சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 2)

Share this:

இதன் முதல் பகுதியைப் படித்த பின்னர் தொடருங்கள்.

நபிகள் பொய் பேசாதவர் என்ற நற்பெயரைக் கெடுக்க வேண்டும். இந்த உத்தியின் முதல் கட்டமாக அவர்கள் செய்தது – சமாதானம் என்ற நேசக்கரம். எப்படியாவது, அவரைத் தங்கள் மேலாண்மையை ஏற்கச் செய்து விட்டால், அதற்குப் பகரமாக, அவரது மதத்தையும் அங்கீகரிப்பது, பொருள் மற்றும் அதிகாரமுள்ள பதவி ஒன்றைத் தருவது. காலங்காலமாக மனிதனைப் போதை கொள்ளச் செய்வது அதிகாரம். அந்த அதிகாரத்தைத் தருவதற்கு அவர்கள் முன் வந்தனர். சராசரி மனிதனால் புறந்தள்ள முடியாத கவர்ச்சிகரமான – சலுகைகள்!!!

நபிகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இத்தனைக்கும் நபிகள் தன்னை ‘உங்களைப் போன்ற மனிதன் நான்’ என்று சொல்லி அவ்வாறே வாழ்ந்து கொண்டிருப்பவர். என் ஒரு கையில் சூர்யனையும், மறு கையில் நிலவையும் கொடுத்தாலும் கூட, ஏக இறை வணக்கத்தை நான் கைவிடேன் என்று உறுதிபட கூறி மறுத்து விடுகிறார். இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒரு புறமிருந்தாலும், மறுபுறத்தில், அவரைச் சுற்றி ஒரு கூட்டம் தூற்றுவதற்கென்று எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அந்தச் சூழ்நிலையில் தான், அச்சம்பவம் நிகழ்கிறது.

இஸ்லாமியர்களின் இறைவணக்கத்தைக் கூர்ந்து கவனித்தவர்கள் – ஒன்றைப் புரிந்து கொண்டிருப்பார்கள் – குரானிலிருந்து சில வாக்கியங்களை சப்தமிட்டு ஓதி, தங்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். நபிகளின் காலத்தில், கஃஃபா ஆலயத்தில், முஸ்லிம்களும் தங்கள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வர் – பகான் அரபிகளும் தங்கள் சிலை வணக்கத்தை செய்து கொள்வர்.

அன்று நடந்ததும் இது போல் ஒரு சாதாரண நிகழ்வே. வரலாறு 1400 வருடங்கள் கழித்தும் இதை விவாதித்துக் கொண்டிருக்கும் என்று எவரும் நினைத்துக் கூடப் பார்த்திராத வக்கிரத்தை அன்றைய இஸ்லாமிய எதிரிகள் தோற்றுவித்தார்கள்.

அவர்கள் பரப்பிய செய்தி இது தான் – முகமது நமது தெய்வங்களை ஏற்றுக் கொண்டார் என்ற பொய்யைப் பரப்பினர்.

அன்று தொழுகையின் போது நபிகள் வாசித்த குரான் வாக்கியங்கள் இவை தாம்.

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான ‘மனாத்”தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

நபிகளின் கம்பீரமான குரலில், லாத், உஸ்ஸா மற்றும் மனாத் என்ற சிலைகளின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டதும், அவர் தங்கள் தெய்வங்களின் இருப்பை ஏற்றுக் கொண்டதாக நினைத்துக் கொண்ட பகான் அரபிகள், அந்த வாக்கியங்களின் முழு பொருளையும் உணர்ந்திருக்கவில்லை. மாறாக, குலவை ஒலி எழுப்பி, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். தாங்களும் தலை தாழ்த்தி, தரையில் சிரம் புதைத்து, வணங்கிக் கொண்டனர்.

இவர்கள் கிளப்பிய பொய் செய்தி, மக்காவின் எல்லைகள் பல கடந்து, அபிசீனியா தேசம் வரைக்கும் சென்றது. அங்கிருந்த முஸ்லிமகள் உண்மை அறியாது, தங்களின் துயரங்களைக் கண்டு, சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார் நபிகள் என்று எண்ணி மக்கா திரும்பத் துவங்கினர். பின்னர் தான் இது தவறான செய்தி என உணர்ந்து, தங்கள் வருகையை தள்ளிப் போட்டனர்.

இந்தப் பொய், கிளம்பிய சில நாட்களிலே அடங்கி விட்டது. எல்லோரும் மறந்து போன செய்தியாகியது. ஆனால், வரலாறு அவ்வாறு நிறுத்திக் கொள்ளவில்லை. இஸ்லாத்தை எதிர்த்தவர்கள், இஸ்லாம் பரந்து விரிந்த பின்னும் இருக்கத் தான் செய்தனர். இந்தப் பொய் செய்திக்கு, கண் காது மூக்கு வைத்து ரகசியமாக வளர்த்துக் கொண்டிருந்தனர். சாதாரணமாக உச்சரிக்கப்பட்ட பெயர்கள் ஒன்றே தங்கள் தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சொல்வதற்கு தகுந்தது அல்ல என்பதால், அவர்களே இல்லாத ஒரு வாக்கியத்தை உருவாக்கிக் கொண்டனர். அது – ‘they are exalted birds whose intercession is hoped for’

‘அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் – அவற்றின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கது..’

இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்தப் பொய் வாக்கியங்கள் பின் என்னவாயிற்று?

அவை நீக்கப்பட்டன. நபிகள் சொன்னாராம் ‘இந்த வாக்கியங்களை நான் சொல்லவில்லை. அவைகளை சாத்தான் என் காதில் ஓதிற்று. அதை நானும் கூறினேன். பின்னர் நான் தவறை உணர்ந்தேன் – அதை நீக்கிவிட்டேன்.’

பின்னர் அனைத்தும் அமைதியாயிற்று. இந்த அண்டப் புளுகு முஸ்லிம்களிடையே எடுபடவில்லை. யாரும் இந்தப் பொய்யர்களை துளிகூட மதிக்கவில்லை. ஆனால், இஸ்லாம் தனக்குள் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த காலத்தில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்ட இந்த வதந்தி, பின்னர், இஸ்லாம் தன் கதவுகளைத் திறந்து கொண்டு, மேற்கு நோக்கிய பயணத்தைப் புறப்பட்ட பொழுது, கிறித்துவ மதம் தனது நிலங்களையும் மேலாண்மையையும் முஸ்லிம்களிடம் இழக்கத் தொடங்கியது. கிறித்துவமும், இஸ்லாமும் நேருக்கு நேர் நின்ற பொழுது, இஸ்லாத்தை எதிர்கொள்ள அன்றைய கிறித்துவ தத்துவவியலாளர்கள் எடுத்துக் கொண்ட வழிமுறை – அவதூறுகளுக்கு உயிரூட்டுவது – கற்பனை கதைகளை அடுக்கி வைப்பது.

இந்த வரலாற்றாசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஞானத்துடன், மொழி அறியாது, இஸ்லாமிய வழிமுறைகளை வரலாற்றை தத்துவவியலை எல்லாம் ஆராயத் துவங்கினர். அவர்களுக்குக் கை கொடுத்தது – சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி வைத்த – உண்மையோ, பொய்யோ தாங்கள் கேள்விப்பட்ட அனைத்தையும் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்ட சில அறிஞர்கள், இதையும் பதிவு செய்து வைத்தனர் – ஒரு செய்தி என்ற அளவில்.

புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு செய்தியையும், அதை கூறியவர் தந்த சங்கிலித் தொடர் போன்ற நபர்களின் வரிசையைத் தொடர்ந்து, மூலநபரை அடைந்து, அவர் நபிகளுடன் எவ்வாறு தொடர்புடையவர் என்ற மூலத்தை ஆராய்ந்து, அதில் துளியும் சந்தேகமில்லாத பொழுது அதை ஏற்றுக் கொண்டனர். சிலருக்கு அத்தகைய பொறுமை இருந்ததில்லை. ஆனாலும் தங்கள் அறிவை பறைசாற்றிக் கொள்ள, அல்லது தாங்களும் வரலாற்றில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவலுடன், செய்தி சொல்ல வரும் நபர்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு பதிவு செய்து வைத்தனர்.

அவர்களில் ஒருவர் – இப்னு இஷாக்.

இப்னு இஷாக் இஸ்லாத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது. போற்றப்பட வேண்டியது. அவர் தான் முதன்முதலாக நபிகளின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர். அவரது காலம் – d.768. அதாவது நபிகளின் காலத்திற்கு பின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து மறித்தவர்.

நபிகள் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருந்தார். தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் வார்த்தைகளைக் கூட தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் குரான் வாக்கியங்களைத் தவிர மற்ற அனைத்தும் பிரதி எடுக்கப்படுவது தடை விதிக்கப்பட்டிருந்தது. தன்னை இறைவன் அளவிற்கு பக்தியினால், பாசத்தினால் மனிதர்கள் உயர்த்தி விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அதனால், தன்னை ஓவியமாக வரைவது, தன்னைப் பற்றிய குறிப்புகள் என்று எதையும் பதிவு பெறாமல் பார்த்துக் கொண்டார். தன் கல்லறையில், எந்த ஒரு கட்டிடமும், நினைவுக் குறிப்பும் செய்யக் கூடாது என்றும் தடை விதித்திருந்தார். இன்றுவரையிலும் அது அவ்வாறே காப்பாற்றப் பட்டிருக்கிறது.

ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின்னே, தான் இந்த வாழ்க்கை வரலாறும், மற்றும் நபி மொழிகளும் பதிவு பெற முயற்சிகள் தொடங்கப்பட்டன. அதன் காரணமும் கூட, நபிகளின் பெயரால், பலரும், பலவாறான கதைகளையும், புது மொழிகளையும் கூறிக்கொண்டிருந்தனர். அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், முறைப்படி தொகுக்கப்பட்ட, ஹதீது நூற்களும், வாழ்க்கை வரலாறும் அத்தியாவசியம் என்பதால், அவைகள் தொகுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு சாரார் – நபிகளின் மொழியை – அதன் தாக்கம் இந்த உலகம் இருக்கும் வரையிலும் வாழும் என்பதால், மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து ஆராய்ந்து, உண்மை என துல்லியமாக அறியப்பட்டவைகளை மட்டுமே பதிந்து வைத்தனர்.

ஆனால், வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர்கள் இத்தகைய ஆராய்ச்சி மனப்பான்மையை மேற்கொள்ளவில்லை. வெறும் தர்க்க விதிகளை மட்டும் வைத்துக் கொண்டு, விளங்கிக்கொண்டதை பதிவு செய்து வைத்தார்கள். அவர்களுக்கு முகமது நபி அவர்கள் ஒரு கதாநாயகன். நபி அவர்கள் எதை மறுத்தார்களோ அதையே அவர்கள் செய்தனர். They tried to Glorify The Prophet…They tried to romanticize his life. They tried to project him as a superman.. They tried that prophet won over the satan by identifying and removing the verses…

இந்த ஹீரோ வழிபாட்டில் முன் நின்றவர் – இப்னு இஷாக். முதன் முதலாக வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவர் – சீரத் ரசூல் அல்லாஹ் என்ற பெயரில் தொகுத்தவர் மூளையைப் பயன்படுத்தியதை விட, தன் ஹீரோ மீது கொண்டிருந்த அபரிமிதமான அன்பினால், தன் இதயம் விரும்பிய பராக்கிரமான செயல்களை எல்லாம் நபிகள் மீது சூடி பெருமிதம் கொண்டவர் – அவர் அறிந்திருக்கவில்லை – இது எத்தனை தவறாக புரிந்து கொள்ளப்படும் என்று. இவரது இந்த செயலை – செயல்பாடுகளை அவரது சமகாலத்து அறிஞர்களே கண்டித்திருக்கின்றனர் – விமர்சித்திருக்கின்றனர்.

இமாம் மாலிக் – மாலிக் மத்ஹபு என்ற தத்துவ இயல் வழியாக பாதை ஒன்றை அமைத்தவர் – இப்னு இஷாக் காலத்தவர். இஷாக் பற்றி இவர் சொல்வதை கேளுங்கள்: ‘DEVIL’ ஹா! சாத்தானின் வேதத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்த முதல் சாத்தான்?

ஹிஷாம் பின் உராமா, மற்றுமொரு சம காலத்திய மார்க்க அறிஞர் என்ன சொல்கிறார் தெரியுமா – ‘The rascal lies’

இமாம் ஹன்பால், சிறப்புமிக்க மார்க்க ஆய்வாளர் இவரது வரலாற்றை முற்றிலுமாக நிராகரித்துப் பேசுகிறார். பல மார்க்க அறிஞர்களும் இவரது தொகுப்பை குப்பை என ஒதுக்கிவிட வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கின்றனர்.

எதனால் இப்னு இஷாக் இவ்வாறு செய்தார்? சற்று கூட ஆராய்ந்திருக்க மாட்டாரா? அவர் எடுத்துக் கொண்ட தர்க்க முறை – Theory of deduction. இரண்டு சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பொழுது அது சம்பந்தப்பட்ட மூன்றாவது செய்தியும் உண்மையாக இருக்கும் என்ற அனுமானம். இது ஒரு assumption. இதில் புரிந்து கொள்ள தவறியது – when you are making an assumption – you are making an ass of yourself என்பது தான். ASS – U !!!

கொஞ்சம் விளக்கிச் சொல்வது என்றால், இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

சூர்யன் மேற்கே அடைகிறான்.

மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கே இருக்கிறது.

சூர்யன் மேற்குத் தொடர்ச்சி மலை பின்னால் அடைகிறான்.

இவ்வளவு தான் Theory of Deduction. முதல் இரண்டு செய்திகள் உண்மையாக இருக்கும் பொழுது, மூன்றாவது உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான். மூன்றாவது செய்தி உண்மைதான். மலைக்கு கிழக்கு பக்கம் வாழும் தமிழகத்தார்களுக்கு. ஆனால், இந்த கண்டுபிடிப்பை மலையாளிகளிடம் சொன்னால் சிரிப்பார்கள். அங்கு, மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கில் இல்லை. இரண்டாவது வாக்கியம் அவர்களைப் பொறுத்தவரை பொய். ஆக உண்மை எது பொய் எது என்பதற்கான ஆதாரமும் கொடுக்கப்பட வேண்டும்.

இங்கு அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் சரிவர செய்யப்படவில்லை. இது வரலாற்றை ஆராய்பவர்களுக்குப் புரியும். ஆனால், இஷாக் ஆராய்ந்த விதம் இவ்வளவு தான்.

நபிகள் பெருமானார் குரானை ஓதினார்.

எங்கும் உற்சாகக் குரல்களும், குலவை ஒலியும், கிளம்பியது.

நாடு கடந்து சென்ற முஸ்லிம்கள் மக்கா திரும்ப ஆரம்பித்தனர்.

ஆக, மேற்கண்ட அனைத்தும் உண்மையானால், இந்த செய்தியும் உண்மை தான் என்று நம்பி, தன் ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு பதிவு செய்து வைத்தார் – The Satanic Versus என்ற செய்தியையும்.

சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல – இப்னு ச’ஆத் அல்ல இந்த செய்தியைப் பதிவு செய்தவர். ஆங்கிலத்தில் சில புத்தகங்கள் வரும். அவற்றின் தலைப்பே ‘How to bluff your way through.. .. .. .. ‘ எதைப்பற்றியதாக வேண்டுமானாலும் இது இருக்கலாம். அதன் காரண காரியம் – உங்களுக்கு சில சொற்றோடர்களை அது கற்பிக்கும். Some jargons, some connected phrases.. .. .. இதைத் தான் இப்பொழுது சில நண்பர்களும் செய்ய முனைந்திருக்கின்றனர். ச’ஆத்-திற்கு முன்பே இவை விவாதிக்கப்பட்டு திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

இஷாக்- எழுதியதை முழுவதும் வாசித்த இப்னு ஹிஷாம் அதை முற்றிலுமாகத் திருத்தி, romantic வாக்கியங்கள், செய்திகள், புனைவுகள் அனைத்தையும் நீக்கி, சுத்தமான ஒரு சீரத் நபி – நபி வரலாற்றை எழுதினார். இவரது காலம் – d.834. இவரது சமகாலத்தவரான வாஹிதி (757 – 822) மீண்டும் இஷாக் எழுதிய வரலாற்றை எடுத்துக் கொண்டார் – காரணம் சுவை. வாஹிதியின் மாணவர் தான் இப்னு ச’ஆத்.(764-845) பின்னர் வந்தவர் – தபரி. (839-923) இவர்கள் அனைவரும் வரலாற்றில் குறிக்கப்படுகின்றனர் – ‘ the earliest sources of the history of Islam’

இவர்களைத் தான் பிரதி எடுத்து ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுவது – ‘ quoting earliest sources of Islam’ அவர்கள் மறந்து விட்ட விஷயம் – The earliest sources of Islam is Quran itself. குரானை வாசித்துப் புரிந்து கொள்ள சக்தியற்ற வரலாற்றாளார்கள், மேற்கண்ட ‘அறிஞர்’களின் எழுத்துகளை அப்படியே மொழி பெயர்த்து, தாங்கள் எழுதிய வரலாறாக மாற்றிக்கொண்டு விட்டனர் ‘ ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல். அல்லது இந்த தவறுகளை தர்க்கித்து, விவாதித்து, ஆராய்ந்து, இவற்றை நீக்கி எழுதிய, இப்னு ஹிசாமையோ அல்லது பிற்காலத்தைய ஆராய்ச்சியாளர்களையோ அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் Theory of deduction என்ற ‘தங்களைக் கழுதையாக்கிக் கொள்ளும்’ தத்துவத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டனர்.

‘ இஸ்லாமியர்கள் முகமதுவின் மீது அதீத பற்று கொண்டவர்கள்’
‘ இஸ்லாமியர்களே எழுதி வைத்த செய்தி’
‘ அதனால், சாத்தானிக் வெர்ஸஸ் உண்மை’

ரொம்ப எளிது. ஒரு அவதூறைக் கூறுபவர்களுக்கு இது எளிது. ஆனால், அதை மறுத்து, உண்மையை நிறுவுவது கடினம்.

ஆனாலும் இஸ்லாமியர்கள் – நிறுவினார்கள். இந்த அவதூறு பொய் என்று.

எப்படி? அடுத்த பகுதியில் காண்போம்….

ஆக்கம்: ‘நண்பன்’ ஷாஜஹான்

< பகுதி 1 | பகுதி 3 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.