காலம்

நிகழ்வுகளை
நினைவுகளாய்ப்
பதிந்து வைக்கும்
ஒலிநாடா

இன்றைய செய்திகளை
நாளைய வரலாறுகளாய்ப்
பாதுகாத்து வைக்கும்
பேரேடு

துக்கங்கள் யாவும்
மறந்து போக வைக்கும்
மாமருந்து

வாய்ப்புகளாய்
வாசற்கதவினைத் தட்டும்
உருவமில்லா ஓர்
உற்ற நண்பன்

காத்திருத்தல்
தவப் பயனாய்
பொறுமை தரும்
வரம்

மேலும் கீழுமாய்ச்
சுழற்றிப் போடும்
சக்கரம்

பிறப்பு, இறப்பு
மறுமை யாவும்
மறைத்து வைத்துள்ள
இரகசியப்
பெட்டகம்

–  ‘கவியன்பன்’ கலாம்

இதை வாசித்தீர்களா? :   மரியாதைக்குரிய வாக்காளப் பெருமக்களே!