தோழர்கள் – 10 – ஹகீம் பின் ஹிஸாம் – ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ

Share this:

ஹகீம் பின் ஹிஸாம்

‏ ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறப்பதற்கு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அபூர்வம் நிகழ்ந்தது. மக்காவில் அன்று ஏதோ ஒரு திருநாள். விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே அபூர்வமாய்த் திறக்கப்படும் கஅபாவின் கதவைத் திறந்து அதனுள்ளே சிறப்பு வைபவங்கள் நடந்து கொண்டிருந்தன. காணாததைக் காண மக்களுக்கெல்லாம் ஆவல்.

கஅபாவின் உள்ளே நுழைந்து வேடிக்கை பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, கும்பலாக சிலர் முண்டியடித்துக் கொண்டு தரை மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ள அந்தக் கதவின் மேலேறி உள்ளே சென்று பரவசத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் நிறைமாதச் சூல் கொண்ட பெண்ணொருவர். உள்ளே இருக்கும்போது அங்கேயே அவருக்குத் திடீரென்று பேறுகால வலி ஏற்பட்டுவிட்டது. உடனே வெளியே வரமுடியாத சூழ்நிலை. அவ்வளவு கூட்டம், நெருக்கம். அவசர அவசரமாக அங்கேயே ஒரு தோல்விரிப்பைப் பரப்பி, அவரைப் படுக்க வைத்து, உலக வரலாற்றிலேயே யாருக்கும் வாய்க்காதப் பெருமையை சுமந்து கொண்டு ஆண் குழந்தையொன்று பிறந்தது.

அவர், ஹகீம் பின் ஹிஸாம் ரலியல்லாஹு அன்ஹு!

மக்காவில் குவைலித் இப்னு அஸத் (خويلد بن أسد‎) என்றொரு புகழ் பெற்ற வர்த்தகர் இருந்தார். அவருக்கு அவ்வாம் இப்னு குவைலித், ஹிஸாம் இப்னு குவைலித் எனும் இரண்டு மகன்களும் ஹாலா பின்த் குவைலித், கதீஜா பின்த் குவைலித் எனும் இரண்டு மகள்களும் இருந்தனர். கதீஜா ரலியல்லாஹு அன்ஹா, நபியவர்களின் முதல் மனைவியல்லவா. அவருடைய சகோதரர் ஹிஸாமினுடைய மகன்தான் கஆபாவினுள்ளே பிறந்த ஹகீம் பின் ஹிஸாம்.

செல்வமும் செல்வாக்கும் உள்ள உயர்குடி வம்சத்தில் பிறக்க நேரிட்டதால் ஹகீமினுடையது சொகுசான வாழ்க்கை. தவிர அறிவுக்கூர்மை, நல்லொழுக்கம், பெரும்பண்பு ஆகியனவும் அவருக்கு இயல்பாக அமைந்து விட்டிருந்தன. இந்த அத்தனை சிறப்பும் மாண்பும் ஹகீமை அவரது வாலிப வயதிலேயே குரைஷி மக்கள் தங்களுடைய ஒரு முக்கியத் தலைவராய் நியமித்துக் கொள்ளப் போதுமானதாயிருந்தது. “ஹகீம், வாருங்கள் இங்கு. இன்றிலிருந்து ரஃபாதா துறை உங்கள் பொறுப்பு” என்று பதவி அளித்து விட்டனர்.

ரஃபாதா?

உருவ வழிபாடு மிகைத்திருந்த அந்தக் காலகட்டத்திலும் மக்காவிற்கு மக்கள் யாத்திரை வருவதென்பது நடந்து கொண்டுதான் இருந்தது.

என்ன வழிபாடு?

எல்லாம் சிலைகளுக்குத்தான்! மக்கத்துக் குரைஷியர்கள் யாத்ரீகர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே சில துறைகளை ஏற்படுத்தி, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் வசம் இருந்தன. ஹிஜாபா, சிகாயா, ரஃபாதா, நத்வா, கியாதா மற்றும் லிவா என்பன துறைகளின் பெயர்கள்.

ஹிஜாபா எனும் துறை கஅபா ஆலயத்தைப் பராமரிக்கவும் அதன் சாவிகளின் பாதுகாவல் பொறுப்பையும் ஏற்றிருந்தது.

சிகாயா, யாத்ரீகர்களுக்குக் குடிநீர் வழங்கவும் ஈச்ச மதுபானம் வழங்கவும் பொறுப்பு.

ரஃபாதா – உணவு வழங்க.

நத்வா, இந்த அனைத்துக் கூட்டவைகளுக்கும் தலைமை.

கியாதா, லிவா ஆகிய இரண்டும் சற்று மாறுபட்ட துறைகள். கியாதா போர்க்காலங்களில் போர்த் தலைமைக்கும், லிவா ஈட்டியில் கொடியை ஏந்தி, படையுடன் செல்வதற்கும் பொறுப்பு.

இதில் ரஃபாதா எனும் உணவு மற்றும் யாத்ரீகர்களின் தேவையை நிறைவேற்றும் துறைக்குத் தலைவரானார் ஹகீம். அந்தளவு செல்வாக்கு. இதில் மற்றொரு அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அது பணம் ஈட்டும் துறையல்ல, தன் கைக்காசை எடுத்து தானமளிக்க வேண்டும். அக்கறையுடனும் ஆர்வமுடனும் பெருமையுடனும் அதன் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் ஹகீம்.

இளம் பிராயத்திலிருந்தே முஹம்மது நபிக்கும், ஹகீமிற்கும் இடையில் நல்ல நட்பிருந்தது. ஹகீம் ஐந்து வயது மூத்தவர்தான். இருப்பினும் மிகவும் நெருக்கம். இந்நிலையில் கதீஜா அம்மையாருடன் முஹம்மது நபிக்கு திருமணம் நிகழ்ந்தவுடன் அத்தையின் கணவர் என்ற அழுத்தமான உறவொன்றும் சேர்ந்து கொண்டது.

ஸைத் இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு என்ற புகழ்பெற்ற நபித்தோழர் அனைவராலும் அறியப்பட்டவர். ஸைதின் சிறு வயதில் குலங்களுக்கிடையேயான போர் ஒன்று ஏற்பட்டது. அதில் ஸைத் இப்னு ஹாரிதா கைப்பற்றப்பட்டு, பின்னர் அடிமைச் சந்தைக்கு விற்பனைக்கு வந்து சேர்ந்தார். ஹகீம் இப்னு ஹிஸாம்தான் அவரை விலைக்கு வாங்கி, தன்னுடைய அத்தை கதீஜாவிற்கு அன்பளிப்பாய் வழங்கினார். இந்தக் காலத்துக் கோடீஸ்வரர்கள் தம் அன்பையும் பெருமையையும் வெளிக்காட்டுவதற்காக கார், பங்களா என்று பிறருக்கு அன்பளிப்பு வழங்குவதுபோல அடிமைகளை அப்படி அன்பளிப்பு அளிப்பது அக்காலத்தில் இருந்து வந்த வழக்கம். பின்னர் முஹம்மது நபியை கதீஜா பிராட்டியார் மறுமணம் புரிந்து கொண்டபோது, சிறந்தவராய் வளர்ந்து வந்த ஸைதை அவருக்கு அன்பளிப்பாய் வழங்கினார் அன்னை கதீஜா. அன்று அவ்விதம் நபிகளை வந்தடைந்த ஸைதிற்கும் முஹம்மது நபிக்கும் இடையே ஏற்பட்ட பாசம், பெற்ற தந்தை வந்தழைத்தும் “பெருமானாரை அண்மி வாழவே விருப்பம்” என்று மறுதலித்த ஸைதின் தனி வரலாறு. அதை இன்ஷாஅல்லாஹ் பின்னர் பார்ப்போம்.

இவ்வளவு அன்பு, நெருக்கம், உறவு அனைத்தும் இருந்து வந்த நிலையில், முஹம்மது நபி தனக்கு நபித்துவம் அளிக்கப்பெற்றுள்ள செய்தியை அறிவித்து இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்ததும் ஹகீம்தானே முதலில் அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்? நடக்கவில்லை! ஹகீம் தனது மதமே உசத்தி என்று தங்கிவிட்டார். மட்டுமல்லாமல்,

முஹம்மது நபியின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தனிப்பட்ட விரோதமெல்லாம் இல்லாத நிலையிலும், முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற பத்ரு, உஹதுப் போர்களிலும குரைஷிகளுடன் இணைந்து கலந்து கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு. சகவாசம் சரியில்லாத பட்சத்தில் குற்றங்களுக்கு உடந்தையாகத்தானே நேரிடும். எனினும், அத்தகைய போர்களிலும் முஸ்லிம்களுக்கு அணுசரனையாய் ஹகீம் செயல்பட முனைந்ததாகத்தான் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பத்ரில் போர் மேகம் சூழ்ந்திருந்தது. குரைஷிகள், மதீனாவின் எல்லையைக் கடந்து வரும் அபூஸுஃப்யானின் வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றப் படையெடுத்து வந்திருந்தனர். ஆனால் அபூஸுஃப்யானோ வேறு மார்க்கமாக நலமே மக்கா சென்றடைந்து விட்டிருக்க, போருக்கான முக்கிய முதற் காரணம் அடிபட்டுப் போயிருந்தது. ஆயினும் அதற்குச் சில நாட்களுக்குமுன் முஸ்லிம் படையினருக்கும் அம்ரிப்னு ஹள்ரமிக்கும் இடையில் ஏற்பட்ட கலகத்தில் இப்னு ஹள்ரமி கொல்லப்பட்டு, வர்த்தகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மக்காவில் அளவிலாத வகையில் துன்புறத்தப்பட்டு வீடு, வாசல், நிலம் என அனைத்தையும் துறந்து வெளியேறி மதீனா வந்தடைந்திருந்த முஹாஜிர்களுக்கு அது ஒரு சிறிய இழப்பீடாகக் கருதப்பட்டது.

இப்பொழுது அபூஸுஃப்யான் தப்பித்து விட்டிருந்தாலும், “வந்ததுதான் வந்து விட்டோம். அந்த முந்தைய நிகழ்வைக் காரணமாக வைத்து எப்படியும் போர் நிகழ்த்தி, இந்த முஸ்லிம்களுக்கு இன்றுடன் முடிவுரை எழுத வேண்டியதுதான்” என்று குரைஷிகளின் மற்றத் தலைவர்கள் முடிவெடுத்திருந்தனர். யுத்தம் என்று ஏற்பட்டால் எதிர்கொள்ளப் போவது தத்தமது உறவினர்களை. இருதரப்பிலும் உயிரிழப்பு இருக்கும் என்பதை யோசித்த நபியவர்கள், போரைத் தவிர்க்கவே நினைத்தார்கள். தன்னுடைய சொந்த இன மக்களைப் போரில் எதிர்கொள்ள நபிகளுக்கு மிகுந்த தயக்கமிருந்தது. அனாவசிய உயிரிழப்பைத் தவிர்க்கவே அவர்கள் நாடினார்கள். எனவே போரைத் தவிர்க்கும் முயற்சியாக, உமரிப்னுல் கத்தாபை அவர்களிடம் அனுப்பி வைத்து, அவர்களைத் திரும்பிச் செல்லும்படியும், போரில் குரைஷிகளை எதிர்கொள்ள, தான் விரும்பவில்லை என்றும் நபியவர்களின் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுடனான நேருக்கு நேரான ஒரு போரைத் தவிர்க்க, குரைஷிகள் தரப்பில் பெரும் முயற்சி எடுத்தவர் ஹகீம் இப்னு ஹிஸாம். உமர் மூலமாகத் தகவல் வந்து சேர்ந்ததும், குரைஷிகளிடம் ஹகீம் பேசினார்: “யோசித்துப் பாருங்கள். இது நல்லதொரு வாய்ப்பு. ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு மிகவும் நல்லது”. போர் வெறியில் இருந்த குரைஷிகளிடம் அது காதிலேயே நுழையவில்லை.

பின்னர், உத்பா இப்னு ரபீஆவிடம் சென்றார் ஹகீம். “உத்பா! நீர் குரைஷிகளின் பெருமதிப்பிற்குரிய தலைவன். உம்முடைய வாழ்நாளுக்கும் உமக்கு உயர்ந்ததொரு புகழ் அளிக்கவல்ல ஒரு செய்தி சொல்லவா?”

அது உத்பாவிற்கு ஆர்வம் ஏற்படுத்தியது. ஹகீம் விவரித்தார். “குரைஷிகளை மக்காவிற்குத் திரும்பச் சொல்லுங்கள். அம்ரிப்னு ஹள்ரமி கொல்லப்பட்டதை இப்பொழுது போருக்கு ஒரு காரணமாய் அவர்கள் புனையப் பார்க்கிறார்கள். முஸ்லிம்களால் கொல்லப்பட்டதற்கும் அவருடைய வணிகப் பொருட்கள் அபகரிக்கப்பட்டதற்கும், நீர் அம்ரிப்னு ஹள்ரமியுடைய நண்பன் என்ற முறையில் குரைஷிகளுக்கு இழப்பீடு தருவதாக அறிவித்து விடும்; போரைத் தவிர்க்கலாம்”.

அபூஸுஃப்யான் நலமே மக்கா சென்றடைந்து விட்டதால் உத்பாவிற்குப் போரில் பெரிய நாட்டம் எதுவும் அப்பொழுது இல்லை. அதனால் ஹகீம் முன்னெடுத்து வைத்த வாதத்தின் நியாயம் உரைத்தது. அதன்பின் குரைஷிகளுக்கு மத்தியில் உத்பா சென்று உரை நிகழ்த்தியும், அபூஜஹல் அதை எதிர்த்து செய்த ஏளனத்தால் எதுவும் எடுபடவில்லை. போர் நிகழ்ந்தது. குரைஷிகளின் மாபெரும் தோல்விக்கும் முஸ்லிம்களின் அசகாய வெற்றிக்கும் அது வழிவகுத்தது.

அதன்பின் பல போர்கள், படையெடுப்புகள். எல்லாம் நடந்து முடிந்த இறுதியில் முஸ்லிம்கள் மக்காவைக் கைப்பற்றிய போதுதான் ஹகீம் இஸ்லாத்தினுள் நுழைந்தார்.

அது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் மாதம். மக்காவினுள் நுழையும் நாளுக்கு முந்தைய இரவு. நபிகள் தன் தோழர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அதைக் குறிப்பிட்டார்கள். “மக்காவில் நான்கு பேர் இருக்கிறார்கள். உருவ வழிபாட்டில் மிகவும் மூழ்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன்”.

“அல்லாஹ்வின் தூதரே, யார் அவர்கள்?” தோழர்கள் கேட்டார்கள்.

“அத்தாப் இப்னு உஸைத், ஜுபைர் இப்னு முத்இம், ஹகீம் இப்னு ஹிஸாம், சுஹைல் இப்னு அம்ரு”

அந்த விருப்பம் வீணாகவில்லை. நிறைவேறியது, முழுவதுமாய் நிறைவேறியது. பின்னர் அந்த நால்வருமே இஸ்லாத்தினுள் நுழைந்தனர்.

முஹம்மது நபி மக்காவினுள் வெற்றிகரமாய்ப் பிரவேசித்த நாள் அது. மக்காவாசிகள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அறிவிப்பாளர் மிக உரத்தக் குரலில் அவர்களுக்குச் செய்தியொன்றை அறிவித்தார்.

“எவரெல்லாம் ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே, முஹம்மது அவனுடைய தூதர்’ என்று சாட்சி பகர்கிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”

“எவரெல்லாம் கஅபாவின் அருகே வந்தமர்ந்து தங்களுடைய ஆயுதங்களைக் கீழிறக்கி வைக்கிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”

“எவரெல்லாம் தங்களுடைய வீட்டிலேயே தங்கி விடுகிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”

“எவரெல்லாம் அபூஸுஃப்யான் இல்லத்தினுள் தஞ்சமடைகிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”

“மேலும், எவரெல்லாம் ஹகீம் இப்னு ஹிஸாம் இல்லத்தினுள் தஞ்சமடைகிறீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”

அந்த அளவிற்கு ஹகீம் கண்ணியப்படுத்தப் பட்டதும் எப்படி அதற்கு மேல் அவரால் இஸ்லாத்தை நிராகரிக்க முடியும்? நுழைந்தார் ஹகீம்.

மக்காவிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் அபூஸுஃப்யானின் வீடு மேல்பகுதியிலும், ஹகீமின் வீடு கீழ்ப்பகுதியிலும் இருந்தது. அந்த அறிவிப்பைச் செவியுற்ற மக்கள் பலர் அங்குச் சென்று தஞ்சமடைய, உஹதுப் போரில் கொல்லப்பட்ட ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் உடலைக் குதறி, ஈரலை எடுத்துக் கடித்து வெறியாட்டம் நிகழ்த்திய ஹிந்த் முதற்கொண்டு பலரும் மன்னிக்கப்பட்டனர். வரலாற்றின் சிறப்பான அத்தியாயம் ஒன்று அன்று அங்குப் பதியப்பட்டது.

மக்காவின் வெற்றி நிகழ்ந்து இரு வாரங்கள்தாம் ஆகியிருந்தன. பெரியதொரு படை ஹுனைன் பள்ளத்தாக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான போருக்குத் தயாராவதாய்ச் செய்தியொன்று மக்காவை வந்தடைந்தது. ஹவாஸின் எனும் பதுஉ கோத்திரத்தினர் தகீஃப் எனும் தங்களின் உபகோத்திரத்தினருடன் இணைந்து முஸ்லிம்களை எதிர்த்து எப்படியும் அழித்துக் கட்டிவிடுவதென்று பெரிய படையொன்றைத் திரட்டி, போருக்குத் தயாராகிவிட்டிருந்தனர். மக்காவிலிருந்து பெரியதொரு படையெழுப்பி, அங்குச் சென்று அவர்களை எதிர்கொண்டார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். கடுமையான போர் நிகழ்வுற்று, இறுதியில் முஸ்லிம் படை வெற்றி கண்டது.

அந்த யுத்தம் முடிவுற்றதும் நிறைய செல்வம் முஸ்லிம்கள் வசமானது. நபிகள் அதனைத் தோழர்களுக்குப் பங்கிட்டு அளித்தார்கள். தன்னுடைய பங்காய்க் கிடைத்ததையும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாய் மக்கா வெற்றிக்குப் பின்னர் புதிதாய் இஸ்லாத்தினுள் நுழைந்த குரைஷிகளுக்கு தாராளமாய் அளித்துக் கொண்டிருந்தார்கள். அவ்விதத்தில் ஹகீம் இப்னு ஹாஸமிற்கும் நிறைய பங்கு கிடைத்தது. ஆயினும் அவர் நபிகளை அணுகி, மேலும் வேண்டும் எனக் கோர, அவருக்கு நூறு ஒட்டகங்கள் அளிக்கப்பட்டன.

பின்னர் ஹகீமை அழைத்த நபிகள், “ஹகீம். மிகவும் உசத்தியான ஒட்டகங்கள் உமக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை உவப்புடன் ஏற்றுக்கொண்டால், அல்லாஹ்வின் அருட்பேறு அந்தச் செல்வத்திற்குக் கிடைத்து, அது மென்மேலும் வளரும். ஆனால் அவற்றைப் பேராசையுடன் நீர் அணுகினால் அவற்றின் மேல் அல்லாஹ்வின் நற்பேறு இல்லாமல் போவதுடன், உண்டும் வயிறு நிறையாத மனிதனைப்போல் நீர் ஆகிவிடுவீர். கீழுள்ள கையைவிட மேலுள்ள கை சிறப்பானது” என்று அறிவுறுத்தினார்கள்.

அதைக் கேட்டார் ஹகீம். அப்படியே உள்வாங்கினார். பிறகு கூறினார். “அல்லாஹ்வின் தூதரே! உம்மை சத்தியத்துடன் அனுப்பி வைத்த அந்த இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். உம்மைத் தவிர இனி நான் யாரிடமும் எதுவும் கேட்கவே மாட்டேன். நான் மரணிக்கும்வரை யார் எது கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்” உணர்ச்சிப் பெருக்கில் சத்தியமிடுவதெல்லாம் சாத்தியம்தான். ஆனால், கடைசி வரை காக்கப்பட வேண்டுமே! முடிந்தா? அதை இறுதியில் பார்ப்போம்.

இஸ்லாத்தில் இருபத்தோரு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஹகீம் நுழைந்தார். தாமதமாய் இஸ்லாத்தினுள் நுழைந்த அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு மனதில் ஓடிய அதே எண்ணம், அவரைவிடத் தாமதமாய் வந்த ஹகீம் மனதிலும் தோன்றியது.  “எவ்வளவு தவற விட்டு விட்டாய், நற்கருமங்களில் எவ்வளவு பின்தங்கி விட்டாய் ஹகீம்?” என்று அரற்றியது அவரது மனது. நுழைந்த நொடியில் லாப நஷ்டத்ததைச் சரியாக பகுத்துணர முடிந்த மனங்களின் பெரிய ஆச்சரியம் அது!

ஒருநாள் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார் ஹகீம். அதைக் கண்ட அவருடைய மகனுக்கு ஒன்றும் புரியவில்லை.  “தந்தையே ஏன் அழுகிறீர்கள்?”

இங்கு இன்னொன்றும் நாம் கவனிக்க வேண்டும். முந்தைய தோழர்களிடமும் படித்திருக்கிறோம். வீர தீரத்தில் பராக்கிரமசாலியாக திகழும் ஒப்பற்ற போர் வீரர்களான அவர்களுடைய மனதை இஸ்லாம் சரியான முறையில் சென்று ஊடுருவ, அல்லாஹ் என்றதும் அல்லாஹ்வின் விசாரணை என்ற நினைப்பு வந்ததும் புசுக்கென்று கண் கலங்கி அழுகிறார்கள் அவர்கள். எத்தனைமுறை நம் கண்கள், இறைவனை, அவனது விசாரணையை நினைத்துக் கண்ணீர் சிந்தியிருக்கின்றன?

“பல விஷயங்கள். எதை என்று சொல்வேன்,” என்றவர் தொடர்ந்தார். “முதலாவது, நான் இஸ்லத்திற்குள் எவ்வளவு தாமதாகமாக வந்தடைந்திருக்கிறேன்? எனக்கு முன்னால், பல ஆண்டுகளுக்கு முன்னரேயே நுழைந்துவிட்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இதுவரை ஈட்டி, சேமித்துள்ள நன்மை எவ்வளவு உயரமானது? என்னுடைய சொச்ச நாளுக்கும் பூமி நிறையும் அளவுள்ள தங்கத்தை நான் இஸ்லாத்தின் பாதையில் செலவிட்டாலும் அவர்களுக்கு நான் ஈடாக முடியுமா? அதை நினைத்து அழுகிறேன்”

“பத்ரு, உஹது யுத்தங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நான் கலந்து கொண்டிருந்தும் அல்லாஹ்வின் கிருபையினால் தப்பிப் பிழைத்தேன். அப்பொழுது எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன் – ‘அல்லாஹ்வின் தூதருக்கு எதிராக இந்தக் குரைஷிகளை நான் ஆதரிக்க மாட்டேன்; அவருக்கு எதிராக நான் மக்காவை விட்டு வெளியே நகரக்கூட மாட்டேன்’, என்று. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக நான் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டேன். என்னால் என்னைத் தடுத்துக் கொள்ளும் உறுதி இல்லாமற் போனது. அதை நினைத்து அழுகிறேன்”

“அதன்பின் ஒவ்வொரு முறையும் என் மனதிற்குள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் குரைஷிகள் மாண்புடன் நோக்கும் மூதாதையர்களைப் பார்த்தேன். அவர்கள் எப்படித் தங்களுடைய பழைய அஞ்ஞான பழக்கத்தில் பற்றிப் பிடித்துக் கொண்டு, தம் கொள்கையில் பிடிவாதமாய் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். நானும் அவர்களுடைய அனாச்சாரத்தைப் பின்பற்றி உருவ வழிபாட்டையே தொடர்ந்தேன். அப்படி செய்திருக்கக் கூடாது என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. மூத்தவர்களையும் மூதாதையர்களையும் குருட்டுத் தனமாய்ப் பின்பற்றியதுதான் என்னை அழிவின் விளிம்பு வரை இட்டுச் சென்று விட்டது. என் நன்மையைத் தாமதப்படுத்தி விட்டது. இவ்வளவையும் நினைத்துப் பார்க்கும்போது என்னால் எப்படி அழாமல் இருக்க முடியும்? சொல் மகனே!”

அவர்களுக்கெல்லாம் உறுத்தியெடுத்தது, தவற விட்ட கணங்கள். நற்காரியங்களில் பிந்தி விட்டது, நற்கூலி குறைந்து போனதெல்லாம் எப்பேற்பட்ட நஷ்டம் என்பதை உய்த்துணரும் தூய ஈமான். அதனால் குளமாகி நின்றன கண்கள். பணமாகவும் நகையாகவும் சொத்தாகவும் வாங்கிக் குவித்துவிட்டு, ஏதோ சிறிதைச் சுண்டு விரலில் எடுத்து இறைவழியில் செலவழித்து விட்டாலே தன்னிறைவு அடைந்துவிடும் நம்மைப் போன்றோர் அந்தக் கண்ணீரை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.

அவரது ஆழ்மனதில் இஸ்லாம் வெறுமனே நுழையவில்லை. இதயத்தின் ஒரு பகுதியாகவே அது ஆகிவிட்டிருந்தது. அதனால் அழுது முடித்தவர் சூளுரைத்தார். ‘முன்னர் இஸ்லாத்திற்கு விரோதமாய்ச் செய்த  ஒவ்வொரு செயலுக்கும் பரிகாரம் காணப் போகிறேன். இஸ்லாத்திற்கு எதிராய்ச் செலவழித்த ஒவ்வொரு துகளுக்கும் பரிகாரமாய் இப்பொழுது இஸ்லாத்தின் பாதையில் செலவழிக்கப் போகிறேன். அது தான் சரி.’ அப்படியே செய்ய ஆரம்பித்தார் ஹகீம் இப்னு ஹிஸாம்.

மக்காவில் தாருந் நத்வா என்றொரு இல்லம் இருந்தது. குரைஷிகளுக்கு அது ஒரு பிரசித்திமிக்க இடம். அங்குதான் இஸ்லாத்திற்கு எதிரான குலத்தாரெல்லாம் ஒன்று கூடுவார்கள். அவர்களின் மூத்தோரும் தலைவர்களும் நபிகளுக்கு எதிராய் அங்குக் கூடித்தான் சதித் திட்டம் தீட்டுவார்கள். நிகழ்கால் ஐ.நா. கட்டடம்போல மக்காவுக்கு தாருந்நத்வா. அந்த இல்லம் ஹகீமின் வசம் வந்து சேர்ந்தது. தனக்கும் தன்னுடைய கடந்த கசந்த காலத்திறகும் இடையில் பலமான தடுப்பொன்றை ஏற்படுத்த விழைந்தார் ஹகீம். என்ன செய்யலாம் என்று நினைத்தவருக்கு அந்த யோசனை உதித்தது. அதனால் அந்த வீட்டை இலட்சம் திர்ஹங்களுக்கு விற்றார்.

அது குரைஷியர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இடம்; அவர்களது மாண்பின் அடையாளம். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற குரைஷி இளைஞன் ஒருவன் அவரிடம் கேட்டான், “குரைஷியரின் குலப்பெருமையை விற்றுவிட்டீர்களே?”

“ஹஹ்! இறுமாப்புக்கான காலமெல்லாம் சென்று விட்டது மகனே. இறையச்சம்! இனிமேல் அதைத் தவிர வேறெதுவுமே முக்கியமில்லை. அந்த வீட்டை விற்று வந்த பணமிருக்கிறதே அதை இஸ்லாத்தின் பாதையில் நற்காரியங்களுக்கு அளித்து விடப்போகிறேன். அதைக் கொண்டு எனக்கு மறுமையில் அங்கு வீடு கிடைக்கலாம்”

குரைஷியர்களுக்குத் தெரிவித்தார், “இதோ பாருங்கள். உங்கள் எல்லோரையும் சாட்சியாக வைத்துக் கூறுகிறேன், அந்தப் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கிறேன்”

அந்தக் காலத்திலேயே அதன் மதிப்பு இலட்சம் திர்ஹங்கள் என்றால் இன்று அதன் மதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். அவ்வளவும் தானமளிக்கப்பட்டது.

ஒருநாள் ஹகீம், நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்: “நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் சில நற்காரியங்கள் செய்திருக்கிறேன். அவையெல்லாம் என் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்படுமா?”

ஹகீம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்முன் நூறு அடிமைகளை விடுதலை செய்திருந்தார். நூறு ஒட்டகங்களை அறுத்து அதன் இறைச்சியை மக்களுக்கு தானமாய்ப் பகிர்ந்து அளித்திருந்தார்.

“நீர் இஸ்லாத்தினுள் அவை அனைத்துடனும் வந்து விட்டீர் ஹகீம்” என்று பதில் கூறினார்கள் நபிகள்.

இருந்தாலும் இப்பொழுது அவற்றை மீண்டும் யோசித்தார் ஹகீம். இஸ்லாத்தினுள் நுழைந்தபின் தனது முதல் ஹஜ் கடமையை நிறைவேற்றும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு. தன்னுடன் நூறு ஒட்டகங்களைச் சிறப்பாய் அலங்கரித்து உடனழைத்துச் சென்றார். அவற்றையெல்லாம் அறுத்து ஸதக்கா தர்மமாய் அதன் இறைச்சி முழுவதையும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டார்.

அடுத்ததொரு ஹஜ் வந்தது. இம்முறை நூறு அடிமைகளைத் தன்னுடன் அழைத்து வந்து அவர்களுக்கெல்லாம் விடுதலையளித்தார். அவர்கள் கழுத்துகளில் வெள்ளியில் கழுத்தணி ஒன்று இருந்தது. ‘அல்லாஹ்விற்காக ஹகீம் பின் ஹிஸாமினால் இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்’ என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது. விடுதலை பெற்ற அவ்வடிமைகள் அந்த வெள்ளி ஆபரணத்தை விற்று, தங்கள் வாழ்க்கையை சுயமே துவங்கிக்கொள்ள அத்தகைய ஏற்பாடு.

ஆச்சா?

அதற்கு அடுத்த ஹஜ் வந்தது. இப்பொழுது தன்னுடன் ஆயிரம் செம்மறியாடுகளை ஓட்டி வந்தவர், அவற்றையெல்லாம் மினாவில் பலிகொடுத்து, அனைத்து இறைச்சியையும் முஸ்லிம்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.

அவர் மனசு முழுவதும் போட்டி. மற்றத் தோழர்களுடன் போட்டி. ஏதாவது செய்து அவர்களுக்கு இணையாய் நற்கூலியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற, மார்க்கம் அனுமதித்த ஆரோக்கியப் போட்டி.

இங்ஙனமிருக்க, ஹுனைன் போரின்போது நபிகளிடம் சத்தியம் செய்தார் என்று பார்த்தோமல்லவா? அபூபக்ரு (ரலி) கலீஃபாவாக இருந்த காலத்தில் கருவூலத்திலிருந்து ஹகீமிற்கு நிறைய பங்கு ஒதுக்கப்பட்டது. ஆள் அனுப்பினார் கலீஃபா. “ஹகீம், கொஞ்சம் ஒரு நடை இங்கு வந்து உங்கள் பங்குச் செல்வத்தைப் பெற்றுச் செல்லுங்கள்” புறங்கையால் அவற்றை வெறுத்து ஒதுக்கியவர் “அதெல்லாம் வேண்டாம்; ஆளை விடுங்கள்,” என்று பதில் அனுப்பி விட்டார்.

பின்னர் உமர் (ரலி) கலீஃபாவாக இருந்த காலத்திலும் அப்படியே நிகழ்ந்தது. ஹகீமிற்கு உண்டான பணமும் செல்வமும் கருவூலத்தில் தேங்கியிருந்தன.  அழைத்து அழைத்துப் பார்த்தார் உமர். ஹகீம் மசியவேயில்லை. உமருக்கு அது பிரச்சனையாக இருந்தது. அவரவருக்கும் அவரவர் கணக்கு நேராக வேண்டும். அதில் படு கண்டிப்பாக இருந்தார்கள் அவர்கள். மறுமையின் கேள்வி அவர்களுக்கு மிகப் பிரதானம். கடைசியில் ஒருநாள் உமர் மக்கள் மத்தியில் எழுந்து சென்றார். “இதோ பாருங்கள். ஹகீமிற்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ளும்படி நான் கொடுத்தும் ஹகீம் நிராகரித்து விட்டார். இதற்கெல்லாம் நீங்களே சாட்சி” என்று அறிவித்து விட்டார்.

அப்படியேதான் வாழ்ந்தார் ஹகீம். பின்னர் ஏறக்குறைய தன்னுடைய 120ஆவது வயதில் அவர் மரணித்ததாக ஹதீஸ் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

< தோழர்கள்-1 | தோழர்கள்-2 | தோழர்கள்-3 | தோழர்கள்-4 | தோழர்கள்-5 | தோழர்கள்-6 | தோழர்கள்-7 | தோழர்கள்-8 | தோழர்கள்-9 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.