
இன்று
வியாழன்…
வெள்ளி சென்றது
நேற்றுப்போல்.
எத்தனை
வேகமாய்
கடக்கிறது
இந்தியனின் இளமை
வளைகுடாவில்?!
எத்தனை
ஆண்டு அல்ல
குடும்ப வாழ்க்கை
ஓராண்டில்
எத்தனை
தடவை
என்றாகிப்போனதே!
ஊரிலிருந்து
வந்த நண்பன்
உன்
நினைவுகள் மொய்க்கும்
பெட்டியொன்று தந்தான்.
அட்டைப்பெட்டியின் மேல்
எழுதியிருந்த
என் பெயர்
சற்றே அழிந்தது …
அட்டைப் பெட்டியை
நீ
ஒட்டிக் கட்டுகையில்
பட்டுத் தெறித்த உன்
நெற்றிப் பொட்டின் வியர்வையா
சொட்டுக் கண்ணீர் பட்டா?
அக்காள் கையால் செய்த
நார்த்தங்காய் ஊறுகாய்
உம்மா பெருவிரலால்
நசுக்கி உலர்த்திய அப்பளம்
பீட்ரூட் அல்வா
விகடன், ஜூ வி
உன் கையால்
கலந்தரைத்த மசாலாப்பொடி
நான் கேட்ட பொருட்களோடு
பெட்டி முழுதும்
ஒட்டி யிருந்தன
நீயாக அனுப்பிய
கடுஞ்சோகப் பெருமூச்சும்
நிலைகுத்திய பார்வைகளும்…
– சபீர்