புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-1)

Share this:

(இந்தியா – பர்மா – இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை)

மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் “முஸ்லிம்களின் பெயரால்” நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் பீகாரிலுள்ள புத்தர் கோயிலில் 9 குண்டுகள் வெடித்துள்ளன. மேலும் வெடிக்காத நான்கு குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. எப்போதும்போல் இந்தக் குண்டுவெடிப்பிற்குப் பிறகும், காவல்துறை தனது விசாரணையைத் துவங்கும் முன்னரே, சில ஃபாசிஸ பத்திரிக்கைகள் சொல்லி வைத்தார் போல் பழியினை முஸ்லிம்களின் மீது திருப்பி எழுத ஆரம்பித்து விட்டன.

“மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு வருவதற்குப் பதிலடியாக, இந்தியாவிலுள்ள புத்தபீடங்கள் தாக்கப்படும் என்று கடந்த ஜனவரியிலேயே ஜிஹாதிகள் பகிரங்கமாக எழுதியிருக்கிறார்கள்!” என்று இந்திய காவல்துறையும் ஐ.பி – யும் இடைவெளி விட்டு அறிவித்திருந்தன. இதற்கு “ஆதாரமாக” இந்தியன் முஜாஹித்தீன் என்ற பெயரில் எவனோ இயக்கும் ட்விட்டர் வலைத்தளமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இன்றைய இணைய உலகில், எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனால் கூட ட்விட்டர் வலைத்தளம் துவங்கிவிட முடிவதோடு “இண்டியா ஃபார் ஹிந்துத்வா” என்ற பெயரிலோ “ஜெய் ஆர்.எஸ்.எஸ்” என்ற பெயரிலோ எதை வேண்டுமானாலும் கிறுக்கி அறிவிக்கவும் முடியும். சாதாரண மக்களுக்கு இது குறித்து அதிக விவரம் தெரியாததால், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என பாமரர்களுக்கு எளிதில் புரியாத பெயர்களுடன் அவ்வப்போது புதிய கதைகளைப் பரப்பி மக்களை மடையராக்குகிறார்கள் போலும்!

பர்மா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதப் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகே அரங்கேற ஆரம்பித்தன. எனில், இந்திய முஜாஹிதீன் மேற்கண்ட அறிவிப்பை எப்படி ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருக்க முடியும் என்ற அடிப்படை கேள்விகூட ஐபியினை நோக்கி கேட்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை!

இது போன்ற “முன்னறிவிப்புகள்” நிகழும் போதெல்லாம், இந்தியன் முஜாஹித்தீனுக்கு கண், காது, மூக்கு வைத்து ஊடகங்கள் எழுத ஆரம்பித்து விடுகின்றன. ஆனால், தொடர் விசாரணை முடிந்து உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்று பளிச்சிட வரும் போது, முன்னர் இந்திய முஜாஹிதீன் என கூவிக்கூவி எழுதியவர்கள் எல்லாம் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளுக்காக முஸ்லிம் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் மும்முரமாகி விடுகிறார்கள்.

ஊடகங்களின் சமூகப் பொறுப்பற்ற இச்செயலுக்கு எதிராக எத்தனை கட்சுக்கள் காட்டுக் கத்தல் கத்தி என்ன பயன்?

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவை – மக்கா மஸ்ஜித் ஆகட்டும், அஜ்மீர் தர்கா ஆகட்டும், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ஆகட்டும், சம்பவ இடத்திலிருந்தே தலைப்புச் செய்திகளிலும் ஃபிளாஷ் நியூஸ்களிலும் பெரும்பாலான ஊடகங்களால் முன் மொழியப்பட்டவை முஸ்லிம்களின் பெயர்களே!

ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையானது, தீரர் கார்கரேயின் கீழ் வந்த பின்னர், மாலேகான் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட சுமார் 16 பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கும் மேலானவை ஹிந்துத்வா பயங்கரவாதிகளால் நிதானமாக, ஆற அமர அமர்ந்து சதிதிட்டம் தீட்டி நடத்தப்பட்டவை என்பது வெட்ட வெளிச்சமானது. [வாசிக்க: http://www.satyamargam.com/timeline-samjotha-express.html, http://en.wikipedia.org/wiki/Saffron_terror மற்றும் http://blog.tehelka.com/facts-of-the-hindutva-terror/)

நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த குண்டுவெடிப்புகளும், அதில் ஹிந்துத்துவாவின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியானதன் பின்னர் நீண்ட காலத்துக்கு நின்றுவிட்டதையும் எப்போதெல்லாம் இந்திய அரசியலில் பாஜக தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படுகிறதோ அல்லது பாஜகவுக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிப்புகள் நடந்து, அடுத்த நிமிடங்களிலேயே சொல்லி வைத்தது போல் ஒரு சில ஃபாசிஸ ஊடகங்களில் மட்டும் முஸ்லிம்கள் அவற்றை நடத்தியதாக செய்திகள் வெளியாகி விடுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். (வாசிக்க: The Rise Of Hindutva Terrorism : http://www.outlookindia.com/article.aspx?265400)

எப்பாடு பட்டாவது மோடியினைத் தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்து, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க பாஜக தயாராகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிலுள்ள சிவசேனா உட்பட பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியே அதனை எதிர்த்து உட்கட்சி போரில் இறங்கியதும், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பீகாரின் நிதீஷ்குமார் கட்சிக் கூட்டணியிலிருந்தே விலகி வெளியேறியதும், இதனைத் தொடர்ந்து பீகார் வந்த மோடி, “நிதீஷ்குமாருக்குத் தக்க பாடம் புகட்டப்படும்!” என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்!)

 சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் இருந்த புத்த கோயிலின் மிக உயரமான கோபுரத்திலும், வெடிக்காத ஓரிரு குண்டுகள் பொருத்தப் பட்டிருந்ததாக காவல்துறை அறிவித்திருந்ததும் குறிப்பிட்டு கவனிக்கத்தக்கது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இச்சம்பவங்களின் பின்னணியில் பலமான அரசியல் சதித் திட்டங்கள் பின்னப்பட்டிருப்பது புலப்படுகிறது. இதனைப் புரிந்து கொள்ள முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றை மாட்ட வேண்டியுள்ளது. எனவே சம்பவங்களுடன் தொடர்பு படுத்தப் பட்ட பர்மா, இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகளையும் சற்று பார்த்து விட்டு வருவோம்

– அபூ ஸாலிஹா

< பகுதி-1  |  பகுதி-2 | பகுதி-3 | இறுதிப்பகுதி >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.