இருதய மாற்றுப் பாதை சிகிச்சை!

Share this:

பிரபல மருத்துவரும், ஸைன்ஸ் அண்ட் ஆர்ட் ஆஃப் லிவிங் (SAAOL) என்ற பெயரில் இதய சிகிச்சைக்கான நிகழ்ச்சிகளின் நிர்வாக இயக்குனருமான Dr. Bimal Chhajer அவர்கள் எழுதிய Natural Bypass Theraphy என்ற அரிய ஆக்கத்தினை தமிழில் வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம் – சத்தியமார்க்கம்.காம்

கருப் பொருள் : இறைவன் நமது இருதயத்தில் ஆயிரக்கணக்கான தமனிக்குழாய்(Arteries)களை வழங்கியுள்ளான். இருதயத்திலிருந்து பிரியும் தலையாய மூன்று தமனிகள் பத்து கிளைகளாகப் பிரியத் தொடங்கி, அந்தப் பத்துக் கிளைத்தமனிக் குழாய்கள் நூறு கிளைகளாகவும் அந்த நூறு கிளைகள் பிரிந்து-பிரிந்து ஆயிரக்கணக்கான தமனிக் கிளைக் குழாய்களாக நம் உடலில் படர்ந்து வியாபிக்கின்றன. இந்தப் பல்லாயிரக் கணக்கான தமனிக் கிளைக்குழாய்கள் மயிரிழையை ஒத்த நுண்ணிய இழைகள் எனப்படுகின்றன; சுருக்கமாக இவற்றை தந்துகிகள் (Capillary) என அழைப்போம்.

இந்தத் தந்துகிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதால் இரத்தத்தை இருதயத்திற்குச் செலுத்தவும் திரும்பப் பெறவும் தக்க இருவழி ஓடுபாதைகள் போன்று அமைந்திருக்கின்றன. இந்தத் துணைக் குழாய்களும் இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு சேர்க்கவல்லவையாதலால் பெருந்தமனியில்/தமனிகளில் ஏதேனும் சிறிய அல்லது பெரிய அடைப்பு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில், மாற்றுப் பாதையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தக்க வகையில் கிளைக் குழாய்களை இறைவன் படைத்திருக்கின்றான்.

ஆனால், மயிரிழையை ஒத்த – மிகவும் குறுகிய/ஒட்டிய நிலையில் உள்ள இக்குழாய்களின் வழியைத் திறக்கும் விதமாக ஏதேனும் ஒரு வகையில் கிளைக் குழாய்கள் விரிவாக்கப்பட்டால் மட்டுமே அவற்றை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலும். கிளைக் குழாய்களைச் சற்றே விரிவாக்கி அவற்றை மாற்றுப் பாதையாக மாற்றியமைப்பதன் மூலம் இருதயத்திற்கு ஏற்பட்ட இரத்தப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் போதிய அளவில் இரத்தத்தை இருதயத்துக்கு அனுப்ப முடியும். இதுவே, இயற்கை பை-பாஸ் சிகிச்சை முறை;  மருத்துவக் கலைச்சொல்லின் படி, “காற்றுத் துணை இயற்கை மாற்று வழிச் சிகிச்சை (Pneumatically Assisted Natural Bypass) சுருக்கமாக, பான் பை-பாஸ் (PAN Bypass) இந்த இயற்கை வழிக் குழாய்கள் அனைவருக்கும் உள்ளன. ஆனால், அவை இயற்கையாக விரிவடைந்த நிலைக்கு மாறுதல் அடைவது சிலருக்குத்தான். குறிப்பாக விளையாட்டு வீரர்கள், ஓட்டப்பந்தயம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுபவர்களது உடற் பயிற்சிகள் அவர்களது இருதய நரம்புகள் உதவியால், இயல்பில் குறுகிய நிலையில் உள்ள கிளைக்குழாய்களை விரிவடைந்த நிலைக்கு மாற்றிவிடுகிறது. இப்படி இந்தக் குழாய்கள் அகண்டு விடும் நிலையில் விளையாட்டு வீரர் போன்றோருக்கு ஒருக்கால் அவர்களது பெருந்தமனியில் 80 அல்லது 90 விழுக்காடு  அடைப்பு ஏற்பட்டாலும் அவர்கள் பாதிக்கப் படுவதில்லை. அவர்களுடைய இருதய (பெருஞ்) சிரை(Vein)களில்  அடைப்பு ஏற்பட்டாலும் மரணிப்பதில்லை.

இந்த இயற்கை மாற்று வழிக் குழாய்களைப் பயன் பாட்டுக்குச் செப்பனிடும் வழி என்ன?

இருதய நோயாளிகளை, “விளையாட்டு வீரர்களைப் போல் உடற்பயிற்சி செய்யுங்கள்; ஓடுங்கள்” என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில், இரத்தக் குழாயில் அடைப்புள்ளவர்கள் கடின உடற் பயிற்சிகளில் மிகச் சற்றே  ஈடுபட்டாலும் அவர்களுக்கு ஆக்ஸிஜன் குறைவு ஏற்படுவதன் மூலம் மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்படும் ஆபத்து உள்ளது.

ஆனால் தற்போது விஞ்ஞானிகள் இதற்கென ஒரு புதிய கருவியை வடிவமைத்துள்ளதன் மூலம் இந்த மாற்றுக் குழாய்களை முறையாகச் செப்பனிட்டுப் பயன் படுத்திக் கொள்வது சாத்தியமாகியுள்ளது. இந்தப் புதிய கருவியின் மூலம் கிளைக் குழாய்களை விரிவு படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்திட இயலும். தமனிக் குழாய்களின் அடித்தளத்தில் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் இவ்வழி ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு மணி நேரம் இந்தக் கருவியின் மூலம் செய்யப்படும் மேற்கண்ட சிகிச்சைமுறையின் மூலம் இந்த மாற்று வழித் தமனிக் குழாய்களைத் திறந்திடவும் அதன் மூலம் பெருந்தமனி வழியே உடலெங்கும் வியாபித்துள்ள பிற தமனிகளுக்கு அதிகமான இரத்ததை செலுத்திட இதயத்தைத் தூண்டவும் இயலும். இந்தச் சிகிச்சை முறையைத் தொடர்ந்து முப்பது அமர்வுகள் வரை செய்தால் இயற்கையான, முழுமையான மாற்று வழிக் குழாய்களை ஏற்படுத்திடலாம்.

சுருங்கக் கூறினால், இந்தப் புதிய- எளிதான சிகிச்சை முறை, பல இருதய நோய்க்கான சிறப்பு மருத்துவமனைகளின் வழமையான, பிரபலமாகப் பேசப்படும் பை-பாஸ் சர்ஜரி (By Pass Surgery )ஐத் தவிர்க்கும் மாற்று வழியாக உள்ளது.

இம்முறையின் இன்னும் சில சிறப்பம்சங்கள் என்னவென்றால்,

-மருத்துவ மனையில் தங்கியிருக்க வேண்டியதில்லை,
-வேலையிலிருந்து விடுப்புகள்/ஓய்வு பெற வேண்டியதில்லை.
-உடலில் அறுவை செய்ய வேண்டியதில்லை.
-சிகிச்சையின் செலவும் மிகவும் குறைவு.
-அதோடு அறுவை சிகிச்சையின் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் ஏதுமில்லை.

இந்தக் கருவி எவ்வாறு செயல் படுகிறது என்பதை அறியுமுன் நுண்ணறிவாளனான இறைவன் இதயத்தை எவ்வாறு செயல்படுமாறு படைத்துள்ளான் என்பதைச் சுருக்கமாக விளங்கிக் கொள்வோம்.

நமது இதயம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதயத்தின் வலப்புற மேற்பகுதி வலது ஆரிக்கிள் (right auricle)  அல்லது வலது ஏற்றியம் (right atrium) என்றும் வலப்புறக் கீழ்ப்பகுதி வலது வென்ட்ரிக்கிள் (right ventricle) என்றும் இதயத்தின் இடப்புற மேற்பகுதி இடது ஆரிக்கிள் (left auricle) அல்லது இடது ஏற்றியம் (left atrium) என்றும் இடப்புற கீழ்ப்பகுதி இடது வென்ட்ரிக்கிள் (left ventricle) என்றும் அழைக்கப்படுகின்றன.

உடலெங்கும் தந்துகிகளாகப் பரவியுள்ள சிரைகள் (veins) மூலம் அசுத்த இரத்தம் இதயத்தின் சுருங்கி விரிதலால் பெருஞ்சிரை வழியாக வலது ஆரிக்கிளில் நுழைகிறது. இந்த அசுத்த இரத்தம் மூவிதழ் வால்வு (tricuspid) வழியாக வலது வென்ட்ரிக்கிளை அடைகிறது. மீண்டும் இதயத்தின் சுருங்கிவிரிதலால் நுரையீரல் தமனி மூலம் அசுத்த இரத்தம் நுரையீரலுக்குச் செலுத்தப்படுகிறது. நுரையீரலை அடைந்த அசுத்த இரத்தம் வாயுப்பரிமாற்றம் (Gas Exchange) நடைபெற்று உயிர்வளி நிறைந்த சுத்த இரத்தமாக மாறி நுரையீரல் சிரையின் வழியே இதயத்தின் இடது ஆரிக்கிளுக்குள் நுழைகிறது. பின்னர் ஈரிதழ் வால்வின் மூலம் (bicuspid)  இடது வெண்ட்ரிக்கிளை அடைந்த சுத்த இரத்தம் அங்கிருந்து பெருந்தமனி மூலம் உடலின் பல பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

இருதயத் தசைகள் தொடர்ந்து சுருங்கியும் விரிந்தும் இயங்குவதை மேலே கண்டோம். இத்தசைகள் குறுகிய பின்னர் விரிவடையும் நிலைக்கு டைஸ்டோல் (diastole)  என்று கூறப்படும். இந்த நிலையில்தான் இதயத்தின் அழுத்தம் குறைந்து இரத்தம் நிரம்புகிறது. இருதயம் சுருங்கும் நிலையாகிய ஸிஸ்டோல் (systole) எனும் நிலையில் தமனிக் குழாய்களுக்கு இரத்தம் செல்வது சாத்தியமில்லை.

இந்தக் கருவியின் மூலம் இருதய நரம்பின் தளர்ச்சி நிலையின் போது அவற்றிற்கு அதிகமான அளவில் இரத்தம் செலுத்தப் படுகிறது. உடலின் அதிக இரத்த ஓட்டமுள்ள பகுதியில் இக்கருவியின் துணைச் சாதனங்களை சுழற்றுவதன் மூலம் செயற்கையாக, சற்று அதிக அழுத்தம் ஏற்படுத்தி அதன் மூலம் தமனிகளின் அடிப்பகுதிகள் இருதயம் சுருங்கி-விரிந்து தளர்ச்சி அடையும் நிலையில் அதிகமான அளவிலும் அதிமான அழுத்தத்துடனும் இரத்தம் பெறும் விதமாகத் தொடர்ந்து இக்கருவி இயக்கப்படுகிறது. இவ்வாறு இந்தத் தமனிக் குழாய்கள் அதிகமான இரத்தத்தைப் பெற்று நிரம்பிவிடுகிறது. மேலும் அதிக அழுத்தத்துடன் இதிலிருந்து பீறிட்டு வெளிப்படும் இரத்தம் தந்துகிகளுக்குள் இரத்தத்தை நிரப்பி அவற்றை விரிவாக்கி விடுகின்றது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் விளையாட்டு வீரர்கள் 30 ஆண்டுகள் செலவழித்துச் செய்த பயிற்சிகளின் பலனை இந்தக் கருவி முப்பது மணி நேரத்தில் செய்து, மாற்றுக் குழாய்களை விரிவாக்கி, செயல் படவைத்து விடுகிறது. இந்தப் புதிய முறை சிகிச்சை, பிரபலமாகப் பேசப் படும் பை-பாஸ் (Bypass Surgery/Angioplasty) எனும் அறுவை சிகிச்சை முறையைவிடச் சிறந்தது.

சிகிச்சைக்கு முன்னர் கார்ட்டோக்ராம் (Cartogram) எனப்படும் இரத்தக் குழாய்/கள் அடைப்புக் கண்டறியும் கருவியின் மூலம் நோயாளியின் இருதய நிலையைப் பரிசோதனை செய்வர். இது ஆஞ்சோக்ராம் எனப்படும் ஆங்கில முறை சோதனைக்கு இணையானது – ஆனால் வலியில்லாதது.

இந்த இயற்கை மாற்று வழிச்  (Natural Bypass) சிகிச்சை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதா?

ஆம். கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கருவி மிகவும் புகழ் பெற்று விட்டது. அமெரிக்காவில் சுமார் 200 மருத்துவ மையங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் இது ஏறக்குறைய (Bypass Surgery/Angioplasty) அறுவை பைபாஸ் சிகிச்சைக்கு முற்றான மாற்றுச் சிகிச்சையாகவே இடம் பிடித்து விட்டது. சீனாவில் சுமார் 10,000 மையங்ங்களில் இருதய நோயாளிகளுக்கு இந்தப் புதிய முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இந்தக்கருவியின் சிகிச்சை Escorts heart Institute, New Delhi, Metro Heart Institute போன்ற பெரிய மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால், இந்தப் புதிய சிகிச்சையை இலாப நோக்கில் ஒப்பிடும்போது, அறுவை சிகிச்சை முறையைவிடக் குறைந்த இலாபமே பெற்றுத் தரக் கூடியது என்பதால், பெரும்பாலான  இந்திய மருத்துவமனைகள் அதிக இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அறுவை பை-பாஸ் (Angioplasty and Bypass Surgery) சிகிச்சை முறையையே தேர்ந்தெடுக்கின்றன.

oOo

 தொடர்புடைய பயனுள்ள பிற சுட்டிகள்:

  1. திருச்சி : https://timesofindia.indiatimes.com/city/trichy/mgm-govt-hosp-to-start-eecp-facility-from-saturday/articleshow/61473508.cms
  2. நெல்லை : https://www.youtube.com/watch?v=dXK8-eUgCo4
  3. நாகர்கோயில் : http://www.drethayarajan.com/

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.