ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுக்குத் தயாராவோம்!

வாங்க, ஐ ஏ எஸ்/ஐ ப்பீ எஸ் படிக்கலாம்
Share this:

ந்திய நாட்டின் உயர்பதவிகள் என்பது முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டு முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதைப் புள்ளி விபரம் பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.

மொத்தம் உள்ள 325 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 10 பேர்கள்தாம் உள்ளனர். அதேபோல் 236 ஐ.பி.எஸ் பதவிகளில் வெறும் ஏழு பேர்கள்தாம் உள்ளனர். 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் கல்லூரிகள்(கலை மற்றும் பொறியியல்) தமிழ் நாட்டில் இருந்தாலும் முஸ்லிம் பட்டதாரி இளைஞர்கள் ஏன் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் பிரதிநித்துவம் பெற முடியவில்லை?

நாட்டின் உயர் பதவியினை முஸ்லிம்கள் நினைத்தால் எட்டமுடியாதா? முஸ்லிம் இளைஞர்களிடம் திறமையில்லையா? இருக்கிறது; அனைத்தும் இருக்கிறது! ஆனால் சரியான வழிகாட்டல் இல்லாததால் திக்குத் தெரியாக் காட்டில் விடப்பட்டவர்கள்போல, திறமையிருந்தும் குறைந்த சம்பளத்தில் இந்தியாவிலோ அல்லது வளைகுடா நாடுகளிலோ முஸ்லிம் பட்டதாரிகள் வேலைக்குச் சென்று விடுகின்றனர். முஸ்லிம் பெரியோர்கள், செல்வந்தர்கள் முஸ்லிம் இளைஞர்கள் பட்டம் பெற்றால் போதும் என்று கல்லூரிகள் ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அவர்களின் வேலை வாய்ப்பிற்கு என்ன வழிகள் என ஆராயத் தவறி விடுகின்றனர். வேலை தேடிக்கொள்வது அவரவர் கடமை என எண்ணுகின்றனர். ஆகவேதான் நாட்டில் பட்டம் பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் 15 சதவீதம் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்கள் என எஸ்.எஸ்.ஓ ஆய்வு சொல்கிறது.

சச்சார் கமிட்டிப் பரிந்துரை:

“வேலை வாய்ப்பில் ஓ.பி.சி என்ற மற்ற பிற்பட்ட சமூகத்தில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; ஏனென்றால் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் தலித்களை விடப் பின்தங்கி உள்ளார்கள்”

நீதிபதி சச்சார் கமிட்டிப் பரிந்துரைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் சொல்கிறார். அந்த சச்சார் கமிட்டிப் பரிந்துரை, “வேலை வாய்ப்பில் ஓ.பி.சி என்ற மற்ற பிற்பட்ட சமூகத்தில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; ஏனென்றால் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் தலித்களை விடப் பின்தங்கி உள்ளார்கள்” என்று கூறியுள்ளது. தலித் பட்டதாரி இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் அதிக இடங்கள் பிடித்து சமுதாயத்தில் தங்கெளுக்கென்று மதிப்பான இடத்தினைப் பிடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான நீதிபதி ரங்கனாத் மிஸ்ரா அறிக்கைகூட, “முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் வேலை வாய்ப்பினைக் கொடுக்க” சிபாரிசு செய்துள்ளது. இப்பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமானால், நாட்டின் உயர்பதவிகளில் முஸ்லிம்களும் பங்காற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே படித்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களை நாட்டின் உயர்பதவிக்குத் தயார் படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். எப்போதுமே நமது குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். சென்ற ஜனவரி 26ஆம் தேதி வெளியான உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி ஐ.பி.எஸ்ஸில் அதிக இடங்கள் காலியாக இருப்பதால், வருடத்திற்கு 70 பதவிகள் வீதம் அடுத்த 10 வருடத்திற்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்தெடுக்கப்பட இருப்பதாக அறிவித்திருப்பதை முஸ்லிம்கள் தங்களுக்கான நல்லதொரு வாய்ப்பாகக் கருதி தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

என் வயதொத்தவர்கள் கல்லூரியில் படித்த காலத்தில், அரசு சார்பில் ஐ.ஏ.எஸ் கோச்சிங் மையங்கள் இருந்திருக்கவில்லை. சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத வயது வரம்பும் 24 ஆக இருந்தது. நான் சென்னைப் புதுக்கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தபோது ராயப்பேட்டை ஸ்வாக்கத் ஹோட்டல் அருகில் இருந்த ஐயர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சென்று விசாரித்தபோது, “எம்.ஏ படித்து விட்டு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். அவர்கள் கூறியபடி எம்.ஏ படித்து விட்டுச் சென்ற போது வயது உச்சவரம்பைத் தாண்டி விட்டது. ஆகவே தமிழ்நாடு அரசு நடத்திய தேர்வில் டி.எஸ்.பியாகி, அதிலிருந்து கொண்டேதான் ஐ.பி.எஸ்ஸை அடைய முடிந்தது. ஆனால் இன்று, சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு வரும் ஆகஸ்ட் முதல் தேதியன்று 21 வயதைக் கடந்து 30 வயதிற்கு மேல் தாண்டாது இருந்தால் போதும். அத்தோடு ஐ.எஸ்.எஸ் தேர்வு எழுத ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.

சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கான பாடங்கள் முதுகலைப் பட்டப் படிப்பளவிற்கு இருக்கும். அதற்காக பயப்பட வேண்டியதில்லை. தொடர் பயிற்சிகள் மூலம் தேர்வுக்கு எளிதாக தயார் படுத்திக் கொள்ள முடியும். சிவில் சர்வீஸஸ் தேர்வுகள் எழுதுவதற்காகப் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் பல உள்ளன.

அரசே இதற்கான பயிற்சியினை அண்ணாநகரிலும் மனிதநேய மையம் சைதாப்பேட்டையிலும் தந்தை பெரியார் அறக்கட்டளை சார்பில் சென்னை வெப்பேரியிலும் சென்னை வண்டலூரிலுள்ள பி.எஸ்.ஏ பொறியியல் கல்லூரியிலும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும் நடத்துகிறது. முஸ்லிம்கள் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு ஏற்ற சிறந்த பயிற்சி மையங்களை இஸ்லாமிய அமைப்புகள் அதிகமாக அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் இறுதி நிலைத் தேர்வுகளுக்கு டெல்லி சென்றுதான் பயிற்சி எடுக்க வேண்டுமென்ற நிலை இருக்காது.

ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுகள் மூன்று நிலைகளாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படுகின்றன. அவை:

1) முதல்நிலைத் தேர்வு:

இத்தேர்வுக்கான அழைப்பு ஒவ்வொரு வருடமும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் அனைத்து முன்னிலை ஆங்கில-தமிழ் பத்திரிகைகளில் வெளியாகும். இரண்டு தாள்களில்(பாடங்கள்) தேர்வு இருக்கும்.

முதல் தாள் பொதுப் பாடங்கள் சம்பந்தப் பட்டது. அதற்கான மதிப்பெண் 150 ஆகும்.

இரண்டாவது தாளுக்குரிய பாடம் விருப்பப் பாடங்கள் பட்டியலிருந்து தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதற்கு 300 மதிப்பெண்கள் தரப்படும். பெரும்பாலும் விருப்பப் பாடங்கள் எடுக்கும்போது, அது பிரதான தேர்வுக்கு உதவும் வகையில் எடுக்க வேண்டும். விருப்பப் பாடப் பட்டியல்கள் கீழ் வருமாறு:

  • விவசாயம்

  • அனிமல் ஹஸ்பன்ட்ரி மற்றும் வெட்னெரரி சயின்ஸ்

  • தாவரவியல்

  • வேதியல்

  • சிவில் இன்ஜினீரியங்

  • வணிகம்

  • பொருளாதாரம்

  • எலக்ட்ரிகல் இன்ஜினீரியங்

  • புவியியல்

  • ஜியாலஜி

  • இந்திய வரலாறு

  • சட்டம்

  • கணிதம்

  • மெக்கானிகல் இன்ஜினீரியங்

  • மருத்துவம்

  • தத்துவம்

  • பௌதீகம்

  • பொது நிர்வாகம்

  • சமூகவியல்

  • புள்ளிவிரபங்கள்

  • விலங்கியல்

மேற்கூறியவைகளில் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தேர்வு செய்தால், அது இரண்டாவது நிலையான பிரதான தேர்வுக்கு உதவும்.

2) இரண்டாம் நிலை – பிரதான – தேர்வு:

ஆரம்ப கட்ட முதல் நிலைத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்கள் பிரதான தேர்வுக்கு அழைக்கப் படுவார்கள். அந்தத் தேர்வுகள் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும். இத்தேர்வு ஒன்பது தாள்கள்(பாடங்கள்) இருபது நாட்களுக்குள் நடைபெறும். பிரதான தேர்வுக்குரிய தாள்கள் குறித்த விவரம் பின் வருமாறு:

முதல்தாள்(கட்டாயம்): அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளிலிருந்து ஒரு மொழியைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவற்றுள் தமிழ் மொழியும் உண்டு. இத்தாளுக்குரிய மொத்த மதிப்பெண்கள் 300.

இரண்டாவது தாள்(கட்டாயம்): ஆங்கிலம். அதன் மதிப்பெண் 300.

மூன்றாவது தாள்: கட்டுரை. அதன் மதிப்பெண் 200.

நான்காவது தாள் மற்றும் ஐந்தாவது தாள்: பொதுப்பாடங்கள். அவற்றுக்கான மதிப்பெண்கள் ஒவ்வொன்றிற்கும் 300.

ஆறாவது, ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது தாள்கள்: விருப்பப்பாடங்கள் இரண்டில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு தாள்கள் இருக்கும். அவற்றுக்குத் தலா 300 மதிப்பெண்கள்.

இவ்வாறு சுமார் 20 நாள்களுக்குள் நடத்தப்படும் இந்த ஒன்பது பாடங்களுக்குரிய தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர், மூன்றாம் நிலையான நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்.

இப்பிரதான தேர்வின் நோக்கமே, மாணவர்களின் கல்வித் தகுதியை அறிவதற்காக நடத்தப் படுவதாகும். மட்டுமல்ல, அவர் தேர்வில் தான் படித்த பாடங்களை எவ்வாறு கோர்வையாக எழுதுகிறார் என்பதும் இத்தேர்வில் ஆய்வு செய்யப்படும். கட்டாயப் பாடங்களான முதல் இரண்டு தாள்களில் 35 சதவீத மதிப்பெண்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். கட்டாயப் பாடங்களில் கட்டுரை, மொழி பெயர்ப்பு, சுருக்கி எழுதல், வாக்கியம் அமைத்தல், மொழி மரபுச் சொற்றொடர்கள், பழமொழிகள், பொருள் அர்த்தங்கள் ஆகியவை அடங்கியிருக்கும். இவ்விருமொழித் தேர்வுகளுக்கு ஆயத்தமாவதில், ஒவ்வொன்றையும் எழுதிப் பழகிப் படிப்பது அவசியம்.

மூன்றாவது தாளான கட்டுரைத் தேர்வில் சரியான தலைப்பினை எடுத்து உண்மையான-தெளிவான கருத்துகளுடன் முழு நீளக் கட்டுரை எழுத வேண்டும். தேர்வின் ஆரம்பத்தில் முதல் 5 நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இரண்டு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அதில் மிக நன்றாகத் தெரிந்த ஒரு தலைப்பினை நிலை நிறுத்தி எழுதத் துவங்க வேண்டும். ஆரம்பம்-கரு-முடிவுரை என்று பிரித்துக் கொள்வது நல்லது. எழுதிய கட்டுரையினைத் திரும்பப் படிக்க, தேர்வின் இறுதியில் சிறிது நேரத்தினை வைத்துக் கொள்ள வேண்டும்.

நான்காவது மற்றும் ஐந்தாவது பாடங்களான பொதுப்பாடங்களில், பாடம் ஒன்றில் இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு, சமகால நிகழ்வுகள், சமூகச் செய்திகள் சம்பந்தப்பட்டதும் இரண்டாவது பாடம் இந்தியா மற்றும் உலகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், இந்தியப் பொருளாதாரம், சர்வதேச சம்பந்தமான செயல்கள், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி, தொலைத் தொடர்பு, புள்ளி விபர ஆய்வு ஆகியவை அடங்கியிருக்கும்.

இப்பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி நிலையான நேர்முகத் தேர்விற்கு டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள்.

3) நேர்முகத் தேர்வு.

நேர்முகத் தேர்வுக்கு ஆயத்தமாகும் முன்பு அது சம்பந்தமான புத்தகங்கள், பீரியாடிகல்ஸ் ஆகியவைகளைத் தேடிச் சேகரிக்க  வேண்டும். அல்லது அவை கிடைக்கும் நூலகங்கள், பழைய புத்தகக் கடைகள் ஆகியவற்றை அணுகி, புத்தகங்களைச் சேகரித்து குறிப்புகள் எடுக்க வேண்டும். பொது அறிவிற்கான புத்தகங்களான காம்படிசன் மாஸ்டர், காம்படிசன் ரிவ்யூ, காம்படிசன் சக்சஸ், கேரியர் டைஜஸ்ட் போன்ற வாராந்திர, மாத ஆங்கில இதழ்களை வாங்கிப் படிக்க வேண்டும். ஆங்கில தினப் பத்திரிக்கையான ஹிந்து படித்தால் பொது அறிவிற்கான தகவல்கள், கட்டுரைக்கான தகவல்கள் அநேகம் கிடைக்கும். ஆங்கிலச் செய்திகளை வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் கேட்க வேண்டும். மலையாள மனோரமா ஆண்டுப் புத்தகம் அரிய பொதுத் தகவல்களை வழங்குகிறது. சென்னையில் கன்னிமாரா, அண்ணாசாலையிலுள்ள பாவாணர் நூலகம், மாவட்டங்களில் உள்ள நூலகங்கள் ஆகியவற்றை நேர்முகத் தேர்விற்கான ஆயத்தப்படுத்தலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போது தூய ஆடைகளை அணிய வேண்டும். ஒரு முறை வி.ஜி.பன்னீர்தாஸ், தான் சாதாரண கூலித் தொழிலாளியாக சென்னை வந்து இன்று பெரிய கோடீஸ்வரராகி பிரபலமானதற்குக் காரணம், அவர் எப்போதும் பிறரைக் கவரக்கூடிய ஆடை, அதாவது கோட்-சூட் அணிவதை விடுவதில்லை எனக் கூறியிருந்தார். ஆகவேதான் பழங்காலத்தில் “ஆடைபாதி; ஆள்பாதி” என்பார்கள்.

தேர்வுக்குழுவினர் கேட்கும் கேள்விக்கு நேரான, தெரிந்த பதிலைத் தயங்காமல் அவர்களை நேரடியாகப் பார்த்துச் சொல்ல வேண்டும். தெரியவில்லை என்றால் அக்கேள்விக்கு விடை தெரியவில்லை என்பதையும் தயங்காமல் சொல்வது, தெரியாத கேள்விகளுக்கான மதிப்பெண் இழப்பைத் தவிர்க்க உதவும். நேர்முகத் தேர்வில் சரளமாகவும் தயக்கமின்றி, சொல்ல வரும் கருத்தை நேரடியாகச் சொல்வதுமே பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே, தனக்குத் தெரியாததைத் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள வேண்டும்.

பதட்டப்படாமல், “நாம் படித்தவர்கள் – நாட்டின் மிக உயர்ந்த சேவைப் பணிகளுள் ஒன்றுக்குத் தேர்வு செய்யப்பட போகிறோம்” என்று மனதில் உறுதியான எண்ணம் கொள்ள வேண்டும். எந்தச் சமயத்திலும் பணத்திலோ, படிப்பிலோ, சமூக அந்தஸ்திலோ தாழ்வு மனப்பான்மை நம்மை ஆட்கொண்டு விடக்கூடாது. “தைரியம் புருஷ லட்சணம்” என்பார்கள். ஆகவே எந்த நேரத்திலும் தைரியத்தினைக் கைவிடக்கூடாது.

உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும், அமெரிக்கா, இந்தியாவில் அவுட் சோர்ஸிங்கிற்குக் கட்டுப்பாடு விதித்து இந்திய இன்ஜினீரியங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இழக்கும் பயம் இருப்பதாலும், பொறியியல் போன்ற உயர் தொழில்நுட்பப் பட்டங்களுக்குப் பயிலும் முஸ்லிம்கள் மிக குறைந்த சம்பளத்தில் இந்திய நிறுவனங்களில் அல்லது வளைகுடா நாடுகளில் வேலை தேடி அலைவதை விட, சம்பளம் அதிகமுள்ள, சமூகத்தில் மரியாதையுள்ள, வேலை உத்திரவாதமுள்ள, சலுகைகள், ஓய்வூதியம் ஆகிய உத்திரவாதத்துடன் கூடிய, எல்லாவற்றையும் விட மேலாக மக்களுக்கு மிகச் சிறந்த சேவையாற்றுவதற்கு வாய்ப்பான ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை எழுதி அந்தப் பதவிகளை அடையும் குறிக்கோளை இனிமேலாவது வளர்த்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.

முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் மூன்றரை சதவீதம் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு அளித்துள்ளது. மத்தியில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தேர்வில் தேர்வு பெற முடியாதவர்கள், மனந்தளராது அதற்கு இணையாகத் தமிழகத்தில் டெப்டி கலெக்டர்-டி.எஸ்.பி ஆகியவற்றிற்கு தமிழ்நாடு தேர்வாணையும் நடத்தும் நேரடி தேர்விற்கான குரூப் ஒன்று பரீட்சை எழுதி வெற்றி பெற முயற்சிக்கலாம்.

மனிதன் ஒரு லட்சியத்தினை அடைய வேண்டுமென்றால், முதலில் அது தன்னால் சாத்தியமாகக் கூடியதே என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். எப்படி பிறந்த குழந்தைக்கு அது வளர சத்துணவு கொடுக்கிறோமோ அதேபோன்று அந்த இலட்சியத்தை அடைய, கடின உழைப்பை மூலதனமாக வழங்க வேண்டும். ஒரு முறை தேர்வில் தோல்வியடைந்தால் மனந்தளரக் கூடாது; நான் மூன்று முறை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத் தேர்வில்  மூன்றாவது முறையாகத்தான் தேர்வு பெற்றேன். மூன்றாவது படிக்கட்டில் ஏறிய குழந்தை அப்படிக்கட்டில் தோல்வியடைந்தாலும், இரண்டாவது படிக்கட்டில் விழுவதில்லை என்பது முக்கியமானது. மூன்றாவது படிக்கட்டில் விழுந்து விட்டதால், நான்காவது படிக்கட்டில் ஏற முடியாது என்று மனதைத் தளர விடாமல், மீண்டும் மூன்றாவது படிக்கட்டிலிருந்து நான்காவது படிக்கட்டுக்குப் போக குழந்தை கடுமையாக முயற்சி எடுக்கும். அதேபோன்றுதான் தேர்வில் ஒரு முறை தோல்வி ஏற்பட்டால் சிறு குழந்தையின் படிகட்டு உதாரணத்தையும் மிகக் கடுமையாக முயன்று கூடு கட்டும் எறும்பு, சிலந்தி போன்றவற்றையும் மனதில் நிறுத்தி, தொடர்ந்து தான் கொண்ட குறிக்கோளை அடைய முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஆகவே, சொந்தங்களே வாருங்கள்! உயர் இலட்சியம் வைப்போம்! விடா முயற்சியுடன் இலட்சியம் வென்று சமுதாயத்தில் வீறு நடை போடுவோம்!

ஆக்கம் : முனைவர் ஏ.பீ. முகம்மது அலீ, பி.எச்.டி. ஐ.ப்பீ.எஸ் (ஓய்வு)

 

தொடர்புடைய நமது முந்தைய பதிவுகள்:

முஸ்லிம்களுக்கு ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி மையம்

ஓர் ஆலிம் ஐ.ஏ.எஸ் ஆகிறார்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.