துகளுக்குரிய கடவுள் பெயரால்..!

Share this:

வ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப் போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன!

அதற்கு ‘கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு’ என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு.

நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது? பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது? பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன? ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் அபாயகரமானது என பீதி கிளப்பிய ‘Higgs Boson’! ஆய்வு தொடங்கியது.

சுமார் 400 ட்ரில்லியன் புரோட்டான்களை எதிரெதிர்த் திசைகளில் அதிவேகத்தில் மோதவிட்டு அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர். அந்த ஆய்வின் இடைக்கால முடிவில் கடவுளின் அணுத்துகள் எனப்படும் ‘Higgs Boson’ (ஹிக்ஸ் போஸன்) என்ற துணை-அணுத்துகள்கள் (Sub-Atomic Particle)இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர்ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அது என்ன ஹிக்ஸ் போஸன்?

அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத்துகள்களால் ஆனது என்பதே விஞ்ஞானத்தின் நம்பிக்கையாக ஆரம்ப கட்டத்தில் இருந்தது.

அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்தத் துணை அணுத்துகள்களின் கூட்டுநிறையாக இருக்கவேண்டும். ஆனால் ஆச்சரியகரமான வகையில், ஒரு புரோட்டானின் நிறையானது இந்தத் துணை அணுத்துகள்களின் மொத்த நிறையைவிட மிகமிக அதிகமாகவே உள்ளது.

இதனால், புரோட்டானில் மேற்குறிப்பிட்ட மூன்று துணை அணுத் துகள்களைவிட கூடுதலாக வேறு ஏதோ ஒரு “சக்தி” மறைந்துள்ளது என்பது விஞ்ஞானிகளின் யூகம். என்னவென்று அறியப்படாத இந்த மறைசக்திக்கு விஞ்ஞானிகள் போட்டப் பெயர்தான் “ஹிக்ஸ் போஸன்” – “கடவுளின் அணுத்துகள்”. அணுவை இயக்கும் தன்மை ஹிக்ஸ் போஸனுக்கு உண்டு என்பதாலேயே விஞ்ஞானிகள் அதற்கு இத்தகைய பெயரிட்டுள்ளனர். அவ்வாறு ஒரு மறைவான சக்தி புரோட்டானுக்குள் ஒளிந்திருப்பதை உறுதிபடுத்தி, அதனைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சியே ‘ஹிக்ஸ் போஸன்’ ஆய்வு.

பெளதிகத்தில் Higgs Boson என்பதற்கு, “a particle predicted to exist in the Standard Model but as yet undetected; it is a massive scalar particle responsible for giving mass to other elementary particles” – “நிரூபணமில்லாத/புலப்படாத மறைந்துள்ள ஒரு துகள்; அது அணுக்களின் துணைத் துகள்களுக்கு நிறையை (MASS) வழங்குகிறது” என்று பொருள் கொள்ளப்படுகிறது!

சரி, இந்த ஹிக்ஸ்போஸனைக் கண்டறிய அப்படி என்னதான் அபாயகரமான ஆய்வினை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்?

பலகோடிக் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்துத் சிதறடித்தால், புரோட்டானின் துணை அணுக்களான குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றுடன் மின் காந்தக் கதிர்வீச்சு, வெப்பம் போன்றவையும் வெளிப்படும். அவ்வாறு புரோட்டான் சிதறும் போது இவற்றுடன், நிரூபிக்கப்படாத அந்த மறைதுகள் ‘ஹிக்ஸ் போஸனும்’ வெளியேறும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.

இவ்வாறான ஒரு சோதனையைச் சாதாரணமாக மேற்கொண்டுவிட முடியாது. பலகோடிக்கணக்கான புரோட்டான்களை ஒளிவேகத்தில் மோதவிடுவதால் வெளிப்படும் கதிர்வீச்சு, வெப்பம் போன்றவைகள் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கலாம். ஆகவே இதற்காக பூமிக்குக் கீழே சுமார் 300 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளத்துக்கு வட்ட வடிவில் சுரங்க ஆய்வகம் ஒன்றை விஞ்ஞானிகள் அமைத்தனர். இந்த 27 கிலோமீட்டர் தூரத்துக்கு அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட நீள பைப் ஒன்றை அமைத்து, அதனுள் சோதனைக்குரிய கோடிக்கணக்கான புரோட்டான்களை மோதவிட்டனர். இந்த பைப்பிற்கான பெயரே, Large Hadron Collider சுருக்கமாக LHC.

இந்த வட்டவடிவ சுரங்கத்தினை அமைக்க சுமார் 5.8 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. 5000 விஞ்ஞானிகள் இணைந்த இந்தக் கூட்டுமுயற்சியில், சுரங்கத்தின் இரு பகுதிகளில் தனித்தனியாக விஞ்ஞானிகள் தலைமையிலான இரு குழுக்கள் இச்சோதனையில் ஈடுபட்டது. கடந்த 2008 செப்டம்பர் 10 ஆம் தேதி முதல்கட்டமாக ஒரு பக்கத்திலிருந்து புரோட்டான்கள் அதிவேகத்தில் பாய்ச்சப்பட்டன. அது பயணப்படும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் கண்டக்டிவ் காந்தங்கள், புரோட்டான்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க வைக்கும். இவ்வாறு அதிகரிக்கும் புரோட்டான், ஒரு வினாடியில் அந்த 27 கிலோமீட்டர் நீளத்தை சுமார் 11,245 முறை சுற்றி வரும். இந்த வேகத்தில் புரோட்டான்கள் சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில், எதிர் திசையிலிருந்து மற்றொரு கொத்து புரோட்டான்கள் அதிவேகத்தில் அவற்றின்மீது பாய்ச்சப்படும். இவ்வேளையில் அவை சிதறடிக்கப்பட்டு அவற்றிலிருந்து மேலே குறிப்பிட்டவாறு அதன் துணை துகள்களோடு, கதிர்வீச்சு, வெப்பம் போன்றவற்றோடு ஹிக்ஸ் போஸனும் வெளிப்படும்.

இந்தச் சோதனையின் ‘இடைக்கால முடிவில்’தான் ‘ஹிக்ஸ் போஸன்’ இருப்பது உண்மைதாம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வில் நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளனவாம்! இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ‘ஹிக்ஸ் போஸன்’ தான் காரணம் என்பதற்கான முடிவுக்குக் கிட்டத்தட்ட வந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

எனினும், தங்களின் நம்பிக்கையை உறுதியான-இறுதியான ஆதாரங்களுடன் நிருபிப்பதற்கு இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலுள்ள எண்ணற்ற நம்பிக்கைகளுள் அதிகம் சர்ச்சைக்குள்ளான நம்பிக்கையாக இருப்பது கடவுள் நம்பிக்கை. கடவுளைப் போதிக்கும் எல்லா மதங்களிலும் கடவுளுக்கு வெவ்வேறு இலக்கணங்களைக் கொடுக்கிறார்கள். சிலர் கடவுளும் மனிதர்களைப் போன்றே பெற்றோர்-மனைவி-குழந்தை-குட்டி என்று கூட்டுக்குடித்தனமாக வாழ்வதாக நம்புகிறார்கள். வேறுசிலர், கடவுளுக்கு மனித கற்பனைக்கு எட்டாத உருவங்களைக் கொடுத்து (அவற்றில் சில விகாரமாகவும் உள்ளன) அவற்றை நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இவ்விரு சாரார்களின் கூற்றுக்களிலிருந்தும் இஸ்லாம் வேறுபடுகிறது.

இந்த இருவகை நம்பிக்கையாளர்களிலிருந்து மாறுபட்டுள்ள இன்னொரு நம்பிக்கையாளர்களும் உள்ளனர்! கடவுள் இல்லை என்று நம்புபவர்கள்! இவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படை யாதெனில், கண்களால் காணமுடியாதது கடவுளாக இருக்க முடியாது என்பதாகும். ஏனெனில், கடவுளை யாரும் கண்டதில்லை; இனியும் காணமுடியாது என்பதே – அதாவது கடவுள் என்பது ஆய்வுகள் மூலம் நிருபிக்க முடியாத ஒரு பொருள் அல்லது சக்தி என்பது இவர்களின் நம்பிக்கை. கடவுளை மனித வடிவில் உருவகிக்கும் நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் இவர்களின் கேள்விகள் உள்ளன. கடவுள் குறித்த இவர்களின் கேள்விகளுக்குப் பதிலாக இஸ்லாத்தின் கடவுள் கோட்பாடு உள்ளது.

“கடவுள் ஒருவனே(பெறப்படவுமில்லை-பெற்றவனுமில்லை); அவனுக்கு மனிதர்கள் விளங்கிக்கொள்ளும்படியான உருவமில்லை. படைப்புகளின் அதிபதி, பிரபஞ்சம் உள்ளிட்ட அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன்; அவன் ஒப்பாரும் மிக்காரும் அற்றவன்” என்றெல்லாம் மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கடவுளின் தன்மையையும் இருப்பையும் இஸ்லாம் வரையறை செய்கிறது. கடவுளைப்பற்றிய வரையறைகளைக் கடவுளே சொல்வதுதான் அறிவுப்பூர்வமானது. அவ்வகையில் கடவுள்பற்றிய குறிப்புகள் அடங்கிய வழிகாட்டல்களின் தொகுப்பே குர்ஆன்.

கடவுள் நம்பிக்கையற்றவர்கள் தங்களை, “பகுத்தறிவாளர்கள்” என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்கள் கடவுள் பற்றிய அனைத்துக் கோட்பாடுகளையும் பகுத்து அறியாதவர்களே! பகுத்து-அறிவது என்றால் இம்மூன்று கோட்பாடுகளிலும் ஏதேனும் ஒன்றைப் பகுத்தறிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். இவர்களது நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை ஆகிய இரண்டும் இவர்களின் பகுத்தறியும் திறனுக்கு எட்டவில்லை என்பது மட்டுமே காரணமாக உள்ளது.

இவர்களன்றி இன்னொரு வகையினரும் உள்ளனர். விஞ்ஞானிகள்! அறிவியல் ஆய்வுகள் மூலம் நிருபணம் செய்து நம்புபவர்கள். விஞ்ஞானிகளில் சிலர் கடவுள் நம்பிக்கையாளர்களாகவும் சிலர் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் அல்லது அதுகுறித்த சிந்தனையோ /ஆர்வமோ இல்லாதவர்களாகவுமே உள்ளனர். அறிவியலின் பலகூறுகளிலும் ஆய்வுகளைச் செய்து, அதன் பின்னணியில் ‘ஏதோவொரு அமானுட சக்தி’ இருப்பதாக நம்பி, கடவுள் கோட்பாடு குறித்த கொள்கைகளை ஆராய்ந்து இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களும் பலர் உள்ளனர். இன்னும் சிலர் இன்ஷா அல்லாஹ் நம்பிக்கை கொள்வர்!

கடவுளைக் கண்டுபிடிக்கும் ஆய்வின் முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி, நிச்சயமாக இவர்களது புறக்கண்களால் கடவுளையோ அல்லது கடவுளின் துகளையோ காணமுடியாது. உண்மையில் விஞ்ஞானிகள் தற்போது பெயரிட்டு அழைக்கும் “கடவுளின் துகள்” என்பதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை. ஓர் உருவத்தை மனிதனால் தீர்மானிக்க முடிந்தால், அது கடவுளேயில்லை என்பதுதான் இஸ்லாத்தின் தீர்வு! ஆகவே, “கடவுளைக் கண்டுபிடிக்கப் பிரயத்தனப்படும்” இந்த விஞ்ஞானிகள் செலவு செய்யும் கோடிக்கணக்கான பொருளாதாரத்தை மனித முன்னேற்றத்துக்குச் செலவிட்டால் பிரயோசமாக இருக்கும்.

இதுவரையிலும் இவர்கள் கண்டுபிடித்திருப்பது (?!) என்னவெனில் புரோட்டானின் உபரி நிறைக்கு ‘ஏதோ ஒன்று’ மறைமுகக் காரணமாக இருக்கிறது. முடிவற்ற இவர்களின் முடிவு சொல்வது என்னவெனில் அந்த ஏதோ ‘ஒன்றை’த் தொடர் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பார்களாம்!

“கடவுளின் துகளை” மேலும் பலகோடி டாலர்கள் செலவழித்து நுணுக்கமாகக் கண்டுபிடித்தாலும்கூட, ப்ரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் துகள்களைக் கண்டுபிடித்தப்போது விஞ்ஞானம் ஒருபடி முன்னேறியதுபோல் அதுவும் ஓர் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இருக்குமேயன்றி, மரணத்துக்கு முன்னதாக கடவுளின் இருப்பை மனிதர்களால் காணமுடியாது என்பதே எதார்த்தம்!

இதைப்புரிந்து கொள்வதற்கு “விஞ்ஞான அறிவாளி”களாக இருக்கவேண்டிய அவசியமில்லை; இஸ்லாத்தைப் புரிந்துகொண்ட சாதாரண முஸ்லிமாக இருந்தாலே போதும்!

– N. ஜமாலுத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.