நோன்பின் மாண்பு – குறள்கள்

Share this:

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரமளான் மாதம் நம்மைத் தொட்டு விட்டது. சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் ஏராளமான ரமளான் மாத ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தலைப்பகுதியில் உள்ள தேடும் பெட்டியில் நோன்பு, ரமளான் போன்ற குறிப்பிட்ட வார்த்தைகளை இட்டும் தேடி வாசிக்கலாம். ரமளான் மாத நோன்பு பற்றி கவிஞர் இப்னு ஹம்துன் அவர்களின் சுவையான குறள்கள் இங்கே:

 

நோன்பை இறைவனுக்காய் நோற்கும் எவருக்கும்
மாண்பை அடையும் மனம்


ரமளான் எனுமோர் ரஹமத்தைப் பெற்றார்
அமல்கள் சிறப்ப(து) அறிவு


வானிற் பிறையாய் உதித்த ரமளானை
வீணிற் கழிப்ப(து) இழிவு


வல்லோன் வழங்கிய வாய்ப்பாம் ரமளானை
நல்லோரே பேணுவர் நம்பு


புலன்கள் அடக்கும் பயிற்சிகள் தந்து
நலம்பல செய்வதாம் நோன்பு


மாதம் இதனில் முழுமைப் பயிற்சியில்
மீதமுள்ள காலமும் மீட்பு


பொய்யும் புறமுமாய் பேச்சிருப்பின், நோன்பென்று
மெய்வருந்தச் செய்வது வீண்


ஆயிரம் மாதபலன் அற்புத ஓரிரவில்
தூயநன் நோன்பிலே துய்ப்பு


ஈகைப் பரிசை இறையிடமே பெற்றிடவே
வாகை ரமளானில் வாய்ப்பு


இறைவனின் பார்வையில் யாவுமே ‘உள்’ளில்
நிறைவாய் உரைத்திடும் நோன்பு


அனைவருக்கும் இனிய ரமளான் நல்வாழ்த்துக்கள்!

– கவிஞர் இப்னு ஹம்துன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.