93. முற்பகல்!

Share this:

விடிந்த நாள் வளர்ந்து,
வீழ்வதற்கு நடுவே;
வட்டச் சூரியன் – நடு
வானடையு முன்னே;
குளிருக்கு இதமான
கோடைக்கும் பதமான
முற்பகல் மீதாணை !

ஊர்வன விழுங்கிய இரை – வயிற்றுள்
வாய்த்திடும் காரிருள் போல்
நிசப்தத்தோடு நிலைபெறும்
இரவின் மீதாணை !

உம்மைப் படைத்தவன்
உயிரை நுழைத்தவன்
உணர்வை விதைத்தவன்
உலகின் ரட்சகன்
கை விட்டுவிடவில்லை
மெய்யாய் வெறுத்துவிட வுமில்லை !

சூதும் வாதும் வேதனை செய்யும்
சூழ்ச்சியும் வீழ்ச்சியும் சுழற்றி அடிக்கும்
தற்காலிகத் தங்குமிடம் – இந்த
தரணி வாழ்வைவிட

நேர்மையும் மகிழ்வும் நிரம்பிச் செழிக்கும்
நிம்மதியும் நிறைவும் நீடித்து நிலைக்கும்
மறுமை வாழ்வே
மகத்தான துமக்கு !

அருளையும் பொருளையும்
அள்ளி அள்ளி வழங்குவோன்
அன்போடு உமக்கும்

அளவின்றித் தருவான்;
அகம் மகிழ்ந்து பெறுவீர் !

ஆதரிக்க யாருமில்லா
அரவணைக்கப் பேருமில்லா
அநாதையாய் உமைக் கண்டே
அன்போடு காப்பாற்றி
அரவணைத்து ஆதரித்தான் !

மேற்கொண்டு செல்ல
வழியற்று நின்றீர்;
மீள்கின்ற இலக்கை
மறந்து விட்டிருந்தீர்;
தெளிவான பாதை
திருத்தி அவன் தந்தான்;
நேர்வழி காட்டி
நிலைப் புகழ் அளித்தான் !

பொருளென்றும் பெயரென்றும்
படைத்தவன், அருளென்றும்
தேவையுடைய உம்
தேடலை நிறைவேற்றி
தன்னிறைவைத் தந்தான் !

ஆகவே நீர்…
அன்பு காட்ட ஆளில்லா
அரவணைக்க உறவில்லா
அநாதையை வெறுக்காதீர்;
கடிந்து சொல் உதிர்க்காதீர் !

வசிப்பினில் தோற்று
பசிப்பிணி யுற்ற
யாசகரை விரட்டாதீர் !

ஆலங்களைப் படைத்தவன்
அபிவிருத்திச் செய்பவன்
ஆண்டவனின் கிருபைகளை…
அவன்தன் ஆளுமையை …
அளப்பரிய அருட்கொடையை…
அகிலத்தார் யாவருக்கும்
அறிவித்து வருவீராக!

(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 93அள்ளுஹா)

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

 

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.