கலிமாவைக் கருவாக்கி
கலந்து நின்றோம் கண்மணிகளாய்
கருத்து வேற்றுமையால்
கண்டும் காணாமல் போகின்றோம்- தீனில்
கற்றதை மறக்கின்றோம்—"ஸலாம்"
கூற மறுக்கின்றோம்.!!!
நமது நபி
நவின்றது (நபிவழி ) இதுதானா?
நபிவழியின் சுவடொற்றி
நலம் விசாரிக்க- இன்று
நாவு எழவில்லை.!!!
இலக்கணம் இதுதானா? மூமினுக்கு
இலக்கு எது ? சுவனமன்றோ ?
"இறையச்சம்"
இதயத்தில் ஊன்றி விட்டால்
இழப்பும் இன்பமாகும்
இறப்பும் துச்சமாகும்
இஸ்லாமியர்களை மன்னிப்பதும்
இசைவாகும்.
இதயத்தில் இறையச்சம் உறுதியாகும்.
சகோத(ரத்து)-வம்
சத்திய மார்க்கத்தில் ஓர்
சங்கட முள் !!!
சந்தோஷமாய் ஒன்றுபட்டு
சங்கடமில்லாமல் சங்கமிக்கும்
சகோதரத்துவத்துடன், தக்பீர் முழக்கமிடும்
சமுதாயம்
சட்டென்று வந்துவிடும்…
சன்மார்க்கத்தை தந்திட்ட இறைவன் நாடினால்
சட்டென்றே வந்துவிடும் நாளைக்கே !
இறுமாப்பை முழுமையாக எட்டி வீழ்த்தி
இஸ்லாத்தை நிலைநாட்டிட
இறையருளைத் தேடி வாரீர்.
ஆக்கம் : உம்மு அப்துர்-ரஹ்மான்