குர்பானியின் சட்டங்கள்

அறுத்துப் பலியிடுவீர்!
Share this:

“குர்பானியின் இறைச்சியோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக, உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22: வசனம் 37)”

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக – ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளுள், எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டு ”ஹஜ்” எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை அடைந்து விட்டோம்.

”மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக!” (அல்குர்ஆன் 22:28) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று காலங் காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.

 

‘என் இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக” (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.


பின்
(அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன?” (மகன்) கூறினார், ‘என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள் (என்றார்).

 

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை, “யா இப்ராஹீம்! என்றழைத்தோம். ‘திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கின்றோம் என்று கூறினோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு நினைவூட்டலை) விட்டு வைத்தோம்” (அல்குர்ஆன், 37:100-108)

துல்ஹஜ் மாதம் ஹாஜிகளுக்கு மட்டும் இபாதத் மாதமன்று! நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினைவாக உலக முஸ்லிம்கள் அனைவரும் ”குர்பானி” எனும் பிராணிகளை அறுத்துப் பலியிடும் இபாதத்தை நிறைவேற்றும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே, துல்ஹஜ் மாதத்தில் அறுத்துப் பலியிடுதல் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

 

குர்பானி கொடுக்க நாடுபவர்

“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)


“குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

 

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். “சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது” என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ).

நடக்கக்கூடிய, அமரக்கூடிய, பார்க்கக் கூடிய உறுப்புகள் கருமை நிறமுடைய ஓர் ஆட்டை, குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வருமாறு நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். (ஆடு வந்ததும்) “ஆயிஷாவே கத்தியை எடுத்து வா!” என்றார்கள். பிறகு, “அதைக் கல்லில் தீட்டு!” என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)


குர்பானி பிராணிகளை வீட்டில் வளர்ப்பதும் நபி வழியே!

‘மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.” (புகாரி, தஃலீக்).


ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் குர்பானி கொடுக்கலாம்?

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பர். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து,  நீர் பார்க்கக்கூடிய (பெருமைக்காகப் பிராணிகளை அறுக்கும்) இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தப்ரானீ)


“குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக் கொள்ளங்கள்; தர்மமும் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


எனவே, ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதி படைத்தவர்கள் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் அறுத்துப் பலியிட்டு தர்மம் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்து இருக்கிறார்கள் எனும் அறிவிப்பின் மூலம் கூடுதலாக அறுப்பது ஆகுமானதே என்று விளங்கிக் கொள்ளலாம்.


கூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகமோ ஒரு மாடோ குர்பானியாகக் கொடுக்கலாம்.

ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி இப்னுமாஜா)


அறுப்பது பெருநாள் தொழுகைக்கு முன்பா? பிறகா?

“இன்றைய நாளில் நாம் முதலாவதாகச் செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்குக் குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர், “என்னிடத்தில் ‘முஸின்னாவை’ விடச் சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?)” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். “முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இவ்வாறு (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


எங்கு அறுப்பது?

வீட்டிலும் அறுக்கலாம். ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம்.

முஸல்லா என்னும் திடலில் நபி(ஸல்) அவர்கள் பலிப் பிராணிகளைஅறுப்பவர்களாக இருந்தனர். (புகாரி , அபூதாவூத்)

“ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு!” எனும் ஹதீஸிலிருந்து வீட்டில் வைத்தும் அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.


பெண்கள் அறுக்கலாமா?

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி)


குர்பானி கொடுக்கும் நாட்கள்

“தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்).

துல்ஹஜ் மாதம் பெருநாள் தினமாகிய பிறை 10இன் பெருநாள் தொழுகைக்குப் பிறகிலிருந்து பிறை 13வரை குர்பானி கொடுக்கலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!

இது ஒரு மீள் பதிவு

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.