ஷவ்வால் நோன்பு (பிறை-27)

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதிவிடக் கூடாது.

நபி (ஸல்) கூறியுள்ளார்கள்:
“ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று, பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவருக்குச் சமமாவார்” (ஆதாரம்: முஸ்லிம்).

ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி அறியாதவர்கள், அதனையும் நோற்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுவதில் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றனர்.

இன்னும் சிலர் அறியாமையால் ‘இது பெண்களுக்கு மட்டும் உரியது அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுகின்றனர்’ என்று கருதுகின்றனர். மேற்கண்ட ஹதீஸ் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் உரியது என்பதை நாம் கவனத்தில் கொண்டு இப்போது முதல் இந்த ஷவ்வால் 6 நோன்பையும் நோற்று அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்வோமாக.

ரமளான் முழுவதும் நோன்பு இருந்து தொழுகையை நிறைவேற்றி அதிகமதிகம் குர்ஆனை ஓதி, நன்மைகள் பல செய்து ரமளான் முடிந்த மறுநாள் பெருநாள் தொழுகை தொழுதவுடன் சினிமா தியேட்டர்களிலும் இன்னும் பிற கேளிக்கையான காரியங்களிலும் நம்மை மூழ்கச் செய்யும் ஷைத்தானின் வலையில் இருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்வோமாக!

நாம் செய்யும் ஒவ்வொரு அமலுக்கும் 10 நன்மைகள் எனும் அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மை என்பதுடன் தொடர்ந்து இந்த ஆறு நோன்புகளுக்கு 6×10 = 60 நோன்புகள் ஆக 300 + 60 = 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு இதில் இருக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது.

மேலும் இப்படி ஒவ்வொரு ஆண்டும் நாம் இவ்வாறு நோற்று வந்தால் நாம் காலம் முழுவதும் நோன்பு நோற்றதைப் போல் ஆகும் என்றும் நபி மொழிகள் உள்ளன. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாகச் செயல்படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தன என்பதற்கு உத்தம ஸஹாபாப் பெருமக்கள் (நபித்தோழர்கள்) சரித்திரங்கள் சான்று பகன்று வருகின்றன.

இன்று நமக்கு இந்த நன்மைகளின் மகிமை தெரியாது. ஆனால் நாளை நமது நன்மை-தீமைகள் நிறுக்கப்படும் போது நமது ஒவ்வொரு சிறிய நன்மையின் மகிமையும் அதேபோல் இன்று சர்வ சாதாரணமாக அலட்சியமாக நாம் செய்து வரும் (பட்டியல்களில் அடங்காத) ஒவ்வொரு தீமையின் பெரும் பாதிப்பும் அதன் பயங்கர இழப்பையும் காண முடியும் என்பது உறுதி.

நம்முடைய கடந்த நாட்களில் நடந்த எதையும் நம்மால் மாற்ற முடியாது, ஆனால் நம்முடைய இன்றைய நாளை நம்மால் முயன்று சீராக்கிக் கொள்ள முடியும். அதே நிலையில் முயன்று உறுதியாக சீராக நம்முடைய நாளைய வாழ்க்கையையும் அதன் வழிமுறைகளையும் இறை நாட்டத்துடன் அமைத்துக் கொள்ள முடியும் என்பதையும் அதே நிலையில் இறுதி மூச்சு வரை இருக்க வாய்ப்பும் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

இதற்கும் இஸ்லாமிய வரலாற்றினை தமது உன்னதமான தியாகங்களின் மூலம் சிறப்பித்துச் சென்ற சிற்பிகளான பிலால் (ரலி), கப்பாப் (ரலி), யாசிர் (ரலி), அம்மார் (ரலி), சுமைய்யா (ரலி) போன்ற எண்ணற்ற தியாகச் செம்மல்களின் கடந்தகால மற்றும் இறுதிகால வாழ்க்கையில் மிகவும் தெளிவான அழகான படிப்பினைகள் உள்ளன.

இவற்றையும் நிலையற்ற இந்த உலக வாழ்க்கையில் எப்போது நாம் இவ்வுலகில் அமல்கள் செய்யும் நல் வாய்ப்புகளை இழந்தவர்களாக இவ்வுலகை விட்டுப் பிரிந்து விடுவோமோ தெரியாது என்பதால், வெறும் நன்மைகள் மட்டுமே பயனளித்து நம்மைக் காக்கும் அந்த நிலையான மறு உலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அதிகப்படுத்த முனைவது மிகவும் அவசியம் மட்டுமல்லாது அறிவுடைய செயலாகவும் இருக்கும்.

ஷவ்வால் மாத நோன்பினைப் பற்றி அறிந்து அதையும் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் மிகவும் குறைவு என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. ரமளான் முழுவதும் பேணுதலுடன் இருந்த முஸ்லிம்களில் பலர் ஷவ்வால் ஒன்றில் பெருநாளைக் கொண்டாடுவதற்கு என்று பொதுவாக பெருநாளுக்கு முந்தைய மாலை முதல் நள்ளிரவு வரை கடைத்தெருக்களில் நேரத்தைக் கழித்துவிட்டு, பெருநாள் அன்று பஜ்ருத் தொழுகை தவறும் நிலையில் தூங்கத் துவங்கிவிடுகின்றனர். இது பெருநாள் கழித்து வரக்கூடிய மற்ற நாட்களிலும் தொடர்கிறது. அடுத்த ரமளான் வரை பலருக்கு இந்த நிலை நீடிக்கிறது என்பது வேதனையான உண்மை.

ரமளானில் தொழுகைக்கு அழைப்பு விடுத்த பாங்கோசைகள் இன்று ஏன் காதுகளில் விழாதது போல் செயல் படுகின்றோம்? அதானுக்கு முன்னர் பள்ளியில் கூடிய நாம் இன்று ஏன் அதை மறக்கடிக்கச் செய்யும் ஷைத்தானுடன் கூடும் விதமாக செயல்படுகின்றோம்? சுவனம்தான் இலட்சியமென்றால் ஏன் இந்த அலட்சியம்? இதுதான் நம் மூலதனமா? இதுதான் நமது தக்வாவின் வெளிப்பாடா?

அல்லாஹ் நம்மை இது போன்ற நிலையில் இருந்து பாதுகாப்பானாக! எங்கு இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நாம் நமது ஈமான், தொழுகை, தக்வா போன்றவற்றினை விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும். இவற்றினை இலகுவாக்கும் அடிப்படையே தொழுகை என்பதில் சந்தேகம் ஏதும் உண்டா? ஒவ்வொரு தொழுகையையும் தவறாமல் இயன்றவரை ஜமாஅத்துடன் தொழ முயல வேண்டும், வீடுகளிலும் நாம் சுன்னத்தான நஃபிலான தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.

ரமளான் முழுக்க ஓதிய குர்ஆனை ஷவ்வாலிலும் (பொருளுடன்) ஓதவேண்டும். ஷவ்வாலுக்குப் பின்னரும் தினமும் ஓத வேண்டும், ஷவ்வாலில் மீண்டும் பள்ளிகள் தொழுகையாளிகள் இன்றி காணப்படும் நிலையை நாம் தான் மாற்ற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து செயல்பட்டால் நமக்கும் நம் முஸ்லிம் சமுதாயத்திற்கும் முழுமையாக பயனளிக்கும்.

ஒருவரிடம் தக்வா நிலைபெற்றிருப்பதன் வெளிப்பாடு அவருக்கும் அவருடைய சமுதாயத்திற்கும் பலனுடையதாக நலன் விளைவிப்பதாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இறைநம்பிக்கையாளருக்கும் இறைநம்பிக்கை அற்றவருக்கும், என்ன வேறுபாடு? அதேபோல இறைநம்பிக்கையுள்ள சமுதாயத்திற்கும் இறைநம்பிக்கையற்ற சமுதாயத்திற்கும் ஒரு வேறுபாடும் இல்லை என்ற நிலைதான் ஏற்படும்.

இதர மதத்தினர்களின் சில பெருநாள்கள் போல், அன்று மட்டும் சிறப்பித்துக் கொண்டாடி, சில நேரங்களில் அதன் திளைப்பில் தனக்கும் தன் சமுதாயத்திற்கும் உடல் ரீதியாக, பொருள் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பையும் இழப்பையும் குரோதத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் விதமான ஒரு சிலரின் செயலுக்கும் பெருநாள் எனும் பெயரில் மதிமயங்கிச் செயல்படுவதிலிருந்தும் முஸ்லிம்களின் பெருநாளும் செயல்பாடும் எந்நேரமும் வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.

இதில் நாம் பார்க்க வேண்டியது நம் குடும்பத்தை, நம் உறவை, நம் கட்சி, இயக்கம், நம் மார்க்கம் அல்லது சமுதாயத்தைச் சார்ந்தோர் என்று அல்லாமல் யாரிடம் இது போன்ற சமூக சீர் கேடுகள் காணப்படினும் எச்சரித்துக் கண்டித்துச் சீர்திருத்த முனைய வேண்டும்.

ஒரு நாள் ‘பெருநாள்’ எல்லாம் கூடும் என்று கண்டு கொள்ளாமல் இருத்தல் கூடாது, மனிதனுடைய 24 மணி நேர வாழ்க்கைக்கும் வழி வகுத்த இஸ்லாமிய மார்க்கம் இதற்கும் ஒரு வரம்பு விதித்துள்ளது, அதனுள் இருந்தே நாம் நமது மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

ரமளானில் நாம் பெற்ற இந்த நோன்பும் பயிற்சியும் அதன் பலன்களும் தொடரும் விதமாக இந்த ஷவ்வால் நோன்பு அமைந்திருப்பதைக் காண முடிகிறது. பெருநாளை மகிழ்வுடன் இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து அனுமதிக்கப்பட்ட விதத்தில் கொண்டாடிய உடன் பெருநாளுக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்கள் அல்லது ஷவ்வால் மாதம் முடியும் முன்னர் இந்த நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை நாம் நோற்பது மூலம் தொடர்ந்து இன்னும் மற்ற சுன்னத்தான திங்கள், வெள்ளி மற்றும் மாதம் மூன்று நோன்புகள் போன்ற நோன்புகளும் நோற்கும் ஆர்வம் ஏற்படலாம். அதேபோல் தொடர்ந்து குர்ஆன் ஓதுதல், தர்மங்கள் என்று எல்லா நல்ல அமல்களிலும் ஈடுபாடு அதிகரிக்கலாம். அல்லாஹ் நம்மை நன்மைகளின் பால் விரைந்தோடுபவர்களாகவும், தீமைகளை விட்டு வெருண்டோடுபவர்களாகவும் ஆக்கி அருள்புரிவானாக.

ரமளான் மூலம் நாம் பெற்ற ‘தக்வா’ (இறையச்சம்) எனும் அருள் மிகுந்த, விலை மதிப்பற்ற பொக்கிஷத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்வோமாக!

அந்த இறையச்சத்தை நமது இறுதி மூச்சுவரை பேணிப் பாதுகாத்து ஈமானுடன் நபிவழியில் வாழ்ந்து வரவேண்டும் என்பதனை நன்கு உணர்ந்தவர்களாக மன உறுதியுடன் செயல்பட முனைவோமாக!

வல்ல இறைவன் அதற்கு நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்.

oOo

(மீள் பதிவு)
-தொடரும், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.