சத்தியமார்க்கம்.காம்

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-2) print Email
Serial - Islamic C Articles
ஞாயிறு, 19 ஆகஸ்டு 2007 17:04

{mosimage}மக்காவில் அமைந்திருக்கும் காபாவை, உலக முஸ்லிம்கள் புனித ஆலயமாகத் தமது வணக்க வழிபாட்டை அதை நோக்கி அமைத்துக் கொள்கிறார்கள். காபா ஆலயத்தை வன்முறை நோக்கத்தோடு தாக்கி அழிப்பதற்கு எவரேனும் முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை திருக்குர்ஆன் 105வது அத்தியாயம் கூறுகிறது. அதற்கான வரலாற்று சான்றுகளை பகுதி- 1ல் காணலாம்.

மேலும்,

''ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) காபாவை வன்முறையால் அழிக்க வருபவர்களை இறைவன் அழித்து விடுவான் என்பதை மேற்காணும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் காபாவை எவராலும் இடித்து அழித்துவிட முடியாதா? என்றால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை!

''அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் காபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

''(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறும் இஸ்லாம், காபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடையர்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறுகிறது. ஒரு காலகட்டம் வரை காபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் காபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம். அப்போது காபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை இறைவனும் தடுக்கமாட்டான். (இது இறுதி நாளுக்கு நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்)

''யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தாரின் வருகைக்குப் பிறகும் காபா ஆலயம் இருக்கும் என்பது நபியின் வாக்கு!

இஸ்ரேலியத்தனம்

"காபா ஆலயத்தை சில தடவைகள் இடித்துவிட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள். அதனால் காபாவை இடிப்பதை அல்லாஹ் எந்த நேரமும் தடுத்துக்கொண்டிருக்க மாட்டான்" என்று சிலர் புரியாமல் விளங்கி வைத்திருக்கிறார்கள். ஒன்றை இல்லாமல் அழித்து நாசப்படுத்துவதற்கும், அதையே அழகான முறையில் செப்பனிடுவதற்காக அகற்றி மீண்டும் கட்டுவதற்கும், எண்ணத்தாலும், செயலாலும் வேறுபாடுகள் இருக்கிறது.

வரலாற்றுக் காலங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாத மிகப் பழமையான காபா, ஆலயமான வடிவத்தை இழந்து, அடித்தளம் மட்டுமே எஞ்சியிருந்தது எனத் திருக்குர்ஆன், 002:127 வசனம் கூறுகிறது. அங்கு ஏற்கெனவே மனிதர்கள் வாழ்ந்து, பிறகு மக்கள் எவரும் அங்கு வசித்திருக்கவில்லை. காபா ஆலயம் பராமரிப்பு இல்லாத நிலையில்  இயற்கையின் கால மாறுபாட்டால் சிதிலத்திற்குள்ளாகி ஆலயத்தின் கட்டிடம் தரைமட்டமாகியிருந்தது. (இந்த அழிவை இறைவன் ஏன் தடுக்கவில்லை? என்ற கேள்வியெழாமல் இருக்க) மனிதர்கள் வசிக்காத பிரதேசத்தில் ஆலயம் அவசியமில்லை. மேலும், காபா ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படும் காலத்தை இறைவனே நன்கு அறிந்தவன்.

ஒரிறைக் கொள்கைப் பிரச்சாரம் துவக்கப்பட்டு, இஸ்லாத்தில் தொழுகை கடமையாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொழும் கிப்லா - முன்னோக்கும் திசை பைத்துல் மக்திஸை - மஸ்ஜித் அல்-அக்ஸாவை நோக்கி இருந்தது. அப்போது முஸ்லிம்களின் கிப்லா யூதர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் மக்திஸை முன்னோக்கியே, - இந்த உம்மத்தின் முதல் முஸ்லிமாகிய நபி (ஸல்) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் - தொழுது வந்தனர். இந்த கிப்லா மாற்றப்பட வேண்டும், முஸ்லிம்களின் தொழுகையின் கிப்லாவாக - முன்னோக்கும் திசையாக காபாவை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்பதே அண்ணல் நபியவர்களின் விருப்பமாக இருந்தது, நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இதற்காக அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டும், பணிந்து வேண்டிக்கொண்டும் இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிராத்தனைக்கேற்ப கிப்லா மாற்றம் தொடர்பான இறையுத்தரவு வந்தது. இது இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: அல்குர்ஆன், 002:144, 149, 150)

இந்தக் கிப்லா மாற்றம் நிகழ்ந்தபோது நயவஞ்சகமும், சந்தேகமும் கொண்ட சிலருக்கும், யூத இறைமறுப்பாளர்களுக்கும் ஐயமும், தடுமாற்றமும் ஏற்பட்டன. முஸ்லிம்களை நோக்கி, ''ஏற்கெனவே இருந்த அவர்களின் கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பியது எது?'' என்று  கேட்பவர்களுக்கு பதிலடியாக:

மனிதர்களில் சில மதியீனர்கள், ''ஏற்கெனவே (முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த அவர்களது 'கிப்லா' விலிருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?'' என்று கேட்பார்கள். ''கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்'' என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன், 002:142) என்ற இறைவசனம் அருளப்பட்டது.

காபாவை முன்னோக்கி கிப்லா திருப்பப்பட்டதும், புனித இறையில்லமான காபாவைப் பற்றி இங்கு தொடங்கிய விஷமத்தனமான, யூதத்தனமான அவதூறு விமர்சனங்கள் இன்றும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

குறைஷியர் காபாவைக் கட்டியது.

நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித காபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: காபாவின் கட்டிடமானது, நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் - கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. காபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்.

''குறைஷிக் குலத்தாரே! காபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது'' என்று சொல்லிக்கொண்டு, குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.

பின்னர் குறைஷியரில் உள்ள பல கோத்திரத்தாரும் காபாவைக் கட்டுவதற்காகக் கற்களைச் சேகரித்தனர். பின்னர் அவற்றைப் பயன்படுத்தி 'ஹஜருல் அஸ்வத்' - கருப்புக் கல் இருக்கும் மூலை வரை காபாவைக் கட்டினார்கள். கருப்புக் கல்லை அதற்குரிய இடத்தில் பதிப்பது யார்? என்பது தொடர்பாக அவர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. அந்தக் கல்லை அதற்குரிய இடத்தில் தாமே தூக்கி வைக்க வேண்டும் வேறு யாரும் அதைச் செய்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு கோத்திரத்தினரும் நினைத்தார்கள்.

குறைஷியர்கள் இதற்காக சண்டையிட்டுக் கொள்வதற்கும் தயாராயினர். இதே நிலையில் நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. அப்போது குறைஷியர்களிலேயே மூத்த வயதினரான அபூஉமய்யா பின் அல்முஃகீரா மக்ஸுமி என்பவர், குறைஷிக் குலத்தாரே! யார் இந்த ஆலயத்தின் வாசல் வழியாக அதிகாலையில் முதன்முதலில் நுழைகிறாரோ அவரை இந்தப் பிரச்சனையில் நடுவராக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர் உங்களிடையே தீர்ப்பளிப்பார்'' என்று கூறினார். குறைஷிகள் அவ்வாறே செய்வதாகக் கூறி, கலைந்து சென்றனர்.

மறுநாள் அதிகாலையில் ஆலயத்தின் வாசல் வழியாக முதன்முதலில் உள்ளே நுழைந்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தாம். (இது நபித்துவத்திற்கு முன்பு நடந்தது. ஆனாலும் இது அனைவரும் அறிந்த பிரபலமான செய்தி.) நபி (ஸல்) அவர்களைக் கண்ட குறைஷியர், இதோ முஹம்மது வந்துள்ளார், நம்பத்தகுந்தவரான இவரை நாங்கள் முழு மனதுடன் ஏற்கிறோம் என்றனர்.

(இங்கே குறைஷியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தால் நபித்துவ வாழ்விற்கு முன்பு நபியவர்களின் மீது குறைஷியர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது. குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் மற்ற குலத்தாருக்கு எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தமக்கு வேண்டாத குலத்தார் யாராவது ஆலயத்திற்குள் முதலில் வந்திருந்தால் அது மற்ற குலத்தாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் ஆலயத்தின் வாசல் வழியாக நுழைந்தது குறைஷியர் அனைத்து குலத்தாருக்கும் திருப்திகரமாக இருந்தது. அந்த அளவுக்கு எல்லா மக்களிடமும் நற்பெயர் பெற்றிருந்தார்கள். நபியவர்களை ''அல்அமீன்'' நம்பிக்கைக்குரியவர் என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.) 

நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அந்த மக்கள் செய்தியைத் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஒரு துணியைக் கொண்டு வாருங்கள்' என்றார்கள். அது கொண்டு வரப்பட்டது. கருப்புக் கல்லைத் தமது கையால் அந்தத் துணியில் வைத்த நபி (ஸல்) அவர்கள், ''இந்தத் துணியின் ஒவ்வொரு ஓரத்தையும் ஒவ்வொரு கோத்திரத்தாரும் பிடித்துக்கொண்டு அனைவருமாகச் சேர்ந்து அதைத் தூக்கிக் கொடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே அவர்கள் தூக்கித் தர, அந்தக் கல் அதற்குரிய இடத்திற்கு வந்தபோது தமது கையால் அதை உரிய இடத்தில் பதித்துப் பூசினார்கள். (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது மறுமை நாள்வரை என்றென்றும் உண்டாகட்டும்)

நபித்துவ வாழ்விற்கு முன், குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டிய அந்த அறப்பணியில், நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக்கட்டிய காபாவின் சுவர்கள் பலவீனப்பட்டதால் குறைஷியர் காபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்துக் கட்டினார்கள். ஆனால் இப்ராஹீம்(அலை) அவர்கள் எழுப்பிய காபாவின் அளவை சுருக்கி விட்டார்கள். இதற்குக் காரணம் குறைஷியரிடம் பொருளாதாரம் இல்லாமலிருந்ததேயாகும்.

(மீண்டும் அடுத்த பகுதியில், இறைவன் நாடட்டும்)\
ஆக்கம்: அபூமுஹை
கருத்துக்கள் (13)add comment

எழுதியவர்: செய்யது உஸ்மான் , August 20, 2007 00:07

சகோதரர் அபுமுஹை அருமையாக எழுதியிருக்கிறார்கள். இந்த கருப்புக்கல் நிகழ்ச்சி நம்மால் போற்றப்படும் நிகழ்ச்சியாகும். http://en.wikipedia.org/wiki/Image:Mohammed_kaaba_1315.jpg மேற்கண்ட இணைப்பில் அதனை நமது முன்னோர் வரைந்து வைத்திருப்பதையும் பார்க்கலாம்.



எழுதியவர்: அபூ முஹை , August 20, 2007 06:11

உங்கள் முன்னோர்கள் வரைந்த படத்தில் இஸ்ரேலியத்தனம் மிக நன்றாகப் பளிச்சிடுகிறது நன்றி!



எழுதியவர்: muslimeen , August 20, 2007 11:50

Bismillahirrahumanirraheem சரியாகச்சொன்னீர்கள் அபூ முஹை.



எழுதியவர்: செய்யது உஸ்மான் , August 21, 2007 03:21

அபு முஹை மிகவும் நன்றாக வரலாறு அறிந்தவர் என்று நினைத்திருந்தேன். அது சரியல்ல போலிருக்கிறது. இந்த படத்தை வரைந்தவர்கள் இஸ்ரேலியர்கள் அல்ல. வரலாறு தெரியாத அபுமுஹை என்ன எழுதப்போகிறார் என்று தெரியவில்லை. நன்றி



எழுதியவர்: இப்னு ஹமீது , August 21, 2007 09:08

//இந்த கருப்புக்கல் நிகழ்ச்சி நம்மால் போற்றப்படும் நிகழ்ச்சியாகும்.// இஸ்ரேலியத் தனத்தின் எடுத்துக்காட்டாக வந்திருப்பவர் சொன்னது. நம்மால் என்று இவர் ஒப்புக் கொண்டிருக்கிறாரே, அதற்கு நன்றி சொல்ல வேண்டும். //வரலாறு தெரியாத அபுமுஹை என்ன எழுதப்போகிறார் என்று தெரியவில்லை.// முதலில் உங்களுக்கு ஏன் அய்யா இவ்வளவு உள்ளூர நடுக்கம்? வரலாறு தெளிவாகப் பதியப்பட்டுள்ளது, வீக்கிபீடியா மட்டுமே வரலாறு இல்லை. உங்களைப் போல் சிலர் விக்கிபீடியாவில் தகிடுதத்தம் செய்ததையும் செய்தியாக சத்தியமார்க்கம் தளத்தினர் போட்டிருக்கிறார்கள்.



எழுதியவர்: அபூ முஹை , August 21, 2007 11:23

உருவப்படங்கள் வரைவதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது. ஒரு முஸ்லிம் உருவப்படத்தை வரைய மாட்டார், வரைபவர் பெயர் தாங்கியாக இருப்பார். முஸ்லிமாக இருந்தாலும் உருவப்படங்களை வரைவது இஸ்லாத்திற்கு எதிரானது. இஸ்லாத்தை ஏற்று, இஸ்லாத்திற்கு எதிரானதைச் செய்பவர் இஸ்ரேலியர் அல்ல. அந்த எதிரான காரியத்தில் மட்டும் அவரிடம் இஸ்ரேலியத்தனம் இருக்கிறது என்று பொருள். ஒரு முஸ்லிம் சிலைகளை வணங்கினால் இது காஃபிர் தனம் என்று சொல்வது எப்படி தவறில்லையோ, உருவப்படங்களை வரைந்ததை அதுவும் நபி (ஸல்) அவர்களை உருவமாகச் சித்திரித்தவன் முஸ்லிமாக இருந்தாலும் அச்செயல் இஸ்ரேலியத்தனம். //சகோதரர் அபுமுஹை அருமையாக எழுதியிருக்கிறார்கள்// என்று சொன்னவர், அவரின் முன்னோர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை ஓவியமாக வரைந்த படத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக எனக்கு வரலாறு தெரியாது என்று வரலாற்றை மாசுபடுத்துகிறார். இவர் நல்ல புத்திசாலியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? நானெழுதிய வரலாற்றை ஆதாரங்கள் கொண்டல்லவா மறுத்திருக்க வேண்டும்! அப்படிச் செய்யாமல் இவர் என் மீது பழிசுமத்தியிருப்பது இஸ்ரேலியத்தனம். இஸ்ரேலியர்களே எந்த ஆதாரமுமின்றி தாராளமாக களங்கப்படுத்துவார்கள் - களங்கப்படுத்தினார்கள் இஸ்லாத்தை! முஸ்லிம்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நன்றி!



எழுதியவர்: ரத்னவேல் , August 21, 2007 13:30

அய்யா, இதை அறியாமையில் கேட்கிறேன். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விஷயம், இந்துக்களிடையே சிவலிங்க பிரதிஷ்டையை ஒத்திருக்கிறதே. காபாவில் ஒரு கறுப்புக் கல்லுக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரவேண்டும். முகமது தொட்டார், முத்தமிட்டார் என்பதற்காக ஏன் முஸ்லீம்களும் அதையே செய்ய வேண்டும். எல்லா சிலைகளையும் உடைத்தது போல அதையும் உடைத்து தூக்கி எறிந்துவிட வேண்டியதுதானே? முன்கூட்டியே உங்கள் பதிலுக்கு நன்றி சொல்லிவிடுகின்றேன்.



எழுதியவர்: muslimeen , August 21, 2007 15:44

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் முஸ்லிம்கள் கருப்புக்கல்லை நிச்சயமாக வணங்கும் பொருளாக கருதுவதில்லை.அந்தக்கல்லுக்கு எந்த சக்தியுமில்லை.அஜ்ருல் அஸ்வத் என்றழைக்கப்படும் இந்தக்கல் சுவனத்திலிருந்து இந்த உலகுக்கு அனுப்பபட்டதாக நபிகளார் கூறியுள்ளார்கள்.ஒரு முறை இந்தக்கல்லை ப்பார்த்து உமர்(ரலி...)அவர்கள் கூறினார்கள்,'உனக்கு எவ்வித சக்தியுமில்லை.நபியவர்கள் உன்னை முத்தமிட்டார்கள் என்ற காரணத்தினாலன்றி வேறு எதற்காகவும் நான் உன்னை முத்தமிடவில்லை'என்று. கறுப்புக்கல்லை முத்தமிடுதலை இவ்வாறுப்புரிந்துக்கொள்ளலாம்,அதாவது வேறு ஒரு உலகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருப்பொருளை மக்கள் அதை நுகர்ந்துப்பார்ப்பதும் தொட்டுப்பார்ப்பதும் இயல்பு.இதுவோ சுவனத்திலிருந்து இவ்வுலகில் உள்ள ஒரேப்பொருள் என்பதால் இதனை நபியவர்கள் முத்தமிட்டிருக்கலாம்.உதாரணத்திற்கு ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு போய்விட்டு வரும்பொழுது அ-ங்குள்ள மண்ணைக்கொண்டு வந்தபொழுது அதனை மக்கள் அதியசத்தோடு பார்த்ததும் நுகர்ந்துப்பார்த்ததும் நினைவிருக்கலாம்.அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.



எழுதியவர்: ராஜா , August 22, 2007 03:52

அந்த கல்லின் ஒரே ஒரூ துணுக்கை நாசாவுக்கு கொடுத்தால் ஒரே வினாடியில் அது எந்த கிரகத்தை சேர்ந்த கல்,எத்தனை பழமையானது,அதன் வரலாறு என்ன என்பதை எல்லாம் சொல்லிவிடுவார்கள். நாம்தான் அதனை வணங்குவதில்லையே! ஆராய்ச்சி செய்து பார்த்தால் என்ன தவறு?



எழுதியவர்: மு முஹம்மத் , August 22, 2007 07:38

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே இந்தக் கறுப்பு கல் வணங்கப் பட வில்லை என்பதற்கு அழகான விளக்கங்கள் அளிக்கப் பட்டுள்ளன, மேலும் இது ஹஜ்ஜின் தவாப் எனும்( ஏழு முறை சுற்றி வலம் வருதல் ) எனும் கிரியை துவக்கவும், ஒவ்வொரு சுற்றை முடிக்கவும், ஏழு முறை சுற்றுதலை கணக்கிடவும். அடையாளமாகவும் இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஆகும். அல்லாஹ் மிக அறிந்தவன் மு முஹம்மத்



எழுதியவர்: haneefm , August 22, 2007 14:11

அஸ்ஸலாமு அலைக்கும் மரியாதைக்குறிய கருத்து தொரிவிக்கும் அனைத்து தர நண்பர்களுக்கும் இதன் முலம் நான் தெரிவிப்பது என்னவென்றால், உங்களால் மற்றவர்களுக்கு [மாற்று மத நண்பர்களூக்கு ]விளக்கம் குடுக்கும் போது உண்மையான ஆதாரங்களையும் இன்னும் குர்கானையும் ஹஃதிஷையும் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் இதன் முலம் நீங்கள் உண்மையைக்கொண்டு விளக்கம் குடுக்ககூடியாவர்களா இருப்பீர்கள் ஹஃணிப்-குவைத் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்



எழுதியவர்: மும்பை தமிழன் , August 23, 2007 06:36

அன்பு சகோதரர் ராஜா அவர்களே.. தாங்கள் காபாவின் ஹஜ்ருல் அஸ்வத் என்பது ஏதோ நமது கையில் உள்ள ஒரு பொருள் என்பதை போல் அல்லது உங்களுக்கு யாரோ அதை கொடுக்க முன் வந்து அதை சுவனத்தின் பொருள் என்று கூறி மிகப்பெரும் தொகையை பெற நாடி ஏமாற்றியுள்ளதால் கூறுவதைப் போல் தங்கள் கருத்துள்ளது. அது சுவனத்தில் இருந்து வந்தது என்பதில் சிலருக்கு நம்பிக்கையில்லை என்பதற்காக அது சுவனத்தில் இருந்து வரவில்லையென்றாகிவிடாது. அதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் நாஸா-வினர் ஒரு வினாடியில் அது எத்தனை பழமையானது என்று அனுமானித்து சொல்லுவார்கள் என்பதை ஒரு வாதத்திற்கு ஒப்பு கொண்டாலும் அது சுவனத்தை சேர்ந்தது என்பதை கூற அவர்கள் சுவனத்திற்கு சென்று வர வில்லையே என்று நான் கேட்கமாட்டேன். ஆக நாஸாவினர் கூறினால் நம்ப தயாராக இருக்கும் நீங்கள், இது சுவனத்தில் இருந்து வந்தது என்று கூறிய இறைத்தூதர் அவர்கள் மூலம் வழங்கப்பட்ட வாழும் அற்புதமாகிய திருகுர் ஆனின் கூற்றுகள், இன்றும் அறிவியலும் விஞ்ஞானமும் கூறுவதற்கு சற்றும் முரணில்லாத நிலையில் இருப்பதும், இதைக் கூறிய நிகரற்ற உண்மையாளர் முஹம்மது நபி(ஸல்)அவர்களுக்கு அவர் நிகரற்ற நம்பிக்கையாளர், உண்மையாளர், நிகரற்ற நேர்மையானாவர், வாய்மையானவர் என்பதற்கு வரலாற்றில் பல அறிஞர்களும் ஏன் அவரையும் அவர் கொள்கையை எதிர்த்தவரும் சான்று கூறியுள்ளார்கள் என்பதை அறியாமல் அவர் கூற்றை நம்ப மறுப்பதும் பற்றி என்ன வென்பது. வரலாற்றின் காலத்தில் வாழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்களையும் அவர்களை பின்பற்றி வாழும் பல கோடி முஸ்லிம்களையும் சம்பந்தப் படுத்தும் விஷயத்தில் இப்படி கருத்து கூறுவது முறையல்ல.



எழுதியவர்: -நிர்வாகி (சத்தியமார்க்கம்.காம்) , August 23, 2007 06:53

இங்கே மேலும் சில வாசகர்கள் தெரிவித்திருந்த கருத்துக்களைத் தனிநபர் தாக்குதல்களாக சத்தியமார்க்கம்.காம் கருதுவதால் தள விதிகளின்படி நீக்கியுள்ளோம். தொடர்ந்து தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். புரிந்துணர்வுக்கு நன்றி! புதிய வாசகர்கள் அன்புகூர்ந்து தள விதிமுறைகளை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். http://www.satyamargam.com/index.php?option=com_content&task=category&ionid=13&id=38&Itemid=85 இத்தலைப்பிலான கருத்துக்கள் இத்துடன் பின்னூட்டப் பகுதியில் நிறுத்தப்படுகின்றன. தேவைப்பட்டால், தொடரும் கருத்துக்கள் 'விவாத அரங்கம்' பகுதியில் புதிய தலைப்பில் பதியப்படும் என்பதையும் அறியத்தருகிறோம். தொடரும் தங்கள் அனைவரின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி! -நிர்வாகி (சத்தியமார்க்கம்.காம்) ________________________________



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top
You are here  : முகப்பு