எனில் நானும் தீவிரவாதி தான் – வி.ஆர். கிருஷ்ணா அய்யர்!

Share this:

கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு, முஹம்மது நபி(ஸல்) அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் கல்லூரி வினாத்தாள் ஒன்றில் கேள்வி வெளியாகியிருந்தது. இதனால் கோபம் கொண்டச் சிலர் விஷமத்தனமாகக் கேள்விகளைத் தயாரித்த ஆசிரியர் ஜோஸஃப் என்பவரின் கை மணிக்கட்டை, துண்டித்தனர். இதனைத் தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையில் சிலரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்று அறிவித்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அரசு இயந்திரங்களும் அரசியல் கட்சிகளும் நடத்திய “தீவிரவாத” அச்சுறுத்தல் நாடகங்கள் ஆச்சரியமானவை. ஒரு ஆசிரியரின் கையை வெட்டியது மிகவும் அநாகரீகமான, வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அச் சம்பவத்தினைப் போன்றே, கேரள மாநிலத்தில் சமீப காலங்களாக நடந்து வரும் இஸ்லாமோஃபோபியாவினால் எழுந்த இஸ்லாமிய விரோத கருத்துருவாக்கத் தாக்குதல்கள் ஏராளம். இதனை ஃபாஸிஸ அமைப்புகளுடன் இணைந்து கம்யூனிஸ, காங்கிரஸ் வட்டங்களும் செய்து வருகின்றன என்பதே அதிர்ச்சியில் உறைய வைக்கும் தகவல்.

இப் பிரச்சனைக்காகக் காத்திருந்தது போல், ஆசிரியரின் கை வெட்டப்பட்டச் சம்பவமும் அதில் சிலரும் கைது செய்யப்பட்ட உடனேயே, கேரளா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகள் உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணனின் கீழ் இருக்கும் காவல்துறையால் சோதனையிடப்பட்டு ஆயுதங்கள், தீவிரவாத புத்தகங்கள், சிடிக்கள் கைக்கப்பற்றப்பட்டு விட்டதாக அவசரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தவிருக்கும் ஆகஸ்ட் சுதந்திர தின பேரணி அணிவகுப்புக்குப் பல மாவட்டங்களில் தடை போடப்பட்டது. இதற்கும் ஒரு படிமேலாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்ய நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

ஒருவரின் கை வெட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவலாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் அலுவலகங்கள் சோதனையிடப்படுவதும் அக்கட்சியைத் தடை செய்ய வழக்குத் தொடுக்கப்படுவதும் ஆச்சரியகரமானது என்றால், பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பெயர் போன கம்யூனிஸ்டுகளின் ஆட்சியின் கீழ் இச்சம்பவம் நடந்தது என்பது அதை விட ஆச்சரியம்!

கேரள மாநிலத்தில், குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.எஸ் இடையிலான தாக்குதல்களில் எண்ணற்றோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூட்டை மூட்டையாக வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் இரு தரப்பினரிடமிருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும் இன்றுவரை, ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்டுகளின் அலுவலகங்கள் சோதனையிடப்படவோ வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதற்காகவும் படுகொலைகள் புரிந்ததற்காகவும் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்படவோ இல்லை. இவ்வளவுக்கும், இந்தக் கை வெட்டப்பட்ட வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது. இதுவரை அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் எத்தனையோ இருந்தும் இதுவரை அவற்றை அடிப்படையாக வைத்து அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய பயங்கரவாதச் செயல்களால் தண்டனை பெற்று கேரள மாநில சிறைச்சாலைகளில் கிடக்கும் ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களோ எண்ணற்றோர்! ஆனால், பயங்கரவாதச் செயலுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிரான தீர்ப்பு எதுவும் இதுவரையில் சொல்லப்பட்டதில்லை.

கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்த இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முடக்கும் வேலைகளில் கம்யூனிஸ அரசு உடன் செயல்படத் துவங்கியுள்ளது. கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்விஷயத்தில் தற்போது தன் திருவாய் மலர்ந்துள்ளார். உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன், “மனித உரிமைகள் அமைப்புகள் கண்காணிக்கப்பட வேண்டும்” எனவும் “அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை” என்றும் மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இதற்கிடையில், எதிரும் புதிருமான கேரள முஜாஹித் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகளும் முஸ்லிம் லீக்கும் இணைந்து இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற பெயரில், “ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” ஆகிய இரு அமைப்புகளையும் விலக்கி வைத்து கூட்டமொன்றை நடத்தி, அதில் இந்த இரு அமைப்புகளும் தீவிரவாத அமைப்புகள் என்றும் இவற்றைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஃபாஸிஸத்தின் சதிக்குக் கம்யூனிஸ, காங்கிரஸ் கட்சிகள் தான் பலியாகி விட்டன என்றால், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் பலியாக நாங்களும் தயார் என முந்திக்கொண்டு அறிவிப்பது நகைப்புக்கு உரியதாக உள்ளது. தங்கள் அமைப்பைப் பார்த்து யாரும் தீவிரவாத முத்திரை குத்தி விடக்கூடாதே என்று பதைபதைக்கும் இக்கட்சிகள், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அது தொடர்பாக இரு பெரும் அமைப்புகளைப் பலியிடுவது எவ்வகையில் சரி என்று சற்றுச் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும்.

இங்கே இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜமாஅத்தே இஸ்லாமி, இந்தியா முழுவதும் செயல்படும் ஒரு மூத்த இஸ்லாமிய அமைப்பு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோ சமீபத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள மூன்று அமைப்புகளை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களில் செயல்படும் ஒத்தக்கருத்துள்ள அமைப்புகளை ஒன்றிணைத்து முழுவீச்சில் தேசிய அரசியலில் கால் பதிக்கும் முகமாக, சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்து, அதன் ஆரம்ப விழாவிலேயே லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, முஸ்லிம் ஓட்டுகளைக் காலம் காலமாக ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம் லீக் அடக்கமுள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்குக் கிலியை ஏற்படுத்தி முழுவீச்சில் செயல்பாட்டில் இருக்கும் அமைப்பாகும்.

எனவே, இதன் உறுப்பினர்களின் செயல்வேகம், அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஃபாஸிஸவாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது எனில், அரசியல் கட்சி ஆரம்பித்தப் பிறகு மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைப்பதில் ஆச்சரியமில்லை.

ஒருவரின் கை வெட்டப்பட்டச் சம்பவத்துக்குக் கட்சி அலுவலகங்கள் சோதனை, கட்சி செயல்பாடுகளுக்குத் தடை, கட்சி மீதான வழக்குகள் என அல்லோல கல்லோலப்படும் இவ்வேளையில், இந்நாட்டின் மகாத்மா எனப் போற்றப்படும் காந்தியடிகளையே படுகொலை செய்த ஃபாஸிஸ ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டில் சுந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதும் மாலேகான் முதல் தென்காசி வரை நாட்டில் முஸ்லிம்களின் மீது பழிசுமத்தி நடத்தப்பட்ட அநேக குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதக் கைகள் தான் என்பது இன்று தெளிவாகிக் கொண்டே வரும் நிலையில் அதன் அலுவலகங்கள் சோதனையிடப்படவோ, அதன் செயல்பாடுகளுக்குத் தடையிடப்படவோ அல்லது அதனைத் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படவோ இல்லை என்பதும் அதற்காக இந்த முஸ்லிம் லீக், முஜாஹித், சுன்னத் வல் ஜமாஅத் முதலான இயக்கங்கள் உடனடியாக முஸ்லிம் அமைப்புகளை ஒன்று கூட்டித் தீர்மானங்களும் போராட்டங்களும் வழக்குகளும் தொடுக்க முன்வரவில்லை என்பதும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாகும்.

இந்நிலையில், அனைத்து மனித உரிமை அமைப்புகளின் மீதும் புழுதி வாரி தூற்றியுள்ள கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கும், தொட்டதற்கெல்லாம் தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தின் பின்னணியில் தம்மைத் தம் அயோக்கியத்தனங்களை மறைந்து கொள்ளும் உண்மையான எதிரிகளுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசரும் பிரபல மனித உரிமை போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யர்(http://en.wikipedia.org/wiki/V._R._Krishna_Iyer), உண்மையான தீவிரவாதிகள் யார்? என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறார்.

னித உரிமை கழகங்கள் மற்றும் பொது சமூக அமைப்புகள் மீது கவனத்துடன் குற்றச்சாட்டுகளை வீசவும் கட்டுப்படுத்த முயற்சிக்கவும் வேண்டும். அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினால், ஆங்கிலேயர்களின் கீழான அடிமை ஆட்சியிலும் அது தான் நடந்தது.

ஏற்கெனவே இந்நாட்டில், மாவோயிஸ்டுகளையும் நக்ஸலைட்டுகளையும் சந்தேகிக்கின்றோம். முதலாளித்துவ நாடுகள் மார்க்சிஸவாதிகளைச் சந்தேகிக்கின்றனர். மார்க்சிஸ்டுகளைச் சந்தேகிப்பது சரி என்பதா? சரியல்ல! இப்படி சந்தேகிக்க ஆரம்பித்தால், பொதுவாக எல்லா கட்சி, அமைப்புகளையும் சந்தேகிக்க வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்லும்.

மனித உரிமை அமைப்புகளை ஒருபோதும் சந்தேகப்படக்கூடாது என்பது தான் என் கருத்து. அவ்வாறெனில் என்னையும் சந்தேகப்பட வேண்டும். காரணம், நானும் மனித உரிமைகளுக்காகப் பேசுகிறேன். கடவுளே! உச்ச நீதிமன்றத்தைச் சந்தேகிக்க வேண்டும். காரணம், மனித உரிமைகளுக்காக மிக அதிகம் செயல்படுவது உச்ச நீதிமன்றமாகும்.

மனித உரிமைகள் மீறும் அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் நிறுத்துவது உச்ச நீதிமன்றம் தான். அவ்வாறிருக்கும் போது உச்ச நீதிமன்றம் ஒரு மனித உரிமை அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அரசியலமைப்புச் சட்டத்தையே சந்தேகிக்க வேண்டும்! ஏனெனில், மனித உரிமைகளின் அடிப்படையே அரசியலமைப்புச் சட்டமல்லவா? அரசியலமைப்புச் சட்டத்தைச் சந்தேகப்பட்டால், நீதிமன்றங்களைச் சந்தேகிக்க வேண்டும். அமைச்சர்களையும் சந்தேகப்பட வேண்டும். ஆகவே, இப்படி மொத்தமாக மனித உரிமை அமைப்புகளைக் குறித்து கூறுவது சரியல்ல.

தீவிரவாதம், தீவிரவாதம் என்று கூறுகிறார்களல்லவா! மனிதன் எப்படி தீவிரவாதியாகிறான்? எதுவுமே செய்யாமல் ஹாயாக ஒரு மனிதர் பால், பாயசம் சாப்பிட்டுச் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்க, மற்றொரு மனிதர் பசி, பட்டினியில் வாடுகின்றார். அந்நேரம் உணவு கிடைக்காமல் துன்பப்படும் அவன், ஹாயாக உட்கார்ந்து சுகம் அனுபவித்துக் கொண்டிருப்பவனின் கண்ணில் தீவிரவாதியாகிறான். இது சரியல்ல!

இந்நாட்டில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களிலிருந்து தான் தீவிரவாதிகளும் நக்ஸலைட்டுகளும் மாவோயிஸ்டுகளும் உருவாகின்றனர். மனித உரிமைகள் மறுக்கப்படுவதன் மூலம் இவர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்நாட்டில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் குசேலர்கள் தான் தீவிரவாதிகளாகவும் நக்ஸலைட்டுகளாகவும் மாறுகின்றனர். இது துப்பாக்கியின் மூலமாகவோ அரசின் கட்டுப்பாடுகளின் மூலமாகவோ நிற்கப்போவதில்லை! மீண்டும் மீண்டும் தீவிரவாதி என்ற சொற்பிரயோகம் கொண்டு பிரசங்கங்கள் நடத்துவது மூலம் எதுவும் நடக்கப்போவதில்லை!

உண்மையில் தேவையானது நீதி நடப்பாக்குதலாகும். மனித உரிமை என்று கூறினால், மனிதனுக்கு வாழ்வதற்கான உரிமை என்று அர்த்தம். அதாவது, கவுரவமாக வாழ்வதற்கான உரிமை! கவுரவமாக வாழவேண்டுமெனில், முதலில் உணவு கிடைக்கவேண்டும். நல்ல நிலையில் சுவாசிப்பதற்கான காற்று கூட இந்நாட்டில் இல்லை. காற்று அசுத்தமாகி கிடக்கிறது. தண்ணீர் அசுத்தமடைந்து கிடக்கிறது. உணவு அசுத்தமடைந்துள்ளது. இந்நாட்டில் கிடைக்கும் அநேக அத்தியாவசிய பொருட்கள் அசுத்தமானவைகளே!

இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களை அசுத்தமடையச் செய்யும் நபர்களைத் தான் நாம் பயப்படவேண்டும்; கவனமாக கண்காணிக்க வேண்டும்! அதல்லாமல், எல்லோரும் தீவிரவாதிகள், கவனமாக இருக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கூறுவது சரியல்ல! முக்கியமாக மார்க்சிஸ்ட் கட்சியிலுள்ள ஒரு தலைவர் அவ்வாறு கூறக்கூடாது!

இயேசு தேவன் கூறியது, “பக்கத்து வீட்டுக்காரனை நேசியுங்கள்” என்று கூறினாரென்றால், “பக்கத்து வீட்டுக்காரனைப் பயப்பட வேண்டும்; கவனமாக இருக்க வேண்டும்; தீவிரவாதியாக இருக்கலாம்” என்று அரசியல் தலைவர்கள் இப்போது (மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரும் கேரள உள்துறை அமைச்சருமான கோடியேரி பாலகிருஷ்ணன்) கூறுகின்றனர். இதொன்றும் சரியல்ல!

ஆசிரியரின் கையை வெட்டியது போன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கக் கூடாததாகும். அச்சம்பவத்தில் அரசை விடவும் அமைச்சர்களை விடவும் கடுமையாக நான் அதனை எதிர்த்திருந்தேன். நம்நாட்டில் பண்பாடு மிருகத்தனமாகும் விதத்தில் செத்துப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் நம் நாட்டின் அரசியலாகும். அதனால் தான், மார்க்சிஸ அரசியலைக் காங்கிரஸ்காரர்கள் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் அரசியலை மார்க்சிஸ்டுகள் எதிர்க்கின்றனர். இந்த இரண்டு அரசியலையும் பாஜகவினர் எதிர்க்கின்றனர். இந்நாட்டிற்குத் துரோகம் அத்தனையும் இழைப்பது அரசியலாகும்(இதனை உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் ஏற்றுக்கொள்வாரா?).

இந்த ஆசிரியரின் கையை வெட்டியச் சம்பவத்திற்கான காரணத்தைஉண்மையாக விசாரித்தால், அதன் பின்னணியில் அரசியல் தான் காரணமாக அமைந்துள்ளதைக் கண்டுகொள்ளலாம். ஆனால், தீவிரவாதத்தின் பெயரில் அம்மனிதர் கையும் காலும் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் கிடக்கின்றார். எப்படியாவது அவரைக் காப்பாற்ற வேண்டும் என மருத்துவமனைக்கு அழைத்துக் கூறினேன்.

ஜமாஅத்தே இஸ்லாமி தீவிரவாதம் எனில் முஸ்லிம் லீக்கும் தீவிரவாதம் தான். ஜவஹர்லால் நேரு லீகை ஒருமுறை செத்துப்போன குதிரை என்று அழைத்தார். முஸ்லிம் லீக் தீவிரவாதம் என்று பலரும் கூறுவர். முஸ்லிம் லீக், ஹிந்துத்துவ அமைப்புகளைப் பற்றி தீவிரவாதிகள் என்று கூறும்.

ஜமாஅத்தே இஸ்லாமி தலைமை வகிக்கும் எஃப்.டி.சி.ஐ, நான் அங்கத்துவம் வகிக்கும் அமைப்பாகும். நான் அறிந்தவரை எஃப்.டி.சி.ஐ மக்களிடையே இணக்கமும் பரஸ்பர அன்னியோன்னியமும் உண்டாக்கவே முயற்சி செய்கிறது. மதங்களுக்கு இடையில் பகைமைக்குப் பதிலாக, சகிப்புத்தன்மையும் இணக்கத்தையும் உண்டாக்கவே முயல்கின்றது. ஆகையால் அது போன்ற அமைப்புகள் இந்நாட்டிற்குத் தேவையாதே. அது ஆரோக்கியமாக மக்களிடையே செயல்படும் அமைப்பாகும்.

வெறுமனே குற்றம் சுமத்தி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது அல்ல நமக்குத் தேவை. தீவிரவாத குற்றச்சாட்டுகள் கொண்டு ஒரு நன்மையும் ஆகப்போவதில்லை. அதற்கு மாறாக, நான் கூறவருவது எஃப்.டி.சி.ஐயுடனும் மற்ற அமைப்புகளுடனும் நல்லமுறையிலான அணுகுமுறை வேண்டும் என்பதே! இது போன்ற சொற்பிரயோகமல்ல நமக்குத் தேவை! நல்லது நடப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதே நமக்குத் தேவை!

விலையேற்றத்தை உருவாக்குபவர்களே தீவிரவாதிகள்! மக்களின் இரத்தத்தை உறிந்துக் குடிக்கும் விதத்தில் விலை ஏறுகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எதனால் அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை? ஆங்கிலேயர்கள் கூட, முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டங்களில் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். (அவ்வளவு எமர்ஜென்சியான காலக்கட்டத்திலேயே விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனில், வளர்ச்சியடைந்த இக்காலக்கட்டத்தில் அதற்கு இந்த அரசாங்கங்களால் ஏன் முடியவில்லை?). இவர்களோ, விலையேற்றத்துக்கு எதிராக அசைந்து கொடுக்கமாட்டேன்கிறார்கள். 2000 ரூபாய்க்கான மருந்து 20000 ரூபாய்க்கு விற்கும் போது, நம் அமைச்சர்கள் தீவிரவாதம், தீவிரவாதம் என்று கூறித் தப்பமுயற்சிக்கின்றனர். அதொன்றும் வெற்றிபெறப்போவதில்லை! மக்கள் இக்கபட நாடகத்தைக் கண்டுகொள்வர். இது போன்ற சொற்களைக் கவனமாக பிரயோகிக்கவேண்டும்!

கட்சி அரசியல் தான் இந்நாட்டின் சாபக்கேடு! கட்சி அரசியல் கொண்டு எல்லோரையும் தீவிரவாதிகளாக்குகின்றனர். மக்கள் இப்போது அதிருப்தியில் உள்ளனர். எது பேசினாலும் எதைப் பார்த்தாலும் அதில் அரசியலைக் கொண்டு வருகின்றனர். தண்ணீர் இல்லை என்று கூறினால், அது அரசியலாகும். கோக்கோ கோலா அரசியலானது. குளமும் மணலும் எல்லாமே அரசியலால் அசுத்தமாகி விட்டது. உணவுக்காக எலுமிச்சையோ தேனீர் பொடியோ கூட வாங்கமுடியவில்லை. எல்லாமே அசுத்தமாகியிருக்கின்றது. ஆரோக்கியமான வகையில் எல்லோரையும் ஒன்றிணைத்துக் கொண்டு சில பொது வேலைகள் செய்ய வேண்டியதுண்டு. என்றால் மட்டுமே வாழ்வதற்கான உரிமை யதார்த்தமாகும்!

(நன்றி: முஹ்ஸின் பராரி, ப்ரபோதனம் – 7.8.2010)


ஆக்கம் : அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.