மன்னித்தருள்வாய் இறைவா!

Share this:

ருமுகில் பொழியும்
பெருமழை நீரென
தருமருள் எங்கள் இறைவா!
இருகரம் ஏந்தினோம்:

எம்முள் அடங்கா
இச்சைகள் இழுத்துச் செய்த
எண்ணில் அடங்கா
இழிச்செயல் பொறுத் தருள்வாய்!

பிள்ளைப் பிராயத்தில்
தொல்லை வடிவில் பிறர்க்கு
எல்லையின்றிச் செய்த பாவம்
இல்லை என்றாக்கு இறைவா!

பள்ளிப் பயின்ற காலங்களில்
சொல்லித் திரிந்த பொய்களுடன்
அள்ளித் தெளித்த வார்த்தைகளை
இல்லை என்றாக்கு இறையோனே!

அர்ப்பக் காரணங்களுக்கும்
சொற்ப நேரச் சுகங்களுக்கும்
சர்ப்பக் கடி விஷம்போல்
செப்பிய பொய்புரட்டுப் பொறு!

வாலிப முறுக்கில்
வழுக்கிச் சறுக்கிய பிழைகள்,
சூடேறிய இரத்தத்தால்
ஈடேறிய பாவங்கள் மன்னிப்பாய்!

கண்டெத்திய கேட்டினாலோ
கேட்டனுபவித்த கெடுதலாலோ
பேசிச்சுகித்த பிழைகளாலோ
கேடுகெட்ட எண்ணங்களாலோ
சுற்றிச் சூழ்ந்த பாவம் நீக்கு!

ஏட்டையோ எழுத்தையோ
பார்ப்பவனல்ல – நீ
இதயத்தையும் எண்ணங்களையும் பார்ப்பவன்!

பாடும் பாட்டின்
பாவம் பார்ப்பவனல்ல நீ – நாங்கள்
படும் பாட்டின்
பாவம் போக்குபவன்

எங்களின்
பலவீனங்களை
பலங்களாய் மாற்று
செலவினங்களைச் சிக்கனமாக்கு

அழகிய முறையில்
விழைவதைக் கேட்பதையே
விரும்புபவன் நீ
அவ்வாறே முயன்றோம்

சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்து
எங்கள் துஆக்களை ஏற்பாய் இறைவா!

நிச்சயமாக நீயே
மன்னிப்பவன்
மன்னிப்பதை விரும்புபவன்
எங்களையும் மன்னித்தருள்வாய் ரஹ்மானே!

– சபீர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.