திராவிட இயக்கத்தின் மைனாரிட்டி ஆட்சி!

Share this:

“பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது” என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார்கள்; தமிழ்நாட்டில் அது முடியாது.

இந்தியாவெங்கும் பாதிக்கப்படும் சிறுபான்மையின மக்கள் அவர்களாகவே திரண்டு அவர்களின் நீதிக்காகப் போராட வேண்டும்; தமிழ் நாட்டிலோ சிறுபான்மையினரின் கரங்களோடு கோடி கரங்கள் இணையும். அவர்களின் உரிமைகளுக்காக கோடி குரல்கள் ஒலிக்கும். ஏனெனில், இது பெரியார் மண்.

தமிழகத்தின் சமூகவியலிலும் அரசியலிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உறவாக, திராவிட இயக்க – முஸ்லிம் உறவு அமைந்துள்ளது. சாதியையும் தீண்டாமையையும் எதிர்த்த பெரியார், “”இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து” என்றார். அத்துடன், முஸ்லிம்களின் அரசியலுக் கும் ஆதரவாக நின்றார். முஸ்லிம்களுக் கான தனி நாடு கோரிக்கையை ஆதரித்தார். முஸ்லிம்களுக்கு தனி வகுப்புவாரி ஒதுக்கீடு வேண்டும் என்றார். முஸ்லிம்களை “அந்நியர் களாக’ முத்திரை குத்தும் சதிக்கு எதிராக, அவர்களை “திராவிடர்கள்’ என அணைத்துக் கொண்டார். இதன் விளைவாக முஸ்லிம்களின் நிகழ்ச்சி களில் பெரியார் சிறப்பு அழைப்பாளரானார்.

பல முஸ்லிம் எழுத்தாளர்கள் “குடிஅரசு’ இதழில் தொடர்ச்சியாக எழுதினர். முஸ்லிம்களுக்கு ஏதேனும் செய்தி போக வேண்டுமானால் குடிஅரசு இதழில் எழுதினால் போதும் எனும் அளவுக்கு நிலை இருந்தது. பெரியார் தீவிர கடவுள் மறுப்பாளர் என்ற போதும், இஸ்லாமிய மார்க்க அறிஞரும் திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவருமான அப்துல் ஹமீது பாக்கவியுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந் தார். இஸ்லாம் தொடர்பான கேள்விகளையும் விளக்கங்களையும் அவரிடம் உரையாடி அறிந்து கொண்டார். மறுபுறம் அரசியல் களத்தில் நாகூர் ஹனீபா போன்ற இளைஞர்கள் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பெரியாரின் தொண்டர்களாக களமாடினர். இந்த உறவை அண்ணா மேலும் வளர்த்தெடுத்தார்.

தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி கண்ட முதல் அரசியல் கட்சி முஸ்லிம் லீக் ஆகும். 1959 களில் நடைபெற்ற திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தல், திருவண்ணாமலை சட்டப் பேரவை தேர்தல் ஆகிய இரு தொகுதி தேர்தல்களும் தமி ழகத்தின் அரசியல் வரலாற்றையே  மாற்றியமைத் தன. இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. பெற்ற பெரும் வெற்றி, 1962 மற்றும் 1967 தேர்தல்களின் போக்கை தீர்மானித்தன. இந்த இரு தொகுதிகளுக் கான வெற்றி விழாவை கோவையில் மிகப்பெரிய அளவில் தி.மு.க. கொண்டாடியபோது மேடையில் பேசிய அண்ணா, இந்த வெற்றிக்கு காரணமானவர் என காயிதே மில்லத்தை குறிப்பிட்டு நன்றி கூறினார். அன்றிலிருந்து இன்று வரை, அதாவது காயிதே மில்லத் காலம் முதல் காதர் மொகிதீன் காலம் வரை, தி.மு.க. – முஸ்லிம் லீக் உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இடையிடையே சில முரண்கள் இருந்தாலும் அவ்விரு கட்சிகளும் பெரும்பாலும் இணைந்தே பயணிக்கின்றன.

1990 களுக்குப் பிறகு தோன்றிய த.மு.மு.க. போன்ற அமைப்புகள் முஸ்லிம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்களை பெருமளவில் அணிதிரட்டின. 1997-இல் கோவையில் நடைபெற்ற கலவரமும் அதன் பின்னர் நடைபெற்ற குண்டு வெடிப்பும் தி.மு.க. – முஸ்லிம் கள் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தின. முன்னெச்சரிக்கை கைதுகள், போராட்டங்களுக்கான தடைகள் என தி.மு.க. அரசால் முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்தனர். பின்னர் 1999 -இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. அணி சேர்ந்தபோது, முற்றாக தி.மு.க.வை வெறுக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாயினர். எனினும், தி.மு.க. கட்சிக்குள் இருந்த முஸ்லிம்கள் எவரும் கட்சிக்கு எதிராக பேசவோ கட்சியை விட்டு வெளியேறவோ இல்லை. 2004-இல் பா.ஜ.க அணியிலிருந்து வெளியேறி வலு வான மதச்சார்பற்ற அணியை தி.மு.க. கட்டியபோது, பழைய கசப்புகளை மறந்து மீண்டும் முஸ்லிம்கள் தி.மு.க.வை ஒட்டுமொத்தமாக ஆதரித்தனர்.

2006-இல் பெரும்பான்மை பலமின்றி அமைந்த தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி என வர்ணித்தார் ஜெயலலிதா. அதற்கு விடையளித்த கலைஞர் “ஆம், இது மைனாரிட்டிகளின் ஆட்சி’ தான் என்றார்.

அதற்கேற்ப 2007-இல், முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் சேர்த்து 7 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினார். தமக்கான இடஒதுக்கீடை விட அதிக பயனை ஏற்கெனவே பெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறி கிறித்தவர்கள் அதை திருப்பியளித்தனர். முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு மட்டும் நடைமுறையில் உள்ளது. அதையும் 5 விழுக்காடாக உயர்த்தக் கோரி முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருகின்றனர். முஸ்லிம்கள் தனி இடஒதுக்கீடு பெற அடிப்படையாக அமைந்தது அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதேயாகும். அதையும் செய்தவர் கலைஞரே. 1971 முதல் 1976 வரை தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போதுதான், உருது பேசும் முஸ்லிம்கள் உட்பட முஸ்லிம்களில் பல வகையினர் பிற் படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

உருதுமொழி பேசும் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று உருது அகாடமியை ஏற்படுத்தியது, உலமா நலவாரியம் அமைத்தது, காயிதே மில்லத் பெயரில் சாலைகள், கல்லூரிகள், பாலங்கள் அமைத்ததோடு மணிமண்டபம் எழுப்பியது ஆகியன கலைஞரின் குறிப்பிடத்தக்க பணிகளாகும். எனினும், 2006 – 2011 ஆட்சியில் கொண்டுவரப் பட்ட சமச்சீர் கல்வியால் உருது மொழிக்கு இடர் வந்ததும், கட்டாய திருமண பதிவு சட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் அப்படியே தொடர்கிறது.

1947 முதல் 1962 வரை காங்கிரஸ் ஆட்சியில் தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித் துவமே வழங்கப்படாத நிலையில், முஸ்லிம்களுக்கு அமைச்சரவை யில் இடமளிக்க வேண்டும் என குரல் எழுப்பினார் அண்ணா. அதன்பிறகே 1962-இல் கடைய நல்லூர் மஜீத் அமைச்சராக காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றார். 47 முதல் 62 வரை தமிழக சட்டமன்ற மேலவைக்கும் முஸ்லிம்கள் நியமிக்கப்படவில்லை. தி.மு.க. தான் திருச்சி ஜானி அவர்களை மேலவை உறுப்பினர் ஆக்கி யது. மேலும், மேலவை, மாநிலங்களவை, மக்க ளவை, சட்டப் பேரவை என, தொடர்ச்சியாக தி.மு.க. சார்பிலும் தி.மு.க. ஆதரவுடன் முஸ் லிம் லீக் சார்பிலும் முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் இடம் அளித்து வந்துள்ளது தி.மு.க.

தி.மு.க.வுடன் ஒப்பிடும் அளவுக்கு “அ.தி.மு.க. – முஸ்லிம்கள்’ உறவில் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போதும் ஆட்சியில் இருந்த போதும் முஸ்லிம்களை அவரால் ஈர்க்க முடியவில்லை. மேலும் 1980-களில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம், இந்து முன்னணியின் வருகை, மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தடுக்க தமிழக அரசு முயன்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடைவெளியே அதிகமானது. அதன்பிறகு 1990-களில் ஜெயலலிதா கரசேவையை ஆதரித்ததும், தடா சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் பலரை சிறைப்படுத்தியதும், 1998-இல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அக்கட்சி தமிழகத்தில் காலூன்ற வழியமைத்ததும் முஸ்லிம்களிடம் கடும் வெறுப்பை ஏற்படுத்தியது.  பின்னர் வாஜ்பேயி அரசை அவர் கவிழ்த்ததும், பா.ஜ.க – தி.மு.க. கூட் டணி அமைந்ததும் ஜெயலலிதா – முஸ்லிம்கள் இடையே நெருக்கத்தை உருவாக்கின. 1999-இல் சென்னை சீரணி அரங்கில் த.மு.மு.க. நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் முழங்கினார் ஜெயலலிதா.

2001-இல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மறுத்தார், “ராமர்கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது’ என்று கேட்டார். பொது சிவில் சட்டம் வேண்டும் என்றார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து கருத்து சொன் னார். போப் ஜான் பாலை கடுமையாகத் தாக்கினார். மதமாற்றத் தடைச்சட்டம் மற்றும் ஆடு, கோழி பலியிட தடைச்சட்டம் கொண்டு வந்தார். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க குஜராத் சென்றார். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சி செய்வதாகக் கூறி, முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுவிட்டு எதுவுமே செய்யாமல் ஏமாற்றினார். இப்படி நிறைய! ஆனாலும், அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளோ, முஸ்லிம் கைதுகளோ பெருமளவில் இல்லை என்பதும், நீண்ட காலத்துக்குப் பிறகு முஸ்லிம் கட்சி ஒன்று (மனித நேய மக்கள் கட்சி) சொந்த சின்னத்துடன் பேரவைக்குள் நுழைய வழியமைத்தார் என்பதும், இந்து முன்னணியின் எதிர்ப்பையும் மீறி, திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் கட்ட ஆணையிட்டார் என்பதும் அவர் மீதான பழைய கசப்புகளை போக்கியது.

மொத்தத்தில் கடந்த 50 ஆண்டுகால தி.மு.க. -அ.தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்கள் தி.மு.க.விற்கே அதிகம் வாக்களித்துள்ளனர். தி.மு.க.விடமிருந்தே அ.தி.மு.க.வைவிடவும் அதிகம் பயனடைந்துள்ளனர். எனினும், முஸ்லிம்களின் அரசியல் சமூக பொருளாதார நிலை என்பது பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி துயரிலேயே தொடர்கிறது.

– ஆளூர் ஷா நவாஸ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.