போதும், நிறுத்திக் கொள்ளுங்கள்!

போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்!
Share this:

பட்லா ஹவுஸ் ஃப்ளாட் எல்-18, ஜாமிஆ நகர், புதுடெல்லி. மூவரை பலிகொண்ட இடம்!

குற்றமற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் காவல்துறை சுட்டுக் கொன்றொழிக்கும் தொடர் நிகழ்வுகளில் இன்னுமொரு சாட்சி!

 

டெல்லித் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ‘இந்தியன் முஜாஹிதீன்’ என்ற புதுக் கண்டுபிடிப்பான டெல்லிக் காவல்துறையின் புளுகுமூட்டைகள், ‘தகவல் அறியும் உரிமை’ச் சட்டத்தால் இப்போது அவிழ்த்துக் கொட்டப்பட்டு, அழுகிய – அழுகி நாறிப்போன துறையாக டெல்லிக் காவல்துறை ஆகிப்போனது.

19.09.2008 பட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரின்போது டெல்லிக் காவல்துறையால் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இருவருள், ‘ஜாமியா மில்லியா இஸ்லாமிய்யாக் கல்லூரி’யின் இரண்டாமாண்டு மாணவர் ‘ஆதிஃப் அமீன்’ (24) ஒருவர். “தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்டு, காவல்துறையினரோடு துப்பாக்கிச் சண்டையிட்டபோது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஆதிஃப் உயிரிழந்தார்” என்பதாக டெல்லிக் காவல்துறை, மக்களின் காதுகளில் கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் பூச்சுற்றியது.

“டெல்லிக் காவல்துறையினரால் அநியாயமாகக் கொல்லப்பட்ட என் மகனின் உயிர், மீண்டு வரப்போவதில்லை. ஆனால் அவன் மீது அபாண்டமாகச் சுமத்தப்பட்ட ‘இந்தியன் முஜாஹிதீன்’ பழியும் ‘தீவிரவாதி’ என்ற களங்கமும் இப்போது முற்றிலும் துடைத்தெறியப் பட்டுவிட்டது. இனி,யாரும் என் மகனைத் தீவிரவாதி என்று சொல்ல இயலாது” என்று நிம்மதியுடன் கூறுகிறார் ஆதிஃபின் தந்தை முஹம்மது அமீன்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆஸம்கர் மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம் சஞ்சார்பூர். தன் மகனின் உயிரைவிட, தன் குடும்பத்தின் தன்மானத்தைப் பெரிதாக நினைக்கின்ற  முஹம்மது அமீன் (55) உடைய சொந்த ஊர்.

“என் மகன் நல்லவன், எவ்விதக் குற்றச் செயல்களையும் அறியாத அப்பாவி. அவன் நிரபராதி என்பது தொடக்கத்திலிருந்தே எனக்குத் தெளிவாகக் தெரியும். என் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாகத் தகவல்கள் இப்போது வெளிவந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது”

அவரது ஆறுதலுக்குக் காரணமிருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுச் செய்து ஏறத்தாழ ஒன்றரையாண்டுக் காலப் போராட்டத்திற்குப் பின்னர், “ஆதிஃப் அமீன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தீவிரவாதியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை” என்று அறிக்கை தரப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லை!

ஏறத்தாழ இந்தியாவின் அணு ஆயுத இரகசியம்போல் ஓராண்டுக்கும் மேலாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பட்லா ஹவுஸ் என்கவுண்டரில் படுகொலை செய்யப் பட்டவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கடந்த 17.03.2010இல்தான் வெளிவந்திருக்கிறது.

“வெளிவந்திருக்கிறது” என்ற ஒற்றைச் சொல்லுக்குப் பின்னணில் பல சமூகநல அமைப்புகள், RTI (Right to Information  RTI Plea) செயல்வீரர் அஃப்ரோஸ் ஆலம் ஸாகில், தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) ஆகிய இணைந்த சக்திகளின் இடைவிடாத தொடர் முயற்சிகள் உள்ளன.

“இவ்வளவு மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்கு நான் உண்மையிலேயே மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்” என்று உணர்ச்சி பொங்கக் கூறுகிறார் முஹம்மது அமீன்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (RTI Plea)பெறப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை, “ஆதிஃப் எனும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர், ‘காவல்துறையினரைத் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதலில் ஈடுபட்டபோது கொல்லப் பட்டார்’ என்று அவர்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுத் தவறானது என்று அவரது உடலில் காணப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளின் காயங்கள் தெளிவாக்குகின்றன

ஆதிஃபின் பிரேதப் பரிசோதனையோடு சேர்த்து, அதே போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஆதிஃபின் உறவினர் ஃபக்ருத்தீன் (எ) ஸாஜிதின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளது:

  • நான்கு பக்கப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஆதிஃப் அமீன், முஹம்மத் ஸாஜித் ஆகிய இருவரும் தோட்டாக்களால் மட்டுமின்றி மழுங்கிய ஆயுதங்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்ட காயங்கள் உள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது.

  • ஆதிஃபின் உடலில் காணப்பட்ட பத்துத் தோட்டாக்களின் காயங்களில், எட்டு பின்புறத்திலிருந்து தோள்களுக்கு கீழும் முதுகுப் புறத்திலும் இருந்தன. இது ஆதிஃபின் பின்புறத்தில் நின்றிருந்தவர் தொடர்ச்சியாகத் துப்பாகியால் சுட்டதைக் காட்டுகிறது.

  • ஸாஜிதுடைய பிரேதப் பரிசோதனை அறிக்கை, ‘ஸாஜித் உடலில் இருந்த இரண்டு காயங்கள் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதல்ல; அவை ஸாஜித் மரணித்த நாளுக்கு முன்பே ஏற்பட்டிருந்த பழைய காயங்கள்‘ என்று கூறுகிறது.

  • தலையிலிருந்து தோட்டாக்கள் கீழே செல்லும் விதமாக உயரமான இடத்திலிருந்து ஸாஜித் மூன்று முறை சுடப்பட்டுள்ளார்.

Dr. ஜாவேத் அக்தர்

ஆஸம்நகரின் மருத்துவ, கல்வி, சட்ட உதவிக்கான சமூகநல அமைப்பின் தலைவரான ஜாவேத் அக்தர், “மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள், ஆதிஃப், ஸாஜித் ஆகிய இருவரின் உடல்களில் காணப்பட்ட பலவகைப்பட்ட காயங்களும் கீறல்களும் அவ்விருவரும் சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டதையும் வெகு அண்மையில் வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டதையும் தெளிவாக்குகின்றன” என்று கூறுகிறார்.

“அவ்வப்போது மாறி-மாறி முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வந்த டெல்லிக் காவல்துறையின் சிறப்புப்படை நடத்திய பட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரின் முழுநிகழ்வும் அதில் காவல்துறை அதிகாரி ஷர்மா பலிகொள்ளப்பட்ட விதமும் நடுவுநிலையான மீள்விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கும் ஜாவேத் அக்தர், சிறந்த மருத்துவருமாவார் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.

{youtube}7_5XapImzVc{/youtube}

பட்லா பலிகள் மூவருள் ஒருவர், என்கவுண்டர் புலி இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மா. இந்தக் காணொளியைப் பார்க்கும்போது, “ஒரு புலியைப் போட்டுத் தள்ள இரு அப்பாவி ஆடுகளை ஏன் பலியாக்க வேண்டும்?” என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் நாங்கள் பொறுப்பாளியல்ல.

கல்வியில் பின்தங்கிய கிராமம் சஞ்சார்பூர். உயர்கல்விக் கூடங்கள் அங்கு இல்லை. எனவே, பிறந்ததிலிருந்து 17 ஆண்டுகளாகத் தனது கிராமத்தை விட்டு எங்கும் வெளியே சென்றிராத ஸாஜித், படிப்பில் தனக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவரும் உறவினருமான ஆதிஃபோடு தங்கிக் கொண்டு உயர்கல்வி கற்கத் தன் கிராமத்திலிருந்து 10.07.2008இல்தான் டெல்லிக்கு வந்தார்.

“இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவை உலுக்கி எடுப்பதாகச் சொல்லப்படும் ‘இந்தியன் முஜாஹிதீன்’ அமைப்பின் கமாண்டராக என் மகன் டெல்லிக் காவல்துறையிரால் சித்தரிக்கப் பட்டுவிட்டான்” என்று பொங்குகிறார் ஸாஜிதின் தந்தை Dr. அன்ஸாருல் ஹஸன்.

“அப்பாவியான என் மகன் ஸாஜித், சிறப்புக் காவல்படையினரோடு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, உயிரிழந்ததாகத் தகவல் தரப்பட்டது. இப்போது வெளியாகியுள்ள அவனது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் பட்லா ஹவுஸில் அரங்கேறியது டெல்லிக் காவல்துறையின் திட்டமிட்ட சதிநாடகம் என்பது தெளிவாகியுள்ளது”

-o-

என்கவுண்ட்டர் போலியானது – விசாரணை குழு!

  1. காவல்துறை என்கவுண்ட்டர் நடத்தியதாகக் கூறப்படும் பட்லா ஹவுஸின் எல்-18 வீட்டில் வசித்தவர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழக மாணவர்களாவர். இதில் இருவர் தேர்வு தொடர்பாக அதிகாலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தனர். வீட்டில் இருந்த மீதம் இருவரைத்தான் காவல்துறை சுட்டுக் கொன்றது.

  2. காவல்துறை கூறுவது போன்று என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது காலை 11 மணிக்கல்ல. காலை 10 மணிக்கே காவல்துறை சுட ஆரம்பித்தது. அப்பகுதி மக்களிடம்  தங்கள் வீடுகளை அடைத்துக் கொண்டு வீட்டினுள் இருப்பதற்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. வெளியிலிருந்து எவரும் அங்கு நுழைவதைத் தடுக்கவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. என்கவுண்ட்டர் நாடகத்தை நேரில் கண்ட சாட்சிகள் இல்லாமல் ஆக்குவதற்காகக் காவல்துறை மேற்கொண்ட தந்திரமாகும் இது. கடந்த வியாழக்கிழமையே காவல்துறை இப்பிரதேசத்தைச் சுற்றி வளைத்திருந்தது.

  3. காவல்துறைக் கதவில் தட்டியதாகவும் உடனேயே வீட்டினுள்ளிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் காவல்துறை கூறுவது பச்சைப் பொய்யாகும்.

  4. அந்தப் பிளாட்டில் நுழைந்த காவல்துறை, பெரும் ஓசையோடு செடித் தொட்டியை இழுத்துத் தரையில் போட்டு உடைத்தது. இந்தச் சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்துப் பார்த்தவர்களைத்தான் காவல்துறை சுட்டுக் கொன்றது. அங்கு இருபக்கத் தாக்குதல் எதுவும் நடைபெறவே இல்லை. ஒரு பக்கமிருந்து மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

  5. என்கவுண்ட்டர் நடந்த பிளாட்டிலிருந்து வெளியேற ஒரே ஒரு கதவு மட்டுமே உள்ளது. இதுவல்லாமல் நான்காம் மாடியிலிருந்துக் கீழே குதிப்பதற்கான வழிகள் எதுவும் இல்லை. காவல்துறையினர் இடையே நுழைந்து இருவர் தப்பிச் சென்றனர் என்ற வாதம் பச்சைப் பொய் என்பது இதிலிருந்து விளங்கும். சம்பவம் நடந்த ப்ளாட் இருக்கும் குறுகலான சந்தில் 1500 காவலர்கள் நிற்பதே மிகவும் சிரமத்திற்குரிய காரியமாகும். அப்படிப்பட்ட இடத்தில்தான் 2500 காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

காவல்துறையினரால் சுடப் பட்டுத்தான் இன்ஸ்பெக்டர் சர்மா இறந்திருக்க வாய்ப்பு உள்ளது என அப்பிரதேசவாசிகள் கூறினர். வெள்ளிக்கிழமை மாலை ஆஜ்தக் தொலைகாட்சிக்குப் பேட்டி வழங்கச் சென்ற ஷிஸானைத்தான் காவல்துறை “தப்பிச்சென்ற தீவிரவாதி கைது” எனக் கூறி பிடித்துச் சென்றது. அதிபயங்கர தீவிரவாதி யாராவது இதுவரை நேரடியாக தொலைகாட்சிக்குப் பேட்டியளிக்கச் சென்றுள்ளனரா? எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.

-(பழைய பதிவிலிருந்து) சத்தியமார்க்கம்.காம்

செப்டம்பர் 19 வெள்ளியன்று காலை டில்லி, ஜாமிஆ நகரில் காவல்துறையால் நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் போலியானது என விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டவர்களும் கைது செய்யப் பட்டவர்களும் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் எனவும் குழு கண்டறிந்துள்ளது.

என்கவுண்ட்டர் போலியானது என்றச் சந்தேகம், மக்களிடையேயும் தேசிய ஊடகங்களிடையேயும் பரவலாக நிலைநிற்கும் வேளையில், பீப்பிள் யூனியன் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ் (பி.யூ.சி.எல்) தலைமையில் புதிதாக துவக்கப்பட்ட இந்தியன் முஸ்லிம் கோ-ஆர்டினேசன் கமிட்டி சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தியது. ஆய்வில் அது கண்டறிந்த சில முக்கிய விவரங்களைக் கடந்த 24.09.2008 அன்று நாம் வெளியிட்டிருந்தோம். அந்தத் தகவல்களைப் பெட்டிச் செய்தியில் காண்க

-o-

“தீவிரவாதி என்று முத்திரை குத்தி, அநியாயமாகக் கொல்லப்பட்ட என் மகனது பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் படித்தேன். வெறும் அறிக்கை அளித்ததோடு நில்லாமல், இது தொடர்பாக முழுமையான நீதிவிசாரணைக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்க வேண்டும். புத்திசாலியான முஸ்லிம் மாணவ இளைஞர்களைப் பொறுக்கி எடுத்து, அவர்களைத் தீவிரவாதி என முத்திரை குத்தி, என்கவுண்டர் என்ற போலி நாடகத்தில் சுட்டுக் கொல்வது கடந்த காலங்களிலும் நடந்துள்ளது; எதிர்காலத்திலும் நடக்கும். சிறுபான்மை மக்களின் மீது நிகழத்தப்படும் இதுபோன்ற சதிநாடகங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம்” எனக்கூறும் முஹம்மது அமீனுடைய விருப்பமே நமது விருப்பம் – அதுவே ஒவ்வொரு இந்தியரின் விருப்பமாக இருக்க முடியும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.