நிலையில்லா இம்மை….!

வளர்மதியாய் உலவுகின்ற வாழ்வு ஒரு நாள் – நம்
வன்மதியால் வடிவமின்றி தேய்ந்து போகும்!

வண்சுடராய் ஒளி வீசும் வாழ்வு ஒரு நாள் – நம்
மனக்காற்றில் ஏகமாக அணைந்து போகும்!

பெருங்கலமாய் மிதக்கின்ற வாழ்வு ஒரு நாள் – நம்
பொறாமையெனும் பெருங்கடலில் மூழ்கிப் போகும்!

பெற்றோருடன் சிரிக்கின்ற வாழ்வு ஒரு நாள் – நம்
பிடிவாத அழுகுரலில் ஓய்ந்து போகும்!

மனைவியுடன் குலவுகின்ற வாழ்வு ஒரு நாள் – நம்
மந்தமான நித்திரையில் மறைந்து போகும்!

மக்களுடன் குலவுகின்ற வாழ்வு ஒரு நாள் – நம்
மகிமையிலா செய்கையிலே மடிந்து போகும்!

சுற்றமுடன் சொர்க்கம் காணும் வாழ்வு ஒரு நாள் – நம்
சுத்தமிலா மனத்திரையில் சுருங்கிப் போகும்!

சொல்வளத்தால் சுவை சேர்க்கும் வாழ்வு ஒரு நாள் – நம்
சொல்லில்லா மெளனத்தில் ஆழ்ந்து போகும்!

செல்வத்தில் புரளுகின்ற வாழ்வு ஒரு நாள் – நம்
செல்வாக்கில்லா செம்மணலில் சிதைந்து போகும்!

சேனைசூழ் பார் போற்றும் வாழ்வு ஒரு நாள் – நம்
சேதமுற்ற செந்நீரில் தோய்ந்து போகும்!

ஆழிசூழ் இவ்வுலக வாழ்வு ஒரு நாள் – நம்
ஆன்மாவை அலைக்கழித்து எடுத்துக் கொள்ளும்!

எனவே,

ஆழ்கடலின் நன்மை தரும் அருமருந்தாம் – வல்ல
அல்லாஹ்வை தொழுதேற்றி அமைதி காண்போம்!!
ஆக்கம்: இப்னு முஹைதீன்
இதை வாசித்தீர்களா? :   ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!