
“தீவிரவாதிகளாக மாறும் பெண்கள்” என்ற தலைப்பில், இன்றைய (05-10-2014) தினத்தந்தியின் சென்னை பதிப்பில் “இந்த வார சிறப்பு விருந்து” பகுதியில் 13ஆம் பக்கத்தில் ஒரு விஷமச் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில், இஸ்லாமிய பெண்கள் பலர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அதிக அளவில் இணைந்து வருவதாகவும் அவர்கள் அதில் இணைந்த பிறகு தீவிரவாத செயல்களிலும் லவ் ஜிஹாதிலும் ஈடுபடுவதாக காழ்ப்புணர்வும் குரோதமும் கொப்பளிக்க எழுதப்பட்டுள்ளது.
“லவ் ஜிஹாத்” என்றால் போர்க்களத்தில் உள்ள தீவிரவாதிகளிடம் அவர்களின் இச்சைக்கு ஏற்றவாறு விபச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவதூறுச் செய்தி பதியப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இதுபோன்று தான் மாலைமலரில் ஹஜ்ஜுக்கு வருபவர்கள் தீவிரவாதிகள் என்ற செய்தியை வெளியிட்டனர். தமிழ் மக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்புக்கு பிறகு மாலைமலர் வெட்கி வருத்தமும் தெரிவித்திருந்தது.
முதல் பக்கத்திலும், கொட்டை எழுத்திலும் வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் பரப்பி விட்டு, எட்டாம் பக்கத்தில் பொடி எழுத்துக்களில் சாவகாசமாக வருத்தம் கேட்கும் தமிழ் ஊடகங்களின் கலாச்சாரம் ஆபத்தானது.
இவ்வாறான போக்கை எதிர்த்து பல்வேறு தமிழ் குழுக்களும், முஸ்லிம் இயக்கங்களும் தமது கண்டங்களைப் பதிவு செய்துள்ளன. அவதூறு பரப்பி, மத நல்லிணக்கத்தை தமிழகத்தில் குலைக்கும் தினத்தந்திக்கு எதிராக தமிழர்கள் வழக்குத் தொடரும் நிலை உருவாகியுள்ளது.
வருத்தம் தெரிவித்து ஓடிப் போன சூழலிலும் தினத்தந்தி இது போன்று தொடர்ந்து செய்து வருவது கவனிக்கத் தக்கது. அதே வேளையில் தினத்தந்தி தனது நம்பகத்தன்மையை இழக்கும் படியாக செய்திகளை பரப்புவதை எதிர்த்து தமிழகமெங்கும் வன்மையாக கண்டங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– அபூ ஸாலிஹா