன்முறைகள், மோசடிகள், பொருளாதாரச் சுரண்டல்கள், காழ்ப்புணர்ச்சி, ஏற்றத்தாழ்வுகள், பற்பல ஊழல்கள், சொத்துத் தகராறுகள், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, சகோதரர்கள் பிரச்சனைகள் உட்பட ஏனைய குடும்பப் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமைகள், தேர்வில் முறைகேடு செய்தல், (தேர்வுக்கு முன்பே) கேள்வித்தாள் விற்பனை, பொய்ச்சான்றிதழ்கள் விற்பனை, போதைப் பொருட்கள் வியாபாரம் தொடங்கி, தீய நோய்கள், பெண்களை இழிவு படுத்துதல், வல்லுறவு, விபச்சாரம் போன்ற சமுதாய சீர்கேடுகளும் ஒழிக்கப்படவேண்டும் என்றால் இறையச்சச் சிந்தனை மூலம் மட்டுமே முடியும்.

ரமளானில் நோன்பு நோற்பதன் மூலம் நாம் இந்த அரிய இறையச்சத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். அல்லாஹ் அருள் புரிந்து நாம் பெற்ற இறையச்சச் சிந்தனை இந்த ரமளான் மாத நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் வரும் நாட்களில் ஒவ்வொரு நொடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும்.

தக்வா என்ற இறையச்சத்தை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டவர், ‘தொழுகையை என் மீது கடமையாக்கிய இறைவன் என்னை இன்றும், என்றும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்’ என்ற நினைப்பை ஒருபோதும் மறந்துவிடமாட்டார்.

கடந்த காலத்தில் பாவச் செயல்களில் மூழ்கி இருந்தவர், இறையருளால் ரமளானில் தக்வாவைப் பெற்றுக் கொண்டு விட்டால், ‘அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். கடந்த காலத்தில் ஈடுபட்ட பாவச் செயல்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை நிச்சயமாகத் தண்டிப்பான்’ என்ற எண்ணம் மேலிட்டு, பாவச் செயல்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்து விடுவார். மேலும் முன்னர் செய்த பாவங்களில் இருந்து அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற முயற்சி மேற்கொள்வார்.

இவையெல்லாம் தக்வா என்பது நோன்புக்கு மட்டும் தற்காலிகமானதாக இல்லாமல் வாழ்நாள் முழுதும் நிரந்தரமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

oOo

(மீள் பதிவு)
– தொடரும் இன்ஷா அல்லாஹ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.