திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்!

Share this:

 

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு

 

அளவற்ற அருளாளன், நிகரற்ற  அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.


(
அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.

(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

நீ அருள் புரிந்தோரின் அறவழியில். (அன்றி, உன்) கோபத்துக்கு ஆளானோர் வழியிலன்று; நெறி தவறியோர் ழியிலுமன்று (அல்குர்ஆன் 1 : 1 முதல் 7 வரை)

 

 

இவ்வுலகில் எப்படியும் வாழ்ந்து கொள்ளலாம் என்று இஸ்லாம் சொல்லவில்லை; இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் மனித சமுதாயத்தினைக் கொண்டு வந்து, முழு மனுக்குலத்தையும் மனிதநேய மிக்கதாக மாற்றும் மார்க்கம்தான் இஸ்லாம். இது தெரியாமல் இன்னும் பல நாடுகள் கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு நாகரீகம் வளர்வதற்கு நாங்கள் வழி சொல்லிக் கொடுக்கிறோம் என்று கூவிக் கொண்டு, மக்களை அநாகரீகத்திற்குக் கொண்டு செல்கின்றன.

இப்பூமிக்கு ஆதம்(நபி), இப்ராஹீம்(நபி), ஈஸா(நபி), தாவூத்(நபி), இல்யாஸ்(நபி), இஸ்மாயீல்(நபி), அல்யஸஉ(நபி), ஸுலைமான் (நபி), அய்யூப்(நபி), இஸ்ஹாக்(நபி), யஃகூப்(நபி), நூஹ்(நபி), யூஸுஃப்(நபி), மூஸா(நபி), ஹாரூன்(நபி), ஜக்கரியா(நபி), யஹ்யா(நபி), யூனுஸ்(நபி), லூத்(நபி), ஹூத்(நபி), ஸாலிஹ்(நபி), ஷுஐப்(நபி) போன்ற நபிமார்களை அவரவர்களின் சமுதாயத்தின் மக்களை நேர் வழிப்படுத்துவதற்காக அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

இவ்வுலகத்திற்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி 570இல் மக்கா நகரில் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த சமயத்தில் மக்கள் அறியாமை என்ற இருளில் மூழ்கி இருந்தார்கள்.

 

இருண்ட காலத்தில் அரபு உலகம். மனிதர்களை மனிதர்கள் அடிமைப்படுத்திய, அறியாமை தழைத்தோங்கிய காலகட்டம். பெண்களுக்கு எந்த உரிமையையும் தராத காலம். உலகம் என்னவென்றும், மனித உரிமைகள் என்னவென்றும் தெரியாமல் விட்டில் பூச்சிகளாய் இருந்த மக்கள்.


610
ம் வருடத்தில் ஹிரா குகையில் நபி அவர்களுக்கு வஹீ மூலமாக அருளப்பட்ட வேதமாக உள்ள திருமறை குர்ஆன், உலக மக்கள் அனைவருக்கும் இறுதியான வேதமாகவும்,அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகவும் மனித சமுதாயத்தினை நல்வழிப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தை (ப் படிப்படியாக) அவன்தான் உம் மீது அருளினான். இது உறுதிப் படுத்துகின்றஇதற்கு முந்தைய தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே அருளியவனாவான் (அல்குர்ஆன் 3:3)

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருமறையானது, முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது இந்த உலகத்தில் உள்ள அனைத்து மதத்திற்கும் அனைத்துச் சமூகசமுதாய மக்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. அரசியல் துறையாகட்டும், பொதுத்துறையாகட்டும், பொருளாதாரத்துறையாகட்டும், ஆட்சி அமைப்புகளாகட்டும் மற்றும் இது போன்ற உள்ள மற்ற துறைகளாகட்டும் அனைத்திற்கும் ஒரு வழிகாட்டியாக திண்ணமாக திருமறை இருக்கிறது. எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு உலகப் பொதுமறை உண்டு என்றால் அது திருக்குர்ஆன் தான்.

இறையச்சம் உடையவர்களிடம், "உங்களுடைய இறைவன் எதை அருளினான்?" என்று கேட்கப் பட்டபோது (குர்ஆனைக் குறிப்பிட்டு) "நன்மையையே (அருளினான்)" என்று கூறுவார்கள். அழகான நன்மை செய்தோருக்கு (இவ்வுலகிலும் அழகான) நன்மையுண்டு. மேலும் (அவர்களதுமறுமை வீடும் சிறப்பு மிக்கதாய் இருக்கும். இறையச்சம் உடையோரின் வீடு நிச்சயமாகச் சிறப்பு மிக்கதே! (அல்குர்ஆன் 16:30).

நாம் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும், உண்பது ஹலாலானதா ஹராமானதா என்று சிந்தித்து உண்ணக்கூடியவர்கள்தாம் இஸ்லாமியர்கள். அதற்காகத்தான் ஒரு சில உணவுப்பொருட்களை இஸ்லாமிய மார்க்கம் ஹராம் என்று தடையும் செய்துள்ளது. ஆனால் மற்ற சமுதாயத்தினரிடம் அத்தகைய ஹலால்ஹராம் பாகுபாடு இல்லை. எதையும் சாப்பிடக்கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தானாகச் செத்த பிராணிகளையும் பன்றி இறைச்சியையும் சாப்பிடக்கூடாது என்று குர்ஆன் சொல்கிறது.

"உண்ணுங்கள்; பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக இறைவன் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை" என்று திருமறை சொல்கிறது. ஆனால் தற்போது நாம் பார்க்கும் இவ்வுலகில் எவ்வளவோ உணவுப்பொருட்கள் வீணாகக் குப்பைக்கு போய் விடுகிறது. பல ஏழை நாடுகளில் ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். திருமறையில், "ஏழைகளுக்கு உணவளியுங்கள், ஜகாத் கொடுங்கள், ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்" என்று பல இடங்களில் இஸ்லாமியர்களுக்காக மட்டுமல்லாமல் அதனை படிக்கக்கூடிய அனைத்து தரப்பினருக்கும் சொல்கிறது.

உடையில் எடுத்துக்கொண்டாலும் அதிலும் ஓர் ஒழுங்கு; "பெண்கள் தன்னுடைய அழகினை மற்ற ஆண்களுக்குக் காட்டக்கூடாது. அவர்களின் அலங்காரங்கள் அவர்களின் கணவனுக்கு மட்டுமே சொந்தமானது" என்றும் சொல்கிறது. ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து, தங்கள் கணவனுக்குப் பணிந்து நடப்பவர்கள். கற்பு மற்றும் தங்கள் கணவனது உடைமைகள் ஆகிய மறைவானவற்றை, அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிக்காத்துக் கொள்பவர்கள். ஆனால் இப்போது உள்ள சில நாகரீக நங்கைகள் உடுத்தும் உடைகள் எப்படி இருக்கின்றன என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இஸ்லாம் கூறியபடி ஆடையினை நாம் ஒவ்வொருவரும் அணிந்து வந்தால் விபச்சாரங்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. விபச்சாரம் என்பது ஒழுக்க ரீதியில் மிகவும் அபாயகரமான நோயாகும். விபச்சாரம் நம்மை வழி கேடுக்கும் என்பதால்தான் அதனுடைய எல்லாவிதமான வாயில்களையும் இஸ்லாம் தடை செய்கிறது. பால்வினை நோயானது 75 சதவீதம் தகாத உறவு மூலமாக தான் பரவுகிறது. "மானக்கேடான செயல்களின் அருகே கூட செல்லாதீர்கள். அவை வெளிப்படையானவையாயினும் மறைவானவையாயினும் சரியே" என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள்தம் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்கள் என) அறியப்பட ஏதுவாகும். எனவே, இடர் செய்யப்பட மாட்டார்கள். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிகக் கிருபையுடைவன் (அல்குர்ஆன் 33:59)

கிருஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடன் "குட்மார்னிங்" என்று சொல்லும். ஒரு இந்துச் சமுதாய குழந்தையாக இருந்தால், "நமஸ்காரம்" அல்லது "வணக்கம்" என்று சொல்லும்; குட்மார்னிங் சொல்வதாலும் நமஸ்காரம்/வணக்கம் சொல்வதாலும், சொல்லக்கூடிய குழந்தைக்கும் சரியே அதனைக் கேட்கக்கூடிய பெற்றோர்களுக்கும் சரியே கடுகு அளவு கூட நன்மை ஏற்படுவதில்லை. ஆனால் அந்தக் குழந்தை ஒரு இஸ்லாமியச் சமுதாய குழந்தையாக இருந்தால், "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று அழகாகச் சொல்லும். அதனைக் கேட்கும் பெற்றோர்களும் அந்தக்குழந்தையின் ஸலாத்திற்கு பதில் ஸலாம் சொல்வார்கள். அதன் மூலமாக அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் இருவருக்கும் உண்டாகும்.

சின்னஞ் சிறு வயதானது, பெற்றோர்கள் எப்படி நடக்கிறார்களோ அதனைக் கடைப்பிடிக்கும் வயதாகும். ஆகையால் சிறார்களை இளம் பிராயத்திலிருந்தே இறைநெறியின் பக்கம் அழைத்து செல்லக்கூடிய பெற்றோர்களாய் நாம் இருக்க வேண்டும். சரியான கல்வியினைக் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் தற்போது உள்ள நாகரீக உலகத்திற்கு அடிமைப்பட்டு போய் விடுவார்கள். நாம் அவர்களுக்கு பள்ளிக் கல்வியினைக் கொடுத்தாலும் சரியே, மார்க்கக் கல்வியினைக் கொடுத்தாலும் சரியே சரியான கல்வியாகவும் கொடுக்க வேண்டும். பிள்ளைகளிடம் அன்பு செலுத்துங்கள். இருந்தாலும் அன்பினை அளவுக்கு அதிகமாகக் காட்டக்கூடாது. அன்பு எல்லை மீறிப் போகாமல் பெற்றோர்களாகிய நாம் அனைவரும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பிள்ளைகள் ஏழு வயதுடையவர்களாய் இருக்கும்போது தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு அவர்களை ஏவுங்கள். பத்து வயதை எட்டியும் தொழவில்லையெனில் அவர்களை அடியுங்கள். மேலும் அவர்களைத் தனித்தனி விரிப்புகளில் தூங்க வையுங்கள்.

அறிவிப்பாளர்: அம்ர் இப்னு ஷூஐப் (ரலி), ஆதாரம் : அபூதாவூத். மிஷ்காத்.

நம்மை நல் வழியில் கொண்டு செல்வது என்பது இந்தக் காலத்தில் எளிதான காரியமல்ல. வெட்கக்கேடு, மானக்கேடு, தீயச்செயல், மற்றும் அதனின் தூண்டுதல் போன்றவற்றிற்கு அடிமைப்படாமல் நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். நம்மை நாம் சீர்ப்படுத்திக்கொள்ள நம்மால்தான் முடியும். திருக்குர்ஆன் ஆராக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறிய சமூகத்தில் நாமும் ஓர் அங்கமாக குர்ஆனின் கட்டளையின்படி செயல்பட்டால் நாம் அனைவரும் ஓரணியில் இருக்கலாம். ஒற்றுமையாகச் செயல் படலாம். அந்த ஒற்றுமையினை வல்ல அல்லாஹ் நமக்குத் தந்து அருள் புரிய வேண்டும்; ஆமீன்; யாரப்பல் ஆலமீன்.

 

ஆக்கம்: சகோ அபூ ஆஃப்ரீன், முத்துப்பேட்டை

 

2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரையை அளித்த சகோதரர் அபூ ஆஃப்ரீன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு எதிர்காலத்தில் பரிசுகள் வெல்ல வாழ்த்துகிறோம்! – சத்தியமார்க்கம்.காம்
2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.