“குஜராத்தில் படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன…”

Share this:

மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் மதச்சார்பற்றோர் மாமன்றம் சென்னையில் கடந்த 11.12.2008 அன்று நடத்திய கருத்தரங்கில் மனித உரிமைப் போராளி  தீஸ்தா செட்டில்வாட் ஆற்றிய சிறப்புரையின் தமிழாக்கம்.


நண்பர்களே, கடந்த 25, 30 ஆண்டுகளாக, இந்தியாவில் கழிந்த ஒவ்வொரு கணமும் ஒரு நெருக்கடியான கட்டமாக, ஒரு கண்டம் போலத்தான் சென்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் நாம் தப்பிப்போமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. டிசம்பர் 6, 1992தான் இத்தகைய கண்டங்களை நிர்ணயிக்கும் கணமாக இருந்தது என்று ஏற்கனவே சொல்லப் பட்டது. நவம்பர் 26 அன்று பயங்கரவாதிகளின் கடுமையான தாக்குதல் நிகழ்த்தப் பட்ட ஒரு மாநகரில் இருந்து நான் வருகிறேன்.

நம் நாடு சுதந்திரம் அடைந்துவிட்ட நிலையில், ஒரு அறுபது ஆண்டுகள் அல்லது அதற்குக் கொஞ்சம் மேல் நாம் பின்னோக்கிப் பார்ப்போமேயானால், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான சவால் பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு இலக்கானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் ஏற்பட்ட தோல்வி என்று நான் கருதுகிறேன். நம்முடைய அரசியல் அமைப்பின், சமுதாய மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இருக்கும் இன்னொரு முக்கிய சவால் நம்முடைய எண்ண ஓட்டங்கள்தான், நம்முடைய சித்தாந்தங்கள்தான் என்று நான் நம்புகிறேன். அவை பெரும்பான்மை சமூகத்துடையதாக இருந்தாலும் சரி, சிறுபான்மை சமுதாயத்தினதாக இருந்தாலும் சரி. அது பிரிவினையையும், தனிமைப் படுத்துதலையும், தன் சித்தாந்தத்துக்கு எதிரானவர்களை வெறுப்பதையும் தூண்டுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த நாடு முழுவதும் இதனால் மிகவும் கசப்பான வேதனையை அனுபவித்துள்ளது. ஹிந்து வலதுசாரியினராலும் அவர்களுக்கு இணையான முஸ்லிம்களது எதிரிகளாலும் இந்த தேசம் பிரிவினையை சந்தித்தது. நாம் அதை 1947ல் எதிர்கொண்டோம். மகத்தான இந்த தேசத்தில் மேலும் மேலும் பிரிவினை எற்படுவதை நாம் அனுமதிக் கவோ தாங்கவோ முடியாது.

நீண்ட காலத்துக்கு முன்பு முக்கிய ஆங்கில செய்தித்தாள்களும், தொலைக் காட்சிகளும் சித்தாந்தம் சார்ந்த பிரச்சனைகளில் ஆர்வம் காட்டின. எங்கள் பத்திரிக்கையான கம்யூனலிசம் காம்பாட் இந்த வெறுப்பு சித்தாந்தத்தைத் துருவித் துருவி ஆராய்ந்தது. அந்த சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியைக் கொன்றதா? அல்லது பாமியானில் புத்தர் சிலைகளை அழித்த சித்தாந்தமா? நண்பர்களே, பாமியானால் புத்தர் சிலைகளை அழிப்பதற்கு முன்னர், தாலிபான் தன் மக்கள்மீதே, தன் பெண்கள் மீதே வன்முறையை ஏவிவிட்டிருந்தது. எனவே, அடிப்படை வாதமும், சாதீயமும் அதன் மக்களுக்கே எதிரியாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஜாதியைப் புரிந்து கொள்ளாமல் வகுப்புவாதத்தைப் பற்றிப் பேச முடியாது. திராவிட கலாச்சாரத்தின் இதயமாக இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு இந்த நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களைவிட இது மிக நன்றாகவே தெரியும். ஜாதியத்தின் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள, ஒருங்கிணைக்கப்பட்ட ஹிந்து மதவாத அமைப்பின் கொடூரமான தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் ஹிந்து மதத்தின் ஜாதீய அமைப்பு. அது நம் மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தள்ளி வைத்தது. தான் மரியாதைக் குறைவாகக் கருதிய மிகக்கடுமையான தொழில்களை அவர்கள் செய்யும்படிச் சொன்னது.

எனவே ஜாதியும், ஜாதியமும், ஜாதிக்கு எதிரான வன்முறையும், ஜாதியத்துக்கு எதிரான வன்முறையும் ஒன்றேதான். எனவே, வகுப்புவாதத்திற்கு எதிராகவும், சாதிய வெறுப்புக்கு எதிராகவும் போராடும் சக்திகள் ஒன்றிணைவது அவசியம்.

நமது பாராளுமன்றத்தைப் போலல்லாமல், நம் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தருகிறது. தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள், சமூகத்தின் மிகக்கீழ் நிலையில் இருந்த பெண்கள், கிராம அளவிலான அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம் எப்படிப் பட்டது?

ஜனவரி 26 அன்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்த தலித் பெண் தேசியக் கொடியை ஏற்ற முயற்சித்தால், அவரை நிர்வாணப்படுத்தி அவர் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது அவரது கிராமத்தில். அது ராஜஸ்தானாக இருந்தாலும் சரி, மஹாராஷ்டிராவாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசமாக இருந்தாலும் சரி, இதே கதைதான். ஏனெனில் ஒரு தலித் பெண்ணானவள் தேசம், தேசியம், தேசப்பற்று இதிலெல்லாம் உரிமை கொண்டாடக்கூடாது என்று அது கருதுகிறது. எனில், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகத்தை அடைய நாம் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம், நமது தலைவர் களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனாலும் நமது சூழ்நிலை என்ன? முஸ்லிம் சமுதாய மக்கள் பொருளாதார, சமூக ரீதியாக உரிமைகள் மறுக்கப்படுகிறார்கள், கடந்த 55 ஆண்டுகளாக அவர்கள் நிலை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு போகிறது என்பதை சச்சார் கமிட்டி அறிக்கை காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் 7000 குழந்தைகள் பசி, பட்டினியால் இந்தியாவில் இறந்து போகின்றனர். பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள வசதி படைத்த மேல்தட்டு மக்கள் பிரிவினரால் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே, கருவறையிலேயே கொல்லப்படுகிறார்கள். மக்களில் பெரும் பான்மையானோருக்கு பொருளாதார, சமூக உரிமைகளை வழங்காத இந்த ஜனநாயகம் எந்த வகையானது? இந்த தருணத்தில் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

குற்றங்களுக்கு தண்டனை வழங்கி நீதி நிலைக்கச் செய்யும் அமைப்பின் தோல்வி பற்றி இப்போது மறுபடியும் பார்ப்போம். நமது செஷன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஏன், உச்ச நீதிமன்றத்தில் கூட நிறைய வழக்குகள் இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. சராசரியாக, ஒரு சாதாரண குற்றவியல் வழக்கு முடிவுக்கு வர 15லிருந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. சொத்து தகராறு பற்றிய வழக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு நடக்கின்றது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு ஒப்பாகும் என்று சொல்கிறோம். அப்படியானால், ஒவ்வொரு நாளும் நமது நீதிமன்றங்கள் குற்றம் சார்ந்த வழக்குகளில் நீதி மறுத்துக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையில், வரலாற்றில் கும்பல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான தேதிகளைப் பார்ப்போம். அத்தகைய வன்முறைகள் மக்களில் ஒரு பிரிவினர் மீது மட்டும் ஏன் கட்டவிழ்த்துவிடப்பட்டது? ஏனென்றால் அவர்கள் அடித்தட்டு மக்கள் அவர்கள் சிறுபான்மையினர், அவர்கள் தலித்துகள், வன்முறைக்கு இலக்கான அவர்களுக்கு நீதி வழங்கப்படவே இல்லை.

1984ல், நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, நாட்டின் தலைநகரில் 3006 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் 7000 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேர் மட்டும்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட சீக்கியர் ஒருவரின் விதவையான தர்பன் கௌர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எச்.கே.எல். பகத்தால் மிரட்டப்பட்டார். தனக்கு நீதி கிடைக்கும் என்று அவர் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார். 24 ஆண்டுகளுக்கு மேலாகியும்!

புது டில்லியிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடத்தப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான போராட்டங்கள் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு போபால் விஷவாயுக் கசிவு துன்ப நிகழ்ச்சி நடந்தது. சட்டத்துக்குப் புறம்பாக பன்னாட்டு கம்பெனியால் கசியவிடப்பட்ட மிதைல் விஷ வாயுவினால் 3000 ஊழியர்கள் இறந்தனர். இன்னும் உயிரோடு இருப்பவர்களும் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட ரேடியேஷன் எனப்படும் வெப்பக்கதிர்வீச்சினால் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்த நஷ்ட ஈடும் தரப்படவில்லை. பல அரசாங்கங்களை மாற்றிவிட்ட நமது மாநிலம், இப்போது யூனியன் கார்பைடின் மறு அவதாரம் போன்ற இன்னொரு வகையான கெமிக்கல் நிறுவனம் மஹாராஷ்டிராவின் உள்ளே வர, விரிந்த கைகளுடன் அன்புடன் வரவேற்றுள்ளது. இதுதான் உலகமயமாக்கல், இதுதான் தாராளமயமாக்கல்.

ஜட்ஜர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் தலித்துகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் எவ்வளவு பேர் பிடிபட்டுள்ளனர்? எவ்வளவு விழுக்காடு குற்றவாளிகள் கண்டுபிடிக்க தண்டிக்கப்பட்டுள்ளனரா?

மஹாராஷ்டிராவில் கயர்லாஞ்சி என்ற தலித் குடும்பத்தின் கதை உங்களுக்குத் தெரியும். பனிக்கால தலைநகரான நாக்பூருக்கு அருகில்தான் அவர்கள் இருந்தனர். குடும்பத்தில் இருந்த ஐவரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். மற்றவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஏன்? சுரேகா போட்மாகே என்ற தாய் தன் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று, தங்களுக்குடைய நிலத்துக்கு உரிமை கொண்டாடி, அதை மீட்டு, தலை நிமிர்ந்து நின்று, தன் ஆண், பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்பினாள். உயர்சாதி என்று சொல்லப் பட்டவர்களுக்கு தலை வணங்க மறுத்தாள். தமிழ்நாட்டைப் போலவே, வரலாற்றுப் பூர்வமாக, மஹாராஷ்டிரா விலும் வலுவானதொரு சாதிக்கு எதிரான அமைப்பு இருந்தது. ஜோதிபாய் பூலே, சாவித்ரிதாய் பூலே, டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கார், ஏன் அதற்கு முன்னும் துகாராம், ஏக்நாத், நாம் தேவ் போன்ற ஞானிகள் சாதிய அமைப்பை எதிர்த்துள்ளனர். எனவே, மஹராஷ்டிராவில் இதுமாதிரியான ஒரு சம்பவம் நடந்தது என்பது நம்ப முடியாதது. நாம் முன்னேறுவதற்கு பதிலாக பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.

நாம் இப்போது டிசம்பர் 6, 1992க்கு வருவோம். பாபர் பள்ளியின் இடிப்பு. அந்த ஒரேயொரு பயங்கரவாதச் செயல், மென்மேலும் பயங்கரவாதம் பரவுவதற்கும் தனிமைப்படுத்துதல் அதிகமாவதற்கும் வழிவகுத்தது. ஆனால் 1985க்கும் 1992-க்கும் இடைப்பட்ட காலத்தின் வரலாற்றை நாம் பார்ப்போமேயானால், ரத யாத்திரை நடத்தப்பட்ட இடங்களிலெல்லாம், கலவரம் நடை பெற்றது. நான் குறிப்பாக இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட விரும்புகிறேன். மீரட், ஹாஷிம் புரா, 1987, மற்றும் பாகல் பூர் 89, இரண்டு நிகழ்ச்சிகள் ரதயாத்திரையின் போது நடந்தன. 51 முஸ்லிம் சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய உத்தரபிரதேச ஊர்க் காவல் படையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சாட்சிகள் தொலைந்து விட்டனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி வேண்டி குரல் எழுப்பிக் கொண்டுள்ளனர்.

பகல்பூரில் சந்தேரி, லொகாயன் என்ற இரண்டு கிராமங்கள். ஒரே இரவில் எண்ணற்ற மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். சென்ற ஆண்டு சிலர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப் பட்டனர். ஆனால் கத்தி, லத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திட்டம் தீட்டியவர்களல்ல. வெறுப்பை உருவாக்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் எய்யப்பட்ட வெறும் அம்புகள் தான்.

இப்படிப்பட்ட வெறுப்பு உள்ளே வர தென்னிந்தியா அனுமதிக்காது என்றே என்னைப் போன்ற வரலாற்று மாணவர்கள் நம்புகிறோம். 1980களிலும், குறிப்பாக 1992லும் நாம் பார்த்ததோ, பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டது போல, டிசம்பர் 92லும், ஜனவரி 93-லும் மும்பை போன்ற ஒரு மாநகரில், காவல் துறையினரின் சார்புத் தன்மை கொண்ட முகத்தையும், பெரும் பான்மை சமூகத்தவருக்கு ஆதரவாக இருந்ததையும், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்கு எதிராக இருந்ததையும் நாம் பார்த்தோம். 1980கள் முழுவதும் இதுதான் நிகழ்ந்தது. அதன்பிறகு 92ல் பள்ளிவாசல் இடிப்பு, பின் திட்டமிடப்பட்ட படுகொலை பம்பாயில் நிகழ்ந்தது. அப்போது அது பம்பாய்தான். மும்பை ஆகவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையையும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டார்.

நண்பர்களே, 1984, 1992, 2002 குஜராத். இடையே, 1998லிருந்து இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தவர் 1998 முதலே தெளிவாகத் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டனர். ஒரிஸ்ஸாவும் கர்நாடகாவும் அந்த திட்டத்தின் இறுதிக்கட்டம் என்று கூற வேண்டும். ஒரே ஆண்டில் 48 தாக்குதல்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ நிறுவனங்களையும், குறிவைத்து நிகழ்த் தப்பட்டது என்பதை அகில இந்திய கத்தோலிக்க யூனியனோடு சேர்ந்த நாங்கள் பதிவு செய்தோம். 1998ல், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஏன் தமிழ்நாட்டின் ஊட்டியிலும் ஒரு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. குஜராத்தில் தான் மிக அதிகமான எண்ணிக்கையில் அது நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்தப்பட்ட முறையில் வித்தியாசம் இருந்தது. ஆனால், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் கிறிஸ்தவ சமுதாயம் செய்த, செய்து கொண்டிருக்கும் சேவைகளையெல்லாம் மீறி, தூரமாக இருக்கும் பகுதிகளில் கூட ஆதிவாசிகளுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தினர் செய்த சேவைகளை யெல்லாம் கூட கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லி அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் வேலை நடந்தது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினரின் சேவைகள் இருந்தாலும், அந்த சமுதாயமும் மதமாற்றம் செய்கிறது என்று சொல்லி கேவலப்படுத்தப்பட்டது. மறுபடியும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியது. குற்றவாளிகள் ஹாயாக திரிந்து கொண்டிருக்க நாம் அனுமதித்தோம்.

2002ல் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாமனைவரும் அறிவோம். முடிந்துபோன கதை அல்ல இது. ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கையில் படுகொலைகளை ஒரு சமூகமும், அரசும், நாடும் அனுமதிக்குமானால், குற்றவாளிகளை தண்டனைக்குரியவர்களாக அடையாளம் காட்டாது விடுமானால், பெரிய அளவில் தனிமைப்படுத்துதலையும், காழ்ப்புணர்வையும் தேக்கி வைக்க உதவும். ஒரு சமூகம் என்ற அளவிலும், அரசாங்கம் என்ற அளவிலும் நாம் இதைச் சரி செய்யத் தவறி விட்டோம். அப்படி ஒன்று நடந்தது என்று கூட நாம் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

29, பிப்ரவரி 2002-க்கு வெகுகாலத்துக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப் புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப் புத்தகங்களில் சிறுபான்மை சமூகத் தினரை கேவலப்படுத்தி எழுதுதல் இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்பட்டன. இனப்படு கொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

கம்யூனலிசம் காம்பாட் பத்திரிக்கையின் இனப்படுகொலை பற்றிய இதழின் தமிழாக்கத்தை நான் செய்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது சென்னையில் இருக்கும் தோழகளால் வெளியிடப்பட்டது. அதை நான் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமென்றே தமிழில் கொடுத்தேன். ஏனெனில் குஜராத்தில் ஒரு நிவாரண முகாமில் அவர் முதலமைச்சருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். நிவாரண முகாமுக்குள் செல்லக்கூடாதென எனக்கு மாவட்ட அதிகாரி தடை விதித்து இருந்தார். எனவே, நான் புர்கா அணிந்து உள்ளே சென்று தமிழ் இதழை ஜனாதிபதியிடம் கொடுத்தேன்.

நண்பர்களே, 29, பிப்ரவரி, 2009 இனப்படுகொலை நடந்து எட்டாண்டுகள் நிறைவடைந்திருக்கும். பெஸ்ட் பேக்கரி வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது. நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இன்றுகூட, சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் சிபிஐ இயக்குனர், சென்னை யைச் சேர்ந்த திரு. ராகவன் அவர்கள் தலைமையில் கோத்ரா, குல்பர்க், நரோடாகாம், நரோடா பாட்டியா, ஓட், மற்றும் சர்தார்பூர் படுகொலைகளை மறுபுலனாய்வு செய்து கொண்டிருக்கிறது.

வழக்கை உயிருடன் வைத்திருக்க மூன்று நான்கு ஆண்டுகளாக நாங்கள் உச்சநீதிமன்றத்தோடு போராட வேண்டியிருந்தது. காலம் கடந்துவிட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்திலேயே அழுகிச் சாகட்டும் என்று சொல்லி தடுப்பதற்கு தன் சக்தியையெல்லாம் பிரயோகித்துப் பார்த்தது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழ்நிலைகளில் வசிக்கும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்சலோடும் மனசாட்சியோடும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத்தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் துணிச்சல் நீடித்திருக்க எங்களில் சிலர் எங்களால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பணிந்துவிடவில்லை. உங்களைப் போன்ற மக்களின் ஆசிகளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஜஹீராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமையானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள்? உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய் சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த மது ஷிவாசுக்கு ஒரு மாதம்கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பு முறையில் எங்கோ தவறு உள்ளது. வேறுபாடு காட்டி நீதிமன்றத்தின் கோபத்துக்கு நான் ஆளாகி இருக்கிறேன்.

நான் இதையெல்லாம் ஏன் சொன்னேன் என்றால், குஜராத்துக்குப் பிறகு, ஒரிசாவும் கர்நாடகாவும் வந்துள்ளன. ஒரிசாவில் பயங்கரம் இன்னும் தொடர்கிறது. 35000 பேருக்கு மேல் நிவாரண முகாமில் உள்ளனர். ஜூலை மாதத்திலிருந்து இதுவரை நான் மூன்று முறை அங்கு சென்று வந்து விட்டேன்.

குஜராத்தில் இன்னும் கும்பல் கும்பலாக கல்லறைகள் உள்ளன. பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் நேசத்துக்கு உரியவர்களின் உடல்களை கேட்டுப் பெறுவதற்கும் முடியாமல் இருக்கின்றனர். குஜராத்தில் தற்போது எப்படி சூழ்நிலை இருக்கிறது? என்று பேரா. ஜவாஹிருல்லாஹ் என்னிடம் கேட்டார். இன்னும் கதை முடிந்துவிடவில்லை என்று சொன்னேன். தீவிரம் குறைந்து படுகொலைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கேமராக்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டன. சிறுபான்மையின உயர் பிரமுகர்கள் சமரசம் செய்து கொண்டு விட்டனர். இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன். சாட்சிகளும், பாதிக்கப்படடவர்களும்தான் இப்போது களத்தில் தனியாக உள்ளனர். நாம் இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு மேடையைத் தயார் செய்தோமெனில், காயங்களை மறுபடியும் திறப்பதாக நாம் குற்றம் சுமத்தப்படுகிறோம். நான் கேட்கிறேன், ரத்தம் ஓடுமாறு விடப்படாவிட்டால், எந்தக் காயமாவது குணமடையுமா?

ஒரிசா பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசே முன் நின்று நடத்திய பயங்கர வாதம்தான் குஜராத்தில் அரங்கேறியது. கிறிஸ்தவர்கள் மீதும், தலித்துகள் மீதும் நடத்தப்பட்டது பயங்கரவாதச் செயல்பாடுகள். பெண் குழந்தைகளைக் கருவில் கொல்வதும் பயங்கரவாதச் செயல்பாடுதான். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறோம் இன்று. ஆனால் நாம் எங்கே தொடங்கி எங்கே முடிக்கிறோம்?

கயர்லாஞ்சி, திருநெல்வேலியில் நடந்தது பயங்கரவாதச் செயல் இல்லையா? அது அந்தப் பகுதியில் அச்ச உணர்வை ஏற்படுத்தவில்லையா? பாம்பேயில் நடந்த ரயில்வே குண்டு வெடிப்புகள், 92, 93 படுகொலைகளுக்குப் பிறகு நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், அந்த ஆண்டுகளுக்குப் பிறகு பாம்பேயில் 12 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. வடகிழக்கு, காஷ்மீரையெல்லாம் விட்டுவிடலாம். அவை மெயின் ஸ்ட்ரீம் இந்தியாவுக்குள் வருவதில்லை. நமது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க வெளியிலிருந்து எதிரிகள் இருப்பார்கள். பல நூற்றாண்டுகளாக பல மதங்களையும் சேர்ந்த நாம் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கிறோம். அது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பிரிவோ, அல்லது அமெரிக்காவால் நிதி கொடுக்கப்பட்ட அமைப்புகளோ, ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யப்படைகளை வெளியேற்ற அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள்தான் மதரீதியான தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கின. அந்த வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது.

நம்மிடையே அமெரிக்க, இங்கிலாந்து அரசுகளால் அவிழ்த்துவிடப்பட்ட ஒரு மிருகம் நம்மிடையே உள்ளது என்று ஆசிப் ஜர்தாரி கூட இன்று சொல்கிறார். அந்த மிருகத்தின் கூர் நகங்களில் அகப்பட்டு பாகிஸ்தான் இப்போது வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. உள்நாட்டிலேயே வளரும் பயங்கரவாதத்தை அடக்க என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் நான் கேட்கும் கேள்வி. உள்நாட்டிலேயே முளைத்து வளர்ந்த அந்நியப்படுத்துதல், உள்நாட்டிலேயே வளர்ந்த வன்முறை. உள்நாட்டிலேயே வளர்ந்த அநீதி.

சீர்த்திருத்தப்பட வேண்டியவை

1.காவல்துறை

கடந்த 15 ஆண்டுகளில் நான்கு முக்கிய சீர்திருத்தங்கள் வேண்டுமென்று நாம் கேட்டு கொண்டிருக்கிறோம். ஒன்று, காவல் துறை சீர்திருத்தம். அது தொடர்பான சட்டதிட்டங்கள் எல்லாம் நமது காலனிய முதலாளியாக இருந்த பிரிட்டிஷாரால் வகுக்கப்பட்டவை. அவை நமது அடிமை மனப்பான்மை கொண்ட மக்கள் தொகையை அடக்கியாள்வதற்காக, நம் அரசியல் சாசனம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. நமது காவல்துறையை நாம் அரசியல் சாசன ரீதியாக அமைக்கவோ, ஜனநாயகப்படுத்தவோ இல்லை. எனவே காவல்துறையினர் இந்திய மக்களுக்கு சேவை செய்யவில்லை. மாறாக, இந்திய மக்களை அடக்கியாளவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த உறவுமுறை மாற வேண்டும். சட்டம் மாற வேண்டும்.

ஓய்வு பெற்ற நமது மூத்த காவல்துறை அதிகாரிகளும், 1975லிருந்து 1999 வரையிலான நேஷனல் போலீஸ் கமிஷன் அறிக்கைகளும் “காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை” என்று பலமாக சிபாரிசு செய்துள்ளன. ஆனால் நமது அரசியல் கட்சிகள், அது யாராக இருந்தாலும், காவல்துறை மீது உள்ள கட்டுப்பாட்டை இழக்க விரும்பவில்லை.

காவல்துறை சீர்திருத்தத்துக்கான கோரிக்கையை மக்கள் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். ஜவாஹிருல்லாஹ் போன்றவர்களாலும், இங்கு என் பேச்சை கேட்க வந்திருப்பவர்களில் பலராலும் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அறிவு ஜீவித்தனமான கோரிக்கை அல்ல. இது நமது பாதுகாப்பு தொடர்பான விஷயம். சார்பு எதுவும் இல்லாமல் காவல்துறை நடக்க வேண்டும் என்பதற்காக. சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக. காவல்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதற்காக. எனவே பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக்கையை நிச்சயம் முன்வைத்துப் போராட வேண்டும்.

2. நீதித்துறை

இரண்டாவது, நீதித்துறைச் சீர்திருத்தம். நீதித்துறை கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று நாம் இந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். இந்திய நாட்டின் குடிமகன் என்ற நிலையில், ஒருமுறை ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதென்றால், நீதிபதியின் நோக்கத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லையெனில், அந்த தீர்ப்பை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கு இருக்க வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் எல்லா ஜனநாயக நாடுகளிலும் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் நமது நீதித்துறைக்கு அதை விட்டுவிட மனசில்லை. ஆனால் அது நிச்சயம் ரத்து செய்யப்பட வேண்டியது. அது ஒரு தொன்மையான சட்டம். தவறான தீர்ப்புகளை விமர்சனம் செய்வதிலிருந்து அது நம்மைத் தடுக்கிறது. மக்களின் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எந்த அமைப்பும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நீதித்துறை மட்டும் இதற்கு ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்?

நாம் அரசியல்வாதிகளை திட்டுகிறோம். அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மக்களை சந்திக்கச் செல்கின்றனர். ஆனால், ஒரு காவல் துறை ஊழியரை ஒருமுறை நியமனம் செய்துவிட்டால், ஒரு நீதிபதியை ஒருமுறை நியமனம் செய்துவிட்டால், பிறகு அவர் மக்களின் விமர்சனத்துக்குள் எப்போதுமே வருவதில்லை. அவருடைய செயல்பாடுகளில் குறை காண்கின்ற வாய்ப்பு மக்களுக்கு எப்போதுமே கிடைப் பதில்லை. ஆனால் ஒரு நாகரீகமான நேர்மையான தணிக்கை அவசியம். யார் மீதும் சேற்றை வாரி இறைப்பது நமது நோக்கமல்ல. எந்த அமைப்பையும் குறைத்து மதிப்பிடுவது நமது எண்ண மல்ல.

ஆனால், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பன்வரி தேவி வழக்கில் நடந்தது போன்ற ஒரு தீர்ப்பு கொடுக்கப்படுமானால், உங்களுக்கு அது பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். பன்வரி தேவி ஒரு துணிச்சலான பெண். ராஜஸ்தானில் பால்ய விவாகத்துக்கு எதிராகப் போராடிய ஒரு தலித் அவர். அவர் ஒரு சதின். சதின் என்றால் சமூக ஊழியர் என்று பொருள். உயர்சாதி ஆண்களால் அவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அப்படி குரல் எழுப்பக்கூடாது என்பதற்காக அது ஒரு பாடமாம். ஆனால் அவர் உயர்நீதிமன்றத்துக்கு சென்றார். ஆனால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் என்ன சொன்னது? ஒரு உயர் ஜாதி ஆண் ஒரு தாழ்ந்த ஜாதிப் பெண்ணை கற்பழிப்பது சாத்தியமில்லை என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சொன்னது!

தலித் பெண்கள் இயக்கத்தில் இருக்கும் எனது நண்பர்கள் ஒரு ஸ்லோகன் சொல்வார்கள். பகலில் தீண்டத்தகாதவர், இரவில் தீண்டத்தக்கவர். இது சிரிப்பதற்கல்ல. நமது கலாச்சாரத்தின் துயரக் கதை இது. ஒரு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பு வழங்குவாரென்றால், அவரை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லையா? அதற்கு எதிராக போராட நமக்கு உரிமை இல்லையா?

3.உளவுத்துறை

நமது உளவுத் துறை பற்றியும் நான் கொஞ்சம் பேசி விட விரும்புகிறேன். ஐ.பி.மற்றும் ரா. இவை எந்த பாராளுமன்றத்தின் விமர்சனப் பார்வைக்கும் படாமல் இயங்கும் அமைப்புகள் இவை. எவ்வளவு நிதி அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது, எப்படி அந்தப் பணத்தை அவர்கள் செலவு செய்கிறார்கள், அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், எந்த இயக்கங்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள் எதுவுமே ஆராயப்படுவ தில்லை. எனவே காவல்துறை, நீதித் துறைக்கு அடுத்தபடியாக, உளவுத் துறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும், அதற்காக போராட வேண்டும் என்று மக்கள் தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய ஐ.பி.யில் ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம்களுக்கு மேல் பார்க்க முடியாது. ஒரு பொதுக் கூட்டத்தில் இந்த கருத்தை நான் பிரதம மந்திரிக்கு முன்னால் வைத்தேன். இந்திய ஐ.பி.யில் ஹிந்து வலது சாரியை நோக்கிய சித்தாந்த சாய்வு இருக்கிறது. நான் இதை மிகுந்த பொறுப்புணர்வோடுதான் சொல்கிறேன். ஏனெனில் நான் இதுபற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளேன்.

நான்டெட் வழக்கை நான் புலனாய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில், பூனாவில் பணி புரிந்து கொண்டிருந்த ஒரு மத்திய புலனாய்வு அதிகாரி ஒரு பஜ்ரங்தள் உறுப்பினருக்கு ஆயுதம் செய்வதும், பயன்படுத்துவதும் எப்படி என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். எனவே புலனாய்வுத் துறையும் மக்கள் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் உட்பட்டதாக வர வேண்டிய அவசியமுள்ளது.

முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எழுதிய மூன்று புத்தகங்களை இங்குள்ள அறிஞர் பெருமக்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன். நான் அவற்றைப் படித்துள்ளேன். அவர்கள் சொல்வதையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார்கள். இந்திய உளவுத்துறை தொழில்ரீதியான திறமைகளில் குறையுள்ளதாக உள்ளது என்பதுதான் அது. இந்திய அரசியல் சாசனத்தின்படி உளவுத் துறை சீர்திருத்தத்துக்கும் விமர்சனத்துக்கும் உட்பட்டதுதான்.

முதல் புத்தகம் Open Secrets: India’s Intelligence Unveiled மலாய் க்ருஷ்ண தாத் எழுதியது. இரண்டாவது புத்தகம் ஐனேயை’ள நுஒவநசயேட ஐவேநடடபைநnஉந: ளுநஉசநவள டிக சுநளநயசஉh யனே ஹயேடலளளை றுiபே. வி.கே.சிங் எழுதியது. மூன்றாவது புத்தகம் தமிழ் நாட்டில் பிரபலமான பி.ராமன் எழுதிய கூhந ஊடிறbடிலள டிக சுஹறு: னுடிறn ஆநஅடிசல டுயநே தயவு செய்து இப்புத்தகங்களைப் படியுங்கள். அதிர்ச்சியூட்டும் சில உண்மைகளை இப்புத்தகங்கள் சொல்லும், சுருக்கமாகச் சொல்வதானால், அரசியல் ரீதியான தாக்கம் கொண்டதாக உளவுத்துறை உள்ளது. உண்மையான உளவு இல்லை என்பதே.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க, ஒரு முன்னாள் அரசு ஆர்எஸ்எஸ் உதவியை நாடலாமா என்று கூட யோசித்தது என்று ஒரு புத்தகம் கூறுகிறது. இந்தப்போக்கு எவ்வளவு அபாயகரமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

4. கல்வித்துறை

மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான சவால்களைப் பற்றிப் பேசும்போது ஒரு சில ஆலோசனைகளை நான் வழங்க ஆசைப்படுகிறேன். அதில் முக்கியமானது கல்வி. 13 ஆண்டுகள் பள்ளி வாழ்க்கையில் நம் குழந்தைகளுக்கு நாம் தரும் பாடப்புத்தகங்கள், சொல்லித்தரும் வரலாறு, உருவாக்கும் சமூக உணர்வு இதெல்லாம் முக்கியம். தமிழ்நாட்டில் சரியாகத்தான் இருக்கும். ஆனால் குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பாடப்புத்தங்களில் ஜாதியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிகக் குறைந்த இடமே அளிக்கப்பட்டுள்ளது. பெயருக்காக. உடல் உழைப்புக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை. சொல்லப்போனால் உடல் உழைப்பை மரியாதைக் குறைவாகப் பார்க்கவே குழந்தைகள் கற்பிக்கப்படுகிறார்கள். மிகவும் ஜாதியம் சார்ந்த அணுகுமுறை. அதிலும் குஜராத் தான் மிகமிக மோசம். பொருளாதார ரீதியாக ஜெர்மனியையும் இத்தாலியையும் சக்தி மிகுந்த நாடுகளாக மாற்றியதற்காக ஹிட்லரும் முசோலினி யும் புகழப்படுகிறார்கள். மோடி இன்று குஜராத்தை மாற்றிக் கொண்டிருப்பதைப் போல.

எனவே என்னவிதமான வரலாற்றை நாம் நம் குழந்தைகளுக்குப் போதிக் கிறோம்? நாட்டில் இருந்த ஒவ்வொரு ஜாதியும் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வரலாற்றைச் சொல்கிறோமா? இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பெண்களுக்கு உறுதியான பங்கிருந்தது என்பதைச் சொல்கிறோமா? இன்னும்கூட அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறோமா? இல்லை. காலனிய சக்திகள் நம் நாட்டுக்குள் வருவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே, கிபி 58ல், மலபார் கடல் பகுதி வழியாக, தூய தாமஸ் என்பவர் மூலமாக, கிறிஸ்தவம் இந்தியாவுக்குள் வந்தது என்று சொல்கிறோமா? இஸ்லாம் வணிகர்கள் மூலமாக வந்தது என்று சொல்கிறோமா? சிந்துப் பகுதி படையெடுக்கப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, 110 ஆண்டு களுக்கு முன்பே, சேரமான் பெருமான் என்ற அரசன் முஸ்லிமாகி இஸ்லாத்தைப் பரப்பினான் என்ற வரலாற்றைச் சொல்கிறோமா?

இப்படியெல்லாம் சொல்லித் தராததனால், ஜாதியம் சார்ந்த வரலாறுதான் அவர்கள் மனதில் வேர் விடுகிறது. விடுதலை, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்காகவே பெருமளவில் கீழ்ஜாதி இந்தியர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறினர் என்ற வரலாற்றைச் சொல்கிறோமா? கேரளாவில் கொத்தடிமைச் சட்டம் ரத்தான போதுதான் அதிக அளவிலான மதமாற்றங்கள் நிகழ்ந்தன என்பதைச் சொல்கிறோமா? ஏனெனில் அடிமைகளாக இருந்த மக்கள் விடுதலை அடைந்த போது இஸ்லாத்திலோ, கிறிஸ்தவத்திலோ தங்கள் சுயமரியாதையும் கண்ணியமும் காக்கப்படும் என்று நம்பினார்கள்.

தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களுடைய பிரச்சனை இன்று ஓர் அரசியல் பிரச்சனை. இன்றைய காலகட்டம் உரிமை மறுக்கப்படும் காலகட்டமாக உள்ளது. சோழர்களின் ஆட்சிக் காலத்தில் எப்படி ஹிந்து மதம் தென் கிழக்கு ஆசியாவில் பரவியது என்றும் நாம் சொல்லித் தருவதில்லை. இதையெல்லாம் நாம் சொல்வதில்லை.

திடீரென்று நாம் நமது பாடப் புத்தகங்களில் இருந்து கான் அப்துல் கப்பார் கானைத் தூக்கிவிடுகிறோம். 1970களில் அவர் இருந்தார். பின்னர் திடீரென்று மறைந்து போனார். ஏனெனில், எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட ஒருவர், நாட்டின் அந்தப் பக்கத்தில் இருந்து கொண்டு பிரிவினையை எதிர்க்கிறார். அது அந்தக்கால முஸ்லிம்கள் எதற்காக போராடினார்களோ அதோடு ஒத்துப் போகவில்லை.

டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கரின் உரைகள் பற்றி நம் குழந்தைகளுக்கு நாம் எதுவும் சொல்லித்தருவதில்லை. ஜோதிபா புலே ஏன் பேசினார் என்று விளக்குவதில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே பெரியார் கற்பிக்கப்படுவதில்லை. மௌலானா அபுல் கலாம் ஆசாத், ஜும்ஆ மசூதியின் படிக்கட்டுகளில், இந்தியா பாகிஸ்தான் பிரிந்த நாளன்று நடந்தது என்ன என்பதை யெல்லாம் சொன்னால் நானும் நீங்களும் அழுது புலம்புவோம். ஆனால் இதெல்லாம் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படுவதில்லை.

நமது கல்வி அமைப்பில் உள்ள உள்ளடக்கத்தில் பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. நாம் சொல்லிக் கொடுக்கும் வரலாற்றில், சமூக சேவை யில் எல்லாம் பெண்களையும், சமுதாயத்தையும் நாம் எப்படி பிரதிநிதித்துவப் படுத்துகிறோம்? இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் ஒவ்வொரு சமுதாயமும் செய்த பங்களிப்பு என்ன? இதையெல்லாம் மனதில் கொண்டு நமது கல்வி உள்ளடத்தை நாம் சீரமைக்க வேண்டும்.

நமது தேசத்தின் அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பை எதிர்க்கும் இளம் மனதுகளை நாம் உருவாக்குகிறோம். இன்னும் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள மிகப் பெரிய ஆபத்து கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் அல்ல. மதச்சார்பற்ற தனியார் அறக்கட்டளைகளும் அல்ல. உலகமயமாதலின் காரணமாக, கல்வியில் இருந்து ஒருபக்கம் நாம் பின்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த சூழ்நிலையில் கல்விக்கூடங்கள் மூலமாக நமக்கு இருக்கும் பெரிய சவாலும் ஆபத்தும் ஆர்எஸ்எஸ்ஸின் சிஷு மந்திர், சரஸ்வதி சிஷு மந்திர் மற்றும் விஎச்பியின் ஏகல் வித்யாலயா ஆகியவையாகும். குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஒரிஸ்ஸா போன்ற மத்திய பழங்குடி இந்தியாவில், அந்த பழங்குடி இனத்தவருக்கு எந்த அரசும் கல்வி கொடுக்காத சூழ்நிலையில், விஎச்பி ஒரு ஏகல் வித்யாலயாவைத் திறந்து வைக்குமானால், உங்கள் குழந்தைகளை அந்த பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள் என்று அந்த பழங்குடியினரிடம் சொல்லும் தகுதியோ உரிமையோ நமக்கு எப்படி வரும்? இன்றைக்கு உள்ள பெரிய பிரச்சனை அதுதான்.

நமது நாட்டை ஆக்கிரமிக்கும் சவால்களை எதிர்கொள்ள விரும்பினால், சட்டத்தின் ஆட்சி’ தொடர்பான இந்த பிரச்சனைகள், மற்றும் கல்விக்கான சமூக மாற்றம் குறித்தான பிரச்சனை, இவையெல்லாம் தேர்தலின்போது நமது அரசியல் கட்சிகளின் பிரச்சனையாக மாற வேண்டும். இவற்றை மக்கள் முன் வைத்து அவை செல்ல வேண்டும். உங்களுக்கும் எனக்குமான அறிவு தளத்தில் இயங்கும் பிரச்சனைகள் மட்டும் அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டிருக்க முடியாது. தீவிரவாதம் நாட்டின் எந்த மூலையில், எந்த சமூகத்தில் இருந்து வந்தாலும், எல்லை தாண்டி வந்தாலும், நாம் அதை எதிர்க்கிறோம். அதுபோல, வெறுப்பை உமிழும், வெறுப்பைத் தூண்டும், வெறுப்பை வளர்க்கும் எல்லாப் பேச்சையும் நாம் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அசிங்கமான வசவு மொழிகளைத் தடை செய்ய வேண்டும். நம் நாடு துண்டாடப்படுவதை நாம் ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது.

மும்பை நன்றாக எதிர்வினையாற்றியுள்ளது. 26 நவம்பர் அன்று இழக்கப்பட்ட 180க்கும் மேலான உயிர்களில், 35 சதவீதத்துக்கு மேல் இறந்தவர்கள் முஸ்லிம்கள். வி.டி. ஸ்டேஷனில் இறந்தவர்கள் மட்டும் 56 பேர். சுட்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று துப்பாக்கி குண்டு பார்க்கவில்லை. ஏழு மாநகர்களிலும் இருந்த முஸ்லிம்கள் அந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பினர். பக்ரீதை மிகுந்த துக்கத்துடனேயே அவர்கள் கழித்தனர். சிறுபான்மையினரை பரீட்சை செய்து பார்த்துக் கொண்டே இருக்கக்கூடாது. அவர்கள் நம்மோடு தோளோடு தோளாக எப்போதுமே இருந்திருக்கிறார்கள். தீவிரவாதத்துக்கும், அவ்வகையான குண்டுகளுக்கும் எதிராக அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் நாம் அவர்களை நம்மோடே அழைத்துச் செல்ல வேண்டும். மிக்க நன்றி.

தமிழாக்கம்: நாகூர் ரூமி

நன்றி: தமுமுக தளம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.