இஃவான்கள் இலக்கை அடைவார்களா?

Share this:

நபியவர்கள் கூறினார்கள் “அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பிவைக்கிறான்” (அபூதாவூத்)

புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்றபோது,மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல், மார்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டுவருதல் போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர். (பத்ஹுல் பாரி).  அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதற்கு விளக்கம் அளிக்கின்றபோது, மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்துதல் என்றனர்.

இந்த இரண்டு விளக்கங்களும் ஒன்றையொன்று முழுமைப் படுத்துவதாகவே காணப்படுகின்றன.  அந்த வகையில் புனர்நிர்மாணம் என்பது இஸ்லாம் பற்றிய புரிதல், அதன் மூலமாக அல்குர்ஆன் சுன்னாவிற்கு மீளல்.  அதாவது எந்தக்கலப்புமின்றி குர்ஆன் சுன்னாவிலிருந்து தூயவடிவில் இஸ்லாத்தை விளங்கி அதனை நாம் வாழ்கின்ற காலத்தின் பாஷையில், வடிவத்தில், இயல்பில் நடைமுறைப்படுத்தல் என பொருள்படும்.

அந்தவகையில் புனர்நிர்மாணம் என்பது நபியவர்களது தாஃவா இந்த உலகில் எதை சாதிக்க நினைத்ததுவோ அல்லது சாதித்ததுவோ அதனை மீண்டும் இந்த உலகில் சாதித்துக்காட்டுவதுதான்.  நபியவர்களது தாஃவா, இஸ்லாத்திற்கான முதல் நிர்மாணம், அதனை புனர்நிர்மாணம் செய்வதென்பது அதே பணியை மீண்டும் மேற்கொண்டு அதே இலக்கை அடைதல் என்பதாகும்.  நபியவர்களது தாஃவாவின் இலக்கு என்ன? முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுதல், அவர்களுக்கு தலைமையை வழங்குதல், இந்த முழு உலகமும் இஸ்லாத்தின் வழிக்காட்டுதலில் இயங்க வேண்டும் என்பதே.  இதுதான் நபியவர்களது பணி. இதைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.

“இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.  இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்.  இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; பாதுகாவலர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன், மிகச் சிறந்த உதவியாளன்.” (அல்குர்ஆன் 22:78)

நபியவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை.  முஸ்லிம்கள் மனித சமூகத்தின் தலைமை.  அதற்காகத்தான் அல்லாஹ் முஸ்லிம்களை தேர்வு செய்தான் என்கிறது இந்த அல்குர் ஆன் வசனம்.

உலகிற்கு வழிகாட்டி தலைமையை வழங்கும் இந்தப் பணிக்காகத்தான் கிலாபத் அவசியப்பட்டது.  தலைமையை வழங்கும் அதிகார மிக்க இடம்தான் கிலாபத். நபியவர்களின் முதல் நிர்மாணம் இந்த இலக்கை அடைந்தது.பின்னர் நீண்ட காலம் உலகிற்கு வழிக்காட்டி, தலைமையை வழங்கியது.  ஆனால் 1924ம் ஆண்டுடன் அது சரிந்து வீழ்ந்தது.  இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது.  அதன் இலக்கு என்ன? நபியவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும்.  அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது.

1928ம் ஆண்டு மார்ச் மாதம், நபியவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்; காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது.  நபியவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது, எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ, அதேபோன்று, சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது.  அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.

இந்த இயக்கம் ஸூஹைபுர்ரூமி போன்ற, பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது.  இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து நீங்கள் குறிப்பிடுவது போன்று பல பிரச்சனைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி? நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்.  ஆனால் என்ன செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது.  நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா? என்று கேட்டார்கள்.  அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள்.  அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் என்பது.  இந்த நிகழ்வு 1928ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வுகள் நடந்துமுடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவா காணப்படுகிறது.  இன்னும் 21 வருடங்களில், 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப்பணி அதன் உச்சத்தை அடைந்திருக்கும்.  அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற, அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.

இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா? இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப்போகிறது.  அல்லாஹுத்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக்கேளுங்கள்:

“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.” (அல்குர்ஆன் 2:261)

இஸ்லாமிய தாஃவா என்பது, அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது.  எழு நூறு மடங்கு விளைவைத்தரக்கூடியது.  இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள்.

சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப்பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாஃவாவுக்காக செலவு செய்யும் நாணயங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப்பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவு செய்யும் நேரங்கள், மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக்கினால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவு செய்யும் நேரங்கள், மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப்பார்த்தோம் எனில், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.

எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில், 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக, தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம்தான் இருக்கப்போகிறது.  அதற்கான் பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது.  அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

நன்றி: மீள்ப்பார்வை ஏப்ரல் 2007


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.