பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 2

Share this:

ஆக்ரமிப்பும் திருப்பித் தாக்குதலும் பேராசிரியர் நாம் சோம்ஸ்கி மிகவும் சுறுசுறுப்பான ஓய்வற்ற மேடைப் பேச்சாளர்களில் ஒருவர். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால்தான் அவரைக் காண இயலும். முன்பதிவு செய்பவர் என்ன விஷயத்தைக் குறித்துப் பேசப் போகிறார் என்று கேட்பது சகஜம். மத்திய ஆசியாவைக் குறித்து பேச வேண்டியதெனில், அவர் கொடுப்பது “மத்திய ஆசியாவின் தற்போதைய பிரச்சினைகள்” என்ற தலைப்பாகும். காரணம், எச்சமயத்திலும் அங்கு பிரச்னைகள் இல்லாமல் இருக்காது என்று சோம்ஸ்கி கூறுகிறார். மேலும், “ஏகாதிபத்திய சக்திகளின், முக்கியமாக அமெரிக்காவின் நீண்டகாலப் பொருளாதார நிலைநிற்பிற்கு மத்திய ஆசியாவில் எப்பொழுதும் பிரச்சினைகள் நிலவிக் கொண்டிருக்க வேண்டும்”(Powers and Prospects By Pro.Chomski Page 136-144) என்றும் கூறுகிறார். இது எண்ணெய் நாடுகளுக்கும், ஆயுத விற்பனைக்கும் கூடுதல் நெருக்கமுள்ள ஒரு தந்திரமாகும்.

மத்திய ஆசியாவில் 2000 செப் 28 –ல் ஆரம்பித்த பிரச்னைகளை ஊடகங்கள் எவ்வாறு வெளியிட்டன என்பதை இனி ஒவ்வொன்றாக காணலாம்.

ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்குண்டான தனித்துவமிக்க அர்த்தங்கள் உண்டு. ஆக்ரமிப்பு, தற்காப்பு என்ற இரு சொற்கள் ஒன்றுக்கொன்று எதிரான அர்த்தங்களைத் தரும். ஒன்று அநியாயமாக மற்றவர்களுக்கு உரியதைப் பறித்துக்கொள்வதையும், மற்றொன்று அவ்வாறு ஆக்ரமிக்க வருபவர்களை நியாயமாக எதிர்த்துத் தாக்குவதையும் குறிக்கும். மேற்குலக பத்திரிக்கைகளையும், வானொலி தொலைக்காட்சி ஊடகங்களையும் கவனிப்பவர்களுக்கு, ஒரு தடவை கூடப் பாலஸ்தீனியர்களின் எதிர்தாக்குதலை “தற்காப்பு யுத்தம்” என்று கூற அவர்கள் தயாராகாதது நன்றாகத் தெரியும். அவர்களின் பார்வையில் இஸ்ரேலியர்களின் யுத்தம் மட்டுமே எப்பொழுதும் தற்காப்பு/எதிர் தாக்குதலாக இருக்கும். பாலஸ்தீனியர்களை அக்கிரமக்காரர்கள் என்றும் இஸ்ரேலை நீதி/நியாயவான்களாகவும் சித்தரித்ததில் இந்த இரு சொற்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல.

மேற்கத்திய ஊடகங்களிலும் அதில் வரும் செய்தியின் நம்பகத்தன்மையின் அளவினைக் குறித்தும் சிறிதும் ஆராய்ந்து பார்க்காமல் அவைகளை அப்படியே வாந்தியெடுக்கும் இந்திய ஊடகங்களில் வரும் வார்த்தைப் பிரயோகங்களும் இதற்கே வழிவகுக்கின்றன. மத்திய ஆசியாவின் பிரச்சினைகளுக்கு தீர்வு சமாதான நடவடிக்கையின் மூலம் தான் என்பதே இப்போதைய நிலை. ஆனால் சமாதான நடவடிக்கை என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது அமெரிக்க அரசாங்கமாகும். அதன்படி 1967 – ல் இஸ்ரேல் ஆக்ரமித்த பாலஸ்தீன் பகுதியை பாலஸ்தீனியர்களுக்கு விட்டுக் கொடுப்பது என்பது சமாதான நடவடிக்கையின் ஓர் அங்கமன்று. அப்படியொரு கோரிக்கை வைப்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தப்படி சமாதான நடவடிக்கையைத் தகர்க்கும் காரியமாகும்.

பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை இஸ்ரேல் என்பது ஓர் ஆக்ரமிப்பு நாடாகும். காஸா (Gaza) மற்றும் மேற்குக்கரைப் (West Bank) பகுதிகளில் காணப்படும் எந்த ஓர் இஸ்ரேல் இராணுவ வீரனும் ஆக்ரமிப்பு நாட்டைச் சேர்ந்தவனே. அவனை எதிர்கொள்வதென்பது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதன் ஓர் அங்கமாகத் தான் பாலஸ்தீனியர்கள் எண்ணுகின்றனர். ஆனால் மேற்குலகிற்கு இவர்கள் பாதுகாப்பு(?) இராணுவமாகும்.

இஸ்ரேலியர்களை ஆக்ரமிப்பாளர்களாக, ஆக்ரமிப்பு நாட்டைச் சேர்ந்தவர்களாக சித்தரிக்க ஒருமுறை கூட இந்திய பத்திரிக்கை நிருபர்களுக்குத் துணிவில்லை. (உதா.Reports from The Hindu daily 4,6,9,10,14 Oct 2000 By Sridhar Krishna Swamy, Kesava Menon ). மேலும் பாலஸ்தீனியர்கள் ஒரு போதும் சுதந்திரப் போராளிகளாகவும் சித்தரிக்கப்பட்டதில்லை. இஸ்ரேல் சட்டரீதியாக ஒரு நாடானாலும் இல்லையெனினும் காஸா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில் எதிர் தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனியர்கள் சுதந்திரப் போராளிகள் என்பதில் ஐயமில்லை.

இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை பாலஸ்தீனியர்களை ஒருதலைபட்சமாக குற்றப்படுத்துதலை விட்டு ஒதுங்கி நின்றதை விட்டால் மற்றெல்லா காரியங்களிலும் மேற்கத்திய ரீதியை அப்படியே காப்பியடிக்கவே செய்தனர். இஸ்ரேலிய இராணுவத்திற்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்கள் எண்ணிலடங்கா. அது போன்ற ஒரு மோதல் செப். 28 2000 அன்று மேற்குக்கரை மற்றும் காஸா இரு பகுதிகளிலும் ஆரம்பித்தது. இம்முறை இஸ்ரேலிய இராணுவமும் பலஸ்தீனியர்களும் நேரடியாக மோதினர். பல முறை குடியேற்ற யூதர்களும் இதில் சேர்ந்து கொண்டனர்.

அமெரிக்காவின் முக்கியத் தொலைக்காட்சிகளில் மூன்று – ABC யின் World New Tonight, NBC –யின் Nightly News, CBS –ன் Evening News – இச்சம்பவங்களைப் பற்றிப் பதிவறிக்கை சமர்ப்பித்தனர். 2000 செப். 28 க்கும் நவ – 2 க்கும் இடையில் 99 அறிக்கைகள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 4 –ல் மட்டுமே மேற்குக்கரையும் காஸாவும் இஸ்ரேல் ஆக்ரமித்த பகுதிகள் என நேரடியாகக் கூறினர். இதன் காரணம் வெட்டவெளிச்சமானது. “பாலஸ்தீனியர்களின் வன்முறைகள்”(Palestinian Violence) என்ற வார்த்தை பிரயோகம் இவ்வறிக்கை முழுவதும் பரவிக் கிடந்தது.

மேற்குக்கரை மற்றும் காஸா 1948 க்குப் பின் இஸ்ரேல் ஆக்ரமித்த இடங்களாகும். அதாவது இந்த இரண்டு பிரதேசங்களில் காணப்படும் எந்த ஓர் இஸ்ரேலிய சிப்பாயும் மற்றவர்களைப் பொறுத்தவரை அன்னிய ஆக்ரமிப்பாளனாவான். ஆக்ரமிக்கும் நாட்டினை ஆயுதம் உபயோகித்து எதிர்ப்பது உலக யுத்த சட்டப்படி நியாயமானதாகும். யுத்தத்தின் மூலம் ஆக்ரமித்த இடத்தில் வெற்றி பெற்ற நாடு அவர்களின் மக்களை குடியிருத்துவதையும் ஐக்கிய நாடுகள் சபை கண்டித்திருக்கிறது. மேற்குக்கரையிலும் காஸாவிலும் உள்ள யூதக் குடியேற்றக்காரர்கள் இச்சட்டப்படி குற்றவாளிகளாவர்.

இந்த விஷயம் ஒன்றும் வெளிவராதிருப்பதற்கும், அவை பூதாகாரமாக்கப்படாதிருப்பதற்கும் தங்களது சொந்த இடத்திற்காக ஆயுதமெடுத்துப் போராடும் பாலஸ்தீனியர்களை, “பாலஸ்தீனியர்களின் வன்முறைகள்” என்ற வார்த்தைக் கொண்டு பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும், மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகள் இஸ்ரேல் அநியாயமாக பிடித்தெடுத்த பகுதிகள் எனக் கூறாதிருப்பதும் அவசியமானதல்லவா? இதே முறையில் 1990-91 –ல் இராக் குவைத்தை ஆக்ரமித்தபோது இதே தொலைக்காட்சி ஊடகங்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டது என்பதை சற்று ஆராய்ந்தால் இவர்களின் வஞ்சக ஏகாதிபத்திய முகம் கோரமாக வெளிப்படுவதைக் காணலாம்.

ABC-ல் பீட்டர் ஜென்னிங்ஸ் சமர்ப்பித்த அறிக்கைகளில் “இராக் ஆக்ரமித்த குவைத் பகுதி” (Iraqi – Occupied Kuwait) என்றிருந்தது. ஒரு குவைத் சிப்பாயிடம் அவரின் கேள்வி எவ்வாறு இருந்தது என்பதை கவனியுங்கள்: “இராக் ஆக்ரமிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறித்து எங்களிடம் கூறுங்கள்” (ABC, World News Tonight, 6 Sept 1990). CBS –ல் டான் ராதரின் ரிப்போர்ட் குவைத்தை ஆக்ரமிக்கப்பட்ட பிரதேசமாக குறிப்பிட்டது(CBS, Evening News 11 Sept 1990). குவைத்தின் பாகங்களை சில மாதங்கள் ஆக்ரமித்திருந்த ஈராக்கை இப்படி விமர்சிப்பதற்குத் தயங்காத அமெரிக்க ஊடகங்களுக்கு, 40 வருடங்களாக காஸாவையும் வெஸ்ட்பாங்கையும் ஆக்ரமித்து வைத்துக்கொண்டிருப்பது மட்டுமன்றி, தனது மக்களை அங்கு குடியேற்றி வைத்திருக்கும் இஸ்ரேலை ஒரு தடவைக் கூட ஆக்ரமிப்பு நாடாக எடுத்துக் கூற மனமும், நடுநிலை-நீதிமனப்பாங்கும் இல்லாதிருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.

மேற்குக்கரையில் ஒரு இஸ்ரேலிய இராணுவ முகாமை காலி செய்ய வேண்டிய நிலை வந்த போது அதைக் குறித்து CBS இவ்வாறு கூறியது: “பாலஸ்தீனியர்களின் வன்முறைகளைப் பொறுக்கமுடியாமல் இஸ்ரேல் இடம் பெயர்ந்தது” (CBS Evening News 4 Oct 2000, 7 Oct 2000, 8 Oct 2000). இவ்விடங்களை கைப்பற்றிய(ஆக்ரமித்த) இடங்களாக சித்தரிக்காதது மட்டுமல்ல, இஸ்ரேலின் பாகங்களாக இவற்றைக் கூறவும் இவர்கள் தயங்கவில்லை. மேற்குக்கரையிலுள்ள தனது சட்டவிரோத இராணுவ முகாமை இஸ்ரேல் காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்த போது அதனை NBC Nightly News –ல் டோம்புரோக்கோ, “எக்காலமும் இஸ்ரேலில் கூடிக்கொண்டேயிருக்கும் வன்முறைகள்” என்று எடுத்துக் கூறினார்(Tom Brokaw, NBC Nightly News, 2 Oct 2000). இங்கு பலஸ்தீனின் மேற்குக்கரை பகுதியை இஸ்ரேலின் பகுதியாக சித்தரித்திருப்பதை கவனியுங்கள். ஒரு நாட்டின் பகுதியை மற்றொரு நாட்டின் பகுதியாக சித்தரிக்கும் அநியாயம் இது போல் உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை.

Courtesy : Falastheenum Paschatya Madhyamangalum(Malayalam) (Political Science) By N.M.Hussain

–அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.