தோழர்கள் – 8 – அபூதர்தா – أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

கடை மூடப்பட்டது
Share this:

அபூதர்தா

أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

 

மதீனாவில் அவ்ஸ்,  கஸ்ரஜ் ஆகிய இரு பெரும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வருவதற்குமுன் இந்த இரு கோத்திரத்தினருக்கும் இடையில் வெட்டுப்பழி, குத்துப்பழிதான் வாழ்க்கை. சண்டை, சண்டை ஓயாத சண்டை. போர் புரிந்து ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்குக் கொன்றுபோட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூன்று யூத கோத்திரத்தினரின் கைங்கர்யம் அது. யூதர்களுக்கு அதில் அரசியல் சுயநலம் இருந்தது. அந்த அரேபியர்கள் வேதம் அருளப்படாத, சிலை வணங்கும் மக்கள் எனும் இளக்காரம் இருந்தது. தங்களது ஆளுமையே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும் என்ற நயவஞ்சகம் இருந்தது. இப்படிப் பல.

நபிகள் மதீனா வந்து சேர, இந்த இரு கோத்திரத்தினரும் ஒவ்வொருவராய் இஸ்லாத்தில் இணைய, அதன் பின் அவர்கள் அனைவரும் அன்ஸாரீகள் என்ற பொதுப் பெயரில் அடையாளம் காணப்பட்டனர். நபிகள் ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனா வந்து சேர்ந்த அடுத்த நாளே அனைவரும் முஸ்லிமாகிவிடவில்லை. அகபா உடன்படிக்கை பற்றி முன்னர் பார்த்தோமே, அப்படி இரு அகபா உடன்படிக்கைகளின் போது இஸ்லாத்தை ஏற்றவர்கள், பின்னர் தோழர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் செய்தியறிந்து இணைந்தவர்கள் என்று பெரிய அளவில் முஸ்லிம்களின் சமூகம் ஏற்பட்டிருந்தாலும், இதர மதீனாவாசிகள் காலப்போக்கில் படிப்படியாகத்தான் இஸ்லாத்தை ஏற்றனர்.

மேற்சொன்ன கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் உவைமிர். அவர் மதீனா நகரில் நல்லதொரு வியாபாரி. ஏதோ ஒரு கடை வைத்து, வியாபாரம் புரிந்து, நல்ல வருமானம் ஈட்டியபடி அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து சாதகமான நிலை ஏற்பட்டபின், நபிகளும் மற்றும் மக்காவைச் சேர்ந்த தோழர்களும் மதீனா வந்தடைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தன. அப்போதும் உவைமிர் இஸ்லாத்தில் இணையவில்லை. தனது சிலை வணக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தார். இன்னம் சொல்லப் போனால் அவரது தெருவில் அவரும் அவரது குடும்பமும்தான் இஸ்லாத்தை ஏற்காதவர்கள்.

இந்நிலையில் ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு, ரமளான் மாதத்தின்போது, முஸ்லிம்களுக்கும் மக்காவிலிருந்து படை திரட்டி வந்த குரைஷியர்களுக்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பத்ருப் போர் நிகழ்வுற்றது. ஆயிரத்துச் சொச்சம் குரைஷி வீரர்களை எதிர்க்க முந்நூற்றுச் சொச்சம் முஸ்லிம் வீரர்கள் பத்ருப் போருக்கு கிளம்பிச் சென்றதை வேடிக்கைப் பார்த்து வழியனுப்பிவிட்டு, தனது கடைக்கு வந்து வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் உவைமிர்.

எப்பொழுதும்போல் அன்றைய பொழுதும் விடிந்தது. உவைமிர் அதிகாலையிலேயே எழுந்து கொண்டார். அவரது வீட்டின் பிரதான பகுதியில் வீற்றிருந்த அவருக்குப் பிரியமான கடவுளின் சிலைக்குச் சென்று அன்றைய வழிபாட்டை ஆரம்பித்தார். அவரது கடையிலேயே மிகவும் உசத்தியாயுள்ள வாசனைத் திரவியத்தை எடுத்து அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்தார். யமன் நாட்டிலிருந்து ஒருமுறை வந்திருந்த அவரின் வியாபாரத் தோழர் ஒருவர் உவைமிருக்கு விலையுயர்ந்த பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாய் அளித்திருந்தார். இப்பொழுது பட்டு சால்வை அன்பளிப்பாய் அளிப்பது போன்ற பழக்கம் அப்பொழுதே அரேபியாவில் இருந்திருக்கிறது போலும். அந்த அங்கியை எடுத்துச் சிலைக்குப் போர்த்தி பயபக்தியுடன் வழிபட்டார் உவைமிர்.

இதெல்லாம் முடிவதற்குள் பொழுது புலர்ந்து விட்டிருந்தது. சரி, இன்றைய வேலையைப் பார்ப்போம் என்று கடைக்குக் கிளம்பி வெளியே வந்தால் தெருவெங்கும் திருவிழா பரபரப்பு! முஹம்மது நபியும் அவரின் தோழர்களும் குரைஷிப் படைகளை வென்றுவிட்டு மதீனா திரும்பிக் கொண்டிருந்தனர். கூடவே போரில் கைப்பற்றப்பட்ட குரைஷிப் பிணயக் கைதிகளும். கண்ணெதிரே நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் உவைமிர். ஆச்சரியமான ஆச்சரியம்! இருப்பினும் கடை திறக்க நேரமாகி விட்டது என்ற கவனம் வந்ததும், சரி, வேலையைப் பார்ப்போம் என்று ஒதுங்கி தன் கடைக்கு நடக்கத் துவங்கியவருக்கு சட்டென்று ஞாபகம் வர, வேகமாய்ப் பின்வாங்கி அந்த முஸ்லிம்களின் அணியில் இருந்த ஓர் இளைஞரைப் பிடித்தார்.

“அப்துல்லாஹ் இப்னு ரவாஹா பத்திரமாய் திரும்பி விட்டாரா?” என்று பதட்டமுடன் கேட்டார்.

அந்த இளைஞரும் இவர் சார்ந்திருந்த கஸ்ரஜ் கோத்திரம்தான். அவரிடமிருந்து உற்சாகமாய் பதில் வந்தது. “ஓ! அவருக்கென்ன? படு வீரமாய்ப் போரிட்டார். போரில் கைப்பற்றிய பெரும் சுமையுடன் பத்திரமாய் வந்து சேர்ந்து விட்டார்”

“அப்பாடா!” என்று திருப்தியாக இருந்தது உவைமிருக்கு. தனிச் சிறப்புமிக்க வரலாறு அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவினுடையது. இங்கு அது முக்கியமல்ல. ஆனால் இருவருக்கும் இடையில் நிலவிய நட்பு முக்கியம். அதை மட்டும் கண்டு விடுவோம். நட்பென்றால் நட்பு, அப்படியொரு நட்பு. இருவரும் சகோதர உறுதிமொழியெல்லாம் எடுத்துக் கொண்டனர். “நீயும் நானும் இன்றிலிருந்து அண்ணன்-தம்பி” என்பது போலான உறுதிமொழி. அப்படியொரு நடைமுறை அப்பொழுது அவர்களிடம் பழக்கத்தில் இருந்தது. மதீனா நகருக்கு இஸ்லாம் அறிமுகமாகிப் பரவ ஆரம்பித்ததும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் உவைமிருக்கு அது சரிவரவில்லை. “எனக்கு என் மதமே போதும்” என்று இருந்து விட்டார். இருந்தாலும் அன்னியோன்ய நட்பு இருவருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால்தான் அந்த அக்கறையான விசாரிப்பு.

உவைமிர் கடையைத் திறந்தார். வேலையாட்கள் வந்து சேர்ந்தார்கள். வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிக்க அன்றைய வியாபாரம் மும்முரமடைய ஆரம்பித்தது. வேலையில் மூழ்கிவிட்டார் உவைமிர். அதே நேரம் அவரது வீட்டில் ஒரு பிரளயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவர் அறியாமலேயே.

உடன்பிறவா சகோதரரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா உவைமிர் மீது அளவற்ற பாசமும் அக்கறையும் கொண்டிருந்தவர். பலமுறை உவைமிரிடம் இஸ்லாத்தைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டார், ஆனால் உவைமிர்தான் அசைந்து கொடுக்கவில்லை. அது ஒரு பெரிய ஆற்றாமையாகவே இருந்தது அப்துல்லாஹ்விற்கு. உவைமிரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருமளவு நட்பு இருந்ததால் அன்று ஒரு திட்டத்துடன் உவைமிரின் வீட்டை நோக்கிச் சென்றார் அப்துல்லாஹ். அப்பொழுது அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.

வீட்டு முற்றத்தில் உவைமிரின் மனைவி அமர்ந்திருந்தார். “தங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் சேவகியே!” என்று முகமன் கூறினார் அப்துல்லாஹ். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளதவர்களாய் இருப்பினும் அனைவரும் அல்லாஹ்விற்கு அடிமை தானே என்ற ரீதியில் பொதுவான, மரியாதையான வாழ்த்து அது.

“நும் மீதும் சாந்தி உண்டாவதாக, உவைமிரின் சகோதரரே!” என்று பதில் வந்தது.

“எங்கே உவைமிர்?”

“அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். திரும்பும் நேரம்தான். எப்பொழுதும் வந்து விடலாம்.”

“நான் உள்ளே வந்து உவைமிருக்காகக் காத்திருக்கலாமா?”

“தாராளமாக!” என்று அனுமதியளித்தவர் தனது அறைக்குள் சென்று விட்டார். பின்னர் வேலை, குழந்தைகளை கவனிப்பது என்று அவரது கவனம் திரும்பி சுறுசுறுப்பாகிவிட்டார்.

அவர் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட அப்துல்லாஹ், உவைமிரின் பிரத்யேக சாமி சிலை இருந்த பூஜை அறையினுள் நுழைந்தார். தன்னுடன் ஒரு சிறு ரம்பத்தை மறைத்து எடுத்து வந்திருந்தவர், கிடுகிடுவென்று அந்த சிலையைத் துண்டு துண்டாக அறுக்க ஆரம்பித்துவிட்டார். “அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்குவது பொய்மையே” என்று சொல்லிக் கொண்டே அந்த சிலையை வெட்டி முடித்தவர், உவைமிரின் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்.

இதையெல்லாம் அறியாமல் பின்னர் பூஜையறையினுள் நுழைய நேரிட்ட உவைமிரின் மனைவி, கடவுள் சிலை துண்டு துண்டாக தரையில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய், கன்னத்தில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். “எனக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டாயே இப்னு ரவாஹா, இப்படி. பேரழிவை ஏற்படுத்திவிட்டாயே!” என்று பலமான அழுகை, அரற்றல்.

சற்று நேரம் கழித்து வந்து சேர்ந்தார் உவைமிர். வந்து பார்த்தால், சிலை இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அமர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் அவர் மனைவி. உவைமிரைப் பார்த்ததும் அவரின் கண்களில் பயம் தோன்றியது.

“ஏன், என்ன ஆச்சு?” என்றார் உவைமிர்.

கண்ணீரும் ஆற்றாமையுமாகப் பேசினார், “நீங்கள் கடையில் இருக்கும் போது உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் வந்திருந்தார். பாருங்கள், கடவுள் சிலையை என்ன செய்திருக்கிறார் என்று”

சிலை, தரையில் மரத் துண்டுகளாய் உடைந்து கிடந்தது. உருவமாய் ஒன்றுமே பாக்கியில்லை. கோபத்தில் தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது உவைமிருக்கு. என்னவாவது செய்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை பழி வாங்கத் துடித்தது மனசு. கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, அரற்றி, புலம்பி எல்லாம் முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்த போதுதான் அவரது புத்திக்குச் சட்டென்று அது பட்டது. “இந்த சிலைக்கு என்று ஏதாவது ஒரு சக்தி இருந்திருக்குமானால் அது தன்னைத் தானே தற்காத்துக் கொண்டிருக்க வேண்டுமே!” அந்த எண்ணம் தோன்றியவுடன் நிதானமடைந்து மிகவும் யோசிக்க ஆரம்பித்தார். ஏதோ புரிந்தது. உடனே அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை சந்திக்கக் கிளம்பி விட்டார் உவைமிர்.

இதுவரை சொல்ல விட்டுப்போன ஒரு சிறு தகவலையும் இங்குக் குறிப்பிட்டுவிட வேண்டும். உவைமிருக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பெயர் தர்தா.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.