
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)
அழகிய வரவேற்பு
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.
வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.
இனியவளின் ஆலோசனை
குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.
அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரைக் காணச் செல்லும்பொழுது
மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).
அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.
நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).
அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.
நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.
அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.
தாம்பத்யம்
மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).
இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).
அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.
அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).
பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.
மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
இரகசியங்களைப் பாதுகாத்தல்
படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.
தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.
உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.
காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.
ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.
உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.
இஸ்லாமியப் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :
- இஸ்லாத்தின் அடிப்படை
- அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
- படித்தல் மற்றும் எழுதுதல்
- இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
- பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
- வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.
வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது
உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்.
அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)
தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக் கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)
மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.
இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.
உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.
முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.
அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.
குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.
செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.
பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.
உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.
தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).
எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).
சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.
தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.
அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.
மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.
உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!
தமிழில் : சகோதரர் முஃப்தீ, தமிழ் இஸ்லாம்.காம்
The above article is a summary of the book “How to make your wife happy” by Sheikh Mohammed Abdul Haleem Hamed. English Translator brother Abu Talhah, reviewer Brother Adam Qurashi of Muslim Students’ Association University of Alberta Edmonton, Canada. Tamil Translator (from English) : Mufti, K.S.A.
கணவரை மகிழ்விப்பது எப்படி?