தோழர்கள் – 8 – அபூதர்தா – أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

கடை மூடப்பட்டது
Share this:

 

ஒருமுறை இளைஞன் ஒருவன் வந்து அபூதர்தாவைச் சந்தித்தான். “நபிகளாரின் தோழரே! எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்களேன்.” அவரைப் பற்றி அறிந்து மக்கள் தேடித் தேடி வந்து பேசிப் பழகி தெளிவு பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள். அப்படித் தேடி வந்தவன்தான் அந்த இளைஞனும்.

“மகனே, ஒரு மார்க்க அறிஞனாய் இரு, அல்லது அவருக்கு ஒரு மாணவனாய் இரு, அல்லது மார்க்க அறிவுரைகளை உற்றுக் கேட்பவனாய் இரு. இந்த மூன்றில் ஒருவனாய் இல்லாமல் ஆகிவிடாதே. ஏனெனில் அது உனது அழிவிற்கு வழிவகுத்து விடும்.

“மகனே! பள்ளிவாசலை உனது வீடாகக் கருது. ஏனெனில், ‘இறைவனுக்கு அஞ்சும் ஒவ்வொரு மனிதனுக்கும் பள்ளிவாசல் வீடாகும். அப்படிப் பள்ளிவாசலை வீடாக்கிக் கொள்பவர்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் ஆறுதலையும் கருணையையும் சத்தியமளிக்கிறான். மேலும் அவனது உவப்பைப் பெறும் பாதையில் அத்தகையவர்கள் நடைபோட முடியும் என்றும் அவன் வாக்குறுதி அளித்துள்ளான்’ என்று  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.”

நமது காலகட்டத்தில் நம்மில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அத்தியாவசியமான அறிவுரை இது! காலா காலத்திற்குமான அறிவுரை!

ஒருநாள் அபூதர்தா சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, சில இளைஞர்களைக் கண்டார். வெட்டித் தனமாய்க் கதைப் பேசிக் காலங்கழிக்கும் இளைஞர் கூட்டத்தை இன்றும் நாம் பார்க்கிறோமில்லையா? அப்படியான சில வாலிபர்கள் ஓரமாய் அமர்ந்து கொண்டு, சும்மாவேனும் கதைப் பேசிக் கொண்டு, சாலையில் செல்பவர்கள், வருபவர்களையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்றார் அபூதர்தா.

“பிள்ளைகளே! ஒரு முஸ்லிமிற்கு அவனது இல்லமே பாதுகாப்பான புகலிடம். அங்கு அவன் தனது பார்வையையும் ஆசைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இப்படி சாலையோரங்களில் பொழுது கழிப்பதைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் அது அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் உங்களைத் தடுத்து விடும்; வெட்டிப் பேச்சிற்கும் வழிவகுத்து விடும்”

அன்றே இந்த எச்சரிக்கை அவர்களுக்குத் தேவைப்பட்டதென்றால், இன்று?

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அப்பொழுது சிரியாவை நிர்வகித்துக் கொண்டிருந்தார். முஆவியா பின் அபீஸுஃப்யன், நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபாவின் சகோதரர். குர்ஆன் அருளப்பெற்றபோது அதை எழுதப் பணிக்கப்பெற்றவர்களில் அவரும் ஒருவர். சிரியா நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்க உமர் அவரை அமர்த்தியிருந்தார். அவர் தன்னுடைய மகன் யஸீத் இப்னு முஆவியாவிற்கு அபூ தர்தாவின் மகள் தர்தாவை மணமுடிக்க விரும்பினார். யஸீதோ செல்வச் செழிப்பும் வளமையும் சேர்ந்து மாளிகை, சேவகர்கள், வசதி என்று வாழ்ந்து கொண்டிருந்தார். எவ்விதத் தயக்கமுமின்றி அந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் அபூதர்தா. அது மட்டும் இல்லை. எவ்வித அந்தஸ்தோ, பிரபல்யமோ இல்லாத ஓர் எளிய முஸ்லிம் வாலிபனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அந்த இளைஞனின் நடத்தையும் குணமுமே அவருக்குப் போதுமானதாயிருந்தது.

இவ்விஷயம் பொதுமக்கள் மத்தியில் பெரிய செய்தியாகிப்போய், மக்கள் பரபரப்புடன் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். “கேட்டாயா செய்தியை! அபூதர்தாவின் மகளை யஸீத் இப்னு முஆவியா மணந்து கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் அதை மறுத்துவிட்டு பொதுமக்களில் ஒரு சாதாரண ஆளை மருமகனாக்கிக் கொண்டாராம் அவர்”

பேசிப் பேசி பொறுக்க முடியாமல் அபூதர்தாவிடமே கேட்டு விட்டனர் சிலர். “ஓ அதுவா! என் மகளுக்குச் சிறப்பான வாழ்க்கையை நான் நாடினேன். அதனால்தான்” என்று பதில் வந்தது. யஸீதிடம் இல்லாத சிறப்பா? அவருடைய தகப்பனார் முஆவியாவிடம் இல்லாத சிறப்பா? புரியவில்லை மக்களுக்கு.

“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?”

“யோசித்துப் பாருங்கள். இட்ட ஏவலை செய்து முடிக்கக் காத்திருக்கும் அடிமைகள் திடீரென்று என் மகளுக்குக் கிடைத்தால் என்னாவது? பளிச்சிடும் மாட மாளிகை வாசம் அவளுக்கு அறிமுகமானால் அது அவள் மனதில் எத்தகைய கிலேசத்தை உண்டு பண்ணும்? இவையெல்லாம் அவளுடைய ஈமானுக்கு எத்தகைய கேடு விளைவிக்கும்? என்னாவாள் என் மகள்? புரியவில்லையா உங்களுக்கு?”

ஒவ்வொருவரும் ஏங்கிக் காத்துக் கிடக்கும் வாழ்க்கை வாசல் தேடி வந்து விழ, அது அபாக்கியம் என்று கருதி ஒதுக்கித் தள்ளிவிட்டு, எளிய குடிலுக்குத் தன் மகளை மருமகளாக்கி அனுப்பி வைத்தார் தர்தாவின் தந்தை. ஆம்! அதுதான் சிறந்தது என்று வாழச் சென்றார் மகள்.

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

ஒருநாள் மதீனாவிலிருந்து சிரியா புறப்பட்டு வந்தார் அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப். முஸ்லிம்கள் நலன், தன் அதிகாரிகள் செயல்பாடுகள் இதெல்லாம் நேரில் கண்டறிவது அவரது நோக்கம். ஸயீத் இப்னு அம்ரு வரலாற்றிலேயே இதைப் படித்தது நினைவிருக்கலாம். அபூதர்தாவைச் சந்திக்க அவரது இல்லத்திற்கு இரவு நேரமொன்றில் வந்தடைந்தார் உமர்.

வீட்டுக் கதவின் மீது தட்டுவதற்குக் கைவைத்தால், அது உடனே திறந்து கொண்டது. அக்காலத்திலேயே தானியங்கிக் கதவுகளா? என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாது. என்னவென்றால் வீட்டின் கதவிற்குத் தாழ்ப்பாளே இல்லை! அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார் கலீஃபா. நுழைந்தால் ஒரே கும்மிருட்டு, ஒரு விளக்கொளியும் இல்லை. அபூதர்தா, உமரை வரவேற்று அமர வைத்தார். நாற்காலியெல்லாம் ஏதுமில்லை, சும்மா வெறும் மண்தரைதான். இருவரும் இருட்டில் சௌகரியமாய் அமர்ந்து கொண்டு, ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமலேயே பழைய நட்பில் அளவளாவ ஆரம்பித்து விட்டனர்.

பேசிக் கொண்டே உமர் கையால் துழாவியபோது அபூதர்தாவின் தலையணை அகப்பட்டது. அது வேறொன்றும் இல்லை, குதிரைச் சேனம்! அதுதான் தலையணையாம். சரி தரையில் ஏதும் சமுக்காளம் இருக்குமோ என்று துழாவினார் உமர். தரையில் கூழாங்கற்கள்தான் கையில் பட்டன. அபூதர்தாவின் உடலைப் போர்த்தியிருந்த துணியும்கூட டமாஸ்கஸ் நகரின் கடுங்குளிரில் இருந்து காக்க இயலாத மெல்லியதொரு துணிதான்.

அதிர்ந்து போனார் உமர்! எளிய வாழ்க்கை வாழும் உமருக்கே அது அதிர்ச்சியாய் இருந்தது. “அல்லாஹ்வின் கருணை உம் மேல் பொழிவதாக! என்ன இது அபூதர்தா? இதை விட சௌகரியமாய் வாழ்வதற்கு நான் உமக்கு பொருள் வழங்கவில்லையா? நான் உமக்குப் போதிய பணம் அனுப்பவில்லையா?” தான் மிகவும் சொற்பத் தொகையை அவருக்கு அனுப்பி வருகிறோமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது கலீஃபாவிற்கு.

நிதானமாய் பதில் கேள்வி கேட்டார் அபூதர்தா: “அல்லாஹ்வின் தூதர் நமக்குத் தெரிவித்த ஒன்று உமக்கு ஞாபகமிருக்கிறதா?”

நிறையத் தெரிவித்திருக்கிறார் நபிகளார். அபூதர்தா எதைக் குறிப்பிடுகிறார் என்பது உமருக்கு விளங்கவில்லை. அதனால், “என்ன அது?”

“பிரயாணத்தில் இருப்பவர்கள் தேவைக்கு அதிகமாய் உலகாதாயப் பொருட்களைச் சுமக்க வேண்டாம் என்று அவர்கள் நமக்குத் தெரிவிக்கவில்லை? அவர்களுடைய மரணத்திற்குப் பின் நாம் என்ன செய்கிறோம் உமர்?”

வெடித்துவிட்டார் உமர். பீறிட்டெழுந்தது அழுகை அவருக்கு! அபூதர்தாவும் அழ ஆரம்பித்து விட்டர். முஸ்லிம் சமூகம் எப்படி உலக வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிட்டது என்பதை நினைத்து விசனப்பட்டு, விடியும்வரை அழுது கொண்டிருந்தார்கள் அந்த இரு எளிய தோழர்கள். உத்தேசம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே, அரதப் பழசான சொகுசுக்கு அடிமையாகப்போன அந்த மக்களை நினைத்தே அவர்கள் அழுதார்கள் என்றால், நம்முடைய இன்றைய நிலையை என்னவென்று சொல்வது?

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.