யார் இந்த மாமனிதர்…..?

Share this:

இவ்வுலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி மறைந்த போதிலும் ஒரு சிலர் மாமனிதராக வாழ்ந்து மனித சமுதாயத்தின் நாகரிகத்தில் ஒழுக்கத்தில் மாபெரும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளனர். முழு மனித குலத்துக்கும் அழகிய வழிகாட்டி என இறைவன் அடையாளம் காட்டும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிம்கள் கொண்டிருக்கும் அபிமானமும் நல்ல அபிப்பிராயங்களும் வியப்புக்குரியன அல்ல. அதேவேளை தலைசிறந்த முஸ்லிமல்லாத பேரறிஞர்கள் விருப்பு வெறுப்பின்றி இஸ்லாத்தின் இறுதித் தூதர் அவர்களது வரலாற்றைப் படித்து அலசி ஆராய்ந்து தெரிவித்த கருத்துக்கள் மூலம் அன்னார் அவர்கள் எப்படிப்பட்ட மாமனிதர் என்பதை அறிந்து கொள்ள இயலும். அம்முயற்சியின் ஒரு பகுதியாக அறிஞர்கள் சிலரது கருத்துக்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

உயர்ந்த குறிக்கோள், குறைவான சிறிய அளவிலான வசதிவாய்ப்புக்கள், பிரமிக்க வைக்கும் பலன்கள் ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்?

புகழ்மிக்க மனிதர்களெல்லாம் யுத்தங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாதாயக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது.

ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரச வம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டுமே கொள்ளவில்லை. அன்றைய உலகின் மூன்றிலொரு நிலபரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை ஈர்த்தார். வழிபாட்டுத்தலங்களையும் சமய நெறிகளையும் பல்வேறு கருத்துக்களையும்,கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்.

வெற்றியின்போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட அவரது உயர்நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப்பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவேயில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடன் அவர்கள் நடத்திவந்த மெய்ஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடிக் குணம் உடையவர் என்றோ பறைசாற்றிடவில்லை. மாறாக சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.

இந்த சமயக்கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று இறைவனின் ஒருமை; மற்றொன்று இறைவனுக்கு வடிவம் கிடையாது என்பதுமாகும். முந்தியது இறைவன் என்றால் என்னவென்று எடுத்துரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது; மற்றொன்று பிரச்சார துணையில் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது.

தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்டநிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப்பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கியளித்த மாமேதை ஒரே தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

LAMARTIN, HISTORIE DE LA TURQUIE PARIS 1854.VOL 2.P 276-77

அவர் ஒரே நேரத்தில் சீசரும் போப்பும் ஆவார். ஆனால் அவர் போப்பின் பகட்டுகள், ஆடம்பரங்கள் எதுவுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுக்காப்புப்படைகள்,எதுமில்லாத சீசர் ஆவார்.

தயார் நிலையிலுள்ள ராணுவமோ, நிலையான நிர்ணயமான வருமானமோ இல்லாமல் (மக்களின் உள்ளங்களையும் பெரும் நிலப்பரப்பையும்) வெறும் இறைவனின் இசைவாணையை, தெய்வீக அனுமதியை மட்டுமே துணையாகக் கொண்டு ஆட்சி புரிந்தாகக் கூறிக்கொள்ளும் உரிமை, மனித வரலாற்றில் எவராவது ஒருவருக்கு இருக்குமானால் அவர் முஹம்மத்(ஸல்) அவர்களேயாவர்; ஏனெனில் ஆட்சியதிகாரம் செலுத்திடத் தேவையான கருவிகள், துணைச்சாதனங்கள் எதுவுமில்லாமலேயே (ஆன்மீக மற்றும் உலக) அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்.

BOSWORTH SMITH, MOHAMMED AND MOHAMMADANISM.

உலகின் மிகச் செல்வாக்கு வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவராக முஹம்மத் (ஸல்) அவர்களை நான் தேர்ந்தெடுப்பது வாசகர்கள் சிலருக்கு வியப்பை அளிக்கலாம். சிலர் இதனை கேள்விக்குரியதாகவும் கருதலாம். ஆனால் முஹம்மத்(ஸல்) அவர்கள் தான் உலக வரலாற்றிலேயே சமயத்துறை, உலகியல் துறை இரண்டிலும் மிகவும் வெற்றிகரமானவராகத் திகழ்ந்த மாமனிதர் ஆவார்.

MICHEL H.HART,THE 100: A RANKING OF MOST INFLUENTIAL PERSONS IN HISTORY, NEW YORK: HART PUBLISHING COMPANY, INC. 1978, P.33.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்ரவதைகளையும்,கொடுமைகளையும் சகித்துக்கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையை நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத்(ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும், மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்சனைகளையும் கேள்விகளையும்தான் எழுப்புகிறதே தவிர பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியதாயில்லை. மேலும், உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களுள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.

W.MONTGOMERY, MOHAMMED AT MECCA, OXFORD 1932,P.52.

தமக்கு முன்னால் வாழ்ந்த பெரும் இறைதூதர்கள் அனைவரையும் போலவே முஹம்மத்(ஸல்) அவர்களும் தமது இயலாமையை உணர்ந்து, இறைச்செய்தியை ஏந்திச்சென்று மக்களிடையே எடுத்துரைப்பவராகப் பணியாற்றிட முதலில் தயங்கவே செய்தார். ஆனால் வானவர், ஓதுவீராக! என்று கட்டளையிட்டார். நாம் அறிந்த வரை முஹம்மத்(ஸல்) அவர்கள் எழுதவோ, படிக்கவோ இயலாதவராகவே  இருந்தார். பூமியின் ஒரு பெரும் பகுதியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பேரண்டத்தின் இறைவன் ஒருவனே! என்கிற சொற்களை அவர் அப்படியே எடுத்துக் கூறலானார்.

எல்லா விசயங்களிலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் மிகவும் செயல்பூர்வமானவராய் நடைமுறைப்படுத்திட உகந்த முறைகளில் செயல்படக் கூடியவராய்த் திகழ்ந்தார்கள். அவர்களின் அன்பு மகன் இப்றாஹீம் மரணமடைந்தபொழுது கிரகணம் ஒன்று நிகழ்ந்தது. உடனே இப்றாஹீமின் மரணத்திற்காக இறைவனே தனிப்பட்ட முறையில் துக்கம் தெரிவிக்கிறான் என்னும் வதந்திகள் எழுந்தன. ஆனால் முஹம்மத்(ஸல்) அவர்களோ, கிரகணம் என்பது ஓர் இயற்கை நிகழ்வாகும்.   இத்தகைய விஷயங்களை ஒரு மனிதரின் மரணத்துடனோ பிறப்புடனோ தொடர்புப்படுத்திப் பார்ப்பது மூட நம்பிக்கையாகும் என்று தனது துக்க நிலையிலும் தெளிவுபட அறிவித்தார்.

முஹம்மத்(ஸல்) அவர்களின் மரணத்தின் போது கூட அவரைக் கடவுளாக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அவருக்குப்பின் ஆட்சியாளராக வரவிருந்த அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் சமயவரலாற்றிலேயே தலைசிறந்த சொற்பொழிவு ஒன்றின் வாயிலாக இந்த மனவியாதியை முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டார்.

அந்த சொற்பொழிவின் முக்கிய பகுதி: உங்களில் எவரேனும் இதுவரை முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருப்பாராயின் அவர்கள் முஹம்மத் (ஸல்) இறந்துவிட்டார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்; நீங்கள் இறைவனைத்தான் வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அவன் என்றும் வாழ்பவன்; நிலைத்தவன் என்பதை அழுத்தமாக அறிந்து கொள்ளுங்கள்.

JAMES A MICHENER ISLAM: THE MISUNDERSTOOD RELIGION’ IN THE READER’S DIGEST(AMERICAN EDITION)IN MAY, 1955,PP.68.70.

அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல; மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரியதொன்றாகும் மக்கா நகரிலும், மதீனா நகரிலும் அவர் வடிவளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல்,மாற்றப்படாமல்,திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றுக்குப் பின்னரும் இன்றுவரை இந்திய, ஆப்பிரிக்க, துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து, கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதைப் பின்பற்றுபவர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும்விட்டார்கள்.

நான் ஒரே இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார்கள்’ என்பதுதான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரே விதமான பறைசாற்றலாகும். ஒருபுறம், கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்கு குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்ததை தாண்டி (கடவுள் என்கிற அளவிற்கு) உயர்த்தப்பட்டதில்லை. அவர் அளித்துவிட்டுச்சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைகளுக்குள் கட்டுபடுத்தி (மிகைப்படுத்த விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.

EDWARD GIBBON AND SIMON OCKLAY, HISTORY OF THE SARACEN EMPIRE, LONDON, 1870.P.54.

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்டபோது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமன்று என்பதை முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன்.

நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராகக் கருதி நடந்து கொள்ளும் உயர்பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணிக்காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள்; இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் இல்லவே இல்லை.


MAHATMA GANDHI, YOUNG INDIA, QUOTED IN THE LIGHT, LAHORE, 16TH SEPTEMBER 1924,

அனைத்துலக சகோதரத்துவம், மனித இன சமத்துவம் முஹம்மத் (ஸல்) அவர்கள் பறைசாற்றிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் சமூக முன்னேற்றத்திற்கு மாபெரும் தேவைகளை ஆற்றியிருப்பதை எடுத்துரைக்கின்றன. பெரும் சமயநெறிகள் அனைத்தும் இதே கொள்கையை போதித்திருக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் தூதர் இந்தக் கொள்கையை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார் அதன் மதிப்பு முழுமையாக உணரப்பட வேண்டும். அதன் சாதனை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். உலக மக்களின் மனசாட்சி விழித்தெழுந்துவிட்டால் இனமாச்சரியங்கள் மறைந்துவிடும்; மனித இன சகோதரத்துவக் கொள்கை நடைமுறைக்கு வந்துவிடும்.

PROF. RAMAKRISHNA RAO, MOHAMMAD THE PROPHET OF ISLAM,PAGE 7.

அரேபியாவின் இந்தத் தூதருடைய வாழ்க்கையும், ஒழுக்கப் பண்புகளையும் தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைவனின் தூதர்களில் ஒருவரான இறுதித்தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல செய்திகளையே சொல்கிறேன் என்றாலும், நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அந்த அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதையும் உணர்வும் ஏற்படுவதை நான் உணர்கிறேன்.

ANNIE BESANT, THE LIFE AND TEACHINGS OF MUHAMMED 1932, P.4


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.