கல்ஃப் ரிட்டர்ன்! – வாழ்வியல் தொடர் (பகுதி 2)

வளைகுடாவில் ஒரு கட்டுமானப்பணியில்...
Share this:

விடிகாலைத் தொழுகை நேரத்திற்கு வெகு முன்பாகவே கண்விழித்து விடுகிறார்கள் இவர்கள்.

 

ஒரு நாளைக்கு 14 மணி நேரங்கள் என்ற கணக்கில் வாரத்திற்கு ஆறு நாட்கள், வெள்ளிக்கிழமையன்றும் ஓவர்டைம் கிடைக்கும் எனில் நோகும் உடலைக் கிடைக்கவிருக்கும் காசின் ஆசைகாட்டி ஒத்துழைக்க வைத்து கிளம்பிவிடுவதும, உச்சி வெயிலும் தணல் காற்றும் உள்ளும் புறமும் சுட்டெரிக்க தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் ஆபத்துக்கள் சூழ்ந்த புழுதி பறக்கும் சிறைச்சாலை போன்ற தொழிற்சாலைகள், கட்டிடப் பணியிடங்கள், உடலும் உள்ளமும் துவண்டு போய் காய்ந்த வியர்வையே போர்வையாக மாறியிருக்கும் மாலை நேரத்தில் துவண்டு நடக்காமல் ஓடிப்போய் அடித்துப் பிடித்து ஏறினால் தான் அழைத்து போக வரும் பேருந்தில் இடம் கிடைக்கும்.

நான்கு பேர் மட்டுமே தங்கப் போதுமான இடம் என்று சர்வதேசச் சட்டம் ஏட்டில் எழுதி வைத்துள்ள ஒரு அறையில் பதினான்கு பேருடன், ஒரு காலத்தில் சுத்த பத்தமாய் நாட்டில் சுகவாழ்வு வாழ்ந்ததை நினைவுகளில் நிறுத்தி, வீட்டு நினைவுகள் அதிர்ஷ்டவசமாக அழுத்தவில்லை என்றால் படுக்கையில் படுத்தவுடன் பத்து எண்ணுவதற்குள் கண்ணைச் சுழற்றும் கணங்களுடன், காலையில் அணிந்து செல்ல அதே அழுக்கு வியர்வைக் கரைசல் மணத்துடன் சுவற்றில் மாட்டியிருக்கும் யூனிஃபார்மும் அதற்குச் சற்றும் சளைக்காத விதத்தில் கல்லில் மாட்டிய ஈரத்துணியாய் ரணமான மனதுடன் தூங்கிப்போகின்றனர்.

வளைகுடா நாடுகள் 1950களின் இறுதியில் கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிப்பின் மூலம் ஏற்பட்ட பெரும் தொழிற்புரட்சியில் உண்டான மாற்றங்களின் விளைவாகப் பெரும் மனித வளம் இங்கே தேவைப்பட்டது. வளைகுடா நாடுகளில் 90% அளவிற்கு வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். வளைகுடாவின் பரந்து விரிந்த தொழிலாளர் பிரச்னைகளை நாடுவாரியாக எடுத்துச் சொன்னால் கட்டுரை நீண்டுவிடும் என்று அஞ்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு சாராரை மட்டும் கையில் எடுத்துள்ளோம்.

BMW சொகுசு கார்களில் உலாவரும், கோல்ஃப் விளையாடிவிட்டு ஒரு வாய் டீயை ஒரு மணிநேரம் எடுத்துக் குடிக்க ஏழு நட்சத்திர ஹோட்டல்களைத் தேடி அலையும், வளைகுடாவின் “சூடான” மாதங்களில் அடிக்கடி மேற்கத்திய நாடுகளில் “சன்”பாத் எடுக்கச் செல்லும் நபர்கள் இந்த ஆக்கத்தின் பட்டியலில் சேர்த்தியில்லை. பொறுப்பான உயர்பதவிகளில், தலைசிறந்த நிர்வாகத்தினை நடத்தி வரும் தமிழ் அன்பர்களும் இதிலிருந்து விலக்குப் பெறுகின்றனர்.

வறுமைக்கோடு என்பது வளைகுடாவில் வேலை செய்பவர்களுக்கும் உண்டு என்ற புதிய இலக்கணம் படைத்து, சொல்லவொண்ணா துன்பமும் துயரமும் அடைந்து கொண்டிருக்கும் இந்திய – குறிப்பாக – தமிழக முஸ்லிம்கள் நிலை பற்றி இங்குப் பார்ப்போம்.

காரணம், கழுத்து வலிக்கும் உயரத்தில் கண்ணாடிக் கட்டிடங்களும், மார்பிள் பளபளக்கும் ‘மால்’களுக்கும் இங்கே பஞ்சமில்லை. ஆனால் வெளியுலகில் பிரதானப் படுத்தப்படும் தரமான, ஆடம்பரமான பார்வைகளின் பின்னணியில் நசிந்து போயிருக்கும் பல நிகழ்வுகள் நம் பார்வைக்கே வருவதில்லை. அவற்றுள் சிலவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

வியர்வைத்துளி 1 – முபாரக்!

தலைக்கு மேல் கொளுத்தும் 49 டிகிரி செண்டிகிரேட் வெயிலில் கைகளுக்கு அணிந்திருக்கும் உறைகளை மீறிய சூட்டில் கட்டிடத்தின் நூறாவது மாடியின் மேல் தளத்திற்காக கம்பிகள் மேல் அமர்ந்து கான்க்ரீட் கொட்டும் இந்திய முஸ்லிம்களைப் பார்த்தால் கண்ணீர் வராத உள்ளம் கல்லேயன்றி வேறில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்னால் வளைகுடா மண்ணை மிதித்த முபாரக், ஊரில் வளைகுடாவைப் பற்றி கனவு காணும் டிப்பிக்கல் இளைஞர்களில் ஒருவராக தன் இரு வருடச் சம்பாத்தியத்தை முன்பணமாக மும்பை ஏஜண்டிற்கு தாரை வார்த்துவிட்டு வந்தவர். வளைகுடா தொழிலாளர் சட்டம் இது போன்ற ஏஜண்ட் இலஞ்சமாக வாங்கும் பணத்தை சட்ட விரோதமாக கருதினாலும் கூட கண்ணீரையும் வியர்வைத் துளியையும் உணவாக உட்கொண்டு செழிப்பாக இவ்வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. (வாசிக்க: Saudi Arabian Basic Labor Legal Information for Indians.)

வளைகுடாவில் தான் சிந்திய முதல் வியர்வைத் துளியிலேயே அதன் பயங்கரமும் தலைக்கு மேல் குறிவைக்கப்பட்ட ஆபத்தும் முபாரக்கிற்கு புரிந்து விட்டது. அஸ்திவாரம் தோண்டும் முன்பே கட்டிடத்தின் வாடகைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிடுவதால் அவசர அவசரமாகக் கட்டப்படும் கட்டிடங்களுக்கிடையே தரக்கட்டுப்பாட்டினையும், தொழிலாளர்களின் பாதுகாப்பும் பற்றி பேச நிறைய முதலாளிகளுக்கு நேரமிருப்பதில்லை.

விளைவு, போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்படாததால், தன் கண் முன்னே கான்க்ரீட் கலவைக்குள் சரிந்து புதைந்து போன தனது நண்பர்களை கண்ணீருடன் நினைவு கூர்கிறார் முபாரக். கம்பெனியில் கடந்த ஆறு மாதமாக சம்பளம் சரிவர வராத சூழலில் ஒவ்வொரு நாளும் இரவில் தத்தம் குடும்பத்தினைக் காப்பாற்றவும், நலிவுற்றிருக்கும் தன் சமுதாயத்தின் நிலை பற்றியும் பேசிப் பாதியிலேயே பிரிந்துவிட்ட தனது நண்பர்கள் நினைவு வர துக்கம் தொண்டையை அடைக்க பேச்சை நிறுத்திக் கொள்கிறார்.

12×7 சதுர அடி அளவிலுள்ள நான்குபேர் மட்டுமே தங்கக்கூடிய இவரது அறையில் பன்னிரண்டு பேருடன் தங்கியுள்ளார். மேல்மாடி டாய்லெட்டிலிருந்து கான்க்ரீட் கூரை வழியே சொட்டுச் சொட்டாய் கசியும் கழிவுநீருடன் தான் வாசம். ஒருவர் படுக்கையின் மீது அடுக்கடுக்காய் அமைந்துள்ள இன்னொருவர் படுக்கை. மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு ஒருபக்கம் என்றால், போல்ட் நட்டு சரியில்லாத இரும்புக் கட்டிலில் ஒருவர் திரும்பிப் படுத்தால் அவர் “அப்பார்ட்மெண்ட்”டில் உள்ள அனைவருக்கும் தூக்கம் கலையும். கம்பெனி கொடுக்கும் ஐநூறு திர்ஹத்தைக் கொண்டு இவரும் சாப்பிட்டு(?) உடுத்தி விட்டு எஞ்சியுள்ளதை வைத்து ஏழு பேர் கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்றும் வித்தையை இங்கே தான் பார்க்க முடியும். ஓட்டல்களில் சாப்பிட்டு ராஜ போக (!) வாழ்க்கை வாழ சம்பளம் இடம் கொடுக்காததால் கிடைத்த சந்தில் அடுப்பை வைத்து கிடைக்கும் நேர இடைவெளிகளில் சமைத்துக்கொள்ளவும் வேண்டிய சூழ்நிலை.

லேபர் டிபார்ட்மெண்ட் இதுபோன்ற கம்பெனிகள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் இவர் போன்றவர்கள் பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை. இரண்டு வருடத்துக்குள்ளாவது ஏஜண்ட் இடம் கொடுத்த கடனை வட்டியோடு அடைத்து விட்டு ஊர் திரும்பினால் கூட போதும் என்ற நிலையிலேயே பலர் தன்னுடன் இருப்பதாகக் கூறுகிறார்.

“பர்தாவுடன் மினி ஸ்கர்ட்டுகளையும், பள்ளிவாசல்களோடு சர்ச்சுகளையும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் கையாளும் வளைகுடா நாட்டு அரசாங்கங்களின் மனம் என் போன்றவர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவில்லையே?” என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் இவர்.

அல்ஜஸீராவின் டாக்குமெண்டரி!

இந்த கண்ணீர்க்கதைகளை வெட்டிக்கதை பேசிக்கொண்டிராமல் கேமராவை இருட்டான லேபர் கேம்ப்களுக்கு எடுத்துச் சென்று படம் பிடித்து உலக அரங்கில் வெளிச்சமிடத் துணிச்சலுடன் களமிறங்கியிருப்பதற்கு அல்ஜஸீராவிற்கு நன்றிகூற வேண்டும்.

“இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் – வளைகுடா தொழிலாளர்களின் வேதனைகள்!” என்ற பெயரில் டாக்குமெண்டரி அல்ஜஸீரா படம் பிடித்து உலகிற்குக் காட்டியுள்ளது. அல்ஜஸீரா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாதவர்கள் இங்கே உள்ள வீடியோவில் அதைக் காணலாம்.

 

(முதல் பாகம் மேலே / இரண்டாம் பாகம் கீழே)

 


வியர்வைத்துளி 2 – இப்ராஹிம்!

“மூன்று வருடங்கள் பதினோரு மாதங்கள்!” ஊர் போய் எத்தனை நாளாகிறது என்று 37 வயதான இப்ராஹிமைப் பார்த்து நாம் கேட்ட கேள்விக்கு பதிலாகக் கிடைத்தது இதுதான். பத்து வயது மகளுடனும் பன்னிரண்டு வயது மகனுடனும் இரு வாரங்களுக்கொருமுறை இண்டெர்நெட் போனில் உறவைப் புதுப்பிக்கும் இப்ராஹிம் “எங்களப் பாக்க எப்போ வர்றீங்க வாப்பா?” என்ற கேள்வியைப் பிள்ளைகள் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்காமல் வெளியேறியதில்லை.

“அல்லா காப்பாத்தணும்…இந்தியாவுக்கும் கல்ஃபுக்கும் இடையில ஏதாச்சிம் பெருசா தகராறு வந்து, எல்லா இந்தியர்களுக்கும் நாங்களே வேலை போட்டுத் தர்றோம். எல்லாத்தையும் திருப்பி அனுப்புன்னு இந்தியாவே கேக்கணும். எங்க நாட்டின் ஏர்போர்ட்டுகள் மூடப்படணும் அப்படியாச்சிம் எங்க குடும்பம் குட்டிகளோட சேர்ந்து நாங்க வாழ முடியுதான்னு பாக்கணும்!” என்றவரின் பேச்சில் தெறித்த இயலாமை முற்றிய வன்மம், எந்த அளவிற்கு அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது.

ஊரில் சம்பாதிப்பதை விட நான்கு மடங்கு இங்கே கிடைக்கிறது என்பவர்களை விட “இதே நாய்ப்பொழைப்பை கேவலம் பார்க்காம ஊர்ல இருந்துகிட்டு உழைச்சேன்னா இதை விட எட்டு மடங்கு சம்பா திக்க முடியும்” என்ற முணுமுணுப்புகள் கேட்பது இங்கே சகஜம். சரி! பின்னே அதைச் செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் மெளனம்தான் பதிலாகக் கிடைக்கிறது!

சிவந்த கண்களுடன் பேசியவரை பார்த்து துக்கம் தொண்டையில் பந்துபோல் சுழல, பாதித் தூக்கத்தில் இருந்த அவரிடம் பேச்சை முடித்துக்கொண்டேன். அடுத்த நாள் கருக்கலில் எழுந்து தெம்புடன் வேலை செய்ய வேண்டுமென்றால் ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கையில் விழுந்தால் தான் முடியும். பல பேருக்கு கனவுலக தாம்பத்யமும், பிள்ளைகளுடன் கற்பனைகளில் கொஞ்சிப்பேசவும் முடிவது அந்த சில மணித்துளிகளில் தான்.

பெரும்பாலானோரின் சம்பாத்தியங்கள் தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை நனவாக்குவதிலேயே செலவாகின்றன ஒழிய, தாங்கள் சம்பாதிக்கும் பருவத்திலேயே அதனை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் பொருளீட்ட எண்ணுவதில்லை.

ஆர்ப்பாட்டங்கள்/எதிர்க்கும் குரல்கள்

எவ்வளவு தான் பிரச்னைகள் என்றாலும் ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் அசாதாரணம் என்றிருக்கும் துபாயில் கூட கடந்த வருடம் மார்ச் மாதம் ஆயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்ததும், கண்ணில் பட்ட வாகனங்களை துவம்சம் செய்ததும் வளைகுடாத் தொழிலாளர்களின் பிரச்னைகளின் வீரியத்தை உலகுக்கு உணர்த்தியது எனலாம்.

உலகத்தின் மிக உயரமான கட்டிடம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் புர்ஜ்-துபை கட்டிடத்தின் தினசரி பணிகள் தொழிலாளர்களின் புரட்சியில் சென்ற வருடம் ஸ்தம்பித்துப்போனது.

“இங்குள்ள தொழிலாளர்களுக்குப் பிரச்னைகளே இல்லை என்று நான் சொல்லவில்லை. அதைத் தீர்க்க முயன்று வருகிறோம்” என்று சொல்கிறார், துபையின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அலீ பின் அப்துல்லாஹ் அல் காஅபி.

“இவர்களை நாங்கள் கட்டாயப்படுத்திக் கூப்பிடவில்லை” என்கிறார் அலீ அல் காஅபி. “இவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதையே நான் பார்க்கிறேன்” என்கிறார்.

ஆனால் மனித உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் மத்திய கிழக்கு பிரிவின் இயக்குனரான சாரா லீ விட்ஸன் அலீயின் இக்கூற்றை அடியோடு மறுக்கிறார் – “தனது சுயநலத்திற்காக அடுத்தவர்களின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்வது என்றால் அது இதுதான்!” என்று சாடுகிறார். “மெர்ஸிடிஸ் கார்கள் மூலமாகவோ, விண்ணை முட்டும் கட்டிடங்களாலேயோ மட்டும் வளைகுடா நாடுகளை உலக அரங்கில் மிளிர வைத்துவிட முடியாது. அத்தகைய வெற்றியும் வளர்ச்சியும், வளைகுடாத் தொழிலாளர்களின் நலனை முன்னுறுத்திக் கொண்டு சென்றால் தான் கிட்டும்” என்கிறார்.

வியர்வைத்துளி 3 – சாதிக் பாஷா!

இங்கே சம்பாதிப்பதைப் போன்று என்னால் ஊரில் மீன் பிடித்தே காலம் தள்ள முடியும் என்று அலட்சியமாக் கூறும் சாதிக் பாஷா தமிழகக் கடற்கரை கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர். கடந்த நிமிடத்தில் அப்படிப் பேசியவர், பதினெட்டு வருடங்கள் கடந்தும் தன் எதிர்காலத்தைப் பற்றி தான் எவ்விதப் பிடிப்புமின்றி இருப்பதாகவும் எதிர்மறையாகப் பேசுகிறார். இத்தனை வருட காலங்களில் என்ன சம்பாதித்தீர்கள் என்றால் ஏற்கனவே இருந்த வாப்பாவின் நிலத்தில் தான் சிறிதாக ஒரு வீட்டை கட்டியதாகவும், ஒன்றே கால் லட்ச ரூபாயில் தனது தங்கைக்கு வரதட்சணை கொடுத்து “பெரிய” இடத்தில் கல்யாணம் கட்டிக் கொடுத்ததாகவும் நாற்பதை நெருங்கும்போது தானும் கல்யாணம் செய்து கொண்டு இரண்டே மாதத்தில் இங்கே வந்து விட்டதாகவும் வேதனையுடன் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கூறும் சகோதரனைப் பாத்து எம்மால் விம்மாமல் இருக்க முடியவில்லை.

பொருளியல் குறிப்புகள்:

இந்தியாவின் வெறும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் வளைகுடாவிலிருந்து வந்து சேரும் அந்நியச்செலாவணி ரூ. 126.40 மில்லியன் (ரூ. 12 ஆயிரம் கோடி) என்று அதிர வைக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு செய்திக்குறிப்பு. கிட்டத்தட்ட முப்பத்தியோரு இலட்சம் இந்தியர்கள் வேலை செய்யும் வளைகுடா நாடுகளில் ஒரு அறிக்கையில் 36% பேர் 500 திர்ஹம் (US$ 120) சேமிப்பதாகவும், 37%பேர் 500 முதல் 1000 திர்ஹம் வரை (US$ 120-140)சேமிப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரப் நியூஸ் பத்திரிக்கையின் அறிக்கைப்படி கடந்த வருடத்திற்கும் இவ்வருடத்திற்கும் இடையே ஏற்பட்ட பணவீக்கத்தினாலும் அமெரிக்க டாலரின் கிடுகிடு வீழ்ச்சியாலும் 30% சம்பளம் குறைந்திருக்கிறது. (கடந்த வருடம் திர்ஹம் மதிப்பு 12.70 ஆக இருந்தது இன்றைய நிலவரத்தில் 11.00 ஐ விட குறைந்து போயுள்ளது. சவூதியில் இன்னும் மோசம், அது 10.70 ஐயும் விட மோசமாக குறைந்தவண்ணம் உள்ளது.)

ஒருபக்கம் பணவீக்கம் காரணமாக வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டிருக்கையில் மறுபக்கம் கிடுகிடுவென ஏறும் விலைவாசிகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. வீட்டு வாடகை எட்ட முடியாத உயரத்தில் பன்மடங்கு எகிறுவது ரியாத், ஜெத்தா, அபூதாபி மற்றும் ஷார்ஜாவில் என்றால் துபாய் மற்றும் கத்தரில் நினைத்துப் பார்க்கவே அஞ்சும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை சவூதியின் சில பகுதிகளைத் தவிர வளைகுடாவெங்கும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு தயாரிப்புக்குப் பெயர் போன வளைகுடாவில் 50% விலை உயர்ந்துள்ளது. மருத்துவம், இன்னபிற செலவுகள் பற்றி கேட்கவே வேண்டாம். விமான சேவைகளில் இருப்பவற்றிலேயே மிகமட்டரக சேவைகளுக்குப் பெயர் போன இந்திய வளைகுடா மார்க்கத்தில் ஏகபோக உரிமை கொண்டாடும் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் சந்தடி சாக்கில் ஏற்றிய கொள்ளை லாப விலை உயர்வினாலும் பாதிக்கப்படுவது அடிமட்டத் தொழிலாளர்களே!

Pravasi Bandhu Welfare Trust (PBWT) அமைப்பின் சேர்மன் கே.வி. ஷம்சுத்தீன், இதுபற்றிக் கூறுகையில் இந்தியர்கள் வளைகுடாவில் சம்பாதிப்பதால் பயனொன்றும் இல்லை என்பதை இப்போது நன்கு உணர்ந்திருக்கிறார்கள். கடந்த வருடங்களை விட இந்தியர்கள் வளைகுடாவில் சேமிப்பது 40% குறைந்துள்ளது என்பதான் உண்மை. இதில் சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோனோர் குறைந்த மற்றும் நடுத்தர சம்பளக்காரர்களே” என்கிறார்.

தற்போது வேலை செய்து வரும் வளைகுடா தொழிலாளர்கள் 1. செயல்திறனற்றவர் (Unskilled), 2. ஓரளவு கை தேர்ந்தவர் (Semi-skilled) மற்றும் 3. தேர்ச்சி பெற்றவர்(Skilled) என்ற மூன்று நிலைகளில் கட்டுமான, தயாரிப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பணியாற்றுகின்றனர். 500 திர்ஹமுக்குக் கீழே உள்ள சம்பளங்களில் வேலை செய்யும் பெரும்பாலான இந்திய தொழிலாளர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை இவர்கள் வேலை செய்கின்றனர். டெக்னிஷியன்கள், கம்யூட்டர் ஆபரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள், எலக்ட்ரீஷியன்கள், புரஃபஷனல் ரீதியில் பார்த்தால் டாக்டர்கள், இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், அக்கவுண்ட்டண்ட்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் ஒளிந்திருக்கும் உண்மை என்னவெனில் படிப்புத் தகுதி அதிகரிக்க அதிகரிக்க சம்பளம் அதிகரிக்கிறது. வசதி வாய்ப்புக்களும், வழங்கப்படும் வசதிகளும் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமில்லை.

இந்தியாவில் ஒளிரும் வேலை வாய்ப்புக்கள்:

இந்தியாவில் மிளிரும் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் இளம் தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் இளம் தலைமுறையினர் இப்போது குறைந்த சம்பளத்தில் நுழைவதில்லை. “கை நிறைய” காசு சம்பாதிக்கனும்னா கல்ஃப்க்கு போவனும்” என்கிற பழைய சித்தாந்தமெல்லாம் மாறியிருக்கிறது. ஆனால் வளைகுடாவில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டும், அவர்கள் வருவதற்கு முன் தான் கண்ட இந்தியாவே இன்னும் கண்ணில் நின்று கொண்டிருப்பதை ஒரு வித துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் 2006-ஆம் வருடத்திற்குப் பிறகு வளைகுடாவில் வசந்தம் வீசும் என்று எல்லாம் எதிர்பார்த்து வேலை தேடி வருபவர்கள் கையில் வெண்ணையை வைத்து நெய்க்கு அலையும் “பாவப்பட்டவர்கள்” என்கிறது இன்னொரு அறிக்கை.

இப்போது இந்தியாவில் IT கம்ப்யூட்டர் இஞ்சினியர்களுக்கு அடுத்தபடியாக கடுமையான டிமாண்ட் ஏற்பட்டிருப்பது ஆச்சரியப் படத்தக்க வகையில் சிவில் இஞ்சினியர்களுத்தான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் வளைகுடா நாடுகளுக்குத் தேவைப்படும் சிவில் இஞ்சினியர்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்து வர மறுத்து விடுகின்றனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகளும் தொழில் முனைவுகளும் அதிக சம்பளமும் தயாராக இருக்கிறது.

“உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்போது கிடைப்பதை விட அல்லது அதே அளவிற்கு சம்பளம் இந்தியாவிலேயே கிடைப்பதால் கஃல்ப்பிற்கு டாட்டா காட்டிவிட்டு இந்தியாவில் வந்து பணியைத் தொடர்கிறார்கள்” என்கிறார் கட்டிடக்கலை தொடர்பான பெங்களூரிலிருந்து இயங்கும் Civil Aid Technoclinic Pvt. Limited நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சுனில் சன்னாட்.

வளைகுடாவைப் புறக்கணிக்கும் இந்தியர்கள்

வளைகுடா நாட்டு நிறுவனங்கள் வேண்டி விரும்பிக் கேட்கும் உழைப்பிற்குப் பெயர் போன இந்திய தொழிலாளர்கள், இன்றைய தேதிக்குப் போதுமான அளவிற்கு வளைகுடா செல்லத் தயாரில்லை என்பதே யதார்த்த உண்மை. வளைகுடா நிறுவனங்கள் இந்திய விசா இல்லை என்று கையை விரித்த காலம் போய் விசாக்களை வைத்துக்கொண்டு, இந்திய மேன்-பவர் ஏஜண்ட்டுகளிடம் மல்லுக் கட்டுகின்றன.

Pravasi Bandhu Welfare Trust, ஷம்சுத்தீன் சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்த மாத வருமானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தன் குடும்பத்தினருக்கு மாத செலவுகளுக்கு உரிய பணம் அனுப்புவதற்காக தன்னுடைய அத்தியாவசியச் செலவையும் சேமிக்கும் கொடுமையைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

படிப்பு, வருமானம், குடும்பத்தை வளைகுடாவில் குடியமர்த்தும் பதவிநிலை, அவர்களை நம்பியிருப்போர், நாட்டிற்கு பணம் அனுப்பும் நிகழ்வுகள், சேமிக்கும் மற்றும் செலவு செய்யும் வழிமுறைகள், ஓய்வு பெறும் சூழல்கள், முப்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரையிலான வளைகுடா பணியாளர்கள் பத்தாயிரத்து நூறு பேர் பங்குபெற்ற இந்த சர்வேயில் 98 சதவீதம் பதிவான சர்வே விபரங்கள் கீழே:

சம்பாத்தியமும், சேமிப்பும்

5% – நிரந்தமாக ஓய்வு பெற்று நாட்டிற்குத் திரும்பிச்சென்றால் ஓரளவு நிம்மதியாக வாழும் அளவிற்கு பொருளாதாரம் உள்ளது.

2% – பணத்தை சேமித்துள்ளதாக கூறியுள்ளனர்

10% – குடும்பத்துடன் வளைகுடாவில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் சேமிப்பில்லை.

15% – நான்காயிரம் திர்ஹமுக்கு மேல் சம்பாதிப்போர். சேமிப்பில்லை.

26% – விபரங்களைக் கொடுக்க மறுத்துள்ளனர்

 

இந்தியாவிற்கு பணம் அனுப்புவோர் விபரம்

31% ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புகிறார்கள்

24% இரு மாதங்களுக்கு ஒருமுறை

11% மூன்று மாதங்களுக்கு

34% பணம் அனுப்பியதில்லை. காரணம் சேமிப்பில்லை

23% சம்பாதிப்பதில் ஓரளவு சேமிப்பு இருக்கிறது

“வளைகுடாவில் NRI-க்கள் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது” என்கிறார் ஷம்சுத்தீன். மேலும், “சேமிப்பை முறையாகத் துவங்க தங்கள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்” என்கிறார். “தங்கள் குடும்பத்தினருக்கு வளைகுடாவின் அல்லல்களை எடுத்துரைத்து செலவீனங்களை கட்டுப்படுத்தி சேமிப்பின் மகத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். தவிர, ஹலாலான வழிகளில் சிரமப்பட்டு சம்பாதித்த காசை புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே தக்கவைக்கவும், பெருக்கவும் முடியும்” என்கிறார்.

இவ்வாக்கத்தை நாம் எழுதத் துவங்கியதன் பின்னணி யாதெனில், படிப்பறிவில்லாத தமிழ் இஸ்லாமியச் சமுதாயம், தலைமுறை தலைமுறையாக ஆட்டுமந்தையைப் போன்று செயல்பட்டு வரும் பழைய சித்தாந்தங்களைச் சிறிது நேரம் ஒதுக்கிச் சிந்திக்க வேண்டும் என்பதுதான். பதினைந்து வருடங்கள் வளைகுடாவில் குப்பை கொட்டி பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்ட ஒரு தந்தையே எப்படியும் பாஸ்போர்ட் எடுத்து தன் மகனை வளைகுடாவிற்கு அனுப்பிவிடவே எத்தனிக்கிறார். இது, வளைகுடா தொழிலாளர்கள் படும் அல்லல்களின் பின்ணனியை முற்றிலும் அறியாததாலா? இல்லை குறுகிய காலத்தில் கைநிறைய சம்பாதித்துவிட வேண்டும் என்ற அரதப்பழசான சிந்தனை தரும் உந்துதலா?

எது எப்படியோ, தமிழ் இஸ்லாமியச் சமுதாயம் இத்தகைய குறுகிய சிந்தனையிலிருந்து வெளியேறி தீர்க்கமான ஒரு புதுயுகத்தினை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே நம்முடைய ஆதங்கமும் அவாவும். தெளிவான சிந்தனையிலிருந்து புறப்படும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே பொருளீட்ட வளைகுடா நாடி வரும் சமுதாயம், இப்போது சந்திக்கும் இழிநிலையில் இருந்து வெளியேறி புதியதொரு சரித்திரம் படைக்கும்.

கல்வியின் மகத்துவத்தையும் பொருளாதாரத்தின் தேவைகளையும் சேமிப்பின் அவசியத்தையும் இதன் மூலம் உணரும். இதனை நம்மிலிருந்து துவங்குவோம். இறைவன் நாடட்டும்.

நன்றி!

ஆக்கம்: அபூ ஸாலிஹா

< பகுதி 1

ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகள் மூலம் சமுதாயத்திற்கு நலன் விழைய, வாசகர்கள் தங்களது எண்ணங்கள், ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்ள வளைகுடா வாழ்க்கை எனும் தலைப்பின் கீழ் புதிய இழை ஒன்று விவாத அரங்கம் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகிறோம்.

 

– நிர்வாகி (சத்தியமார்க்கம்.காம்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.