தூக்குத் தண்டனை கைதிகளுக்கு விடுதலை – இஸ்லாமிய அரசு உத்தரவு

Share this:

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையிலிருந்து வடிகட்டப்பட்டவர்களுள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பவர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக, மொழியை முன்வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் கட்சிகளும் அமைப்புகளும் மொழியை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஊடகங்களும் முழக்கி முடித்துவிட்டனர்.

அவற்றுள் ஆனந்த விகடனில் ‘சிறைச்சாலைகள் கொலைக்களம் அல்ல’ எனும் தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளிவந்து நமது கவனத்தை ஈர்த்தது.

தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குப் பரிந்து பேசிக் கொண்டு, இலைமறை காயாக இஸ்லாத்தைத் தாக்கி எழுதிய அரைகுறைக்கு, இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் நடந்தால் தூக்குத் தண்டனைக் கைதிகள் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலையாகி இருப்பர் என்ற பேருண்மை தெரியாது; தெரிய வைப்போம்.

ராஜீவ் படுகொலை
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தமிழகத்துக்கு வந்தபோது கடந்த 1991 மே 21இல் ஸ்ரீபெரும்புதூர் பனங்காட்டில் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார மேடைக்கருகில் மனித வெடிகுண்டால் இரவு பத்தேகால் மணியளவில் படுகொலை செய்யப்பட்டார். தேர்தல் பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பிரச்சார மேடையை நோக்கிப் போகும் வழியில், அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காகக் கூடியிருந்தவர்களோடு கலந்திருந்த, சுமார் 20 வயது மதிக்கத் தக்க, மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த தனு என்ற பெயருடைய பெண் மனிதவெடிகுண்டால் ராஜீவ் கொல்லப்பட்டார். வெடிகுண்டு வெடித்து மனிதர்கள் சிதறிச் செத்துக் கொண்டிருந்தபோது, மேடைக்கு அருகில் காங்கிரசார் பட்டாசுகளைக் கொளுத்திக்கொண்டு இருந்தனர். அவர்கள் கொளுத்திய பட்டாசுச் சப்தத்தில் வெடிகுண்டுச் சப்தம் அமுங்கிப் போனது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரது காவலுக்கு நியமிக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முஹம்மது இக்பால், காவல்துறை ஆய்வாளர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், உதவி ஆய்வாளர் எத்திராஜ், கமாண்டோ ரவிச்சந்திரன், காவலர்கள் தர்மன், முருகன், பெண் காவலர் சந்திரா, முன்னாள் எம்.எல்.சி. லீக் முனுசாமி, லதா கண்ணன், கோகிலா, சரோஜா தேவி, சந்தானி பேகம், டேனியல் பீட்டர் ஆகியோரோடு, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி குந்தா உள்பட 18 அப்பாவிகள் குண்டு வெடிப்பில் இறந்தனர். மரகதம் சந்திரசேகர், டி.ஐ.ஜி. மாத்தூர், காவல்துறை அதிகாரி நாஞ்சில் குமரன் ஆகியோர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.

அவிழாத முடிச்சுகள்

நேமி சந்த் ஜெயின் (எ) சந்திராசாமி
“ராஜீவ் காந்தி தமிழகம் வந்தபோது கொடுக்கப்பட்ட பாதுகாப்பில் குறைகள் இருந்தனவா? குளறுபடிகள் நடந்தனவா?” என்பதை விசாரிக்க நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில் பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ராஜீவ் கொலையின் சூத்திரதாரியான ஒற்றைக்கண் சிவராசனுக்கும் நேமி சந்த் ஜெயின் (எ) சந்திராசாமிக்கும் நெருக்கம் இருந்திருக்கிறது; இருவருக்கும் தகவல் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன போன்ற தகவல்களெல்லாம் “ராஜீவ் படுகொலை செய்யப்​பட்டதற்கான பின்னணிகள், அதில் சம்பந்தப்பட்டவர்கள்” பற்றி விசாரித்த நீதிபதி ஜெயின் கமிஷன் மூலம் வெளிவந்தன. குறிப்பாக, பப்லு ஸ்ரீவத்சவா என்பவர் ஜெயின்கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், ”ராஜீவ் கொலைச் செய்தி கேட்டதும் சந்திராசாமி மகிழ்ச்சியில் கூத்தாடினார். ‘நரசிம்மராவைப் பிரதமராக்கப்போறேன்…’ என்று சொல்லிக்​கொண்டே, ராவ் வீட்டுக்கு போன் செய்து அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தார்…” என்று வாக்குமூலம் கொடுத்தார்.

பெங்களூ​ருவைச் சேர்ந்த ரங்கநாத் (குற்றவாளிப் பட்டியல் எண் 26) என்பவர் ஒற்றைக் கண் சிவராசன் பெங்களூரில் தங்குவதற்கு வீடு கொடுத்தவர். பூந்தமல்லி தனி நீதிமன்ற நீதிபதி நவநீதன் 1998 ஜனவரி 28ஆம் நாள் வழங்கிய தீர்ப்பின்படி தூக்குத் தண்டனை பெற்று, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை பெற்றவர். இந்த ரங்கநாத் ஜெயின் கமிஷன் முன் ஆஜராகி, ”பெங்களூரில் இருந்து எங்களை சந்திராசாமி தப்பவைத்து நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவதாகச் சொல்லி இருக்கிறார் என்று சிவராசன் என்னிடம் கூறினார்” என்று தமது வாக்குமூலத்தில் சொன்னார்.

ஆனால், சந்திராசாமிக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் திடீரென்று 1997இல் காணாமல் போயின. அவற்றுள் 1989 முதல் ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அதிகாரிகளது அறிக்கைகளும் சந்திரா​சாமியின் தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்கப்பட்ட செய்திகளின் ஆவணத் தொகுப்பும் காணாமல் போயின.

சந்திராசாமியின் மீது 12 அந்நியச் செலவாணி மோசடி வழக்குகள் இருந்தன. அவற்றுள் 3 வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மீதி 9 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுவரை அமலாக்கத் துறைக்கு ரூபாய் 65 கோடி வரை கட்ட வேண்டிய சந்திராசாமி, கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்குப் போய்வந்து கொண்டுதானிருக்கிறார்.

oOo

ஸீபீஐ
தேடப்படும் 50 தீவிரவாதிகள் என்பதாக ஒரு பட்டியலை அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்து, அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்குள் இருப்பதாக ஸீபீஐ கூறியது. பட்டியல் வெளியிடப்பட்ட இரண்டு, மூன்று தினங்களில் பட்டியலில் இருந்த வாஜுல் கமர்கான் என்பவர் மும்பை நகரத்தின் அருகே உள்ள தானேவில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக அவருடைய குடும்பத்தினர் ஊடகங்களில் தெரியப்படுத்தியவுடன் தன் முகத்தில் பூசப்பட்ட கரியை துடைத்துக்கொண்டு ‘வருத்தம்’ தெரிவித்துக் கொண்டது ஸீபீஐ.

ஸீபீஐயின் அந்தத் ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ செய்தி வெளிவந்து சூடு ஆறுவதற்குள் அதன் பட்டியலில் இருந்த பெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரும் இந்தியாவில் – அதுவும் இந்தியாவில் உள்ள மும்பைச் சிறையில் – கைதியாக இருக்கும் தகவல் வெளியானது. ஆட்டுக் குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் தேடிய கதையாக, மும்பைச் சிறையில் இருக்கும் பெரோஸ் மீது சர்வதேச போலீஸ் மூலமாக பிடிவாரண்ட் வாங்கி ஸீபீஐ உலகம் பூராவும் தேடித் திரிந்த தகவல் வெளியாகி சிரிப்பாய் சிரித்தது.

1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்ரா பகுதியில் பறந்த மர்ம விமானம் ஆயுதக் குவியலை வீசியது. அந்த விமானத்தை வழியில் மடக்கிய ஸீபீஐ அதிகாரிகள் ஆயுத வியாபாரி பீட்டர் பீளீஸையும், நீல்ஸ் கிரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம்டேவியையும் கைது செய்தனர். ஸீபீஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே கிம் டேவி மர்மமான முறையில் தப்பியோடி விட்டான். தங்கள் பிடியிலிருந்து தப்பி தலைமறைவாக இருக்கும் கிம்டேவியைத் தேடிப் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக படம் காட்ட ஆரம்பித்தனர். ஸீபீஐயின் அறிக்கைகளை கேள்விப்பட்ட கிம்டேவி, தான் மறைந்து வாழவில்லை என்றும், பல ஆண்டுகளாக கோபன் ஹேகனில் வெளிப்படையாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தான். மேலும் தான் தப்பிக்கவில்லை என்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே ஸீபீஐதான் என்றும் பேட்டி கொடுத்து ஸீபீஐயின் கொஞ்ச நஞ்ச மானத்தையும் கப்பலேற்றினான்.

இன்னும் ஒருபடி மேலேபோய், தான் கோபன் ஹேகனில் தங்கி இருப்பது ஸீபீஐக்குத் தெரியும் என்றும், ஸீபீஐ அதிகாரிகள் தன்னைத் தேடுவதாக கூறி இத்தனை ஆண்டுகள் உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற குண்டைத் தூக்கிப் போட்டு ஸீபீஐயின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினான் (நன்றி: மக்கள் ரிப்போர்ட்).

புகழ்பெற்ற இந்த ஸீபீஐயின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கார்த்திகேயனிடம்தான் ராஜீவ் காந்திக் கொலையைத் துப்புத் துலக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

oOo

மோகன்ராஜ்
நடுவண் அரசின் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளாரகச் செயற்பட்ட முன்னாள் மூத்த அதிகாரி மோகன்ராஜ், அண்மையில் குமுதம் வார இதழுக்கு ஒரு நேர்காணல் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் ஸீபீஐ புலனாய்வுப் பிரிவின் தலைவர் கார்த்திகேயன், “உண்மைக் குற்றவாளிகள் பிடிபட்டுவிடக்கூடாது’ என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர்தாம். ஆனால் திட்டம் போட்டுக் கொடுத்தவர்கள்,
1. சந்திராசாமி
2. சுப்பிரமணியசாமி
3. குமரன் பத்மநாபா

ஆகிய மூவருமாவர். இதுவரை இம்மூவரில் ஒருவரைக்கூட ராஜீவ் காந்திக் கொலை வழக்குக்காக யாரும் விசாரிக்கவில்லை. ‘கேபி’ என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாபாவை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரித்தால் ராஜீவ் காந்திக் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் யாவர் என்ற மர்ம முடிச்சு அவிழ்ந்துவிடும்; எவரும் எதிர்பாராதவர்கள் கைதாவர் என்று மோகன்ராஜ் உறுதியாகக் கூறுகிறார்.

{youtube}7YYfXWxe_1A{/youtube}

oOo

கேபி (எ) செல்வராசா (எ) குமரன் பத்மநாபன்
ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது, “ராஜீவ் காந்தி மரணச்செய்தி எங்களுக்கு அதிகமாக அதிர்ச்சி அளித்தது. எங்களால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. ராஜீவின் கொலையில் எந்த வகையிலும் எங்களுக்குத் தொடர்பு இல்லை” என்று விடுதலைப்புலி தளபதிகளில் ஒருவரான கிட்டு அறிக்கை விட்டிருந்தார். “ராஜீவ் காந்தி கொலையில் எங்களுக்குத் தொடர்பில்லை” என்றே 20 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப விடுதலைப்புலியினர் பொய் சொல்லிக் கொண்டிருந்தனர். விடுதலிப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், கடந்த 23.5.2011 அன்று ஐபிஎன் தொலைக்கட்சிக்கு வழங்கிய நேர்காணலில், விடுதலைப்புலிகளின் உலகளாவிய ஒன்றிணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய “கேபி” எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட குமரன் பத்மநாபன், “முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தவறு” என்றும் அது “பிரபாகரனும் பொட்டு அம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியது” என்றும் கூறியதோடு ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கோரினார்.

இப்போது குமரன் பத்மநபன் ஸ்ரீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷெவின் சிறப்பு விருந்தினர். அதாவது அரச அதிதி. இவர் இந்திய அரசின் ‘ரா’ எனும் ஒற்றர் அமைப்போடு தொடர்புடையவர் என்றும் காங்கிரஸை மிரட்டுவதற்காக மகிந்த கையில் சிக்கியுள்ள துருப்புச் சீட்டு என்றும் கேபி பேசப்படுகிறார்.

oOo

திருச்சி வேலுச்சாமி
ராஜீவ் படுகொலை
நடந்தபோது நடுவண் அரசில் அமைச்சராகப் பதவி வகித்த சுப்ரமணியம்சாமியின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர் வேலுச்சாமி. ஜெயின் கமிஷனில் தானாக ஓர் அஃபிடவிட் போட்டு ஆஜராகி “சுப்ரமணியம்சாமிக்கு ராஜீவ் காந்தியின் கொலைச் சதியின் முழு இரகசியமும் தெரியும். அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கையை வைத்தார்.

அதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

1991 மே மாதம் 19,20,21,22 ஆகிய நான்கு நாட்கள் தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்துக்கு உறுதியான திட்டங்களோடு தமிழகத்துக்கு வந்த சுப்ரமணியம்சாமி 20.5.1991 இரவோடு இரவாக டெல்லி திரும்பினார்.

ராஜீவ் படுகொலையைப் பற்றி எதுவும் தெரியாதவராக, சு.சாமியின் 22.5.1991 மதுரை நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவதற்காக 21.5.1991 இரவு 10:20க்கு டெல்லியிலுள்ள சு.சாமியை வேலுச்சாமி தொடர்புகொண்டு, வந்தனம் கூறியவுடனேயே, “ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்றுதானே சொல்ல வந்தாய். அது எனக்குத் தெரியுமே” என்று சு.சாமி கூறியிருக்கிறார். மேலும் 22ஆம் தேதி மதுரை நிகழ்ச்சியை நேற்றே (20.5.1991) ரத்து செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

{youtube}1PY-yKwbH0c{/youtube}

நன்றாகக் கவனிக்கவேண்டும். குண்டு வெடித்தது சரியாக இரவு 10:10க்கு. இறந்தவர்கள் யாவர் என அடுத்த அரைமணி நேரம் வரைக்கும் யாருக்கும் தெரியாது. 10:45 மணி வாக்கில் ராஜீவ் அணிந்திருந்த ஷூ போன்ற ஷூவோடு ஒற்றைக்கால் மட்டும் ஜெயந்தி நடராஜனால் ஐயத்தோடு அடையாளம் காணப்படுகிறது. அதை உறுதி செய்வதற்காக மூப்பனார் ஓடிவந்து பார்த்துவிட்டு அழுகிறார். அப்போது இரவு மணி 11.

படுகொலை நடந்த இரவு 11 மணி வரைக்கும் ராஜீவ் இறந்துவிட்டார் என்பது களத்தில் இருந்தவர்களுக்கே உறுதியாகத் தெரியாதபோது டெல்லியில் இருந்த சு.சாமிக்கு 10:10க்கு உறுதியாகத் தெரிந்திருக்கிறது.

{youtube}pGAlZiyxyEs{/youtube}

வீடியோ
ராஜீவ் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பிரச்சார நிகழ்ச்சிகள் – அவர் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவிப்பது உட்பட – வீடியோ எடுக்கப்பட்டன. அந்த வீடியோ, அப்போது உள்துறைச் செயலாளராக இருந்த கே.ஆர். நாராயணிடம் சேர்க்கப்பட்டது. பல முடிச்சுகளை அவிழ்க்கக்கூடிய அந்த வீடியோவை, பலகட்ட விசாரணையின்போது எந்த விசாரணையிலும் அவர் ஒப்படைக்கவேயில்லை.

வழக்கு
வழக்கம்போல் வழக்கு நடந்தது. அந்த வழக்கில் 41 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், பெண்கள் படைத் தலைவி அகிலா ஆகிய மூவரும் “பிடிக்க முடியாத குற்றவாளிகளாக” அறிவிக்கப்பட்டனர். மனித வெடிகுண்டாக வந்த தனு, ராஜீவின் படுகொலையில் மாஸ்ட்டர் மைண்டாகச் செயல்பட்டு, பின்னர் பெங்களூரில் தற்கொலை செய்துகொண்ட ஒற்றைக் கண் சிவராசன், சுபா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய கோடியக்கரை சண்முகம் உள்ளிட்ட 12 பேர் மரணம் அடைந்தனர். மீந்திருந்த 26 பேர் மீது அவசரமாகக் கொண்டு வந்த ‘தடா’ சட்டத்தின்கீழ் பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

தண்டனை
1998 ஜனவரி 28ஆம் நாள் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி நவநீதன் தீர்ப்பு அளித்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்:
1. அறிவு (எ) பேரறிவாளன்
2. தாஸ் (எ) முருகன்
3. நளினி (முருகனின் மனைவி)
4. ரவிராஜ் (எ) சின்ன சாந்தன்
5. விஜயானந்தன்
6. சிவரூபன் (எ) சுரேஷ்குமார்
7. கனகசபாபதி
8. ஆதிரை (கனகசபாபதியின் பேத்தி)
9. ராபர்ட் பயாஸ்
10. ஜெயக்குமார்
11. சாந்தி (ஜெயக்குமாரின் மனைவி)
12. விஜயன்
13. செல்வலட்சுமி (விஜயனின் மனைவி)
14. பாஸ்கரன் (விஜயனின் மாமனார்)
15. சண்முக வடிவேலு
16. ரவி (எ) ரவிச்சந்திரன்
17. சசீந்திரன் (எ) மகேஷ்
18. சங்கர்
19. இரும்பொறை
20 பத்மா
21. பாக்கியநாதன் (பத்மாவின் மகன்)
22. சுபா சுந்தரம் (போட்டோ கிராபர்)
23. தனசேகரன்
24. ரங்கன் (ஒற்றைக்கண் சிவராசனின் கார் டிரைவர்)
25. விக்கி (எ) விக்னேசுவரன்
26. ஜெயராம் ரங்கநாத்

அந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழீழ ஆதரவாளரும் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முஹம்மது காதிரி, வாத்வா, தாமஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்தது. குற்றவாளிகளுக்காக மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் வாதாடினார். அறிவு (எ) பேரறிவாளன், ரவிராஜ் (எ) சின்ன சாந்தன், தாஸ் (எ) முருகன், முருகனின் மனைவி நளினி ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் மற்றவர்களை விடுதலை செய்தும் 1999ம் ஆண்டு மே 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட நளினி, சின்ன சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வரும் தமிழக ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அவற்றுள் சோனியாவின் பரிந்துரையால் நளினியின் மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவரது தூக்குத் தண்டனை 2000ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூன்று குற்றவாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முருகன், சின்ன சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். அந்த மனு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், 2005 ஜூன் 21ஆம் தேதி, தன் கருத்தைத் தெரிவித்தது. பிறகு, மறுபரிசீலனைக்காக இந்தக் கருத்து, 2011, பிப்ரவரி 23ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.

இறுதியாகக் கடந்த 2011 மார்ச் 8ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம், தன் பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பியது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், முறையீடு செய்திருந்த முருகன், சின்ன சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை 2011 ஆகஸ்ட் 11இல் நிராகரித்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தார். தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு 2011 செப்டம்பர் 9 என நாளும் குறிக்கப்பட்டது.

தூக்குத் தண்டனையை எதிர்த்துத் தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். தூக்குத் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட மூவரின் சார்பில் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2011 ஆகஸ்ட் 29இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் “தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய”க் கோரி பல அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு முதல்வர், இந்திய அரசமைப்புச் சட்டம் 72, உட்பிரிவு 161 பிரிவு 257 கூறு (1) போன்ற பலவித சான்றுகளின் அடிப்படையில் “மாநில முதல்வருக்குத் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யும் அதிகாரம் இல்லை” என்றார்.

அதே நாளில் மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் டெல்லியைச் சேர்ந்த பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர்.

மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறுநாள் 30.8.2011இல், “மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்பது தமிழக மக்களைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானத்தைத் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார்.

எதிர்ப்பு
“தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் ராஜீவ் காந்தியின் கொலையில் தொடர்பில்லாத, அதைப்பற்றி ஒன்றும் தெரியாத அப்பாவிகள்” என்றும் “மொழியுணர்வால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாளர்கள் என்றாலும் ராஜீவின் கொலையில் நேரடித் தொடர்பில்லாதவர்கள்” என்றும் “இவர்கள் தமிழர்கள்” என்றும் மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்க்கும் அமைப்புகளும் அமைப்புகளை ஆதரிக்கும் இதழ்களும் காரணங்களைக் கூறுகின்றனர்.

தூக்கு விதிக்கப்பட்ட ‘அப்பாவி’களுள் ஒருவரான முருகனின் வாக்குமூலம்:

“நான் யாழ்ப்பாணம் மீசலை பகுதியை சேர்ந்தவன். எனக்கு சுரேஷ், சிந்து, ராஜூ, தாஸ் முதலிய பெயர்களும் உண்டு. பெற்றோர் வைத்த பெயர் முருகன். 14 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். எனக்குக் கடுமையான பயிற்சிகள் கொடுத்தார்கள். நான் மே 6ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் இருந்து கள்ளத்தோணியில் ஏறி சென்னைக்கு வந்து சேர்ந்தேன். போரூர் சபரி நகரில் இருந்த ஜெயக்குமார் வீட்டில் தங்கி இருந்த சிவராசன், சுபா, தனு ஆகியோரைச் சந்தித்தேன். சம்பவம் நடந்த நாளன்று சிவராசன், தனு, சுபா, நளினி, பாக்கியநாதன், போட்டோகிராபர் அரிபாபு ஆகியோரும் நானும் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்றோம். அங்குள்ள ஓட்டலில் மாலையில் பிரியாணி சாப்பிட்டோம். ஸ்ரீபெரும்புதூரில் தனுவுக்கு வெடிகுண்டு ஜாக்கெட்டை சிவராசன் மேற்பார்வையிட சுபா மாட்டிவிட்டாள்.

குண்டை எப்படி வெடிக்கச் செய்ய வேண்டும் என்பதை தனுவிடம் சிவராசன் விளக்கினான். குண்டு வெடிக்கச் செய்தால் இறந்து விடுவோம் என்பது தனுவுக்குத் தெரியும். ஆனாலும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய வேண்டும் என்ற பழிவாங்கும் கோபத்துடன் தனு இருந்தாள். இதற்குக் காரணம் யாழ்ப்பாணத்தில் தனுவின் அண்ணனும் தம்பியும் இந்திய அமைதிப் படையினரால் கொல்லப்பட்டனர். தனுவைக் கற்பழித்தனர். இதை நளினியிடம் தனு கூறியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இதனாலேயே கொலைத் திட்டத்தை நிறைவேற்ற அவள் சம்மதித்தாள். இத்திட்டம் நளினிக்கும் முன்கூட்டியே தெரியும். ராஜீவ் காந்தி வருவதற்கு முன்னதாக நாங்கள் மேடை அருகில் சென்று சுற்றிப்பார்த்தோம். தனுவுக்கு இடங்களைக் காட்டி சிவராசன் விளக்கினான். சிவராசன் தன்னைப் பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு அங்கு நின்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

ராஜீவ் வருகை தரும் இடத்தில் தனு சந்தன மாலையுடன் நின்றிருந்தாள். இதை சிவராசன் மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்தான். அவ்வப்போது தனுவுக்கு சைகை மூலம் கட்டளை பிறப்பித்தான். சிவராசன் தன்னுடைய பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியும் வைத்திருந்தான். குண்டை வெடிக்கச் செய்வதில் தனு தோல்வி அடைந்தால் ராஜீவ் காந்தியைக் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட சிவராசன் திட்டமிட்டிருந்தான். சுபா தன் கழுத்தில் சயனைடு (விஷம்) குப்பியை தாயத்து போலக் கட்டி தொங்கவிட்டிருந்தாள். ராஜீவ் காந்தி வந்ததும் சிவராசன், சுபாவை அழைத்துக்கொண்டு மெயின் ரோட்டுக்குச் சென்றான். நானும் நளினியும் கூட்டத்தை விட்டு நழுவினோம். குண்டு வெடித்த பிறகு இரவு சுமார் 10.30 மணிக்கு சிவராசன், சுபா 2 பேரும் ஆட்டோவில் ஏறி திருவள்ளூர் சென்றனர்.

நானும் நளினியும் காரில் ஏறி வீட்டிற்குத் திரும்பி விட்டோம். அதிகாலையில் சுபாவும் சிவராசனும் வந்தார்கள். காலையில் பத்திரிகைகளில் செய்தி வந்ததைப் பார்த்ததும் சுபாவும் சிவராசனும் வீட்டை விட்டுச் சென்றுவிட்டனர். நானும் நளினியும் திருப்பதிக்குச் சென்றோம். தமிழ்நாட்டிற்கு மே மாதம் ராஜீவ் காந்தி வரும்போது கொலைத் திட்டத்தை நிறைவேற்ற சிவராசனுக்கு விடுதலைப்புலிகள் மேலிடம் கட்டளை பிறப்பித்து இருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, சிவராசன் மே மாதம் முதல் வாரம் தமிழ்நாட்டிற்கு வந்தான்”

காவல் துறையினரால் பெறப்படும் வாக்குமூலங்களைப் பற்றி நம் எல்லாருக்கும் நன்கு தெரியும். சோனியா சந்தித்துப் பேசிய ரங்கநாத் (பட்டியலில் 26) என்பவருக்கு எதிராக அவருடைய மனைவி மிருதுளாவிடமே வாக்குமூலம் ‘வாங்கிய’துதான் ஸீபீஐ என்பது ஊரறிந்த இரகசியம்தான். என்றாலும் தனு சந்தன மாலையுடன் ராஜீவின் கொலைக்களத்தில் நின்றது, ஒற்றைக்கண் சிவராசன் பேனாவும் பேடுமாக நின்றது எல்லாம் புகைப்படங்கள் வாயிலாக அப்போதே வெளிவந்துவிட்டன.

அதனால் முருகனின் வாக்குமூலத்தில் கூறப்பட்ட அத்தனையும் பொய் என்று ‘தமிழ் இனத் தலைவர்’களால் மறுக்க முடியாது.

இன்றைக்கு மொழியுணர்வு பொங்கி, குருதி கொதிக்க மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக முழங்கும் கட்சியனருக்கும் தலைவர்களுக்கும் இதே விடுதலைப்புலிகளால் தமிழர் தலைவர்களான அமிர்தலிங்கம், ஸ்ரீசபாரத்தினம், பத்மநாபா, உமாமகேசுவரன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டபோது இந்தத் தலைவர்களது உணர்வுகள் சிணுங்கவுமில்லை.

தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் போட்டி அமைப்பினர் என்றாவது முட்டுக் கொடுத்துவிடலாம். ஒரு பாவமும் அறியாத, இலங்கையிலுள்ள ஏராவூர், காத்தான்குடி முஸ்லிம் தமிழர்கள், பள்ளிவாசலில் இறைவணக்கம் செய்து கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளால் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டனரே? அப்போதெல்லாம் இவர்களது குருதி ஓடாமல் உறைந்து போய்க் கிடந்ததோ? தாங்கள் என்ன காரணத்துக்காகச் சுடப்படுகிறோம் என்பது தெரியாமலேயே படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தமிழரல்லரோ?

ராஜீவ் காந்தியின் படுகொலையின்போது அவரது பாதுகாப்புக்கு வந்த ஓர் அதிகாரியைத் தவிர அநியாயமாகக் கொலையுண்ட காவல்துறை கண்காணிப்பாளர் முஹம்மது இக்பால் உட்பட அனைவரும் தமிழர்கள்தாமே. அப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டிருந்தது இவர்களது மொழியுணர்வு?

கடந்த 2.2.2000 அன்று இன்றைய முதல்வர் ஜெயலலிதா மீது கொடைக்கானல் ப்ளஸண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் குற்றத்தை உறுதி செய்து  தீர்ப்பு வெளியானது. ஆத்திரமடைந்த அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவை வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் 45 மாணவியரும் பயணித்த பஸ்ஸை நிறுத்தி எரியூட்டினர். அதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று அப்பாவி மாணவியர் தீயில் கருகினர். அது தொடர்பாக அதிமுகவினர் 31 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு, 25 பேருக்கு 2 முதல் 24 மாதங்கள்வரை சிறைத் தண்டனையும் நெடுஞ்செழியன் (தர்மபுரி அதிமுக நகரச் செயலாளர்), மாது (எ) ரவீந்திரன் (எம்ஜிஆர் மன்றச் செயலாளர்), முனியப்பன் (முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்) ஆகிய மூவருக்குத் தூக்குத் தண்டனையும் விதித்து, சேலம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பின்னர் 2007இல் உயர் நீதிமன்றமும் அடுத்து 2010இல் உச்ச நீதிமன்றமும் அம்மூவரின் தூக்கை உறுதி செய்தன).

அந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இன்றைக்குத் தங்களுக்கு ‘வேண்டிய’ மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக முழங்கும் பலர் அந்தத் தூக்குத் தண்டனைத் தீர்ப்பை இனிப்பு வழங்கிக் கொண்டாடியதாகச் செய்திகள் கசிந்தன. நெடுஞ்செழியனும் மாதுவும் ரவீந்திரனும் தமிழர்கள்தாமே? அவர்களையும் விடுதலை செய்யக்கூடாதா? ஏன்? அவர்கள் ‘நம்ம ஆளுங்க’ அல்லர்.

காவல் துறைக்கும் இராணுவத்துக்கும் இன்ஃபார்மராகச் செயல்பட்ட அஃப்ஸல் குருவையும் நாடுவிட்டு நாடுவந்து மும்பையில் காட்டாட்டம் போட்டு அப்பாவிகளைச் சுட்டுக் கொன்ற அஜ்மல் கஸபையும், அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகத் தூக்கிலிடக் கூடாது என்று எந்த முஸ்லிமாவது வாய் திறந்தாரா? ஏன் திறக்கவில்லை? அவர்கள் ‘நம்ம ஆளுங்க’ என்பதைவிட ‘குற்றவாளிகள்’ என்பதே இஸ்லாத்தின் நேர்பார்வையாகும்.

ஒரு குற்றவாளியை, அவன் என்ன குற்றம் செய்தான்? “குற்றம் நிரூபிக்கப்பட்டதா? அதற்குரிய தண்டனையை உடனே வழங்கு; உயிருக்கு உயிர்” என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. உலகிலுள்ள 134 நாடுகளில் மரண தண்டனை நீக்கப்பட்டாலும் உலகம் முழுதுமே நீக்கிக்கொண்டாலும் இதுவே நீதி. ஏனெனில்,

(முன்வேதம் வழங்கப்பெற்ற) அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாகப் பழிவாங்கப்படும் என்று விதித்திருந்தோம் …” 8:45 என்றும்

“இறைநம்பிக்கை கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் (அரசு) மீது விதிக்கப்பட்டுள்ளது …” 2:178 என்றும்

“நல்லறிவாளர்களே! (அநியாயக்) கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு(ப் பாதுகாப்பான) வாழ்க்கையுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களைத் (தீமைகளிலிருந்து) தற்காத்துக் கொள்ளலாம் 2:179 என்றும் இறைவேதம் கூறுகிறது. மேற்காணும் 8:45 & 2:179 வசனங்களின் மறுபாதி பின்னர் கூறப்படும்.

குற்றவாளியைக் குற்றவாளியாகத்தான் சட்டம் பார்க்கவேண்டுமேயன்றி, அவன் எந்த நாட்டுக்காரன்? எந்த மொழிக்காரன்? எந்த சமயத்தவன்? என்றெல்லாம் ஆராய்ந்து அவற்றுக்குத் தகுந்தாற்போல் சட்டம் வளையக் கூடாது என்றே இஸ்லாம் கூறுகிறது.

“அநியாயத்தின் பெயரால் செய்யப்பட்ட கொலைக்குத் தண்டனையாக, நீதியின் பெயரால் கொலை செய்வது தீர்வாகுமா? கொலை செய்தவனைக் கொலை செய்வதுதான் தீர்வா? கண்ணுக்குக் கண்… பல்லுக்குப் பல்… என்று சொல்லக்கூடிய காட்டுமிராண்டிக் காலம் இருந்தது என்றால், இப்போது நடப்பதற்கு என்ன பெயர்?”

என்று மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்களாம்; தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு வக்காலத்து வாங்கும் சந்தடி சாக்கில் சிந்து பாடியிருக்கிறது விகடன் கட்டுரை.

இலைமறை காயாக இஸ்லாத்தைத் தாக்கி எழுதிய அரைகுறைக்கு, இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் நடந்தால் தூக்குத் தண்டனைக் கைதிகள் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலையாகி இருப்பர் என்ற பேருண்மை தெரியாது; இறைமறையின் மறுபாதியின் மூலம் தெரிய வைப்போம்.

ஒரு நாட்டின் பிரதமரை, வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழு, ஓர் இளம் பெண்ணைப் பயன்படுத்திக் கொடூரமாகக் கொலை செய்தது. இந்தியா மட்டுமின்றி உலகமே திகைத்துக் கிடந்தது. ஆனால், ”இந்திய அரசைத் திகைக்கச்செய்வதோ, இந்திய மக்களுக்கு அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்கப் போதிய ஆதாரம் இல்லை” என்று கூறி, குற்றம் சுமத்தப்பட்டவர்களுள் 19 பேரை 11.5.1999 அன்று விடுதலை செய்தபோது உச்ச நீதிமன்றம் சட்டம் பேசியது.

இதுதான் நமது நாட்டுச் சட்டம்!

இந்தியர்களாகிய நாம், நாகரிகத்தில் முற்றிவிட்டோமாம். அதனால் மரண தண்டனையையே ஒழிக்க வேண்டுமாம். இப்படி ஒரு கூட்டம் சொல்லி மாய்கிறது. இரட்டைக் குவளையை இன்னும் நடைமுறையில் வைத்துக்கொண்டே ‘நாகரிகம்’ பேசுவதற்கு இவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை.

“உயிர் என்பது கடவுள் கொடுத்தது; அதைப் பறிப்பதற்கு மனிதனுக்கு உரிமை கிடையாது” என்று காந்தி தாத்தா சொல்லியிருக்கிறார் என்பதால் மரணதண்டனையே கூடாதாம். இப்படி மொக்கைத் தனமாக விளங்கிக் கொண்டு அறிக்கை விடுபவர் எழுத்தறிவில்லாத குப்பனோ சுப்பனோ அல்ல. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர்.

“கிருஷ்ணய்யரே சொல்லிட்டாரு” என்று இங்குச் சிலர் கூத்தாடுகின்றனர். “கடவுள் கொடுத்த உயிரைப் பறிப்பதற்கு மனிதனுக்கு உரிமையில்லை” என்று காந்தி தாத்தா சொல்லிவிட்டாரல்லவா? கடந்த ஆண்டு மட்டும் இராணுவத்துக்காக 1,47,344 கோடியைக் கொட்டிச் செலவழித்திருக்கிறோம். “சீனாக்காரனுக்கும் பாகிஸ்தான்காரனுக்கும் கடவுள் உயிர் கொடுத்திருக்கிறார். அதைப் பறிக்க நமக்கு உரிமையில்லை. எல்லாரும் வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்” என்று நமது இராணுவத்தைத் திருப்பி அழைத்துக் கொள்வோமா? அல்லது, “மனித உயிரைப் பறிக்கும் ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, எல்லையில் நில்லுங்கள்; எவரையும் கொன்றுவிடாதீர்கள்” என்று எச்சரிப்போமா? “பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண், தன் நகத்தைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளலாம். அப்பாதகன் கொல்லப்பட்டாலும் சரியே” என்று காந்தித் தாத்தா சொல்லவில்லையா?

நம்மிடமுள்ள உறுதியான இராணுவத்தையும் நவீன ஆயுதங்களையும் அறிந்ததிருப்பதால்தான் அண்டை நாடுகள் நம்மிடம் மோத ‘அச்சம்’ கொண்டுள்ளன. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 8.13% இராணுவத்துக்காக அதிகம் செலவழித்ததை நியாயப்படுத்திப் பேசிய நிதியமைச்சர், “பாதுகாப்பான எல்லை; பாதுகாப்பான வாழ்க்கை”க்கான அதிகச் செலவு என்று சொன்னார்.

‘இராணுவ அச்சம்’ எல்லைக்குப் பாதுகாப்பு; ‘மரண தண்டனை அச்சம்’ நாட்டுக்குள் பாதுகாப்பு என்பதைக்கூட விளங்காதவர்களாக இன்னும் சிலர் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

குற்றத்துக்கான தண்டனையின் காரணங்களை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மூன்றாகப் பிரிக்கலாம்.

  1. குற்றம் செய்தவன், தன் குற்றத்துக்காக வருந்தவேண்டும்; மீண்டும் அக்குற்றத்தைச் செய்யக்கூடாது.
  2. குற்றவாளிக்கு ‘உரிய’ தண்டனையை நமது நீதிமன்றம் வழங்கிவிட்டது என பாதிக்கப்பட்டவர்கள் மனது ஆறவேண்டும்.
  3. வழங்கப்படும் தண்டனைகளைக் கண்டு, மற்றெவரும் குற்றங்கள் செய்ய அஞ்சவேண்டும் (அல்-குர்ஆன் 24:2).

இவற்றுள் எதுவுமே நமது சட்டத்தில்/நடைமுறையில் இல்லை. விளைவு என்ன?

ஓட்டேரி : கத்தி முனையில் கற்பழித்து வந்த காமுகனை, போலீசார் குண்டர் சட்டத்தில்  சிறையில் அடைத்தனர். ஓட்டேரி பிரிக்கிளின் சாலையைச் சேர்ந்தவன் கவிக்கோ விஜயகுமார், 38. இவன் மீது, ஜெயிலர் ஜெயக்குமார் கொலை வழக்கு உள்ளிட்ட, 52 வழக்குகள், பல்வேறு காவல் நிலைங்களில் உள்ளன. இவன், விரும்பிய பெண்களை, கத்தி முனையில் கற்பழிக்கும் கொடூர குணம் கொண்டவன். சில மாதங்களுக்கு முன், ஓட்டேரி பிரிக்கிளின் சாலை வள்ளுவன் தெருவைச் சேர்ந்த பெண்ணை மிரட்டி, கற்பழித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டான். சில தினங்களுக்குமுன், ஜாமினில் வெளியே வந்த கவிக்கோ, மீண்டும் அந்தப் பெண்ணிடம் சென்று, தன் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளான். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் அரிக்குமார், ஓட்டேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரவுடி கவிக்கோ, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான். தற்போது சிறையில் இருக்கும் அவன், பெயிலில் வெளியே வர முயற்சித்தான். அவன் மீது 52 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், கவிக்கோ குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.

கோவை: தமிழகத்தில் போலீசாரிடமிருந்து தப்பியோடிய 45 நாட்களில் கர்நாடகத்தில் 8 கொலைகளைச் செய்து, 9 பெண்களை கற்பழித்துள்ளான் செக்ஸ் சைகோ ஜெய்சங்கர். சேலம் மாவட்டம் எடப்பாடி கோணசமுத்திரத்தை சேர்ந்த ஜெயசங்கர் (33) பெண் போலீஸ் ஜெயமணி உள்பட ஏராளமான பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்துள்ளான். ஜெயமணியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவன் வழக்கு விசாரணைக்காக மார்ச் 16ம் தேதி தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

மேற்காணும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட்டதா? இல்லை. மாறாக, மக்கள் வரிப்பணத்தில் மணியடித்தால் சோறு போடப்படுகிறது. ‘அச்சம்’ என்பதே இல்லாததால், வெளியில் வந்து அடுத்த குற்றத்திற்குத் தயாராகின்றனர். தங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்த பாதிக்கப்பட்டவர்களுள் சிலர், சட்டத்தைத் தம் கையில் எடுக்கின்றனர்; கோர்ட் வாசலில்/வளாகத்தில் கொலைகள் நடக்கின்றன. அதாவது குற்றங்கள் பெருகுகின்றன.

இதுதான் நமது நாட்டுச் சட்டம்!

விடுதலைப் புலிகளுக்கு எவ்விதத் தீங்கையும் எண்ணிப் பார்த்திராத செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அப்பாவி முஹம்மது இக்பால் படுகொலை செய்யப்படுகிறார். அவரைக் கொலை செய்த குழுவினருக்குப் பல்லாண்டுகாலமாகச் சிறையில் உணவளிப்பதிலும்  மருத்துவ வசதி செய்து கொடுப்பதிலும் அவருடைய மகன் ஜாவித் இக்பால் செலவு செய்கிறார். அதாவது அரசுக்கு ஜாவித் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து ஒரு சிறு பங்கு சிறைவாசிகளின் வசதிக்காகச் செலவழிக்கப்படுகிறது. விசித்திரமாயில்லை?

இதுதான் நமது நாட்டுச் சட்டம்!

கருணை மனுவின் மீது முடிவு சொல்லி, குற்றவாளிகளை மன்னிக்கும் உரிமை குடியரசுத் தலைவருக்கா? மாநில முதல்வருக்கா? ஆளுநருக்கா? என மயிர் பிளக்கும் விவாதங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

மாநில ஆளுநரைவிட மேலான மன்னிக்கும் உரிமையை, குடியரசுத் தலைவரைவிடவும் மேலான மன்னிக்கும் உரிமையைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வழங்கியுள்ளது இஸ்லாம். அதன்படி, ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் உயிர் – இஸ்லாத்தின் பார்வையில் – சோனியாவின் கையிலிருக்கிறது.

இறைமறையின் தீர்ப்பு:
இறைநம்பிக்கை கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் (அரசு) மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவன்* அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். என்றாலும், (கொலை செய்யப்பட்ட) அவனது சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் (கொலைகார) அவனுக்கு மன்னிப்பு என முடிவனால், நியாயமான நடைமுறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும் நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கிருபையுமாகும். ஆகவே, இதன் பிறகும் (இருசாராரில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு (அல்-குர்ஆன் 2:178).

*அக்காலத்தில் அரபியர் அடிமைகளை வைத்திருந்தனர். ஓர் அரபி இன்னோர் அரபியைக் கொன்றுவிட்டால், தன் உயிருக்குப் பகரமாகத் தன்னிடமுள்ள ஓர் அடிமையைக் கொல்லுமாறு அனுப்பி வைக்கும் கொடுமை நிலவியது. அதை ஒழித்துக் கட்டும் விதமாகவும் இவ்வசனம் அமைந்தது.

(முன்வேதம் வழங்கப்பெற்ற) அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர்; கண்ணுக்கு கண்; மூக்குக்கு மூக்கு; காதுக்கு காது; பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும்” என்று விதித்திருந்தோம். எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். அல்லாஹ் அருளிய(வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்காதவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களே! (அல்-குர்ஆன் 8:45).

இவை காட்டுமிராண்டிச் சட்டங்களல்ல; கருணையான சட்டங்கள். நடப்பிலுள்ள சட்டங்களுள் நனி சிறந்த சட்டங்கள். பார்க்க : கண்ணுக்குக் கண் – http://www.satyamargam.com/1746.

இனி, ராஜீவ் காந்தியின் படுகொலையால் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தின் தலைவி சோனியா காந்தி, 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு எழுதிய கடிதத்தைப் படிப்போம்:

“என் அன்புக் கணவரின் கொடூரமான கொலைக்குக் காரணமாக இருந்த நான்கு பேரும் தூக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று, எங்கள் குடும்பம் நினைக்கவில்லை. எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்குக் கருணை மனு அனுப்பும்போது, தாங்கள் அவர்களை மன்னித்து, தூக்குத் தண்டனையை நிறுத்தும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்”

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடந்து கொண்டிருந்தால் தூக்குத் தண்டனைக் கைதிகளின் உயிர் பதினொரு ஆண்டுக்கு முன்னரே காக்கப்பட்டிக்குமா? இல்லையா?

இன்னும் சற்றே கூடுதல் கருணையுடன்

“என் அன்புக் கணவரின் கொடூரமான கொலைக்குக் காரணமாக இருந்த நான்கு பேரும் தூக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று, எங்கள் குடும்பம் நினைக்கவில்லை. எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்குக் கருணை மனு அனுப்பும்போது, தாங்கள் அவர்களை மன்னித்து விடுதலை செய்துவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்”

என்று சோனியா எழுதினால் இஸ்லாமிய ஆட்சியில் என்ன நடக்கும்?

அதுதான் இந்தத் தலையங்கத்தின் தலைப்பு.

இனியாவது இஸ்லாத்தைப் பற்றி எழுதும்போது ஊடகங்கள் அரைக் கிணறு தாண்ட வேண்டாம்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.