தூத்துக்குடியில் ‘சிக்குன்குனியா நோய்’ குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவர் (வயது 57), கையில் தேசியக் கொடியைப் பிடித்தபடி கடலில் மிதந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த இவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு, இந்தியா பாக். நல்லுறவு, சேது சமுத்திர திட்டம், மன்னார் வளைகுடா அரிய உயிரினங்களை காப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், தூத்துக்குடி கடலில் பல முறை மிதந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தூத்துக்குடி வந்த முகம்மது இப்ராகிம், திரேஸ்புரம் கடலில் கையில் தேசியக் கொடியுடன் இரண்டு மணி நேரம் மிதந்தார். அவர் கூறும் போது, “ஏர்வாடியில் ‘சுனாமி’ மிதவை பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறேன். அதில் ‘சுனாமி’ தாக்கினால் உயிர்தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மீனவர்கள் உள்ளிட்ட 43 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
முஸ்லிம்கள் பொதுநலக் காரியங்களிலோ சமுதாய விழிப்புணர்ச்சியூட்டும் பணிகளிளோ ஈடுபடுவதில்லை என்ற கருத்திருப்பவர்களுக்கு, அவர்கள் தமது கருத்துக்களை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறும் விதமாக அமைந்துள்ள இன்னொரு சம்பவம் இது என்றால் மிகையாகாது.